https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

அடையாளமழித்தல் - 9 ( சரீரம் மனம் புத்தி ஆத்மா )

ஶ்ரீ:

அடையாளமழித்தல் -  9
( சரீரம் மனம் புத்தி ஆத்மா  )




மனசமாதங்களின் வழியாகவே நான் அனைத்து வித இக்கட்டான சூழல்களை கையாளுவது வழக்கம் . ஒரு சிக்கலின் சாதக பாதகங்களை நோக்கி இரண்டின் எல்லைகளின்  அவதானிப்பில் , இரண்டையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொள்ள , சரணாகதிதத்துவம் ஒரு சிறந்த உபாயமாக இருந்திருக்கிறது . அனைத்திற்கும் " இதற்குமேல் நீ செய்வதற்கு ஒன்றில்லை இதன் முடிவு எவ்வகையிலும் உன்னால் ஏற்ககூடியதே ஆகவே அமைதியாக அதைப்பெற்றுக்கொள் " என்பதே . இந்த இடத்திற்கு வந்த பிறகு அனைத்தையும் தாண்டிய உணர்வு . மீண்டும் பழைய சிந்தனைகளில் உழல்வதில்லை , திளைப்பதில்லை.

நான் சிறுவயதிலிருந்தே இப்படித்தான் இருந்திருக்கிறேன் என நினைக்கிறேன் எப்பொழுதோ ஒரு சமயம் எந்த சலனமும் இன்றி என்னால் இருக்கும் வீட்டிலிருந்து வெளியேறுவது பற்றிகூட யாரிடமோ பேசியது நினைவிருக்கிறது . அகம் கடல்போன்றது அதன்  சிந்தனை அலையென ஓயாது ஆர்பரிப்பது அது சொல்லென திரளாதபோது இலக்கிய வாசிப்பில்  அவை திரட்சிகொள்கின்றன.

திருவாய்மொழியில் ஆழ்வார் முதல் பாசுரத்திரல் "தன் மனதிற்கே " முதலில் உபதேசிக்கிறார் அதன் சகாயமில்லாது எதுவும் சாத்தியமில்லை . இந்திரியங்களை மனமே ஆள்கிறது . இந்த சரீரத்தில் மிக சூக்ஷ்மமாக இருந்து கொண்டிருக்கும் நான் மாபெரும் பிரபஞ்சவெளி ஜடப்பொருளின் ஒருகூறான இந்த சரீரத்தை அண்டி இருக்கிறேன். முடிந்தால் ஆளவும் செய்கிறேன் . மனம் புத்தி ஆன்மா போல சரீரம் நம்முடையதல்ல கட்டுபடுத்தக்கூடியதல்ல , அது இந்த பிரபஞ்ச வெளியின் ஒரு துளி . பிரபஞ்சத்தை புரிந்தாலே அன்றி சரீரத்தை புரிந்து கொள்ளவியலாது என்கின்றனர், "அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்" என ஒரு சொல் உண்டு  


கர்மேந்திரியங்களான கர்ணகலேபரங்கள் சரீரத்தின் புறவங்கள் , அவற்றை மனஸ்தத்துவம் ஞானேந்திரியங்களைக் கொண்டு இயக்குகிறது மனஸோ குணாதிசியங்களின் தொகை குணாதிசியங்களோ தாய்தந்தையரின் நீட்சி . இதில் "நான்" என்பது என்ன?


நான் வேறு மனம் வேறு எனப்புரிதலே பிரமாண்டமாக தெரிகிறது . புரிதலை தன்னிடத்தே தொடங்குதல் மகத்தானதானது . என்னுள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என அறிந்த பிறகே மற்றவற்றை அவதானிக்க இயலும் . "ஆத்மா ஞானமயன் ஆனந்தமயன்" என்கிறது வேதம் , இரண்டுமே மனம் சம்மந்தப்பட்டது , அகவயமானது .


*****************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்