ஶ்ரீ:
மணிவிழா - 84
24-08-2026
* நம்பிக்கை கற்பிதமா? *
விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை சென்றடைய இயலும் என்றும் நிலையழிதலுக்கு நல்ல தீர்வாக இருக்கும் என அது காட்டிக் கொடுத்தது. ஒன்று வாழ்வியல் முறையில் உள்ள இடக்கரடக்கலை எதிர் கொள்ளும் அழகியலையும் அதை தொடரந்து ஆழ்மனதுடன் தொடர்புறுத்தும் ஆன்மீகத்தையும் முன் வைத்தது. இரண்டும் ஒன்று சென்று ஒன்றை தொடுபவை என நினைப்பவர்கள் அவற்றின் விடுபடலை சந்திக்கும் போது பிறிதொன்றினால் சமன் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவற்றை இரண்டு வெவ்வேறு தளத்தில் உள்ளவைகளாக பார்ப்பவர் அனைத்துடன் முரண்படுகிறார்கள். அவர்களுக்கு புரியவைப்பது எப்போதும் நிகழாது.
நான் ஆன்மீகம் குறித்த எனது புரிதலுக்கு அதன் மிக விரிவான ஏற்பாடென்பது ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவை துவக்கியது.அகில இந்திய அளவில் அதற்கான மையத்தை ஒருங்கிணைக்கும் முயற்சி ஏறக்குறைய முடிவடையும் நிலையில் ஊழ் அதன் மையத்தில் இருந்து நான் வெளியேற வேண்டி வந்த போது மிக அமைதியாக அது காட்டிய வழியில் மெல்ல வெளியேறினேன். காரணம் இப்படி நிகழும் என எனக்கு முன்பே குறிப்பு காட்டியிருந்தது .எங்ககோ ஆழ்மனதில் அதை உணர்ந்திருந்தேன். 2017 ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்தை மிக விரிவாக திட்டமிட்டிருந்தோம். 2013 களில் மாநிலங்களவை உறுப்பினர் தலைமையில் விழாகுழு பிரதமர் மோடி அவர்களை சந்தித்து புதுவை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்க அவரும் வருவதற்கு இசைவு சொல்லியிருந்தார். அவர் அதுவரை தென்னகம் வந்திருக்கவில்லை. இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும் என்றார்.
அகில இந்திய அளவில் ஆன்மீக தலைவர்கள் அனைவரும் புதுவையில் நிகழவிருக்கம் ஜீயர் மாநாட்டில் கலந்து கொள்ள செய்வது விழாக் குழுவின் மையம் திட்டம். அதில் கொண்டுவர இருக்கும் தீர்மானங்கள் எனக்கு மிகு முக்கியமானவை. ஒரு வகையில் விழா குழு மிக விரிவாக அமைக்கப்பட்டதன் தோக்கம் இந்து அறநிலையத் துறை மீதான அரசங்கத்தின் பார்வையை மறுவரையறை செய்யும் திட்டம் . ஆனால் அது ஆரம்ப கட்டத்தில் இருந்தது. கேரளா பாணி நிர்வாக குழு அமைப்பதில் உள்ள மாற்று யோசனகள் அப்போது எனது எண்ணமாக இருந்தது. முழு வடிவமைப்பு நிகழ்ந்திருக்கவில்லை.
பூர்வாங்க வேலை முடிவடைந்த சூழலில் அந்த உச்ச நிகழ்வு நடப்பதற்கு முன் ராமாநுஜரிடம் உத்தரவு கேட்க வேண்டும் என ஏன் தோன்றியது என தெரியவில்லை . ஒரு விரிவான நிகழ்ச்சியை அவர் அவதரித்த “ஶ்ரீபெரும்பூதூரில்” நடந்தது . அந்த நிகழ்வே கூட நான் வடிவமைத்த ஒன்றல்ல. எங்களின் கிளை குழு ஒன்று அதற்கான ஏற்பாட்டை ஒருங்கியிருந்தது . நான் அதில் பார்வையாளராக கலந்து கொண்டேன். அப்போது சட்டென ஆழ்மனதில் அவரிடம் அனுமதி கேட்க வேண்டும் என தோன்றிவிட்டது. எப்படி எந்த வடிவத்தில் எனக்கான பதில் கிடைக்கும் என்பது பற்றி எந்த கவனமும் எனக்கிருக்கவில்லை. நான் அவ்வப்போது இது போன்ற கிறுக்குதனம் செய்வதுண்டு. அனைத்திற்கும் ஏதோ ஒரு வகையில் பதில் போல ஒன்று தீர்க்கமாக உணரப்படுவதை அறிந்திருக்கிறேன் . இப்போதும் அதை முயற்சிக்க எண்ணம்.
திருமஞ்சனம் முடிந்து அலங்காரத்திற்கு முன் அந்த ஈர செந்னிற ஆடையுடன் ராமாநுஜரை தரிசிக்க அனுமதித்தனர். அனைவரும் அவரை சுற்றி வந்த போது நான் கேட்க்க நினைத்த கேள்வி மனதில் எழவில்லை மாறாக ஒருவித திகைப்புடன் மீள மீள அவரை சுற்றிக் கொண்டிருந்தேன். காரணம் முதல் காட்சி எனக்குள் அதீத திகைப்பை உருவாக்கி இருந்தது. பஞ்சலோக சிலா மூர்த்தியாக அமர்ந்திருந்த கோலம் என்னவோ ஒரு சூழலில் நிஜ மானுட உடலின் அத்தனை கூறும் அதில் இருந்ததாக ஆழ்மனம் பார்த்து எனக்கு சொன்ன போது தர்க்க புத்தியினால் அதை முதலில் மறுத்தேன். அது ஒளியமைப்பு அப்படி ஒரு உளமயக்கு அளிக்கும் என சொல்லிக் கொண்டேன். ஐம்பொன் சிலை ஏறக்குறைய மானுட சரீரத்தின் நீர்மையும் வண்ணமும் ஒளியையும் கொண்டிருக்கும். திருமஞ்சன நீரினால் உருவாகும் ஒன்று ஆனால் அது நீண்ட நேரம் நீடிப்பதில்லை. என்றாலும் இதற்கு முன் அனுபவமாக அதை மிக மிக அறிதாக உணர்ந்திருந்தேன்.
இப்போது கண்முன் அப்படி ஒரு உரு. நான் கண்ட அதே காட்சி மீளவும் நிகழ்கிறதா என பார்க்க மீள மீள அவரை சுற்றி வந்தேன். எல்லா கோணத்திலும் அதுவாகவே இருந்தது அந்த முதல் திகைப்பை உருவாக்கி இருந்தது. இப்போது மிக அணுக்கமாக அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது ஆழ்மனம் சொன்ன ஒரு செய்தி எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. அவரின் தோற்றத்தை வெளிப்படுத்திய முறை எனக்குள் ஆழமான கேள்வியை உருவாக்கி இருந்தது. அவரை பார்க்க மிக அழுத்தமான மனநிலையில் உள்ள வயதான ஒருவர் கண்கள் நீர் கோர்த்து தளும்பி நின்றிருந்தது. அனைவரையும் வணங்கும் கை முத்திரை. பட்டாசாரியர்கள் அனைவரும் அலங்கார பணி நிமித்தமாக விலகி இருக்க நானும் அவரும் சில மின்னல் பொழுது தனித்துவிடப்பட நான் கேட்க்க நினைத்ததை சொற்களால் இல்லாமல் நினைவால் அவரை கேட்ட நியாபகம். சற்று நேர அமைதிக்கு பின் “போ போய் வேறு வேலை பார்” என்பதாக இருந்தது. அது முழுவதும் எனது எண்ணத்தில் இருந்து எழுந்ததாக கூட இருக்கலாம் ஆனால் பெரும் செயல்கள் நிகழவிருக்கும் சூழலில் அதன் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் பணிகளை செய்து கொண்டிருக்கும் போது இப்படி ஒன்று எப்படி எழும் என தெரியாததால் உருவான திகைப்பின் காரணமாக அதை உறுதி செய்துகொள்ள மீள மீள அவரை சுற்றி வந்தபோது அந்த மனப்பதிவு மாறவேயில்லை.
ஒரு தருணத்திற்கு அப்பால் அவரை பார்ப்பதை விலக்கி வெளியேறினேன். வெளி பிரகாரத்தில் தனிமையில் அமர்ந்த அந்த பதில் தந்த அதிர்வு எதனால் எனக்குள் இருந்து எழுந்தது என அவதானித்துக் கொண்டிருந்தேன். மனித மனம் இயங்கும் வக்கிர கதியில் இது போன்ற குதர்க்கம் உருவாவது மனதின் இயல்பு. ஆனால் அந்த சிலை சொன்ன வேறு சில விஷயம் என்னை நிதானிக்க செய்திருந்தது. நடப்பது எதுவும் அவரது விருப்பத்தில் நிகழவில்லை என்கிற ஆழமான பதிவு திரும்ப திரும்ப எழுந்து கொண்டே இருந்தது.
அதை தொடர்ந்து நான் அடைந்த உளப்பதிவு மிக விசித்திரமானதும் திகைக்கச் செய்வதும் மூளையை சொடுக்குவதுமாக இருந்தது . இன்று வரை அது அன்று எழுப்பிய கேள்விக்கு என்னிடம் பதில்லை. வைணவ சம்பிரதாயத்தில் அவருக்கு அளித்த இடம் அதை ஒட்டி உருவான அவரது இருப்பு மிக பிரம்மாண்டமானது . கர்ண பரம்பரையாக அல்லது தொடர்ந்து எழுதி வைத்த கிரந்தங்களின் அடிப்படையில் ஶ்ரீவைகுண்டத்து பெருமாள் அதன் முழு நிர்வாகத்தையும் ராமாநுஜரிடம் அளித்ததாக சொல்லப்படும் வைணவ சம்பிரதாய கூற்று. மஹாலக்ஷ்மியை தாயாக நாராயணனை தந்தையாக வைக்கும் வைப்பு முறை தாண்டி ஆசாரியன் மூன்றாவது நிலையில் வைக்கப்பட்டான். வைணவ சரணாகதி தத்துவத்தில் ஆசாரியன் இடம் பெருமாள் இடத்தைவிட பெரிது அதற்கு இணையாக மகாலக்ஷ்மி தாயாரை சொல்லலாம். இருவருமே ஜீவன்களின் மோட்டச்சத்திற்கு அவர்களின் குறைகளை தாண்டி சிபாரிசு செய்பவர்கள். “புருஷகாரிகள்” எனப்பட்டனர். அதன் தத்துவார்த்த விவரங்களுக்குள் நான் செல்லவில்லை மாறாக அடைந்த மனப்பதிவின் முரணை மட்டும் கருத்தில் எடுக்கலாம் என நினைக்கிறேன். அன்று அவர் அமர்ந்திருந்த நிலை இவற்றிற்கு அப்பால் ஏற்றி வைக்கப்பட்ட சுமை தாங்காது கசங்கியவர் போல இருந்தார். விரும்பாத ஒன்றை தாங்கி நிற்பவர் போல அல்லது இவை எதுவுமே அவருடையது இல்லை போல பிறரால் தன்மீது ஏற்றப்பட்ட அதீத எடை ஒன்ற தாங்க இயலாதவர் போல இருந்தார்.


