ஶ்ரீ:
பதிவு : 700 / 889/ தேதி 09 ஆகஸ்ட் 2026
* முடிவுறாத துவக்கம் *
“ ஆழுள்ளம் ” - 04
மெய்மை- 97.
புதுவை அரசியலில் முக்கிய தலைவராக கண்ணன் உருவானது அவரது கணக்குகளுக்கு அப்பால் நிகழ்ந்தது. அவர் வளர்ந்த பின்னணி அதற்கான சூழல் பெரிய பங்கு வகித்ததாக புரிந்து கொள்ளப்பட்டாலும் துடிப்பான தனது அரசியல் நகர்வுகள் வழியாக தான் நினைத்த இடத்திற்கு செல்ல இயலும் என்கிற மிக எளிய கணக்கால் அவர் கள எதார்த்தத்தை கடந்து சென்றது துரதிஷ்டவசமானது. இளைஞர் காங்கிரஸின் வழியாக அவர் சென்றடைந்திருக்க வேண்டிய அசலான இலக்கு பற்றி எந்த புரிதலும் அவருக்கு கடைசிவரை உருவாகவில்லை என்பது முரண்நகை. புதுவை அரசியலில் இருந்த வெற்றிடமும் அது கோரும் தலைமை என எல்லாவிதத்திலும் உருவாகியிருந்த சூழலில் சுழன்றடிக்கும் அதிகாரத்தின் மத்தியில் அரசியல் பற்றிய மெல்லிணர்வை அடைவது சாத்தியமில்லை. தனது அன்றாட பரபரப்பு செய்திகளில் கவனம் செலுத்தி பிற எதையும் கவனிக்காதவரானார். அரசியில் அது ஒரு “பொறி”. நெருங்கி நின்றவர்களுக்கு அது தன்னை காட்டிக் கொடுத்திருக்கிறது. அரசியலின் நுண்மையை அறிந்தவர்கள் அரசியலில் ஏது மெல்லுணர்வு என கேட்கமாட்டார்கள். இன்றளவும் அரசியலை மெல்லுணர்வுகள் மட்டுமே தீர்மானிக்கிறது. அந்த மெல்லுணர்வு எளிய மக்களின் ஆழ்மனதில் இருந்து உருவாவது. அரசியல் விற்பன்னர்கள் வியூக வகுப்பாளர் என சொல்லிக் கொள்பவர்கள் எல்லோரும் மிக மிக அரிய தருணங்களில் அவற்றை உணர்ந்தவர்களே. ஒரு வெற்றிக்கு பிறகு அதை தவறவிடுபவர்கள் அதிகம். அது ஒருவகை தொடர்புறுத்தல். வெகு சிலருக்கு சிலமுறை மட்டும் வந்து தன்னை காட்டிச் செல்லும். பின்னர் அதன் பின்னால் அலைந்து திரிபவர்கள் தங்கள் வழியை தவறவிடும்போது கோட்பாடுகளை உருவாக்கி அதை புரிந்து கொள்ள முயல்கிறார்கள். வேறு சிலர் ஆன்மீக குருநிலைகளில் சரணடைகிறார்கள்.
ஆர்ப்பரித்து பொங்கி எழுந்த இளைஞர் அரசியலை கொண்டு கண்ணன் தன்னை உந்தி சென்றடைந்த இடம் பற்றியும் அறியாது தான் கைவிட்ட அதன் விழுமியங்களை பற்றியும் தன்னை மையப்படுத்திய அரசியலை மிக தவறாக புரிந்து கொண்டது போன்றவை காலம் மறக்காதவை. தனது அரசியல் பெற்ற இடம் அடைந்த பதவிகள் அதில் உருவான செல்வாக்கு என அனைத்தும் தனது அரசியல் நகர்வு வலிமையால் நிகழ்ந்தது என பிழையாக புரிந்து கொண்டார். அதனுடைய பாதிப்பால் 1991 முதல் 2001 வரையிலான காலகட்டங்களில் புதுவை அரசியலை தன்னை சார்ந்திருந்த மாயையை உருவாக்கிக் கொண்டார். இதில் வேடிக்கை அந்த மாயை அவரைத்தான் முழுமையாக ஆட்கொண்டிருந்தது என்பது மட்டுமின்றி இறுதிவரை விலகாது அவரை இருள் நிழல் போல பீடித்திருந்தது. அவரால் கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் இருந்து விலகு எதார்த்தத்தில் கண்ணன் மிக மிக இயல்பாக நடந்திருந்தால் கூட இன்னும் உருவாக இருக்கும் பல பத்தாண்டு அரசாங்க அமர்வுகளில் மிகுந்த செல்வாக்குள்ள தலைவராக இருந்திருப்பார். ஆனால் அரசியலை மிக மோசமாக கசக்கி முகரும் தன்மை அவருக்கு உடனடி பலனை போல ஒன்றை கொடுத்திருந்தாலும் அவரிடம் இருந்து காலம் பரித்துக் கொண்டவை மிக நீண்ட கணக்குகள். அவரது அரசியல் அணுகுமுறை அவருக்கு உரிய பலனை தராது என்பதுடன் எதிர்மறை பலன்களை அதை உருவாக்கியவருக்கு கருணையில்லாமல் வழங்கியது .
அவரது அரசியலில் மிக சரியாக அமைந்தவை 1985 முதல் 1987 வரை பின்னர் 1990 வரை நீடித்த அமைச்சரவையில் ஆக்டிங் முதல்வராக அமரும் வாய்ப்பு அவரது எதிர்கால கணக்குகளை மாற்றி அமைத்தது. அதன் பின்னர் அமைந்த வாய்ப்புகள் எதுவும் அவருக்கு அரசியலில் நிரந்தரமாக எந்த பலனையும் தரவில்லை. அடுக்கடுக்கான அதிரடி நகர்வுகள் புதுவை போன்ற மிக சிறிய மாநிலத்திற்கும் சற்றும் ஏற்காதவை என்பதால் மிக எளிதில் விரைவில் எந்த உக்கிரமான நகர்வும் தனது வண்ணங்களை இழந்துவிடும். அதன் பின்னர் 1991 முதல் அவர் 2023 மண்மறையும் வரை தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தால் சரிவை மட்டுமே சந்தித்தார். பின்னர் அவரது இறுதி காலத்தில் புதுவையின் அனைத்து அரசியல் கட்சி வாசலில் சென்று நின்றார். அவரது அதிரடி அரசியல் விளையாட்டு ஒரு காலகட்டத்தில் களத்தில் இளிவரலாகியது.
அவரது நகர்வுகள் சில பதவிகளை பெற்றுத் தந்திருக்கலாம் ஆனால் அரசியலில் நிரந்தர இடமில்லாமல் ஆக்கியது என்பது வரலாறு.ஆனால் அரசியலில் நிரந்தரமான இடம் என்பது என்ன. செயல்பாடுகளால் மனதில் நிற்பது. அதுவும் ஒரு காலாவதி தேதியுடனே நிகழ்கிறது். அரசியலில் நிரந்தரம் என்கிற மந்திர சொல்லுக்கு வேறு பொருள் இருப்பது போல தெரிகிறது. இங்கு நிரந்தரம் என்பது அதில் வாழ்ந்து வாழ்த்தப்பட்டு நிறைவுற்று மன்மறைதல். அதன் தொடர்ச்சி எங்காவது நீடித்துக் கொண்டிருப்பது.எவரோ எப்போதோ நல்ல விஷயங்களுக்காக நினைவுறுதல்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் அரசியல் முதிர்ச்சியற்றவர்கள் என்கிற கருத்து கண்ணனால் மிக ஆழமாக சண்முகத்தின் வேரூன்றிவிட்டுத . அதில் இருந்து அவரை வெளி கொண்டுவர மிக மிக நிதானமான நகர்வுகள் எனக்கு தேவையாயின. ஆனால் அதை முற்றும் களைவதற்கான வாய்ப்பும் காலமும் என்னிடம் இல்லை. 1996 களில் நான் இளைஞர் காங்கிரஸ் தலைமை ஏற்பதை ஒருவித மனத்தடையுடன் ஆதரித்தாலும் தனது கடந்த கால அனுபவத்தால் நான் முழுதும் செயல்படுவதை அனுமதிக்க மறுத்தார்.அது எனது பாதை முழவதும் விந்தையான பல தடைகளை உருவாக்கி வைத்திருந்தது. அதே சமயம் எனது அரசியல் அணுகுமுறை பலன் தரக்கூடியது என்பாதலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பிறிதொரு பக்கம் இளைஞர் காங்கிரஸ் கொஞ்சமாவது செயல்பாட்டில் இருக்க வேண்டும் என்கிற அவருக்கு கட்டாயம் இருந்திருக்கலாம்.
அவர் அறிவிக்கும் போராட்டங்கள் மற்றும் அலுவலக கட்சி கூட்டங்களுக்கு தொண்டர்களை ஒருங்கும் பணி எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது என சொல்வதை விட நான் அதை வலிந்து எடுத்துக் கொண்டேன் . அதுவரை தலைவர் சண்முகம் ஒவ்வொரு தொகுதி தலைவரை தொடர்பு கொண்டு தொண்டர்களுடன் பங்கு பெற வேண்டும் என கோரிக்கை வைப்பது வழக்கம். அவர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் சண்முகத்திற்கென சொந்த தொண்டர் பலம் என ஏதும் இல்லை என்பதை. அவர்களின் அந்த நினைப்பு சண்முகத்தை பலவீனப்படுத்தி இருந்தது. சண்முகத்திடம் எனக்கான இடம் உருவாகி வந்த பிறகு அவருக்கான ஆதரவு தளத்தை முழுமையாக உருவாக்கி கொடுத்தேன். அந்த உருவாக்கத்தில் எனது பங்கை உணர்ந்தவர்கள் இயல்பாக எனது ஆதரவாளராக மாறினர். அதன் பொருட்டே நினைத்த அத்தனையும் செயலில் வெளிப்படுத்தி என்னால் அங்கு இயங்க முடிந்தது.
சண்முகம் இன்றிருக்கும் இடமும் பலமும் அது உருவான பின்னணியும் அரசியல் எப்போதும் “தற்செயல்களின் தொகுப்பு”. 1975 களில் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினர் மட்டும் தேர்ந்தெடுக்கபடும் அளவிற்கு கட்சியின் நிலைமை மோசமாக இருந்தது . அந்த சூழலில் நிகழ்ந்த எம்ஜிஆரின் அரசியல் பிரவேசம் புதுவை இளைஞர்களை காங்கிரஸை விட்டு விலகி அவரை நோக்கி நகர வைத்தது. புதுவையில் காங்கிரஸ் அடைந்த வீழ்ச்சிக்கு பல காரணிகள் இருந்தாலும் மிக இது முக்கியமானது. தமிழகத்தில் உருவான எழுச்சி புதுவையிலும் பாய்ந்தது. அந்த காலகட்டத்தில் இரண்டு முறை ஆட்சியமைத்த அதிமுக தனது தவறுகாளால் மிக குறுகிய கால ஆட்சி கொடுத்து அரசியலில் நம்பிக்கை இழந்து பின் நிரந்தரமாக ஆட்சியில் அமர இயலாதாகி சிறுத்துப் போனது.
அந்த சூழலில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இழந்து ஜனதா தலைமையிலான அரசு அமர்ந்து பிறகு அதற்கு முக்கிய காரணமாக இருந்த தலைவர்கள் இந்திராகாந்தியும் காங்கிரஸும் அரசியலில் மீட்சியடையாது என கணக்கிட்டனர். இந்தியாவில் அதுவரை நிகழ்ந்த அரசியலில் தவறுதல்கள் என அவர்கள் கருதியது அனைத்தையும் மொராஜி தேசாயின் தலைமையில் சீர்திருத்தும் முயற்சி துவங்கியது. அதன் ஒரு பகுதியாக புதுவை தமிழகத்துடன் இணையும் என்ற பேச்சும் அதை ஆதரித்த அதிமுகாவும் புதுவை அரசியலில் சட்டென சில காலம் காணாமலாகியது. அதே சமயம் அகில இந்திய அரசியலில் மாற்றம் மிக வேகமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. மத்திய மந்திரி ராஜ்நாராயணன் தேர்தலில் இந்திராகாந்தியை வென்றது கொடுத்த மிகை ஊக்கம் இந்திராகாந்தி சிறைசெல்வது அவரின் அரசியலை முடித்து வைக்கும் என கணக்கிட்ட வைத்தது அதன் அடிப்படையில் இந்திராகாந்தி கைதும் செய்யப்பட்டார். பிறகு நடந்தவை நாடகீய தருணங்கள். இந்திராகாந்தி அனைத்திலும் மீண்டு வெளியில் வந்து மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார். சண்முகத்தின் இப்போதைய அரசியல் அத்தியாயம் அங்கிருந்து புதிதாக துவங்கியது.
கட்சியின் முக்கிய தலைவர்கள் கைவிட்ட பின்னர் சிறையில் இருந்த இந்திராகாந்தியை தொடர்ந்து சென்று சந்தித்தது அவர் மனதில் சண்முகம் தன்னை பற்றிய நல்லெண்ணம் உருவாக்கிக் கொண்டார் . இந்திராகாந்தி உயிருடன் இருந்தவரை புதுவை மட்டுமின்றி தமிழக காங்கிரஸ் அரசியலிலும் சண்முகத்தின் செல்வாக்கு நீடித்தது. புதுவை இணைப்பிற்கு எதிரான போராட்டத்தால் பலனடைந்திருந்த காங்கிரஸ் அந்த சந்தர்ப்பத்தை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு மீண்டு வந்ததைப் போன்ற தோற்றம் இருந்தாலும் அரசியல் ரீதியில் தன்னை அரசியல் ரீதியில் முழுவதும் மீட்டெடுக்க இயலாமல் 1981 களில் முதல் முறையாக திமுகவிடம் முதல்வர் பதவியை இழந்ததில் துவங்கி கூட்டணி அரசாங்கத்தை பகிர்ந்து கொள்வதில் முடிந்தது. பின் அதுவும் கவிழ்ந்து 1985 களில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்பட்ட போது இளைஞர் காங்கிரஸ் தலைவர் கண்ணன் சட்டமன்ற தேர்தலில் வென்று அமைச்சாகி தவிர்க்க இயலாத சக்தியாக உருவெடுத்திருந்தார். கண்ணனின் வெற்றிக்கு பின்னால் விளிம்பு நிலை சமூக இளைஞர்கள் இருந்தனர்.
அந்த சமூகத்தின் வினோத மனநிலை அதை ஒட்டிய அவர்களின் செயல்பாடு சிலவற்றை பார்த்திருக்கிறேன் . எனக்கான அரசியல் பயண திட்டத்தை நான் அங்கிருந்து பெற்றுக்கொண்டேன். என்னுடைய பார்வையில் தமிழகம் மற்றும் புதுவையில் அவர்களுக்கான தனி கட்சி மற்றும் அமைப்பு உருவான போது அவர்கள் அனைவரும் அதில் சென்று இணைந்திருந்தால் புதுவை மட்டுமின்றி தமிழகத்திலும் பிற கட்சிகள் ஆட்சி அமைப்பது அவ்வளவு எளிதல்ல. அவர்களை புறக்கணித்து எந்த அரசும் ஆட்சியில் அமர இயலாது என்கிற உண்மைநிலை இருக்க, என்ன காரணத்தினாலோ அவர்களில் சிறு சிறு குழுக்களாக மட்டுமே பல கட்சிகளில் சென்று இணைந்தனர்.
பெரும்பாலான மக்கள் எந்த கட்சியையும் சாராது உதிரிகளாக நீடித்தார்கள் என்றாலும் எண்ணிக்கையில் இன்றும் அவர்களே பெரும்பான்மை . மாநில கட்சியில் தங்களுக்கான இடத்திற்கு காத்திருந்தனர். எஞ்சி இருந்தவர்கள் தங்களுக்குள் இருந்து ஒருவர் உருவாகி வர காத்திருந்தனர் என தோன்றினாலும் இறுதிவரை அது நிகழவில்லை.
பல சமூகங்களை இணைத்து அதன் வழியாக ஆட்சியில் இருக்கும் எந்த மாநில அரசயல் கட்சியும் அவர்களு உரிய இடத்தை ஒருபோதும் அளித்ததில்லை. எந்த நடைமுறையிலும் அதற்கான இடமில்லை என உணர்ந்திருக்கிறேன். பின் ஏன் அவர்கள் காத்திருக்கிறார்கள். யாரை எதிர் நோக்கிகிறார்கள் என்பதற்கு உறுதியான எந்த பதிலும் இல்லை. அவர்கள் என்ன காரணத்தினாலோ தங்கள் சமூக தலைவர்களை நம்ப தயாராக இல்லை. விளிம்பு நிலை தலைவர்களின் செய்பாடுகளும் அதற்கு தகுந்த குறுங்குழு மனப்பான்மையுடன் செயல்பட்டனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் வன்முறையாளர்காளாக இருந்ததனர். துவக்கத்தில் பெரிய போராட்டமும் கலவரமும் அவர்கள் வாழ்கையில் நிச்சயமில்லாத தளத்தை உருவிக்கிவிட்டுருந்தது. காவல் துறையின் நெருக்கடி அதன் மையக் காரணமாக இருக்கலாம்
ஆளும் அல்லது எதிர் கட்சி அரசியலில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள் பின்னால் செல்ல விரும்பாமை காரணமாக இருக்கலாம். பின் அது எப்படி நிகழும் என எனக்கு புரியவில்லை.1985 களுக்கு முன் நீண்ட காலம் கட்சி தனித்து ஆட்சியமைக்காது போனதன் பின்னணியில் விளிம்பு நிலை சமூக இளைஞர்களின் அரசியல் விழைவு நிறைவேறாமை காரணமாகி பின் அங்கிருந்து கண்ணனின் எழுச்சி துவங்கியது

