https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

அடையாளமாதல். * கனவை நிகழ்தல் *

 



 

ஶ்ரீ:



பதிவு : 698  / 887/ தேதி 07 ஆகஸ்ட்  2026





* கனவை நிகழ்தல் * 


ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 95.




அரசியலில் சில சமயங்களில் காய்கள் மிகச் சரியான இடங்களில் சென்று அமர்வது நிகழ்ந்து விடுகிறது. அப்போதும் அதுதான் நிகழ்ந்தது. இளைஞர் காங்கிரஸ் அவரை முன்னிறுத்திய இயக்கமாக உருவெடுத்தது அது நேரடியாக சண்முகத்தின் அதிகாரத்தை அறைகூவுவது. அதற்கு முன்பாக காங்கிரஸ் இரண்டு பிளவாக இன்டிகேட் சின்டிகேட் என செயல்பட்டதற்கு பின்னால் அதன் அடிப்படை காரணமாக இருந்ததில்லை. சண்முகத்திற்கு எதிராக கிடைத்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த குழுவில் கண்ணன் இரண்டாம் நிலை தலைவராக மட்டுமே அறியப்பட்டார். இந்திராகாந்தி அகில இந்திய அளவில் தனது அரசியல் இருப்பை மீட்டெடுத்த போது மூத்தவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு திரும்பவும் இந்திரகாந்தியை ஏற்பது அல்லது அரசியலை விட்டு விலகுவது. மூப்பனார்,பா.ராமசந்திரன் வெங்கட்ராமன் போன்றவர்கள் இந்திரா காந்தியின் தலைமையை ஏற்று கட்சிக்கு திரும்பினர் மற்றவர்கள் ஜனதா மற்றும் பிற கட்சியில் இனைந்து பின்னர் மெல்ல காணாமலாயினர். புதுவையிலும் அதுவே நிகழ்ந்தது. கண்ணன் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்ட போது ஏற்பட்ட முரணால் இளைஞர் காங்கிரஸை முன்னகர இயலாமல் செய்துவிட்டார் சண்முகம் . கண்ணன் அரசியலில் எதிர்மறை சக்தியாக உருவெடுப்பார் என மிகச் சரியாக கணித்தவர் அதை எதிர் கொள்ள எந்த மாற்று கருவியையும் வைத்திருக்கவில்லை. அது ஒரு அரசியல் பிழை என்பதை நிரூபிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிக ஆபத்தான ஆட்டம் என்றாலும் என்னை நிலைப்படுத்தி நான் நினைத்ததை செய்ய அது உதவும் என்பதால் முயற்சித்து பார்ப்பது என்கிற முடிவில் இருந்தேன். அதன் பின்னணியில் மாநில அரசியலில் உருவான வெற்றிடம் அதை செய்து பார்க்கும் துணிவை கொடுத்தது


1996 களில் சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த பிறகு கட்சியின் அனைத்து மாநில அமைப்புகளும் நீண்ட உறக்கத்திற்கு சென்றன. கட்சி அலுவலகங்களில் நடைபெறும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களின் இறந்த நாள் பிறந்த நாள் கொண்டட்த்திற்கும் கூட கூட்டம் வராமலாகியது. தோல்வியின் சோர்விலிருந்து மீண்டெழும் சந்தர்பத்திற்காக சண்முகம் காத்திருந்தார். தோல்விக்கு பிறகு இப்படி நிகழும் என பேசிக் கொண்டே இருந்த போதுதான் எனக்கு மிகுந்த செல்வாக்குள்ள தொகுதிகளில் ஒன்றான ஊசுடுவில் ஒரு கொடியேற்றும் நிகழ்வை தொடங்கி பின் அதை மாநிலம் முழுவதும் செய்தால் என்ன? என அவரிடம் கேட்டேன். கட்சியின் உறக்கத்தில் இருந்து எழுப்ப ஒரு சந்தர்பாக அதைப் பார்த்தாரா அல்லது எதாவது செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்க வேண்டும் என நினைத்தாரா என தெரியவில்லை. அதற்கான ஏற்பாடுகள் தொடங்கபட்டு நிகழும் நாளும் குறிக்கப்பட்டது. நான் ஊசுடு தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் இளைஞர்களை அழைத்து முழு திட்டம் பற்றி விவாதித்தேன்


மிக விரிவான ஒரு முழு நாள் என நீளும் அடுத்து 15 முதல் 30 நிமிடங்கள் நீளும் நிகழ்வுத் துளிகள் திட்டமிடப்பட்டு காலை 9:00 மணிக்கு சேதராப்பட்டில் துவங்கி இரவு 11:00 மணிக்கு அரியூரில் பொதுக் கூட்டத்துடன் நிறைவு என ஒருங்கப்பட்டது. முழு நிகழ்வையும் தலைவர் சண்முகத்திடம் சொன்ன போது அவர் விரிவான நிகழ்வு குறித்து எனது விவரிப்பை கேட்டு திகைப்படைவதை பார்க்க முடிந்தது. திரும்ப திரும்ப நிகழ்வு வெற்றி பற்றிய தனது சந்தேகத்தை கேட்டுக் கொண்டே இருந்தாலும் வேண்டாம் என சொல்லவில்லை . நான் எனது திட்ட வெற்றி பற்றி பேசும் சூழல் அதுவல்ல என உணர்ந்திருந்தேன். சற்று எதிர்மறை எதார்த்தம் பேசுவது நல்லது என தோன்றி அவரிடம்எதிர் கட்சியாகி நிற்கும் சூழலில் இந்த நிகழ்வு தோல்வியடைந்தாலும் நாம் இழக்க ஒன்றுமில்லைஎன சொன்னேன் நான் சொன்ன முறை அவருக்கு ஏற்புடையதாக இருந்திருக்க வேண்டும். அதை தவிர்த்து வேறு விஷயங்களுக்கு உரையாடல் தாவிவட்டிருந்தது


குறிக்கப்பட்ட நாளில் நிகழ்வு சேதராப்பட்டில் துவங்கியது. நான் எனது நீண்ட நாட்கள் திட்டமிட்டிருந்தபடி அந்தந்த பகுதியின் விளிம்பு நிலை சமூக இளைஞர்களை முழுவதும் திரட்டி இருந்தேன். அதை பிழையின்றி ஒருங்க கிராமம் கிராமாக சிறு சிறு கூடுகை வழியாக அரசியலில் நிகழ இருக்கும் மாற்றம் பற்றியும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் விரிவாக விவாதித்து அந்தந்த ஊர் பெரியவர் முன்னிறுத்தி இது நிகழ வேண்டும் என்றும் சொல்லியிருந்தேன். பெரியவர்களுக்கு நான் பேசியதில் பெரிய ஆர்வமில்லாமல் போனாலும். மாநில முதல் நிலை தலைவர்கள் ஒரு நாள் முழுவதும் தங்கள் தொகுதியில் இருப்பார்கள் அவர்களுடன் நாள் முழுவதும் பயணிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளும். அந்தந்த பகுதியில் அவர்களின் பெயர்கள் தலைமை மற்றும் முன்னிலை என்றிருக்க வேண்டும் என்கிற தகவல் அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்க வேண்டும். சில மாதங்களுக்கு முன் இதே தலைவர்கள் சந்திக்க வந்து அவர்கள் முன்வைத்த வேட்பாளரை ஆதரிக்கும் கோரிக்கையை நிராகரித்து தங்கள் வெறுப்பை வெளிக்காட்டி இருந்தார்கள். அதன் விளைவு காங்கிரஸ் கட்சியின் மூத்த வேட்பாளர் மாரிமுத்து தோற்கடிக்கப்பட்டிருந்தார். அது நிகழ்ந்த ஓரிரு மாதங்களில் ஏறக்குறைய அதே போன்ற நிகழ்வுகள் தங்கள் தலைமையில் நிகழ இருப்பது ஏதாவது சிக்கலில் கொண்டு விடுமோ? என்கிற கவலை கொள்வதை பார்க்க முடிந்தது. கட்சி அல்லது கட்சி தலைவர்களின் மீது கடந்த ஐந்தாண்டுகள் உருவான கோபம் நடந்த முடிந்த தேர்தலில் வெளிப்படுத்திய திருப்தி அடைந்த நிமிடம் அந்த கோபம் காணாமலானதை பார்க்க எனக்கு விந்தையாக இருந்தது. இவர்களின் கோபம் ஒரு தேர்தலுக்கு பிறகு காலாவதியாவதை எப்படி புரிந்து கொள்ள. எவ்வளவு எளிய மக்கள் என்கிற எண்ணம்தான் முதலில் தோன்றியது


அதை தொடர்ந்து சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் வெற்றிவாய்பை இழந்திருந்த மாரிமுத்துவை சந்தித்து நிகழ்வு பற்றி பேசினேன். அவரது கண்களில் அடிப்பட்ட வலியை பார்க்க முடிந்தது. எனது திட்டம் அவரை பதற்றத்தில் கொண்டு விடுவதை உணர்ந்தேன் . மாரிமுத்துவுடன் எனக்கு எப்போதும் நல்ல உறவு இருந்ததில்லை. அவர் என்னை தனக்கு எதிரானவனாக பார்த்தார். இப்போது பழைய விஷயங்களை பேசுவதில் அர்த்தமில்லை. நான் அவரிடம் அவரது தோல்வக்கான காரணம் என்ன என்பதை அதை அவர் அறிந்திருப்பார் என நினைத்தேன் அதை மு்ன் வைத்து பேச முயன்றேன். அவர் கட்சிக்கு சீட்டு கேட்டு சண்முகத்தை சந்தித்த போது அங்கிருந்தேன். அவர் மீதிருந்த வெறுப்பினால் உள்ளூர் தலைவர்கள் வேறு ஒருவரை முன் மொழிந்தனர். ஆனால் ஒரு சிறிய வேறுபாட்டை அப்போது நான் உணர்ந்தேன். அவர்கள் முன்வைத்த வேட்பாளருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு அவர் கண்ணன் தலைமையிலான தமாகா வில் இணைந்து வெற்றிபெற்றார். இதில் வினோதம் மாரிமுத்து அந்த தொகுதியில் வசிக்காமல் போனாலும் நகரில் உள்ள அவரது வீடு சட்டமன்றத்திற்கு மிக அருகில் என்பதால் நாள் முழுவதும் அங்கு தொகுதி மக்கள் திரள்வதையும் அவர்களை உபசரிப்பதுமாக மாரிமுத்தை பார்த்திருக்கிறேன். இப்போதைய வேட்பாளர் அவர்கள் தொகுதியில் வசித்தாலும் சென்று சந்திக்க முடியாமலான போதுதான் தங்கள் தவறை உணரத்துவங்கினர்


மாரிமுத்துவிற்கு நிலமுடை சமூகத்தில் அரசியல் காரணங்களுக்கு அப்பால் தனிப்பட்ட விரோதம் இருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. அதை இப்போது பயன்படுத்த முயன்றேன். இளைஞர் காங்கிரஸ் அவருக்கு ஒருபோதும் எதிர் நிற்காது என்றும் அடுத்த முறை தேர்தலின் போது ஊர் பெரியவர்கள் முன் சென்று சிறுத்து நிற்க வேண்டிய தேவை இருக்காது என சொன்னேன். நான் நிலமுடை சமூகத்தின் ஆதிக்கத்திற்கு எதிரான அரசியலை மாநிலம் முழுவதும் முன்னெடுத்துக் கொண்மிருக்கிறேன் எந்த தொகுதியிலும் அவர்களுடன் எனக்கு சமரசமில்லை இத்தனை ஆண்டு காலம் இளைஞர் காங்கிரஸ் இழந்த அரசியல் பாதங்களை சரி செய்து அந்த தடத்தில் சென்று அது வெற்றி பெருவது பற்றிய கனவை சொல்லியிருந்தேன். அது நிக்ழந்தால் அடுத்த மாநில கட்சி நிர்வகிகளில் 75 விழுக்காடு இளைஞர் காங்கிரஸை சேர்ந்தவர்களாலக இருப்பார்கள். அதை செய்து முடித்தால் அரசியலில் தனக்கான இடத்தை யாரிடமும் சென்று யாசகம் கேட்காமல் சென்று அமர்வது  பற்றிய திட்டத்தை அவரிடம் சொன்னேன்


அவர் இணங்கினாலும் மறுப்பு தெரிவித்தாலும் இந்த நிகழ்வு நடைபெற போகிறது என சொல்லி அவருக்கு முடிவு செய்ய அவகாசம் அளித்து விடை பெற்றேன். அன்று மாலை என்னை வீட்டில் வந்து சந்திப்பார் என எதிர்பார்கக வில்லை. வந்த போது எனது திட்டத்தை முழுவதும் செயல்படுத்துவதாக வாக்களித்தால் உடன் நிற்பதாக சொன்னார். நானும் என் நிலைபாட்டில் எந்த மாறுதலும் இருக்காது அவருக்கு வாக்களித்தேன்


புதன், 5 ஆகஸ்ட், 2026

மணிவிழா. தடையின் விளையாட்டு

 




ஶ்ரீ:



மணிவிழா - 80


05-08-2026




* தடையின் விளையாட்டு *





தத்துவத்திற்கான இடம் வாழ்வியலில் எங்கு பயன்பட்டிற்கு வருகிறது என்பது பொருத்தது.அதுவரை ஒரு உடைந்த வாக்கியமாக எந்த புரிதலும் இல்லாமல் அன்றாட சொற்களில் அவற்றை பயன்படுத்துகிறோம். வாழ்வின் அங்காமாக ஒருவருக்கு அது நிகழ ஒருகீதா முகூர்த்தம்வாய்க்க வேண்டும். நிகழும் போதும் அதை பயன்படுத்தும் சூழல் உருவாவது பொருத்து அதற்கான தேவை மற்றும் இடம் அந்த தேடலில் இருந்து எழுந்து வருகிறது . தத்துவம் பொதுவாக ஆன்மீகம் சார்ந்தே புரிந்து கொள்ளப்பட்டாலும் முதல் முறையாக அது அப்படியல்ல தத்துவம் பிரபஞ்சத்தின் அனைத்தின் இருப்பையும் செயல்பாட்டையும் சொல்ல வந்தது என்றும் மதம் குறித்த விளக்கங்களும் அது குறித்த தத்துவங்களும் அதில் ஒரு அங்கமாக இருக்கிறது என்கிற புதிய புரிதல் முதலில் திகைப்பை கொடுத்திருந்தது. அப்படி என்றால் மதம் அல்லது அது வலியுறுத்தும் எல்லாம் அதற்குள் இருந்தாக வேண்டும் என்கிற கருத்து வலுப்பெறுகிறது. விந்தையாக இருந்தாலும் அதை ஒரு வகையில் நிரூபனவாதம் போல முன்வைக்கலாம் போல.  


மார்க்ஸியம் ஒரு தரிசனம்என ஜெயமோகன் சொன்ன போதும் அதே அதிர்வை அடைந்தேன். அதுவரை மார்க்ஸியத்தை ஒரு அரசியல் தரப்பாக புரிந்திருந்த எனக்கு அது புதிய பார்வையை கொடுத்தது. மார்க்ஸியம் ஒரு தத்துவ முன்வைப்பு என்றும் ஒரு தத்துவம் தரிசனமாகும் போது அது வாழ்வின் அனைத்து சாரம்சங்களை பற்றிய கோட்பாடுகளுக்கும் தீர்வு கொண்டதாக அதை வாழ்க்கையில் போட்டுப் பார்க்க உகந்ததாக இருக்கும் என புரிந்து கொண்டேன். வாழ்வியலின் எந்த துறை சார்ந்தவர்களும் தங்களுக்கான வாழ்கையை வடிவமைத்துக் கொள்ள விரும்பினால் அதிலுள்ள கூறு அதற்கான வழிகாட்டலை அளிக்க வேண்டும் . உலகின் எத்தனை கோடி மனிதர்கள் கலாச்சாரம் பண்பாடு என விரிந்து விரிந்து சென்று பின் இணைந்து கோடிக்காணக்கான தொகுப்பானாலும், அவைகளுக்குள் இருந்து பிரிந்து தனிப்பட்ட ஒருவர் தேடும் பொது வாழ்வியல் குறித்த கருத்திற்கு மட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாக்கை குறித்த வழிகாட்டலையும் அது அளிக்கும். தத்துவம் ஒன்றுடன் ஒன்றை தொடர்புறுத்துகிறது அதன் வழியாக அதை புரிந்து கொள்ள வைக்கிறது. அது மாறா தன்மை கொண்டிருக்கிறது. எக்காலத்துக்குமானதாக இருக்கின்றது. தொடர்பற்றது போல தோன்றும் இரண்டை இணைக்கும் ஒன்று. மனிதனுடன் அவனது ஆன்மாவை மனதை கொண்டு இணைக்கிறது. மனம் ஒருவகையில் உறுப்பை போல புரிந்து கொள்ளப்பட்டாலும் அதை ஒரு தத்துவமாக முன்வைக்கப்படுகிறது. என்னை என்னுடன் தொடர்புறுத்த அந்த தத்துவம் தேவையாகிறது. வழிகாட்டியாக பாதையாக மருந்தாக ஆற்படுத்தலாக அது வாழ்கையில் அளித்த பெரும் விடுதலையை நினைத்துப் பார்க்கிறேன்.


ஐரோப்பிய தத்துவம் ஆன்மீகத்தில் இருந்து பிரித்து அறியப்படுகிறது. ஆன்மீகம் இறையில் என்கிற வகைமையில் அங்கு உபயோகப்படுத்தப்படுகிறது . ஆன்மீகத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட தத்துவங்கள் வழியாக புதிய உச்சங்களை அடைந்தார்கள். அவற்றில் மானுட விடுதலை தனிமனித சுதந்திரம் போன்ற புதிய ஜனநாயக புரிதல்கள் அதை சார்ந்த அமைப்புகள் உருவாகி வந்தது. அவை ஐரோப்பிய சிந்தனைகள் தத்துவங்கள் வழியாக அவர்ககள் உலகிற்கு கொடுத்த கொடைஅன்றாட உலகியலில் தத்துவம் குறித்த புரிதல் அனேகமாக இங்குமங்கும் ஒலிக்கும் உதிரி வசனங்களை தவிர ஒரு மைய நீரோடையாக அதை அணுகும் மனநிலை யாருக்கும் இல்லை. அது தேவைபடாமல் வாழ்ந்து மறைபவர்கள் அனேகமாக அனைவரும் என்றால் ஆச்சர்யமில்லை . பின் அவை யாருக்காக சொல்லப்படுகிறது என்பதை விட யாரை நிராகரிக்கிறது போன்ற அனைத்து கேள்விகளும் பொருளற்றவைகள்


தத்துவங்கள் தெரிவு செய்யப்பட்ட மிக சிலருக்கானது என்றால் அது வஞ்சனை அல்லவா? என்றால் அது அப்படியல்ல. எந்தத் துறையாக இருந்தாலும் தேடல் கொண்ட ஒருவனை அது தன் அருகில் கொண்டு சேர்த்துக் கொள்கிறது . இவை பேசி புரிந்து கொள்ள இயலாதவை,உலகின் போக்கு அப்படித்தான் வடிவமைக்கபட்டுள்ளது. கீதையில் கண்ணன் சொல்வது போல இந்த கீதையை யார் பிறருக்கு சொல்கிறானோ அவன் எனக்கு அணுக்கன் என்கிறான். அதே சமயம் யாருக்கு புரியவில்லையோ அவர்களுக்கு சொல்லாதே. நான் தான் அவர்களை அப்படி வைத்திருக்கிறேன் என்கிறான். இரண்டிற்கும் இடையே மிக மெல்லிய வெளியில் அதன் பெரும் வெளிச்சம் உள்ளது.  


வாழ்வின் ஒரு தவிர்க்க இயலாத கட்டத்தில் வெறுமை ஏமாற்றத்தினூடான நிலையழிதலில் இருந்து மனதளவில் என்னை மீட்டுக் கொள்ள வேண்டிய சூழல் ஒன்று உக்கிரமாக எதிர் நிற்கும் என நான் எதிர்பார்த்து இருக்கவில்லை என்பதால் அது நிகழ்ந்த போது அதை எதிர் கொள்ள இயலாமல் திகைத்திருந்த சூழல். வாழ்வில் எதிர் கொண்ட அனைத்திற்கான தீர்வுகளை நோக்கிய பயணமும் அதில் வெற்றியை அடைந்திருந்த என்னால் அந்த சூழலில் இருந்து விடுபட எதையும் செய்ய இயலவில்லை. வெளியில் இருந்து எழுந்த சிக்கல்களை சமாளிக்க முடிந்த என்னால் எனக்கு நெருக்கமான உறவுகள் கொண்டு வந்த சிக்கல்களை எதிர் கொள்ள இயலவில்லை. இப்போது அது ஒன்றுமில்லாதது என நினைக்கும் ஒன்று அன்று பெரிய நிலையழிதலை கொடுத்துக் கொண்டிருந்தது. அது ஒரு எதில்பாராத அதிர்ச்சியில் இருந்து உருவாகி இருக்கலாம். அன்று மனம் அனைத்தையும்ஏன் இப்படிஎன ஓயாது கேட்டபடி இருந்தது. அதற்குள் இருந்து என்னால் அவ்வளவு எளிதில் வெளிவர இயலவில்லை. அவர்கள் அனைவரும் என்னால் எல்லா பயன்களும் அடைந்தவர்கள் ஏன் இன்று இப்படி இருக்கிறார்கள்? எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்கள் என புரியாத இருந்த சூழலில் அதைவிட எதிர்காலத்தில் தங்களின் தேவை குறித்து மீள என்னிடம் வந்து உதவ கோரி நிற்க வேண்டும் என அறியாதவர்கள் அல்ல.ஆனால் அது அப்போது அவர்களுக்கு அவ்வளவு முக்கியமல்ல என்பதாக பட்டதாக தோன்றவில்லை மறுபடியும் இங்குஏன்என கேட்காமல் இருக்க முடியவில்லை . அப்போது எழுந்து் நின்றது வன்மம் மட்டுமே. மெய்பாடுகள் மட்டுமே என்னை செயலூக்கத்திற்கு கொண்டு செல்வது.வன்மம் எனக்கானதல்ல. அதை நீண்ட காலம் சுமந்தலைய என்னால் இயலாது. அது இட்டு செல்லும் இருள் பற்றி நன்கு அறிந்திருந்தேன்.நிச்சயம் இது என் வழியல்ல. ஆனால் நிலையழிதலை உருவாக்கும் நினைவுகளை கடக்க இயலாது போது அனைத்திலிருந்து விலகி நிற்பது மட்டுமே என்ன காப்பாற்ற முடியும். அது மட்டுமின்றி நடப்பதை பேரிருப்பு எப்படி முடிவு செய்கிறதோ அதன் படி ஏற்பது மட்டுமே செய்வதற்கு உகந்தது.


புதிய பதிவுகள்

அடையாளமாதல். * கனவை நிகழ்தல் *

    ஶ்ரீ : பதிவு : 698  / 887/ தேதி 07 ஆகஸ்ட்   2026 * கனவை நிகழ்தல் *   “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 95. அரசியலில் சில ...