ஶ்ரீ:
மணிவிழா - 71
31-03-2026
* அறப் பிழையும் மனப் பிறழ்வும்-1 *
என் நினைவுகள் வேண்டாத எதிர்கால சந்தேகங்களை கொண்டிருந்தது. மணிவிழா நிகழ்வுகள் அதன் ஒருங்கிணைப்புகள் குடும்ப உறவுகளுக்குள் தேவையற்ற மனப் பெயர்வை கொண்டுவரலாம் என சஞ்சலம் இருந்து கொண்டிருந்தது. துரதிஷ்டவசமாக என் சந்தேகங்கள் பலமுறை நிஜமாகி இருக்கின்றன. இம்முறை அது மிக தீவிரமாக நிகழ்ந்த போது அது நான் கணித்ததை விட மிக மோசமாக இருந்தது.
மணிவிழா மிகச் சரியாக செய்ய வேண்டிய ஒன்று. ஆகமமும் வேள்வியும் நிகழ்வும் ஒரு ஒழுங்கிற்குள் இணைவது என அனைத்தும் நம்பிக்கை சார்ந்தது. என்றாலும் இயற்கை நாம் அறியாத அறைகூவலை எங்கோ கரந்து வைத்திருக்கிறது என நினைக்கிறேன். புரிதலை பொருத்து மிக சரியாக செய்யப்படும் மணிவிழா பூஜைகள் கூட சில நுண் குறைகளை கொண்டதாக அன்றி நிறைவடைவதில்லை. அதற்கு பல காரணிகள். ஹோமங்கள் செய்ய குறிப்பிடப்படும் பொருள்கள் பல இன்று கிடைப்பதில்லை. அல்லது பலவற்றின் பற்றி பெயர் குறிப்புகள் எதை சொல்ல வருகின்றது என்கிற புரிதல் கொண்டவர்கள் மிக அரிது என்பதால் முழுமையான யாகம் என்பது சாத்தியமல்ல . மேலும் யாக ஹோதாக்கள் போதிய கவனமின்றி பொருளியல் தேவைக்கு மட்டும் அதை செய்ய முயற்சிப்பது. அதில் அதர்வன ஹோமங்கள் மட்டுமே இன்றும் மிக மிக கவனமாக செய்யப்படுபவை. தவறுகள் செய்விப்பவர்களை முதலில் தாக்குவதால் அந்த கவனம் இருக்கலாம். பிற ஹோமங்கள் நீண்ட கால பலன்களை தருபவை என்பதால் செய்து கொள்பவர்கள் செய்விப்பவர்கள் என இருவருக்கும் அதில் உருவாகும் எதிர்மறை பின்விளைவுகளை காலம் தாழ்த்தி உருவாக்குகின்றன என்றாலும் அவை பிரித்து அறிய இயலாதபடி அன்றாட சிக்கல்களில் அவை கரைந்து போகின்றன போலும் .
நான் என் வாழ்வின் நிறைதல்களை நோக்கி நகர முயல்பவன். அறிதலின் பொருட்டு நிகழும் அனைத்தும் நேர்மறையாக புரிந்து கொள்ளப்படுகின்றன . எது நிகழ்ந்தாலும் அதை “கடந்து செல்வது” மட்டுமே என்கிற எண்ணம் கொண்டவன் . சிறு குறைகளைக் கொண்ட மணிவிழா உலகியலில் முழுதாக ஈடுபட்டு திளைக்கும் மிக சிலரைத் தவிர பிற அனைவரையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கிறது என்கிற உணர்வை மிக தீர்க்கமாக உணர்ந்திருந்தேன். எங்கிருந்து அதை பெற்றேன் என தெரியவில்லை. அது எனது நினைவு மட்டுமே, ஆனால் அது அங்கே இருந்து கொண்டிருக்கிறது என என் ஆழ்மனம் சொல்லி அலற்றியது .
மணிவிழா குறித்து என்னிடம் விஜி ஓராண்டாக வற்புறுத்தி வந்ததை நான் மறுத்து நின்றதற்கான காரணம் நிச்சயமாக இதுவல்ல. வாழ்வை அதன் ஒழுக்கிற்கு விட்டபின் அதன் வளைவுகள் எப்போதும் ஒரு பொருட்டல்ல. நான் என் ஆழ்மனம் உருவாக்கும் கற்பனைகளை வாழ்வியல் கருவிகளாக கொண்டு எனது கனவுகளை உருவாக்கிக் கொள்கிறேன். அந்த கனவை தொந்தரவு செய்யும் எதையும் பொருட்படுத்தாது கடந்து செல்லவே முயற்சிப்பேன். ஏனோ என் 60 அகவை நிறைவு விழா பற்றிய கனவு அந்த அடுக்குகளில் இல்லை. ஏன் இல்லை என்பதற்கு என்னிடம் பதிலில்லை. இல்லை அவ்வளவுதான்.
படைப்பூக்கம் மிக்க எனது திட்டங்கள் அனைத்தும் ஒருவகை கனவு போன்றவை. அந்த கனவுகளை நான் ஈடுபட்ட துறைகள் வழியாக திரளான பொது சமூகத்துடன் மிக இணக்கமாக அமையப் பெற்றவைகளாக உருவாக்கி கொள்வேன் . அது அரசியல், தொழில் மற்றும் ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா இயக்கம் பின்னர் இலக்கிய நிகழ்வுகள் போன்றவை மிக பிரம்மாண்ட செயல்பாடுகளை கொண்டவை. அதன் வழியாக எனக்கு நிகழவிருக்கும் அடுத்த கட்ட நகர்வு பற்றிய கனவு தீவிரமாக எழுவதை தவிர்க்க இயலாது. ஒரு பயிற்சியின் பொருட்டு அது என்ன மாதிரியான எதிர்காலமாக இருக்கும் என்பது பற்றிய கனவையும் அதன் சாத்தியகூறு பற்றிய உணர்வுகளை அடைந்து முன்செல்வது எனது பாணியாக இருந்தது.
ஆழ்மன தூண்டுதல்களை செயலில் இணைக்கும் முன்பு அதை அக மற்றும் புறவயங்கள் என்னும் இரண்டினால் உணர்கிறேன். ஒன்று மனம், பிறிதொன்று உடல். உள்ளம் எப்போதும் கிளர்ச்சி உடையது எண்ணங்களால் அதை உச்சத்திற்கு கொண்டு செல்ல முடியும். உடல் வழியாக உணர்வது என்பது நாம்மால் தூண்டமுடியாத வேறு பரிமாணங்களினால் ஆனவொன்று என்பதால் அதை நான் அதை நம்மால் எளிதில் சென்றடைய இயலாத ஆழ்மனத்துடன் பொருத்திக் கொள்வேன். ஆழ்மனம் புறவய உலகின் நுண்மையுடன் தொடர்புடையது. சமூகம் கடந்து குமுக்கங்களின் உள்ளடக்கத்தில் தன்னை பொருத்திக் கொள்வது என்பதால் அது மிக பிரமாண்டமானது. அதில் என்வரையிலான எதிர்காலம் குறித்த உணர்வு நிலை என்பது அதன் மிக மிக சிறிய அலகு கடலில் ஒரு துளி போல என்றாலும் அதுவும் கடலே.
ஒருவரின் பொதுத் தளத்தில் வெற்றி என்பது பிறர் கூட்டு மனத்துடன் தொடர்புடையது. தனிமனிதனின் கனவு பொய்க்கலாம். ஆனால் கூட்டு மனதின் கனவுகள் எப்போதும் வென்று முன் செல்வது. நான் கூட்டு மனதின் கனவுகளை விதைத்து அதை எனக்குள் வளர்த்தெடுக்க முயல்பவன். நான் ஈடுபட்ட பொதுமக்களை மையப்படுத்திய அனைத்து இயக்கங்களும் திட்டங்களும் எங்கோ ஒரு புள்ளியில் அதன் சாதக பாதங்களை உணர்ந்திருந்தேன் என்பதால் அவை நிகழும் போது மனம் களிப்படைவிதில்லை சோர்வடைவதும் இல்லை.
நான் என என்னை புரந்து கொண்டதும் என் எண்ணம் என நான் உருவாக்கி கொண்டதும் எனது ஆழ்மன புரிதல்களின் வழியாக. அவை என் எண்ணங்களென திரண்டவை. எப்போதும் சிதறி பறந்து கொண்மிருந்தவை. அவற்றை தொகுத்துக் கொள்ளும் கருவிகள் அப்போது என்னிடம் இல்லை என்பதால் அவை நினைவுகளாக அச்சங்களாக உற்சாகங்களாக மட்டுமே எஞ்சின. தீவிரமாக செயல்படும் போது எனது கணிப்புகளை திட்டங்களை அச்சங்களை அடுத்தவர்களுக்கு புரியும் படி முன்வைக்க இயலாமல் போனதற்கு அவையே காரணங்கள் . மிக மிக பின்னால் இலக்கிய வாசிப்புகள் வழியாக ஜெயமோகனின் நேரடித் தொடர்பு போன்றவை உருவாக்கி எனக்கு அளித்த இடம் மிக பிரம்மாண்டமானது. அதுவரை என் எண்ணங்களாக திரண்டிருந்து அனைத்தையும் தொகுத்துக் கொள்ளும் கருவியை கண்டடைந்தேன். பின்னர் மெல்ல மெல்ல மனம் அமைதிகொண்டதும் அதனூடாக வாழ்வின் நிறை பற்றிய எண்ணங்களை கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டேன்.
என் கடந்த நாட்களில் நான் சந்தித்த பல பெரும் ஆளுமைகளுக்குள்ளே அவர்களை எனக்கானவர்களாக தெரிவு செய்யும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன். பெரும் ஆளுமைகளுக்குள்ளே மனம் சிந்தனை செயல்பாடுகளில் உள்ள ஒருமைபாடாடு என்னை அவர்களை நோக்கி கவர்ந்திருக்கிறது. அவர்களின் பட்டியல் மிகப் பெரிது அதை எழுதி என் நாக்கத்தை வீணடிக்க விரும்பவில்லை ஆனால் அதே சமயம் அந்த பெரும் ஆளுமைகளின் தன்மையை மிக நுண்மையாக அறிந்திருக்கிறேன். அவர்கள் என் வாழ்வில் உருவாக்கிய தாக்கம் அதிலிருந்த ஒத்திசைவு என்னை அவர்களை நோக்கி மிக இயல்பாக ஈர்த்திருக்கிறது. அவர்களில் மூவர் மிக முக்கியமானவர்கள். வாழ்வில் நான்காவது விரலை விட்டு எண்ணும் ஒருவரை இதுவரை சந்திக்கவில்லை. இனிமேலும் அதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அவர்களிடத்தில் இருந்து எனக்கானதை பெற்றுக் கொள்கிறேன். அதிலிருந்து ஒரு சிறிய பகுதியையாவது வாழ்கையில் போட்டுப் பார்த்து அதன் ஆழத்தை புரிந்து கொள்ள முயன்றபடி இருக்கிறேன்.
அவர்களை தாண்டி என்னை வந்து என்னை சந்திக்கும் கூட்டத்தில் இருந்தும் ஏறக்குறைய அதுபோன்ற ஒரு கூறை உருவாக்க முயற்சிக்கிறேன் அல்லது அவர்களின் செயல்பாடுகளில் அவற்றை எதிர்பார்க்கிறேன். ஆனாலும் அவர்களுக்கு உரிய சவாலை அறிந்திருந்தேன். அவர்கள் வலிந்து முரண்பட்டு என்னைவிட்டு விலகினாலும் நான் அவர்கள் மீது கசப்படைவதில்லை. காரணம் நான் என்னை என் ஆழத்துடன் தொடர்புறுத்துவதற்கு கருவியாக அவர்கள் இருந்தனர்.அவர்களிடையேயான என்னுடைய உறவும் அதன் இன்றைய இடம் என்ன? என்பது பற்றியும் பலத்தை பற்றியும் அவதானிக்க உதவுகிறது. அதனூடாக எனது அடுத்த கட்ட வாய்ப்பை உணர்கிறேன் . மனம் சொல்லுவதை உடல் உணர்வுகள் மறுத்தால் நான் உடல் சொல்லுவதையே கவனத்தில் கொள்வேன்.
என் மணிவிழா குறித்து இந்த முறை இரண்டும் ஒன்றும் சொல்லவில்லை என்பதில் இருந்து எப்படி புரிந்து கொள்வது என தெரியாமையால் அது குறித்து பெரிதாக எந்த எண்ணமும் எனக்கு உருவாகி இருக்கவில்லை. அதன் பொருட்டு நான் விஜி சொன்ன போது தொடர்ந்து மறுத்து வந்தேன். ஆழ்மனதில் அது நடக்க கூடிய சாத்தியகூறு பற்றிய எதிர்மறை சஞ்சலங்கள் என ஏதுமில்லை ஆனால் எதிர்கால சூழலில் எண்ணியிறாதவைகள் சில எழலாம். நான் அஞ்சும் சில கூறுகளின் அடிப்படைகளில் வீட்டு சூழலில் சில மாறுதல்களை அது கொண்டு வரும் என உறுதியாக நினைத்தேன். அடிப்படையில் மணிவிழா மூன்று நாள் நிகழ்வு என்பதால் மிக செலவேறியது. பிள்ளைகளின் பொருளியல் அணுசரனை குறிப்பிட்ட எல்லை கொண்டது என நான் ஆழத்தில் மிக அழுத்தமாக உணரத்துவங்கிய நேரம்.
பொருளியல் வளம் என்பது ஒரு சுதந்திரம். எண்ணியவைகளை அது உருவாக்கி அளிக்கும் அதே சமயம் அது மட்டுமே வாழ்வியலை நிர்ணயிக்கும் என நினைப்பதை போன்ற பிழை புரிதல் பிறிதொன்று இல்லை. நான் என்னை சார்ந்த என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அளித்தது என் தந்தை எனக்கு கையளித்து சென்ற பாரம்பரிய கூட்டு குடும்ப விழுமியங்களை. அவற்றை சொற்களால் அல்ல என் வாழ்கை செயல்பாட்டில் நிகழ்த்தி காட்டியிருக்கிறேன்.
அந்த செயல்பாடுகளே என்றும் மிக சிறந்தவை என்பதில் எனக்கு இருந்த சஞ்சலங்கள் இன்று முழுவதுமாக விலகிவிட்டிருந்தன.
நவீன பொருளியலை சார்ந்த சித்தாந்தங்களில் பாரம்பரிய அனுபவங்களுக்கும் விழுமியங்களுக்கும் இடமில்லை . கைக் கொண்டிருந்த விழுமியங்களை ஒருவர் கைவிடும் போது அது அவரை எப்போது எப்படி ஒரு நோய் போல ஆட்கொள்கிறது சுதந்திரத்தை தருவதாக நம்பவைக்கிறது பின் அதன் காரணிகளின் தொற்று போல எப்படி உருவாகிறது என்பது பற்றி எனக்கு மிக தீவிரமான கோட்பாடுகளும் அதற்கான நிரூபணங்களும் உண்டு. அவர்கள் வாழ்கையை நிறைவுடன் கடந்து செல்ல அந்த எதிர்மறை எண்ணங்களை விலக்க சொந்தக் கருவிகளை அவரவர் தங்கள் வாழ்வில் கண்டடைய வேண்டியது.அது எப்போதும் அறத்தை மட்டுமே முன்வைப்பது. அது அனைவருக்கும் நிகழும் என சொல்வதற்கில்லை அது ஒரு கீதா முகூர்த்தம் போல. அதன் அருள் வந்து நிலைகொள்ள வேண்டும்

