ஶ்ரீ:
மணிவிழா - 89
14-09-2026
* சாத்தியமும் எதிர்பார்ப்பும் *
அன்று கைசிக ஏகாதசி திருக்கோவலூர் ஜீயர் பிரம்மரதம் ஏறும் நிகழ்வு. திருகோவிலூர் உலகளந்தான் மூலவர் சன்னதிக்கு எதிரில் விடியற்காலை முதற் புலரியில் கைசிக புராணம் வாசித்து பின்னர் பிரம்மரதம் ஏறி மேலுலகத்திற்கு செல்வதாக குறியீட்டு நிகழ்வு ஒரு நாடகம் போல ஒவ்வொரு வருடமும் நடத்தி காண்பிக்கப்படும். ஸ்வாமி வீதி புறப்பாடு வீடு வீடுக்கு தேங்ககாய் பழம் சூடம் ஏற்றி காண்பிக்க அந்த புறப்பாடு மாட வீதியில் சென்று பின்னர் மடத்திற்கு திரும்பும் . ஜீயர் முதல்நாள் ஏகாதசி விரதம் இருந்து பின் மறுநாள் நடக்கும் நிகழ்வு என்பதால் மறுநாள் காலை உணவிற்கு பிறகு சற்று ஓய்வாக இருப்பார். என்றுமில்லாது அன்று அவரை சுற்றி கூட்டம் அலையடித்தபடி இருந்தது . இவர்களுக்கு என்ன வேண்டும் அந்த பிரமரத புஷ்ப பிராசதம் அவர்கள் வாழ்வில் என்ன மாற்றத்தை கொண்டு வரும். அப்படியே கொண்டுவந்தாலும் அதை நிதானித்து உள் வாங்கும் மனநிலை இவர்களுக்கு இருக்கிறதா. அனைவரும் பிறிதெவரோ செய்யும் பொருளற்ற ஒன்றை பித்தேறி தாங்களும் முயற்சிக்கிறார்கள். இது அலையலையாக பெருகி நிகழ்ந்து நகர்ந்து கொண்டே இருப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கான அழைப்பு வரும்வரை மடத்தில் காத்திருப்பது எனது வழக்கம். நான் அன்று அவரிடம் பேச வேண்டியவற்றை மனதில் முழுமையாக கவலையுடன் தொகுத்துக் கொண்டிருந்தேன்.
விழாகுழுவின் உயர் மட்ட உத்தேசிக்கும் தென்னிந்திய குழு நிர்வாகிகள் பட்டியலை இறுதி செய்து அவரிடம் சொல்ல வேண்டும். அதில் சில நடைமுறை சிக்கல் உள்ளது. அதன் பின்னால் உள்ள அரசியல் இன்னும் வலுவானது என்பதால் மிக மிக கவனமாக கையாள நினைத்தேன். உயர் மட்ட குழுவில் உள்ள அனைவரும் மடாதிபதிகள் மற்றும் பெரும் ஆன்மீக ஆளுமைகள் அவர்களை நிர்வாகிகளாக நியமித்து பின் அதனுள் செயல்படுவது என்பது நெருப்பில் நடப்பது போன்ற சாகசம். அவர்கள் அனைவரும் பிராம்னர்கள் நான் ஒருவன மட்டும் இதர வகுப்பை சேர்ந்தவன் முக்கிய நிர்வாகிகளான தலைவராக திருப்பதி சின்ன ஜியரும் செயலாளராக திருக்போவிலூர் ஜீயரும் இடம்பெறுவார்கள் என்பது அடிப்படை கணக்கு. இதில் வானமாமலை மற்றும் ஶ்ரீரங்கத்து ஜீயர்கள் அடுத்த படி நிலைகளிலும் பிற ஜீயர்கள் அதற்கு அடுத்த கட்ட இடத்தில் வேளுக்குடி கிருஷ்ணன் உள்ளிட்டவர்களை நான் அந்த பட்டியலை வரைவு செய்திருந்தேன்.
உத்தேசித்திருந்த தென்னிந்திய விழாக்குழு நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் பொறுப்பு குறித்து விளக்க வேண்டிய கடமை என்னுடையது என்பதால் மிகுந்த நிலையழிதலில் இருந்தேன். அன்று காலை திருக்கோவிலூர் ஜீயரிடம் உத்தரவு பெற்று மதியம் ஶ்ரீரங்கத்து ஜீயரை சந்திக்க வேண்டும் என்பது திட்டம் அன்றென பார்த்து பிரம்ரத உற்சவத்தில் கூட்டம் கட்டுங்கடங்காமல் இருந்தது. சாரை சாரையாக பலர் ஜீயரை வந்து வணங்கி சென்று கொண்டிருந்தனர். மனதில் முழுமையான திட்டம் உருவான பிறகு அதை தொடர்ந்து மனதில் தங்க வைத்துக் கொண்டிருப்பது பெரும் பாரமாக உணரப்பட்டு பெரும் பதட்டத்தை உருவாக்கி இருந்தது. இந்த கூட்டத்தில் நினைத்ததை நினைத்தபடி பேச நேரம் கிடைக்குமா. பேசுவது மிக நுட்பமான அரசியல் நகர்வு. அவரது கவனம் என் மீது இல்லாமலானால் முழுவதுமாக அவரிடம் சொன்ன நிம்மதியை இழந்து விடுவேன்.
அவற்றை நடைமுறை படுத்த நினக்கும் சூழலில் அவரது ஆற்றுப்படுத்துதல் எனக்கு மிக முக்கியமானது. அவரிடம் விரிவாக பேசி இயலாமலானால் நான் அதற்கான மாற்று வழிகளை பற்றிய சிந்தனையில் அதை ஜீயரின் மூத்த குமாரன் கோலாகலனிடம் பேசிய போது தனக்கு அந்த நிர்வாக சிக்கல் விளங்கவில்லை எதற்கும் தம்பி மணிவண்ணனிடம் பேசுங்கள் என்றார். எனக்கு அவரிடம் பேச பெரும் மனத்தடை இருந்தது. அதற்கு அடிப்படை காரணம் அவரது உடல்மொழி. பிரபந்தம் மற்றும் வேதாத்யாணம் கல்வி கற்று மீண்டுள்ள சூழலில் தர்க்கம் கொடுக்கும் நிமிர்வு அவரிடம் உரையாட தடையை உருவாக்கி இருந்தது. இது எனக்கான கடைசி வாய்ப்பு. சரி பேசி பார்த்துவிடலாம் என அவரிடம் உரையாட துவங்கும் முன்பு ஆயிரமாவது ஆண்டு விழா குழு அமைப்பு அதன் செயல்பாடுகள குறித்த திட்டமிடல்களை சொல்லிக் கொண்டிருந்தேன். அதில் என்னுடைய பங்களிப்பை சொன்ன போது அதில் “நான்” என்கிற சொல் மிகையாக வெளிப்பட்டிருக்கலாம்.அது அவரை சீண்டி இருக்க வேண்டும்.
அதை ஒருவித குறிப்பால் எனக்கு உணர்த்துவதாக பட்டது. அல்லது அது எனது ஊகமாக இருக்கலாம். வைணவத்தில் ஒரு பிரிவினரை “பாவனை வைணவர்கள்” என சொல்வதுண்டு எப்போதும் சாதாரன பேச்சினூடாக தங்களை “அடியேன்” என அடிக்கொரு முறை விளித்து கொள்வது ஒரு பேச்சி வழக்கு அந்த சொல் அதன் உண்மையான பொருள் உணர்ந்து சொல்லப்படுவதில்லை. அதற்கான எந்த நடைமுறையும் சிந்தனையும் இல்லாது வெறும் சொல்லாக அந்த வார்த்தை சொல்லப்படுவது எனக்கு மிகுந்த மனவிலக்கத்தை அளிப்பது. நான் அந்த சொல்லை பயன்படுத்துவதில்லை. நான் மிக இயல்பாக அவரிடம் பேசியது இப்போது ஒருவித ஆணவமாக பார்க்கப்பட்டிருக்கலாம். மேலதிகமாக நான் பேச நினைத்ததை பேசும் சூழல் இல்லை என்பதால் “ஜீயரை பார்த்துவிட்டு வருகிறேன்” என சொல்லி அவரிடமிருந்து விலகினேன்.
ஜீயர் வீட்டில் இருந்து மடம் மிக அருகில் இருப்பது. செல்லும் வழியில் என் முன் உள்ள சிக்கலின் விஸ்வரூபம் தெளியத் துவங்கியது. ஜீயரை தனிப்பட்டு சந்தித்து இது பற்றி விரிவாக உரையாடிவிட வேண்டும் என எண்ணிக் கொண்டேன். மடத்தில் முன்பை விட கூட்ட நெரிச்சல் மிகுந்திருந்தது. இதில் அவரை எப்படி தனியாக சந்திப்பது என புரியமல் நின்று கொண்டிருந்தேன்.
நான் வீட்டிற்கு புறப்பட தயாராகிவிட்டதாக நினைத்து அருகழைத்து மதிய உணவிற்கு பின் கிளம்பலாம் என்றார். நான் அவரிடம் தென்னிந்திய விழாக் குழு நிர்வாகிகள் வரைவு பற்றி பேச நினைப்பதை சொன்னேன். மகிழ்வுடன் சொல்லு என்றார் அந்த அமளியில் நிதானமாக சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தேன். கவனம் என்மீது இல்லாமலும் நான் சொல்லியபடி செல்ல அவர் தன்னை வணங்க வந்தவர்களுக்கு ஆசிகளை அளிக்கும் இடைவெளியில் கேட்டார். பின் அது குறித்த எந்த அபிப்ராயமும் சொல்லாமல் ஶ்ரீரங்கம் சென்று “ஜீயரை சந்தித்து அனைத்தையும் சொல்” என்றார். தான் முன்னமே அவரை சந்திக்க வருவதை பற்றி அன்று காலை அவரிடம் சொன்னதாக கூறினார். நான் எந்த உணர்ச்சியும் இன்றி அவரை வணங்கி விடை பெற்றேன்.
நான்கு வருடத்திற்கு முன்பு விழாக்குழு துவங்க இருக்கும் செய்தியையும் மாநில நிர்வாகிகள் பட்டியலையும் அவரிடம் காட்டிய போது எழுந்த முரண் மூன்று மணி நேரம் மிக விரிவாக நிகழ்ந்த விவாதம் பின் அரை மனத்துடன் அவர் அளித்த அனுமதியை இப்போது நினைவுறுகிறேன். ஆனால் நான் இன்று சொல்லப் விழையும் நிர்வாக ஏற்பாட்டு விஷயத்தில் பாதிக்கு மேல் அவர் ஒப்பப் போவதில்லை பல வித நாடகங்களுக்கு இடையே நான் அதை அவரிடம் கொடுத்து உடன் திரும்ப பெற்றுவிட வேண்டும். முற்றிலும் அவரது முடிவிற்கு விடுவதை விட ஆபத்து பிறிதில்லை. இது அவரிடம் தகவல் சொல்லுதல் மட்டுமே. அவர் முரண்பட்டாலும் அவருக்கு என் மீதுள்ள அன்பின் காரணமாக அவரை மறுத்து வந்த வேலையை முடிக்க வேண்டும். இது போல பலமுறை நடந்திருக்கிறது.
நான்கு வருடங்களுக்கு முன்பு விழாகுழு துவக்க இருப்பதையும் மிக மிக மகிழ்வாக அவர் ஏற்றதையும் அதன் செயல்பாடுகள் குறித்து நீண்ட உரையாடலுக்கு பிறகும் அவரது சந்தேகங்கள் விலகாதிருந்ததை உணர முடிந்தது. நிர்வாகிகள் பட்டியலை இறுதியாக சொன்ன போது கடுமையாக எதிர் விணையாற்றினார். அதில் நான் இணைத்திருந்த வடகலை சம்பிரதாயத்தை சேர்ந்த சில பெரும் ஆளுமைகளை குறித்த தனது கடும் கண்டனத்தை சொன்னார். “இது சரிவராது சிறுபிள்ளை விளையாட்டில்லை இது உருவாக்கும் எதிர்கால சிக்கல் உன்னை முழுமையாக முடக்கிவிடும்” என்றார். அந்த பேராபத்தை நானும் மிக மிக நுட்பமாக உள்கை போல உணர்ந்திருந்தேன். அவருக்கு அதில் இடம் பெற்றிருந்த பிற ஸ்மார்த்த,ருத்ரவைணவ, சாக்த, வீரசைவ, காணபத்தியம், சௌரம் போன்ற பல முற்றும் முரண்பட்ட சம்பிரதாயத்தை சேர்ந்த முக்கிய ஆளுமைகள் இடம் மெற்றிருந்த போதும் வடகலை சம்பிரதாயத்தை சேர்த்தது பற்றி மட்டும் என்னை கண்டித்து நீண்ட நேரம் பேசினார். நான் இடையே ஒரு சொல் சொல்லாது அவர் முழுமையாக சொல்லி முடிக்கும் வரை காத்திருந்தேன்.
இது போல பல முறை நடந்துள்ளது. அதிகாரத்தின் உச்சத்தில் உள்ள அனைவரின் அன்றாட நடைமுறை சிக்கல்களில் ஒன்று இது. அவர்கள் அமர்ந்திருக்கும் உயரம் பல கள ஏதார்த்தங்களை பார்க்க உதவாது. அவர்கள் எப்போதும் தங்களை சுற்றி அமைத்துக் கொண்டிருக்கும் அரண் தாண்டி வெளிவருவதில்லை. அனைத்தையும் உளபதிவுகளாக தொகுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் செயல்படுவார்கள். அது அவர்களுக்கு அரண் போல. அந்த அரண் பல பழைமையான முடிவுகளால் அறுதியிடப்படுவது. அனைத்திற்கும் ஒன்று போன்ற அனுகுமுறையை வைத்திருப்பார்கள். அது நடைமுறை உலகிற்கு அப்போல் வேறொரு காலத்தில் இருக்கும். அது உருவாக்கும் அர்த்தக் குழுப்பம் அவர்களுக்கு எதிராக நிற்பதை ஒவ்வொரு முறையும் பார்த்திருக்கிறேன்.
அதுவே இப்போதும் அவர் சொல்லி முடித்த பிறகு என் தர்பை வைத்தேன். இது வழக்கமான வைணவ மாநாடு போன்று ஒரு குறிப்பிட்ட பிறிவை சார்ந்து செயல்படாது. ராமாநுஜரும் அவரது கருத்துக்கள் அனைத்தும் அனைவருக்குமானது என அவர்களே நினைக்கிறார்கள். இதில் நாம் ஏன் அவரை குறுக்க வேண்டும். வடகலை குறித்த உங்கள் ஐயப்பாட்டை மிக மிக நுட்பமாக அறிந்திருக்கிறேன். இதில் அவர்கள் அரசியல் செய்ய ஒன்றுமில்லை அப்படி நிகழ்ந்தால் அதை நான் பார்த்துக் கொள்கிறேன். என்மீது உங்களுக்குள்ள நம்பிக்கைக்கு எதிராக நான் இதுவரை ஏதும் ஆற்றியதில்லை என நீங்கள் அறிவீர்கள். இப்போது என்பை நம்பி இதை மேற் கொண்டு நிகழ்த்த அனுமதிக்க வேண்டும் என சொன்னேன். வேண்டா வெறுப்பாக அனுமதித்தார்.

