https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 24 ஆகஸ்ட், 2026

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

 




ஶ்ரீ:



மணிவிழா - 84


24-08-2026





* நம்பிக்கை கற்பிதமா? *



விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை  சென்றடைய இயலும் என்றும் நிலையழிதலுக்கு நல்ல தீர்வாக இருக்கும் என அது காட்டிக் கொடுத்தது. ஒன்று வாழ்வியல் முறையில் உள்ள இடக்கரடக்கலை எதிர் கொள்ளும் அழகியலையும் அதை தொடரந்து ஆழ்மனதுடன் தொடர்புறுத்தும் ஆன்மீகத்தையும் முன் வைத்தது. இரண்டும் ஒன்று சென்று ஒன்றை தொடுபவை என நினைப்பவர்கள் அவற்றின் விடுபடலை சந்திக்கும் போது பிறிதொன்றினால் சமன் செய்து கொள்கிறார்கள். ஆனால் அவற்றை இரண்டு வெவ்வேறு தளத்தில் உள்ளவைகளாக பார்ப்பவர் அனைத்துடன் முரண்படுகிறார்கள். அவர்களுக்கு புரியவைப்பது எப்போதும் நிகழாது.


நான் ஆன்மீகம் குறித்த எனது புரிதலுக்கு அதன் மிக விரிவான ஏற்பாடென்பது ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா குழுவை துவக்கியது.அகில இந்திய அளவில் அதற்கான மையத்தை ஒருங்கிணைக்கும் முயற்சி ஏறக்குறைய முடிவடையும் நிலையில் ஊழ் அதன் மையத்தில் இருந்து நான் வெளியேற வேண்டி வந்த போது மிக அமைதியாக அது காட்டிய வழியில் மெல்ல வெளியேறினேன். காரணம் இப்படி நிகழும் என எனக்கு முன்பே குறிப்பு காட்டியிருந்தது .எங்ககோ ஆழ்மனதில் அதை உணர்ந்திருந்தேன். 2017 ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்தை மிக விரிவாக திட்டமிட்டிருந்தோம்.  2013 களில் மாநிலங்களவை உறுப்பினர் தலைமையில் விழாகுழு பிரதமர் மோடி அவர்களை சந்தித்து புதுவை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்க அவரும் வருவதற்கு இசைவு சொல்லியிருந்தார். அவர் அதுவரை தென்னகம் வந்திருக்கவில்லை. இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும் என்றார்.  


அகில இந்திய அளவில் ஆன்மீக தலைவர்கள் அனைவரும் புதுவையில் நிகழவிருக்கம் ஜீயர் மாநாட்டில் கலந்து கொள்ள செய்வது விழாக் குழுவின் மையம் திட்டம். அதில் கொண்டுவர இருக்கும் தீர்மானங்கள் எனக்கு மிகு முக்கியமானவை. ஒரு வகையில் விழா குழு மிக விரிவாக அமைக்கப்பட்டதன் தோக்கம் இந்து அறநிலையத் துறை மீதான அரசங்கத்தின் பார்வையை மறுவரையறை செய்யும் திட்டம் . ஆனால் அது ஆரம்ப கட்டத்தில் இருந்தது. கேரளா பாணி நிர்வாக குழு அமைப்பதில் உள்ள மாற்று யோசனகள் அப்போது எனது எண்ணமாக இருந்தது. முழு வடிவமைப்பு நிகழ்ந்திருக்கவில்லை.


பூர்வாங்க வேலை முடிவடைந்த சூழலில் அந்த உச்ச நிகழ்வு நடப்பதற்கு முன் ராமாநுஜரிடம் உத்தரவு கேட்க வேண்டும் என ஏன் தோன்றியது என தெரியவில்லை . ஒரு விரிவான நிகழ்ச்சியை அவர் அவதரித்தஶ்ரீபெரும்பூதூரில்நடந்தது . அந்த நிகழ்வே கூட நான் வடிவமைத்த ஒன்றல்ல. எங்களின் கிளை குழு ஒன்று அதற்கான ஏற்பாட்டை ஒருங்கியிருந்தது . நான் அதில் பார்வையாளராக கலந்து கொண்டேன். அப்போது சட்டென ஆழ்மனதில் அவரிடம் அனுமதி கேட்க வேண்டும் என தோன்றிவிட்டது. எப்படி எந்த வடிவத்தில் எனக்கான  பதில் கிடைக்கும் என்பது பற்றி எந்த கவனமும் எனக்கிருக்கவில்லை. நான் அவ்வப்போது இது போன்ற கிறுக்குதனம் செய்வதுண்டு. அனைத்திற்கும் ஏதோ ஒரு வகையில் பதில் போல ஒன்று தீர்க்கமாக உணரப்படுவதை அறிந்திருக்கிறேன் . இப்போதும் அதை முயற்சிக்க எண்ணம்


திருமஞ்சனம் முடிந்து அலங்காரத்திற்கு முன் அந்த ஈர செந்னிற ஆடையுடன் ராமாநுஜரை தரிசிக்க அனுமதித்தனர். அனைவரும் அவரை சுற்றி வந்த போது நான் கேட்க்க நினைத்த கேள்வி மனதில் எழவில்லை மாறாக ஒருவித திகைப்புடன் மீள மீள அவரை சுற்றிக் கொண்டிருந்தேன். காரணம் முதல் காட்சி எனக்குள் அதீத திகைப்பை உருவாக்கி இருந்தது. பஞ்சலோக சிலா மூர்த்தியாக அமர்ந்திருந்த கோலம் என்னவோ ஒரு சூழலில் நிஜ மானுட உடலின் அத்தனை கூறும் அதில் இருந்ததாக ஆழ்மனம் பார்த்து எனக்கு சொன்ன போது தர்க்க புத்தியினால் அதை முதலில் மறுத்தேன். அது ஒளியமைப்பு அப்படி ஒரு உளமயக்கு அளிக்கும் என சொல்லிக் கொண்டேன். ஐம்பொன் சிலை ஏறக்குறைய மானுட சரீரத்தின் நீர்மையும் வண்ணமும் ஒளியையும் கொண்டிருக்கும். திருமஞ்சன நீரினால் உருவாகும் ஒன்று ஆனால் அது நீண்ட நேரம் நீடிப்பதில்லை. என்றாலும் இதற்கு முன் அனுபவமாக அதை  மிக மிக அறிதாக உணர்ந்திருந்தேன்.


இப்போது கண்முன் அப்படி ஒரு உரு. நான் கண்ட அதே காட்சி மீளவும் நிகழ்கிறதா என பார்க்க மீள மீள அவரை சுற்றி வந்தேன். எல்லா கோணத்திலும் அதுவாகவே இருந்தது அந்த முதல் திகைப்பை உருவாக்கி இருந்தது. இப்போது மிக அணுக்கமாக அவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது ஆழ்மனம் சொன்ன ஒரு செய்தி எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. அவரின் தோற்றத்தை வெளிப்படுத்திய முறை எனக்குள் ஆழமான கேள்வியை உருவாக்கி இருந்தது. அவரை பார்க்க மிக அழுத்தமான மனநிலையில் உள்ள வயதான ஒருவர் கண்கள் நீர் கோர்த்து தளும்பி நின்றிருந்தது. அனைவரையும் வணங்கும் கை முத்திரைபட்டாசாரியர்கள் அனைவரும் அலங்கார பணி நிமித்தமாக விலகி இருக்க நானும் அவரும் சில மின்னல் பொழுது தனித்துவிடப்பட நான் கேட்க்க நினைத்ததை சொற்களால் இல்லாமல் நினைவால் அவரை கேட்ட நியாபகம். சற்று நேர அமைதிக்கு பின்போ போய் வேறு வேலை பார்என்பதாக இருந்தது. அது முழுவதும் எனது எண்ணத்தில் இருந்து எழுந்ததாக கூட இருக்கலாம் ஆனால் பெரும் செயல்கள் நிகழவிருக்கும் சூழலில் அதன் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் பணிகளை செய்து கொண்டிருக்கும் போது இப்படி ஒன்று எப்படி எழும் என தெரியாததால் உருவான திகைப்பின் காரணமாக அதை உறுதி செய்துகொள்ள மீள மீள அவரை சுற்றி வந்தபோது அந்த மனப்பதிவு மாறவேயில்லை


ஒரு தருணத்திற்கு அப்பால் அவரை பார்ப்பதை விலக்கி வெளியேறினேன். வெளி பிரகாரத்தில் தனிமையில் அமர்ந்த அந்த பதில் தந்த அதிர்வு எதனால் எனக்குள் இருந்து எழுந்தது என அவதானித்துக் கொண்டிருந்தேன். மனித மனம் இயங்கும் வக்கிர கதியில் இது போன்ற குதர்க்கம் உருவாவது மனதின் இயல்பு. ஆனால் அந்த சிலை சொன்ன வேறு சில விஷயம் என்னை நிதானிக்க செய்திருந்தது. நடப்பது எதுவும் அவரது விருப்பத்தில் நிகழவில்லை என்கிற ஆழமான பதிவு திரும்ப திரும்ப எழுந்து கொண்டே இருந்தது


அதை தொடர்ந்து நான் அடைந்த உளப்பதிவு மிக விசித்திரமானதும் திகைக்கச் செய்வதும் மூளையை சொடுக்குவதுமாக இருந்தது . இன்று வரை அது அன்று எழுப்பிய கேள்விக்கு என்னிடம் பதில்லை. வைணவ சம்பிரதாயத்தில் அவருக்கு அளித்த இடம் அதை ஒட்டி உருவான அவரது இருப்பு மிக பிரம்மாண்டமானது . கர்ண பரம்பரையாக அல்லது தொடர்ந்து எழுதி வைத்த கிரந்தங்களின் அடிப்படையில் ஶ்ரீவைகுண்டத்து பெருமாள் அதன் முழு நிர்வாகத்தையும் ராமாநுஜரிடம் அளித்ததாக சொல்லப்படும் வைணவ சம்பிரதாய கூற்று. மஹாலக்ஷ்மியை தாயாக நாராயணனை தந்தையாக வைக்கும் வைப்பு முறை தாண்டி ஆசாரியன் மூன்றாவது நிலையில் வைக்கப்பட்டான். வைணவ சரணாகதி தத்துவத்தில் ஆசாரியன் இடம் பெருமாள் இடத்தைவிட பெரிது அதற்கு இணையாக மகாலக்ஷ்மி தாயாரை சொல்லலாம். இருவருமே ஜீவன்களின் மோட்டச்சத்திற்கு அவர்களின் குறைகளை தாண்டி சிபாரிசு செய்பவர்கள். “புருஷகாரிகள்எனப்பட்டனர்அதன் தத்துவார்த்த விவரங்களுக்குள் நான் செல்லவில்லை மாறாக அடைந்த மனப்பதிவின் முரணை மட்டும் கருத்தில் எடுக்கலாம் என நினைக்கிறேன். அன்று அவர் அமர்ந்திருந்த நிலை இவற்றிற்கு அப்பால் ஏற்றி வைக்கப்பட்ட சுமை தாங்காது கசங்கியவர் போல இருந்தார். விரும்பாத ஒன்றை தாங்கி நிற்பவர் போல அல்லது இவை எதுவுமே அவருடையது இல்லை போல பிறரால் தன்மீது ஏற்றப்பட்ட அதீத எடை ஒன்ற தாங்க இயலாதவர் போல இருந்தார்


செவ்வாய், 18 ஆகஸ்ட், 2026

மணிவிழா 83 * இறை கனிதல் *

 


 

ஶ்ரீ:



மணிவிழா - 83


18-08-2026





* இறை கனிதல் *




வாழ்வியல் நடைமுறையில் இருந்து என்ன காரணத்தினாலோ மதம் என்கிற ஒன்றை கழித்துவிட்டால் அல்லது நிராகரித்தால் அவர்கள் தங்களிடமிருந்து கலையை,பண்பாட்டை, மொழியை வெளியேற்றுகிறார்கள் அதன் பின் அனைவது வெறுமை மட்டுமே என்கிறார் ஜெயமோகன். நமது மூத்தோர் மதம் என்று சொன்னது முதலில் என்றாலும் அவர்கள் பற்றி நின்றது வரிசைபடி இறுதியில் என வகுத்து வைத்தார்கள். அங்கு சென்றடையும் வரைநம்பிக்கைமட்டுமே மதம். அது கலை பண்பாடு மற்றும் மொழி என மனித உன்னதங்களை வழியாக கைபிடித்து முதல் படியில் வைத்து கருத்தியலான தெய்வத்தை நோக்கி செல்வது இறுதியில் நின்றது


மதம் உருவாக்கி தந்த சம்பிரதாயம் நம்பிக்கையை நடைமுறைபடுத்துவது . “நடுவயது நம்பிக்கை இழப்புஎன்பது எவரும் எளிதில் தவிர்க்க இயலாத கோட்பாடு. ஏன் அப்படி நிகழ்கிறது. அதுவரையில் மூத்தவர்களின் சொல் நம்மை ஆள்கிறது. நடுத்தர வயது காலகட்டங்களில் முக்கியமான விஷயங்கள் இரண்டு. ஒன்று அனைத்தையும் கையளித்த மூத்தோர் மறைவால் உருவாகும் வெற்றிடம் .இரண்டு அவர்கள் சொன்னவை காலத்தால் நமக்கு பொருந்தாதவைகளாக வழக்கொழிந்தவைகளாக தோன்றிவிடுவது அல்லது அவர்களின் சொல்படி செயல்பட்டு எதிர்மறை பலன் விளையும் போது அந்த விழுமியங்கள் மட்டுமே வாழ்வை நிறைவுறச் செய்பவைகள் என்கிற நம்பிக்கை தகர்வு நிகழ்கிறது


மூத்தோர் நமக்கு கையளித்தவைகள் அனைத்தும் அவர்களின் விழுமியங்களில் இருந்து எழுந்தவை. அந்த விழுமியங்கள் நமக்கு புரியாதவைகளாக இருக்கலாம் அல்லது உபயோகத்தில் அவற்றின் விசை நமக்கு குறைந்திருக்கலாம். அப்படி ஒன்று எழும் போது அவர்கள் முன்வைத்த மதம் தமக்கான விழுமியங்களை மீளுருவாக்கம் தெய்து அளிக்கும் என அவர்கள் நம்பி சென்றனர். அதுவரையில் சம்பிரதாய செயல்பாடுகள் கைகொடுக்கும் என நினைத்தார்கள். சம்பிரதாயத்தை கைவிட்டால் அனைத்தும் இழந்ததாகிறது. மீளவும் இறை கணியும் அதுவரை காத்திருக்க வேண்டி இருக்கும்.


வாழ்வியலின் அடையாள சிக்கல் எழும்போது தன்னிச்சையாக ஆழ்மனம் வழியாக நிகழும் தேடல் நவீன உலகம் அளிக்கும் அக மற்றும் புறசிக்கலுக்கு அப்பால் நமக்கானதை கண்டடைய இயலும். பின் அங்கிருந்து நமக்கான விழுமியங்களை அடையலாம் என்பதால் அவற்றை கலையில் பண்பாட்டில் மொழியில் அடையும் படி செய்திருந்தார்கள். அதன் பின் மதத்தின் தேவை எழாது என ஆழ்மனம் முடிவு செய்தால் கற்ற பிற அனைத்தில் இருந்தும் வாழ்வை மிக நிறைவாகவும் ஒருவர் அமைத்துக் கொள்ள முடியும் என்றால் பின் இப்பிரபஞ்சம் அவர்களுக்கானது. அவர்களுக்கு மதமும் தெய்வமும் கூட ஒரு பொருட்டல்ல. நிறைவாக வாழ்ந்து பின் மண்மறைதல் நிகழலாம். ஆனால் அதற்கான மனநிலையை அடைவதும் பின் பற்றி நிற்பதும் எளிதில் நிகழ்வதல்ல


எனது குல மூத்தோர் துவங்கி தந்தை முன்வைத்த கலை மற்றும் பண்பாட்டு கலாச்சாரம் அனைத்தும் சம்பிரதாய செயல்பாடுகளால் நிலைநிற்றல் என்றிருந்தது. நேரடியான மதம் சார்ந்து வீட்டில் நிகழ்ந்த வழிபாடுகளும் கோவில் உற்சவங்களில் காட்டிய ஈடுபாடும் தன் காலத்திற்கு பிறகும் நிலைக்க வேண்டும் என விரும்பி அதற்கான வைப்பு தொகையை விட்டு சென்றார். அனைத்திலும் அவர் நின்று காட்டியது என்னை என் குடும்பத்தாரை எங்கும் சிதைவுறாது கொண்டு நிறுத்தியிருக்கிறது. இது அவர்கள் எங்களுக்கு அளித்த கொடை. இன்று என் அறுபத்தி நான்காவது அகவையின் நினைவில் அரை நூற்றாண்டு கடந்துவிட்ட சூழலில் நின்று திரும்பி பார்கையில் ஏற்றமும் இறக்கமும் கொண்ட வாழ்வின் அடியில் ஒன்று நிலையாக நின்று வழிநடத்தி சென்றதை உணரமுடிகிறது. மனம் நிறைவுறுகிறது. எனக்கு அகமும் புறமுமாக நிகழ்ந்தவைகள் அனைத்தும்தத் - அதுஅளித்தவையே என்றே புரிந்து கொள்கிறேன் என்றான பின் இதில் என் திறமையும் திறனின்மையும் எங்கு இருக்கிறது. நான் கொண்டாடவே அனைத்தும் இருக்கின்றன். என்னை நோவதற்கு ஒன்றில்லாமல் செய்த அந்தபேரிறையைகண்ணீருடன் வணங்குகிறேன்.


எது ஒன்று காலத்தை கடந்து நிற்க வேண்டுமோ அதை மகாபாரத்தில் வைஎன்கிற நாட்டார் சொல் ஒன்று உண்டு. என் மூத்தோர் தங்களை காலத்தில் நிற்க வேண்டும் என நினைத்த அத்தனையையும் ராமாயண மகாபாரத்தில் வைத்தார்கள். பல நூற்றாண்டுகளாக இந்திய கண்டம் முழுவதிலும் எல்லா குடும்பங்களிலும் இது மிக ஆழமாக பரவியது. பல நூற்றுக்கணக்கான ராமாயணமும் மகாபாரதமும் இங்கு தொடர்ந்து பேசப்படுவதற்கு இதுவே முதன்மைக் காரணம். அவை அந்தந்த நிலத்தை காலகட்டத்தை அதன் உன்னதத்தை இலக்கியத்தின் வழியாக முன் வைத்தன. இரண்டு இதிகாசங்களும் அதன் காதாபாத்திரங்கள் மீமானுடர்களாக இருந்தாலும் அவர்களின் வெற்றி தோல்விகள் பற்றிய தகவல்களை எந்த பாவனையும் இல்லாமல் நிகழ்ந்தவைகளை நிகழ்ந்த விதத்ததிலேயே முன் வைக்கிறது. அதற்கு எந்த சமரசமும் தேவையாகவில்லை.வாழ்கை பூமியில் அனைவருக்கும் அப்படியே அருளுப்பட்டுள்ளது


மனிதன் தன்னனை நெறிபடுத்திக் கொள்ள இவை ஒன்றென கலந்த இலக்கியம் முன்னுரிமை அடைவதும் அங்கிருந்து தொடங்கியிருக்க வேண்டும். ஆதி காவியம் என சொல்லப்படுகிற ராமாயணமும் பின்னர் வந்த மகாபாரதமும் அதற்கு முன்பிருந்த நடைமுறையில் இருந்து மாறி அமைந்தன என்பதையும், இன்றைய நவீன இலக்கியத்திற்கு முன்னோடிகள் அவை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ரிஷிகள் அனைவரும்  தர்மசாஸ்திரத்தை எழுதினார்கள் அவை வேதத்தை நடைமுறை படுத்தும் நெறியாக இருந்தன அதை இயற்றியவர்கள் அவற்றை தங்கள் பெயரில் ஸ்மிரிதிகளாக அறிமுகப்படுத்தினர். மனு மனு ஸ்மிருதியை யாக்கியவல்யர் யாக்கியவல்லி ஸ்மிருதி, அதை தொடர்ந்து பராசரர் பராசர ஸ்மிருதி, நாரதர் நாரத ஸ்மிருதி,தக்ஷன் தக்ஷ ஸ்மிருதி, கௌதமர் கௌதம ஸ்மிருதி,லிகிதர் லிகித ஸ்மிருதி போன்றவை இன்னும் விரிவானவை அதில் வால்மீகியும், வியாசனும் தங்கள் பெயரில் ஸ்மிரிதி எதுத வேண்டி இருக்க அவர்கள் அதை கடந்து காவியங்களை இயற்றினர். வால்மீகியோ, வாயாசனோ அனுஷ்டான ரிஷிகள் அல்லர் அவர்களை காவிய ரிஷி என்கிறது வெண்முரசு. ஸ்மிரிதிகள் அனுஷ்டானங்களினால் ஆனவை ஆனால் இதிகாசங்கள் வாழ்வியல் நெறிகளை கூற வந்தவை.இலக்கியம் வழியாக நம்மை வழிநடத்துபவை. அவைகளின் உன்னதத்தை இன்றைய நவீன இலக்கியம் வரை சென்று தொடக்கூடிய அத்தனை சாத்தியங்களையும் எழுதி பார்த்தனர். அதனாலேயை வியாசனும் வால்மீகியும் இன்றும் கொண்டாடபடுகிறார்கள்


ராமாயணம் புராண காலத்தின் இறுதியையும் மகாபாரதம் பிறதொரு யுகம் பிறந்துவிட்டதையும் கூறவந்தவை. இரண்டிலும் பழைய அறம் கழிந்து புதியது பிறந்து விட்டதை சொல்லியதுமானுடம் தனது அறத்தை விழுமியங்களை அதிலிருந்து அடைந்த மறுபார்வைக்கு வைக்கும் துவக்கம் நிகழ்ந்தது. ஆகவே அவற்றை அவை விதிகளாக சொல்லிச் செல்லாமல் வழிமுறைகளாக சாத்தியகூறுகளாக முன் வைக்கிறது. அவை வேதம் போலவோ ஸ்மிரிதி போலவோ மானுடர்களை நோக்கி கட்டளையிடுபவை ஈஅல்ல மாறாகஇதையும் உன் கவனத்தில் கொள் தகுந்த முடிவை நீ எடுஎன அறிவுரையாக முன் வைப்பவை. “கீதைதொடங்கி வைத்த முறை இது.அதை பற்றி வாழ முனைந்தவர்கள் பற்றிய கதைகளாக மகாபாரதம் இருக்கிறது. அங்கிருந்து ஒரு நேர் கோட்டில் அது இன்றைய நவீன இலக்கியம் முன் வைக்கும் விழுமியங்கள் வந்து தொடுகின்றன.


புதிய பதிவுகள்

மணிவிழா 84. * நம்பிக்கை கற்பிதமா? *

  ஶ்ரீ : மணிவிழா - 84 24-08-2026 * நம்பிக்கை கற்பிதமா ? * விழுமியம் இரண்டு வழிகளால் அவற்றின் உன்னதத்தை   சென்றடைய இயலும்...