கிருபாநிதி அரிகிருஷ்ணன்
இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
புதன், 22 ஏப்ரல், 2026
திங்கள், 20 ஏப்ரல், 2026
வெள்ளி, 17 ஏப்ரல், 2026
மணிவிழா 76 * அர்த்தம் மொழி எது முதல் *
ஶ்ரீ:
மணிவிழா - 76
17.04.2026
* அர்த்தம் மொழி எது முதல் *
எனக்கான போதிய இடமும் ஆர்வமுமில்லாமல் நேரு வீதி வியாபார நிறுவனத்தில் புழங்கிக் கொண்டிருந்த சூழலின் ஒரு புள்ளியில் நான் என்னை நிலைபடுத்திக் கொள்ளவும், நான் எனக்கு என நிருபித்துக் கொள்ளவும் அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகரும் ஒரு சந்தர்ப்பம் வந்தது . என் தந்தை வீட்டிற்கு பக்கத்தில் பிறிதொரு கிளை துவங்கி அதை அவர் நிர்வகிக்க முடிவு செய்த போது நேரு வீதி நிறுவனத்தை வேறு வழியின்றி என் பொறுப்பில் விட வேண்டியதாயிற்று. அதை தொடர்ந்து நான் அந்த நிறுவனத்தை தனியாக நடத்தும் சூழல் உருவானது. பல வருடங்களாக நான் அங்கே புழங்கிக் கொண்டிருக்கிறேன். அங்கு நிகழும் பொது நிர்வாகம் பற்றி தெரிந்து கொள்ள சில மாதங்களே தேவை என்கிற சூழலில் பல வருடம் அங்கே இருந்து கொண்டிருப்பது தேவைக்கு அதிகமானது.என் தந்தையும் அவரால் உருவாக்கபட்ட நிர்வாகிகளுக்கு மத்தியில் என்னனை அடையாளப்படுத்துவது போன்ற ஒன்று நிகழவில்லை என சொல்லுவதைவிட காட்சிப் படுத்த ஒன்றுமில்லை என சொல்லுவது பொருத்தமாக இருக்கும். அந்த நிர்வாகம் மீள மீள ஒரே சுழற்சியில் நிகழ்ந்து ஒரு வித “லூப்” போன்று இயங்கிக் கொண்டிருந்தது. சரக்குகளின் இருப்பு குறையும் போது நிறைப்பதும் நிறைந்து விற்பதும் தான் வியாபாரம். ஆனால் அது மட்டுமேயான ஒன்றில் எனக்கு ஆர்வமில்லை.
தாத்தா துவங்கிய குடை வியாபாரம் அதை சார்ந்த பழுது பார்த்தல் என துவங்கி 1900 களில் பாம்பே சென்று மான் மார்க் குடை மொத்த வியாபார உரிமை பெற்று கடையை மிக விரிவாக அதை வளர்த்தெடுத்தார். இன்றளவும் அவரது பெயரே என் அடையாளம். இன்றும் அதை சொல்லி எங்களை பெருமையுடன் நினைவுறுகிறார்கள் . அவர் உருவாக்கியதில் இருந்து அப்பா விரித்து விரிந்து எடுத்த நவீன கட்டுமான பொருட்களை கொண்டதாக உருவாக்கியது ஒரு பெரிய வியாபார பாய்ச்சல். அந்த காலகட்டங்களில் நிகழ வேண்டியது. குடும்பத்திற்கு வியாபாரத்தில் இருந்து அதீத எடுத்து பொருளியலை கையாண்டதால் வியாபாரத்தில் தேக்க சூழல் உருவாகி அதிலிருந்து முன் நகர இயலாமல் தேங்கினார். பொருளியல் சிக்கல் முதன்மை காரணம். தனது மூன்று முத்த மகள்கள் திருமணம். நேரு வீதி நிறுவனத்தை பெரிதாக எடுத்து கட்டியது என வியாபரம் கடந்த செலவினங்கள் அந்த தேக்க நிலையை உருவாக்கியது. நான் பொறுப்பிற்கு வரும் போது இன்னும் நடக்க வேண்டிய நான்கு திருமணங்கள் நிரைகட்டியிருந்தன. அந்த சூழலில் திரும்பவும் வீட்டிற்கு அருகில் புதிய இடம் கட்டிடமாக எழுந்த போது வியாபாரம் உச்சத்தில் இருந்தது. காலம் எங்கிருந்து எதை அசைத்து எதை உருள வைக்கும் என கணிப்பது இயல்வதல்ல. அந்தமான் டிம்பர் கம்பெணியின் முதன்மை விற்பனையாளர் என்கிற தரத்தில் கிடைத்த சரக்குகள் அஸ்ஸாம் மாநில இளைஞர் போராட்டத்தால் காணாமலாகியது. உற்பத்தி மாணவர்கள் போராட்டத்தால் நிதைந்தது தேவையுறும் பொருட்களை அந்தமான் தொழிற்சாலையில் இருந்து கப்பலில் எடுத்து வர அவை அனைத்திற்கும் கடனுக்கு வாங்கிய பொருட்கள் முழு ரொக்கம் கட்ட எடுக்க வேண்டிய சூழல் எழுந்தது.
அது யானை அசைத்த கொட்டகை போலானது. தாத்தா குடும்பம் பிரிந்துவிடக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தனது சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதியபோது அதை பல சிடுக்குகலாக உருவாக்கி இருந்தார். அப்பா வைத்திருந்த குடௌன் அப்பாவின் அண்ணன் பாகத்திற்கு சென்று அப்பா அதற்கு வாடகை தர வேண்டியது என எழுதியிருந்தார். அப்பா காலத்தில் அண்ணன் தந்தைக்கு நிகரானவராக பார்க்கப்பட்டார்கள். அப்பாவிற்கும் அவரது அண்ணனுக்கும் உறவு அப்படித்தான் இருந்தது. எதிர்காலம் பற்றிய சிந்தனையில்லாத லட்சியவாத சமூகம். அது ஒரு தலைமுறைகூட தாண்டவில்லை. வியாபாரத்தில் வெற்றி பெற்றவராக அனைவராலும் தந்தை பார்க்கப்பட்டது அவருக்கு சிக்கலாக எழுந்தது. அண்ணன் தம்பிக்குள் பொருளாதார பரிவர்த்தனை அவர்களுக்கு இடையேயான காழ்பு உருவாவதை தடுக்கும் என தாத்தா கணக்கிட்டிருக்கலாம். என்ன நிகழக் கூடாது என நினைத்தாரோ இறுதியில் அதுவே நிகழ்ந்தது என்பதுதான் முரண்நகை . இரு குடும்பமும் உட்சிக்கலால் பிரிந்து நிரந்தர எதிரிகள் போல நின்றனர். பெரிய தந்தை இருக்கும் போதே அவருடைய பிள்ளைகள் அப்பா எடுத்திருந்த வாடகை இடத்தைவிட்டு வெளியேறச் சொன்னார்கள்.இதற்கு பின்னால் காழ்ப்பு என்பதை தவிர வேறு விஷயம் இருக்க இயலாது. தொடர்ந்து சிக்கலாகி கொண்டிருக்க ஒரு புள்ளியில் பிரச்சனை வேண்டாம் என அப்பா வீட்டிற்கு பக்கத்தில் இருந்த பூர்வீக வீட்டை இடித்து கடையாக எழுப்பினார். இப்படி அடுத்தடுத்து செலவுகள் நிரைகட்டி எழுந்தபடி இருந்தது.
அப்பா புதிதாக திறந்த கடையில் தனது நிர்வாகத்தில் தனி அமைப்பை உருவாக்கி இருந்த சூழலில் நேரு வீதி கடை எனது முழு நிர்வாகத்திற்குள் வந்தது. என் தொழில் ஆர்வம் குறித்த நம்பிக்கையின்மை மற்றும் அச்சம் காரணமாக எனக்கு உதவ தனது அணுக்க ஊழியன் சம்பந்தத்தை என்னுடன் இருக்கச் செய்தார். என்னளவில் அது பிழை நகர்வு. எனக்கும் அவனுக்கும் எப்போதும் ஒத்துப்போவதில்லை. ஒரு நிறுவனத்தில் புதிய தலைமை உருவாகி வருவதை பழைய அமைப்பு எப்போதும் ஏற்பதில்லை. ஒரு சிக்கலான தருணத்தில் என்னுடன் இணைந்து பயணிக்க இயலாது என சம்பந்தம் விலகிக் கொள்ள முழு நிறுவனமும் என் கட்டுப்பாட்டில் வந்தது. நான் திட்டமிட்ட பல வியாபார விரிவாக்கத்தின் வழியாக புதிய கண்டடைதல்களை அடைந்தேன் அது என் தந்தையும் அவர் தந்தையும் எட்ட இயலாத பல எல்லைகளை தொட வைத்தது. ஆனால் என் தாத்தா வென்ற சில கை இருப்பு புள்ளிகளை என்னால் இறுதிவரை எட்ட இயலவில்லை. வருமானத்தில் இருந்து சேமிப்பு என்கிற ஒன்றை என்னால் ஒருபோதும் அடைய இயலவில்லை.அப்பாவிற்கும் அதுவே விதிக்கப்பட்டு இருந்தது.
ஒரு புள்ளியில் தந்தை என் மீது அதுவரை அவர் சுமந்திருந்த எடை ஏற்றிவைத்தார். இது நியாயமே இல்லை என தோன்றியது. என்னால் ஒரு போதும் பொருளியல் ரீதியாக இறுதிவரை சுமக்க இயலாது. அவரே அதில் தோற்றிருந்தார். அப்போது அது வெளியில் தெரியவில்லை என்பது அவரின் நல்லூழ். எனக்கு அப்படி வாய்க்காது என அப்போதே அறிந்திருந்தேன். “யாரோ சொன்னதாக என் மனைவி சமீபத்தில் சொன்னாள் தான் இரண்டு பொண்டாட்டிகாரன் போல இரண்டு குடும்பத்தை பார்க்க வேண்டி இருக்கிறது” என்று. என் ஊழ் குறைந்தது “பத்து வீட்டை” சமாளிக்க வேண்டி இருந்தது. என்பதை அந்த “யாரோ” அறிவானா? என்னால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளில் இருந்து வலக இயலாது. அது என் இயல்பு என்பதால் அனைத்தையும் சுமப்பது என ஏற்றேன்.
என் வாட்டத்திற்கு நேரு வீதி நிறுவனத்தை நான் என் முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரத் துவங்கினேன்.
அந்த நிறுவனத்தின் முதன்மை பொருளியல் சிக்கலுக்கு கட்டுப்படுத்த இயலாத செலவினங்கள் காரணம். கடன் வியாபாரத்தின் ஒரு அங்கம். ஆனால் என்மீது சுமத்தப்பட்டது வியாபார எல்லைகளை கடந்த நிர்பந்தம். ஆறு சகாதரிகள் தாய் தந்தையென பெரிய குடும்பம். சமூக அந்தஸ்தை ஒட்டிய திருமணங்கள் அதை தொடர்ந்த செய்முறைகள் என செலவேறியவை. அனைத்தும் அந்த நிறுவன வருமானத்தை சார்ந்தவை. அதில் எந்த கணக்கும் இன்றி குடும்ப செலவுகளுக்கு எடுத்தது போக கடையில் மிஞ்சியது இருப்பிற்கு பல மடங்கு அதிக கடன். அதை வியாபாரத்தின் மூலம் சரி செய்ய வேண்டியது. ஆனால் ஊழ் ஒவ்வொரு ஏற்றத்தின் அருகில் அது வைக்கும் சறுக்கலில் இறங்காதிருக்க வாய்ப்பில்லை. திறமையான ஊழியன் சம்பந்தத்தை இழந்து இரண்டு வகையான சிக்கலை எதிர் கொண்டேன் முதன்மையானது நடந்து கொண்டிருந்த வியாபாரத்தின் பாதிக்கு மேல் அவனுடன் சென்றது. இரண்டாவது அதன் வழியாக நிகழ்ந்த பொருளாதார இழப்பு. இரண்டையும் நிகர் செய்ய வேண்டும். ஒவ்வொரு பள்ளி விடுமுறையின் போது வீடு ஆறு சகோதரிகள் மற்றும் அவர்களின் பதினைந்திற்கும் அதிகமான பிள்ளைகளால் வீடு நிரம்பி வழியும். மாமா வீடு அனைவரின் சிறு வயது இனிய நினைவுகள். அடைவதை விட கொடுப்பதில் பிறிதொரு நிறைவு. இப்போது நினைக்கிறேன் “அளி அளி என அளித்து கொண்டே இருந்தேன். பெற்றது மன நிறைவு.
ஒவ்வொரு வருட நிறைவு நாளில் வீட்டின் மாடி இரவு அனைவரும் கூடி முழுவதும் பாட்டும் ஆட்டமுமாக நுரைக்கும். அனைத்திற்குமான பொருளாதாரம் வந்து கொண்டே இருக்கும்.
உடன்பிறந்த பெண்கள் அவர்களுக்கு உரியவற்றை செய்ய வேண்டிய கடமைகள் என்னை சூழ்ந்த போது அதிலிருந்து சேமிப்பு என்கிற ஒன்றை நினைத்துப் பார்க்க இயலவில்லை. செலவுகள் அவை என்னால் கட்டுபடுத்த இயலாத வகைமையை சேர்ந்தது. அதற்கு உரிய பொருளியலை ஈட்டுவது மட்டுமே என்னால் ஆகக் கூடியது. அது தேவைகளை ஈடு செய்தன. அவற்றை செலவுகளாக பார்த்ததில்லை கடமை என்றே இன்றும் உணர்கிறேன். 2008 களுக்கு பிறகு காரணமல்லாத காரணங்களுக்காக எனக்கெதிராக திரும்பிய உடன்பிறப்புகள் அந்த காலகட்ட நிலையழிவை தங்களுடன் நிறைய கொண்டு வந்தார்கள். அன்று அது ஒரு பெரிய அறக் குழப்பாக இருந்தது. தந்தையிடம் இருந்து பெற்ற குடும்ப அறம் அதற்கு செய்ய வேண்டிய தியாகங்கள் விட்டுக் கொடுத்தல் வழியாக இழந்த பல கோடி மதிப்பிலான சொத்துக்கள். போன்றவைகளை இழப்புகளாக ஒரு போதும் கருதியதில்லை தந்தை தனது மரண படுக்கையில் அதை ஆசைபட்டார் என்கிற ஒரே காரணத்திற்காக அவரின் மனநிறைவிற்கு அவர் விரும்பிய படி சொத்துக்களின் பல பகுதிகளை உடன் பிறந்தாருக்கு பிரித்து கொடுத்து அவர் விரும்பியவாறு அத்தனையும் செய்து முடித்தேன். அதில் எனக்கென பெரிய மரியாதையை இடத்தை எப்போதும் எதிர்பார்த்ததில்லை. அது அன்றும் இன்றும் ஒரு பொருட்டல்ல. ஆனால் அதனால் பயலனடைந்த உடன் பிறப்புகள் எனது பொருளியலை சார்ந்த சிக்கல் எழுந்த போது யாரிடமும் எந்த உதவியையும் நான் எதிர்பார்க்கவில்லை. அதிலிருந்து மீளும் காலம்வரை பொருத்திருக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் அந்த காலகடங்களில் என் உடன் பிறப்புகள் என்னிடம் நடந்து கொண்ட முறை மனதை வெதும்பச் செய்தது. என் பாகத்து சொத்தை அப்பா தனக்கு கொடுத்தார் என என்னிடம் சொன்ன போது அதை புண்ணகையுடன் அதை மிக எளிதாக கடந்து போனேன்.
அது ஒரு இருள் காலம். அதுவரை தன்னறம் என நான் எனது அடையாளமாக முன்வைத்த அனைத்தும் பொருளிழந்து போயிருந்தன . வாழ்கையில் முதல் முறையாக அறம் குறித்தும் ஆன்மீகம் குறித்தும் மிக ஆழமான நம்பிக்கை இழப்பை நோக்கி சென்று கொண்டிருந்தேன். தீராத விவாதம் அதிலிருந்த மீள மீள கிளைத்து “இவர்கள் ஏன் இப்படி ” என்கிற பதில் சொல்ல இயலாத கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது. அவற்றை மறந்து நிற்க எனது பூஜை அறை உதவியது. எனது அன்றாட பூஜைகளை அவை தொந்தரவு செய்யவில்லை. எனக்கான பதிலை அது மட்டுமே பெற்றுக் கொடுக்கும் என உறுதியாக எண்ணினேனோ என்னவொ தெரியாது ஆனால் என் நாளின் முதற் பகுதியை முழுவதும் அது எடுத்துக் கொவண்டது எவ்வளவு இனிது . அது எப்போதும் எனது அடிப்படைகளை கேள்விக்குள் கொண்டுவந்ததில்லை. சரணாகதி என்கிற தத்துவம் போல எனக்கு கை கொடுப்பது பிறிதில்லை. சரணாகதிக்கும் அதை முன்னிட்டுக் கொண்ட செயலின்மைக்குமான வித்தியாசத்தை புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தேன்.
எந்த தர்க்கத்தை வைத்து எனது குழப்பங்களை நிலையழிதலை கட்டுடைக்கிறேன் என்பதை ஒரு அடிப்படையை உருவாக்கிக் கொள்ள முயன்று கொண்டிருந்தேன். அது ஒரு உலுக்கும் உண்மையை மையப்படுத்தியது. எதை அடிப்படையாக் கொண்டு என் நிலையழிதலை உடைக்கிறேனோ பின் அவை காணாமலாவதில்லை. அதுவே பின் அனைத்த்திற்குமாக இருக்க வேண்டும் என வகுத்துக் கொண்டேன். வாழ்வியலில் சிக்கல் எப்போதும் இருந்து கொண்டிருப்பதல்ல அமைதியான சூழலையும் அது உருவாக்குக் கொடுக்கிறது. அந்த சந்தர்பங்களில் சுதந்திரமானவனாக மனம் விரும்பும் செயல்களில் நுழைய எதை அடிப்படையாக கொண்டு கட்டுடைத்தேனோ அதுவே இந்த அமைதிக்காலமும் அடங்கும் என புரிந்திருந்தேன்.
பொருளியல் சிக்கலில் இருந்து மீள எனது பெரிய சொத்து ஒன்றை விற்க வேண்டிய சூழல் எழுந்த போது அடைந்த நிலையழிவை எதனுடனும் ஒப்பிட இயலாது. என் மனைவியிடம் முதலில் சொன்னேன் அவளின் சூடான கண்ணீர் எனக்கு மிகுந்த மன வலியை கொடுத்தது. ஆனால் அதை செய்தேயாக வேண்டியிருந்தது. என்னை மீட்டெடுக்க நான் என் முன் வைத்த உடைத்து சிதறடிக்கும் சுத்தியல் என் “மரணமென” நான் நினைத்த ஒன்று . என்னை சார்ந்தவர்கள் அனைவரும் வெவ்வேறு இல்லாத காரணங்களை சொல்லி தங்களை விலக்கிக் கொண்டபோது அது ஒருவகை நான் கொண்டிருந்த கொள்கை தன்னறத்தின் மரணம் என்பதால் இறந்தவனுக்கு என மான அவமானம். இறந்தவனைப் பற்றி பிறர் மதிப்பீட்டிற்கு என்ன பொருள். அவர்கள் என்னை பொருட்படுத்தாது போது அவர்களை பற்றி நான் ஏன் நினைவில் கொண்டிருக்க வேண்டும் என்பது அனைத்திலிருந்தும் விடுதலை அளிப்பது.
இன்று அறிந்த சில கலைச்சொற்கள் எதையும் நான் அன்று அறிந்ததில்லை என்பதால் எண்ணங்களை சொற்களின் எல்லைக்குள் கொண்டு வருவது ஆயாசமளிப்பது. எது பற்றியும் சிந்திக்காமல் இருப்பது இன்னும் வசதி.லட்சியம் பற்றி அறிந்திருக்கிறேன் அதன் நுண்மையான லட்சியவாதம் பற்றியோ அதை மையமாக கொண்ட வாழ்கை முறையையோ அறிந்ததில்லை என சொல்ல முடியாது அவர்களை லட்சிய புருஷர்கள் என்கிற அடைப்பிற்குள் நிறுத்தி வைத்துவிட்டது. என் செயல்களுக்கு பின்னால் ஆழ்மனம் என்னுள் நிலைநிறுத்திய ஒன்று தன்னறம் என்கிற வகைமை சேர்ந்தது எனப் புரிந்து கொண்டேன்.
அந்த ஆழ்மன தூண்டுதலால் மட்டுமே நான் என்னை மீள மீள தன்றத்தில் நிறுத்திக் கொள்ள முயன்றபடி இருந்திருக்கிறேன் . அவை அத்தனையும் எனது இயல்பை ஒட்டியதாக நான் வடிவமைத்துக் கொண்டதாகவும் முதலில் நினைத்தேன் . உணவு ஏற்பினூடாக உடல்கள் அறியும் ஒவ்வாமை பற்றி ஒரு வழி என்பது போல என்னால் செய்யப்படும் காரியங்களை மனம் ஏற்று அமைந்து தொந்தரவு செய்யாமல் என்னை உறங்க விடுகிறது என்றால் அதுவும் அந்த தன்னறத்தின் பிறிதொரு பகுதி. என்னால் அமைந்து இருக்க முடிந்ததை மட்டுமே பார்க்கும் சிந்திக்கும் செய்யும் போக்கு அதை விடுத்து என்னால் வேறு வழிகளில் செயல்பட இயலாது என்று அவை என்னில் நிலை கொண்டன.
அவை மிக மெலிதான ஒன்றினால் பிணைக்கப் பட்டிருந்தது ஊழ் என்கிற ஆழுத்தமான காற்றில் அவை எப்படி இடம் பெயரும் என சொல்ல இயலாது என்கிற அச்சம் எப்போதும் இருந்து கொண்டிருந்தது . அதை வலுவுடன் வேர் பிடிக்கச்செய்யும் முயற்சியில் தந்தையிடம் இருந்து பெற்ற வைணவ சம்பிரதாயத்தில் இருந்து அவற்றை உருவாக்கிக் கொள்ள முயற்சித்தேன். நான் அஞ்சிய ஒன்று வேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருப்பதை ஊகித்தேன். வியாபாரம், குடும்பம், உடல்நிலை என அனைத்திலும் சிக்கலகள் எழுந்து மன அழுத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது . அம்மாவை மையப்படுத்தி உடன்பிறப்புகள் நடத்திய அரசியல் ஒருவகை குடும்ப உள்ளூழல். அனைவரும் அதில் கனவு போல இழிந்து கொண்டிருந்தனர். அவர்கள் நினைத்தால் அதிலிருந்து எழுந்து வந்திருக்க முடியும் ஆனால் அதை அவர்கள் ஏன் முயலவில்லை என்பது பதில் கிடைக்காத பல கேள்விகளில் ஒன்று . அது மிக எளிய மானுட மனங்கள் செயல்படும் விதம் என்கிற புரிதலை பின்னாளில் அடைந்தேன் .
தன்றம் என நான் உருவாக்கிக் கொண்டது என் தந்தையிடம் இருந்து பெற்றது இயல்பில் இருந்து உருவகித்தது என முன்பே சொல்லியிருந்தேன் . துவக்கத்தில் அது என் தலைமீது என் தந்தை ஏற்றி வைத்த பெரும் சுமை என்கிற வருத்தம் இருந்ததுண்டு. ஆனால் தன்னறம் என்பது என் இயல்பில் நான் அவருடன் இணைந்து உருவாக்கிக் கொண்டது என்பதால் இதில் அவரை குற்றம் சொல்ல ஒன்றுமில்லை என பின்னாளில் பெற்ற தெளிவு . அவரை திருப்தி படுத்த நான் என்னை ஏமாற்றிக் கொள்ளவில்லை என்பதால் அவர் மரணித்த பிறகு அதை கைகொள்ள வேண்டிய எந்த நிர்பந்தமும் எனக்கு இல்லை என்ற போதும் நான் அவற்றை கைவிடவில்லை. தன்னறம் என்பது என இயல்பாக என் தந்தையிடம் பெற்ற கொடை என்கிற இடத்திற்கு வந்து சேர்ந்தேன்.
எனது இயல்பான தன்னறம் எதிர்காலம் குறித்த திட்டமிடுபவை பற்றிய அச்சத்தில் இருந்து அது எனக்கு விலக்களித்திருந்தது. நினைத்து நினைத்தபடி அவை அனைத்தும் சந்தித்துக் கொள்ளும் உச்ச புள்ளி ஒன்று இருப்பதை மிக அருகே சென்று அறிந்திருக்கிறேன். வியாபார வெற்றியின் முதலிடம் எப்போதும் தனிமையானது. அங்கு யாரும் துணைவர மாட்டார்கள் என்பதால் வெறுமை கொண்டது. அதை எதிர் கொள்ள எனக்கு எப்போதும் தயக்கம் இருந்ததில்லை. வாழ்நாள் முழுவதும் என் முன்னே வந்து நின்றவை அனைத்தும் மிகப் பிரமாண்டத்தின் வடிவாமாக இருந்திருக்கிறது. ஆனால் ஆன்மீகமான உடைவை அதுவரை எதிர் கொண்டதில்லை. அன்று அது வேர் பரப்பி கிளைவிரித்து “அம்மா” என என் முன் எழுந்து கொண்டிருந்தது. வழக்கம் போல அதை எதிர் கொள்வது பற்றிய சிந்தனையில்லாமல் இருந்தேன். அது அன்றாடத்தில் உள்ள நடைமுறை சார்ந்தது. ஆனால் இம்முறை அதன் நுணுக்கங்கள் வேறு விதமானவை என்பதை மிக தாமதமாக உணர்ந்தேன். அதற்குள் எல்லாம் கைமீறியிருந்தது. இறுதியில் அவரது மரணம் அளித்த புரிதல் என்னை எனது தன்றத்தில் மேலும் ஊன்றி நிற்க வைத்தது.
என் அப்பாவின் அணுக்க சம்பந்தம் தனியாக தனது வியாபாரத்தை துவங்கிய பிறகு அதன் பாதிப்புகள் மிக கடுமையாக எழுந்தது.அன்று மட்டுமல்ல இன்றுவரையிலும் வியாபாரம் அந்த தொழில் சார்ந்த ஆசாரி மற்றும் பெயினடர்கள் கொண்டு வருவது. அதற்கு அவர்களுக்கு தனியாக கமிஷன் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி அதில் இருந்தது. அதை சம்பந்தம் மிக திறமையாக கையாண்டான். எனக்கு அதில் ஆர்வமிருந்ததில்லை். சம்பந்தம் வெளியேறிய சென்றவுடன் அவர்கள் அனைவரும் அவனுடன் சென்றனர். நான் தக்க வைத்தவர்கள் மிக சிறிய தொழில் கொண்டவர்கள். அதை எதிர்கொள்ள வியாபாரத்தை பெரிய அளவில் விரிவு செய்ய முயன்று கொண்டிருந்த போது இந்திய பெரும் கட்டுமான நிறுவனம் லார்சன் அன்டு டிப்ரோ புதுவைக்கு வந்திருந்தது.
அவர்களுக்கு பொருள் சப்ளை செய்யும் வாய்ப்பு மெல்ல பெருகியது. இரண்டு மூன்று இடத்தில் மிகப்பெரிய கட்டுமானங்களை மேற்கொண்டார்கள். தேவைகளை ஒவ்வொரு இடமாக பார்த்து வாங்கவோ அதற்கான தனித்தனி தொகைகளை செலுத்தவோ அவர்களுக்கு நடைமுறை சிக்கல் இருந்தது. அனைத்து பொருட்களையும் ரொக்கமாக கொடுத்து வாங்க அவர்களுக்கு அதிகாரமில்லை. கம்பெனியின் பொது மேளாலர் என்னை அணுகி அவர்களுக்கு தேவைபடும் பொருட்களை அவர்கள் சார்பாக என்னால் வாங்கிக் கொடுக்க இயலுமா என்றபோது அதை எனக்கான வாய்ப்பாக பார்த்தேன். பின்னர் அவர்களின் தேவைகள் பெருகத் துவங்கின சில மாதங்களில் மிக நெருக்கமான தொடர்பு உருவானது. சில காலம் கழித்து பேச்சினூடாக அவர்கள் எதிர் கொள்ளும் சிக்கலை பற்றி பேசத்துவங்கினார். அவர்கள் பொருட்டு தேவைகளை முழுமையாக என்னால் செய்து கொடுக்க முடியுமா என்கிற கேள்வி எழுந்த போது வியாபாரம் முன்வைத்து அவர்கள் கோரும் அனைத்து பொருட்களையும் ஒருங்கி கொடுக்க அவர்களினுடான தொடர்பு இன்னும் விரிவானது. பல இடங்களில் இருந்து பொருட்களை சேகரித்து கொடுப்பதால் அவர்கள சில மணி நேரம் என் கடையில் இருந்து செயல்பட துவங்கினர். உறவு இன்னும் தனிப்பட்டதானது.
ஒரு முறை மேட்டுப்பாளையத்தில் உள்ள அவர்களின் கட்டுமான இடத்தில் எதிர் கொள்ளும் சிக்கல் பற்றியும் அதை கடந்த ஆறுமாதம் தீர்க்க இயலாமை பற்றி பேசிக் கொண்டிருந்தார். உள்ளூர் நிறுவனம் ஒன்றிடம் தங்கள் கட்டுமான இடத்திற்கு தேவையான அலுமினிய ஜன்னல் பல மாதங்களாக துவங்கப்படாமல் இருப்பது தங்களின் மேலிடம் கொண்டிருக்கும் அதிருப்தி பற்றி மிக வருத்தமாக பேசிக் கொண்டிருந்தார். நீங்கள் எங்களுக்கு அலுமினிய பொருட்களை கொடுக்கிறீர்கள் அதே இடத்தில் இருந்து இந்த சிக்கலுக்கு உதவ எதாவது தீர்வு கேட்டு சொல்ல முடியுமா என்றனர். அது ஒரு கீதா முகூர்த்தம் போல “சட்டென என்னிடம் நீங்கள் ஏன் அதை எங்களுக்கு செய்து கொடுக்கக் கூடாது என்ற போது ஒரு புதிய வியாபார பாதை திறந்து கொள்வதை அறிய முடிந்தது. முற்றிலும் நான் அதுவரை அறிந்திராத தொழில் ஒப்பந்தம் அடிப்படையாக கொண்டது. அவர்களின் உடனடி தேவை அலுமினிய தடுப்புகளை அமைப்பது. என்னை அவர்கள் கட்டுமான இடத்திற்கு வர முடியுமா என்றார்.
அன்று மதியம் எனது மதிய உணவு ஓய்வு நேரத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள வெங்கட்ரமணா உணவு தயாரிக்கும் நிறுவனம் சென்றேன். அது நான் மனதில் உருவகித்திருந்த ஒன்றின் அருகில் கூட இல்லை. அது மிகப் பிரமாண்டமான கட்டுமானம். உற்பத்தி முழுவதும் கீழ் தளத்தில் இயங்குவது. அவற்றை மேற் பார்வை செய்யும் பால்கனி போன்ற மாடி அமைப்பு அதிகாரிகளுக்கு வசதியாக ஒரு தாழ்ந்த தளம் ஒன்றை அமைத்திருந்தார்கள் அங்கேயே அவர்கள் செயல்படும் அலுவலகம் அமைக்கபட வேண்டும் அதை பகுதி பகுதிகளாக பிரித்து தடுத்து சிறு சிறு அறைகளாக தடுத்து தரவேண்டும். அந்த முழு தளத்தையும் 20 அறைகளாக பிரிக்க வேண்டும். எதை பற்றியும் யோசிக்காது அவர்களுக்கு அங்கேயே சரி என ஒப்புதல் அளித்தேன். ஆனால் வீடு திரும்பும வழி முழுவதும் ஆக்கிரமித்த எண்ணம் தயக்கம் பயம் ஆர்வம் போன்றவை கலந்ததாக இருந்தது. நான் கடக்க வேண்டிய முதல் தடை என் தந்தையின் அனுமதி. அதை அவரிடம் கேட்கும் முன்பே எனக்கு தெரியும் அவர் சொல்லப் போவது என்ன என்று.
தந்தையிடம் சொன்ன போது உறுதியாக மறுத்தார் ஆனால் இது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு. பொருள் கொள்முதல் விற்பனை என இரண்டையும் மீள மீள நிகழ்த்திக் கொண்டிருக்க வேண்டிய மீட்சி இல்லாத தொடர்ச்சி நான் அதுவரை அமர்ந்திருந்த நிறுவனம்.பல வகையில் அதற்கானவன் அல்ல நான் என எங்கோ ஒரு புள்ளியில் உறுதி கொண்டு நிலைத்துவிட்டேன். அது சரி அல்லது தவறு என்பதல்ல இப்போதைய சிக்கல். எனக்கு நான் என்னை நிரூபிக்க நினைக்கும் ஒரு வாய்ப்பை இது நிச்சயம் நிகழ்த்தும் என்றாலும் எனது உடனடித் தேவை அதுவல்ல . எவ்வகையிலும் இந்த வாய்ப்பை இழக்க தயாரில்லை இது படைப்பூக்கமிக்க வியாபார களத்தை எனக்கு அது அறிமுகம் செய்யலாம். எவ்வகையானாலும் இது ஒரு பாய்ச்சல் அதில் சந்தேகமில்லை. மேலும் தந்தையின் அணுக்க ஊழியன் தனது வியாபாரத்தில் பெரிய வெற்றியை அடைந்திருந்தான். அது எனது வியாபாரத்தை மிக கடுமையாக பாதித்திருந்தது. அவனுடன் போட்டியடும் வியாபாரம் எனது பாணியல்ல. மேலும் விற்பனையில் புதிய பொருட்களை சேர்க்க வேண்டிய தேவை எழுந்துவிட்டது என பல வருடம் முன்பே ஊகித்திருந்தேன் . அதை செய்ய இயலாத கரணம் அதற்கு கொள்முதல் செய்யவதற்கு தேவைபடுகிற பொருளியல் பலம் முற்றிலுமாக என்னிடம் இல்லை. வங்கி கொடுத்திருந்த ஓவர் டிராப்ட் கடன் வசதி தினசரி நான் முன்தேதியிட்மு கொடுத்திருந்த காசோலைக்கு கூட பற்றாது. இப்போது போல வங்கிகள் பெரும் கடன்களை வழங்குவதில்லை. சொற்ப இரண்டு லட்ச ரூபாய்க்கு ஒப்புதல் பெற சென்னை செல்ல வேண்டி இருக்கும் அதற்கு மேல் என்றால் பாம்பே செல்ல வேண்டி இருந்தது.
வியாபாரத்தை விரிவு செய்தாக வேண்டும் என்பதில் என் தந்தைக்கு மாற்று கருத்தில்லை. அதை நான் சம்பந்ததுடன் போட்டியிட்டு அதை சாதிக்க வேண்டும் என்கிற மிக எளிய கோட்பாட்டை வைத்திருந்தார். இழந்த பழைய வாடிக்கையாளர்களை திரும்ப உட் கொண்டு வரவேண்டும் என சொன்னார். அதற்கான திட்டம் என அவரிடம் ஏதுமில்லை. விலை குறைப்பு வியாபாரம் தான் அடுத்த கட்ட நகர்வு. அது கடனாக பற்று வியாபாரம் செய்து கடனுக்கு அளிப்பது. அது எனது நிறுவனத்திற்கு கட்டுபடியாகாது. மேலும் சம்பந்தம் வியாபார வளர்ச்சி வாடிக்கையாளர்களை கொண்டு வரும் நபர்களுடன் பல நிழலாட்டங்களை கொண்டது. இந்த வியாபாரத்தில் அது தவிர்க்க இயலாது. எங்கள் நிறுவனத்தில் அதை செய்து காட்டிய போது எனக்கும் என் தந்தைக்குமே அதில் உடன்பாடில்லை. வியாபாரத்தின் தவிர்க்க இயலாத அம்சம் என்பதால் தந்தையால் அதை தடுக்க இயலவால்லை தான் அதில் ஈடுபடுவதில்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டார். அதே சமயம் அதை சம்பந்தம் தன்வசம் வைத்துக் கொள்ள அனுமதியளித்திருந்தார். இடைத் தரகர்களுடனான தொடர்பை நம்பியே அந்த வியாபாரம் பெருகியது. அவர்களில் யார் கடைக்கு வந்தாலும் முதலில் சம்பந்தத்தை நாட துவங்கினர். அவன் இல்ல என்றால் அவனுக்காக காத்திருக்க துவங்கினர். மிக இக்கட்டான சூழல் உருவாகி நிற்கும் அது அவனது இடத்தை அதீதமாக பலப்படுத்தியது. சம்பந்தம் வெளியேறிய போது அந்த வியாபாரமும் அவனுடன் சென்றது.
நான் இழந்த வியாபாரத்தை சம்பந்ததுடப் போட்டியிட்டு அடையும் எண்ணம் இல்லாமலிருந்தேன். எனக்கான புதிய வாடிக்கையாளர்களை கொண்டு வரும் முயற்சியில் இருந்தேன். பெரிய நிறுவனங்களுக்கு கொடுப்பது என புதுவையில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு நேரில் சென்று பேச துவங்கி இருந்தேன். aft mill போன்ற பெரிய நிறுவனங்கள் நான் அளித்த வாய்ப்பை பெற்றுக் கொண்டன. வியாபார தேவை ஓரளவிற்கு தீர்த்துக் கொடுத்தாலும் கடன் அளிப்பது பெரிய சுமை. அதற்கான வசூலில் நான் யாரையும் அனுப்பாமல் நேரடியாக ஈடுபட துவங்கினேன். அதில் தொழிற்சாலைக்கு தேவையாகும் பெயிண்டு வகைகள் முக்கிய இடத்தை நிறைத்தன. அது புதிய வாணிக்கையாளர்களை கொண்டு வந்தது. ஷாலிமார் பெயிண்ட் கம்பெனியின் தனிப்பட்ட ஆதரவு என்னை அந்த துறையின் முன்னணி நிறுவனமாக வளர்த்தெடுத்தது. அந்த சூழலில் லார்சன்&டூப்ரோ கம்பெனியின் உள் நுழைவு நிகழ்ந்தது.
புதிய பதிவுகள்
-
ஶ்ரீ : பதிவு : 422 / 587 / தேதி 27 நவம்பர் 2018 * உள்கை * “ எழுச்சியின் விலை ” - 23 முரண்களின் தொகை - 0...
-
ஶ்ரீ : பதிவு : 661 / 851 / தேதி 25 ஜனவரி 2023 * தொடர் முயற்சிகள் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 56. அதுவரையிலான த...
-
ஶ்ரீ : மணிவிழா - 73 03.04.2026 * அறப் பிழையும் மனப் பிறழ்வும் -3 * ஒன்றை பிறிதொன்று நம்பி அதுவே நவீன பார்வை என மதிப...
-
முன்னுரை வெண்முரசு தொடர மீண்டெழுவன November 16, 2020 ஆறாம் வகுப்பு படிக்கையிலேயே அன்றெல்லாம் இலக்கணம் அறிமுகமாகிவிடும் . நானோ...
-
விஷ்ணுபுரம் விருது 2025 ரமேஷ் பிரேதனுக்கு…புதுவை விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பினர் வாழ்த்துக்களுடன் விருது செய்தியினை அறிவித்தனர் தமிழில் முத...
-
ஶ்ரீ : பதிவு : 621 / 811 / தேதி 14 மே 2022 * அலைக்கழிக்கும் நினைவுகள் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 18. மக்களின் ...
-
வெய்யோன் - 77 பகுதி பத்து : நிழல் கவ்வும் ஒளி - 1 வெண்முரசு வெய்யோன் நாவலின் பகுதியில் துரியன் மற்றும் கர்ணன் இருவரும் வஞ்...
-
ஶ்ரீ : பதிவு : 693 / 882/ தேதி 05 நவம்பர் 2025 * முன் தூது * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 90. முன்னாள் அமைச்சர் ...


