கிருபாநிதி அரிகிருஷ்ணன்
இந்த வளைத்தளம் , யாருக்கும் ஏதும் சொல்லவந்ததல்ல , என் நினைவுகளின் மடிப்புகளில் படிந்துள்ள நிகழ்வுகளைத் தொகுக்கவும் கசப்புகளை எழுதி அவற்றைக் கடக்கவும்,வாழ்கையின் அழகியலில் என்னை முற்றாக புரிந்து கொள்ளவும் முயற்சியாக அமைந்துள்ளது .என் வாழ்வில் இவற்றை நிகழ்த்தியவர்களின் நாளைய பார்வைக்கு இவற்றை விட்டுச்செல்கிறேன் ,அதைத் தாண்டி வேறு யாருக்காவது இது பொருள்படுமாயின் அது தற்செயலே . என் எழுத்துக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்த திரு.ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றிகள் - கிருபாநிதி அரிகிருஷ்ணன்.
https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0
திங்கள், 11 மே, 2026
வியாழன், 7 மே, 2026
மணிவிழா 77 * வெளி வரும் இருள்”
ஶ்ரீ:
மணிவிழா - 77
07.05.2027
* வெளி வரும் நிழல் *
நீண்ட அனுபவங்களுக்கு அப்பால் அறிந்ததாக உணரும் வாழ்கையோ அல்லது அறிய இயலாத கலாமோ நமக்கு வழங்கியதாக கற்பித்துக் கொள்ளும் வாய்ப்புகள் பற்றி ஆழ்ந்த சந்தேகங்கள் எழுந்த காலம் ஒன்றுண்டு. யாரும் நினைத்திராத முயற்சிகளை செய்து காட்டியும் அதில் பெரும் வெற்றி பெற்றும் அது எங்கும் பதிவாகாமல் போவதையும் அந்த முயற்சிக்கு பெரிதாக அர்த்தமும் இல்லாததை போன்று ஏன் உணர வைக்கிறது?. காலத்திற்கு சம்மதமில்லாத அல்லது அதன் திட்டங்களுக்குள் இல்லாத அதன் ஆதரவில்லாத ஒன்றை வலிந்து இழுத்து செய்து பார்க்கும் முயற்சிக்கும் ஒருவருக்கு அவரின் சுவைக்காக ஊழ் சிறிது தேனை அவரது நாவில் தடவிச் செல்வதாக உணர்ந்த காலம். அதே சமயம் ஒவ்வொரு முறையும் கடும் உழைப்பிற்கு உள்ளானது என அது நினைக்கும் ஒற்றை வழங்கிவிடுகிறது .தேனியின் வாயில் தேன் போல. ஆனால் அதிலிருந்து கனவை விரித்தெடுக்கும் அல்லது தொடர்புறுத்தும் எந்த இந்திரிய அம்சமும் இல்லாத வாசலும் ஜன்னலும் அற்ற கட்டிடம் போல ஒன்றை அதன் இறுதியில் உணர்ந்திருக்கிறேன் . சரித்திரத்தில் இடம் பெறக் கூடிய பல முயற்சிகளில் அதில் பறந்த “ஈ” யாக மட்டும் இருந்ததாக என்னை நினைவு கூறுபவர்கள்.என யாரும் இல்லை. துவக்கத்தில் பெரும் நெருடலாக இருந்தது பின் அது அப்படித்தான் என்கிற நிறைவை உருவாக்கிக் கொண்டேன். சரித்திரத்தில் இருந்த நிறைவை அடைந்தால் போதுமானது என்பது நான் எனக்கு வகுத்துக் கொண்ட நெறி. அது போன்ற எண்ணற்ற நெறி சரடுகளால் என்னை நான் கட்டி நிலைநிறுத்திக் கொண்டது என் நல்லூழ்.
முயற்சியை கைவிடும் இடமென ஒன்று உண்டு. அவை வெறுப்பினால் அல்லது தோல்வியின் முகத்தால் நிகழ்வது. எனக்கு அது அப்படி நிகழவில்லை. நான் அடைந்த வெற்றியை அந்த துறை சேர்ந்த பிறிதொருவர் இன்றுவரை அடைய இயலவில்லை. இரண்டு அடிப்படைகள் என் முயற்சிகளை “இனி இல்லை” என முடிவெடுக்க காரணமாக இருந்தது. ஒன்று என்னால் அங்கு நிலவிய சமரச புள்ளிகளினூடாக பயணிக்க இயலவில்லை. இரண்டு அது ஒற்றைப்படையான வெற்றி போன்ற தோற்றத்தை அளித்து பின் அங்கிருந்து வளரும் வாய்ப்புகளற்றதாக உருவெடுத்து விடுகிறது. அதை கடந்து முயற்சிக்கும் தோறும் எதிர்மறை நிலைகளையே உருவாக்கி விடுகிறது. அது சொல்லும் செய்தி “இதோ இதன் வெற்றியின் எல்லையை அடைந்துவிட்டாய் இனி இங்கிருந்து மேலும் பெற ஒன்றுமில்லை விலகு” என்பதாக இருந்தது. அதை கடந்து மேலதிகமாக அதில் முயற்சிக்கும் தோறும் எதிர்மறை பலன்கள் உருவாகி என்னை மெல்ல வெளியேற்றியது. இது நான் ஈடுபட்ட ஒரு துறையில் மட்டும் நிகழ்ந்தால் அதை எனது புரிதல் பிழை என கருதுவேன். ஆனால் நான் ஈடுபட்ட அனைத்து துறைகளிலும் கட்டக் கடைசியில் இதுவே நிகழ்ந்தது. இப்போது “இலக்கியத்திற்கான நேரம்” வழமை போல பிறர் இதுவரை முயற்சிக்காத ஒன்றை புதுவையில் நிகழ்த்திக்காட்ட முடிந்தது. இன்று பல கிளைகளாக அவை உலகம் முழுவதுமாக வளர்ந்து நிற்கிறது இங்கும் எனக்கான பதில் அதுவாகவே இருக்கப் போகிறதா என்பது எனக்கு தெரியாது.
நான் ஈடுபட்ட வியாபாரம், அரசியல், ஆன்மீகம், இலக்கியம் போன்ற துறைகளில் வியாபாரம் தவிர பிற வெறும் பொருளாதார நோக்கமற்றவை. வியாபாரத்தில் கூட வெற்றியின் உச்சத்தில் லாப நோக்கமற்று உடனிருந்த 100 பேரின் கூட்டு முயற்சியாக ஒன்றை முன் வைத்த போதும் அதுவே நிகழ்ந்தது.அனைத்து துறைகளின் அடிப்படை நோக்கம் வேறுவேறாக இருந்தாலும் நிகழ்ந்தது ஒன்று போலவே இருப்பதால் வழமை போல அது சொல்ல வந்ததை உருவகித்துக் கொள்ள முயன்றேன். அனைத்தையும் இணைக்கும் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது “ நிறைந்த அனுபவம்” என்கிற ஒற்றை சொல்லால் இணைக்கிறது என்றால் அனுபவத்தில் இருந்து அடைவது மட்டுமே அந்த முயற்சிகளின் இறுதி நோக்கமாக இருந்திருக்க வேண்டும். நான் இந்த வலைதளதில் மீள மீள எழுதி என்னை நான் தொகுத்துக் கொள்ள முயல்வது அதுவாக இருக்கலாம்.
பேரியற்கையன் இருப்பை உணர்வது போல எனக்கு தோன்றிய பிறகு நான் அதை எனக்கு அடையாளப்படுத்தும் செயல்களை மட்டும் செய்வது பிற கனவுகளை வளர்த்துக் கொள்ளாமலிருப்பது என முடிவெடுத்தேன். அதை முதலில் எனது விருப்பத் துறையான அரசியலில் இருந்து ஆரம்பித்தேன். முதல்வர் பதவியை விட்டு வெளியேறிய சில காலதிற்கு பிறகு தலைவர் சண்முகம் மீண்டும் தலைவராக கொண்டு வரும் முயற்சிக்கு வெற்றியும் பின் அதில் கிளைத்த வெறுமைக்கு பிறகு இந்த முடிவிற்கு வந்தேன்.முதல்வர் ரங்கசாமியை விட்டு விலகும் போது எந்த மனக் குழப்பமும் இல்லாது வெளியேறினேன்.
சண்முகம் 2007 களில் முதல் முறையாக மிக சரியாக களத்தை உருவாக்கி இருந்தார். பொதுவாக அவரது கமிட்டி நிராகரிப்பின் பட்டியலாக இருக்கும். இம்முறை அதில் அவர் கொண்டு வர நினைத்த புதிய அணுகுமுறை அதன் உறுப்பினர்களை தேர்வு அடிப்படையில் இருந்தது. கமிட்டி இரண்டு தளத்தில் செயல்பட வேண்டும் என நினைத்தார் ஆனால் நடந்தது பிறிதொன்று அதுபற்றி எனது பிறிதொரு பதிவான “அடையாளமாதலில்” பதிவு செய்கிறேன். இந்த பதிவு வேறு வகையானது. ஒரு கட்டத்தில் சண்முகம் கட்சி அலுவலகத்தின் சாவி மற்றும் காரை புதிதாக தலவராக தேர்வு செய்யப்பட்ட AV.சுப்ரமணியத்திடம் கொடுக்க திட்டமிட்டார். ஒரு ஞாயிற்றுக் கிழமை கொழுத்த ராகு காலத்தில் என்னை அழைத்து தன்னை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து போக சொன்னார். அதை அவரே சென்று கொடுத்திருக்கலாம் ஊழ் என்னை அழைத்திருந்தது. நான் தலைவர் சண்முகத்தை அவரது வீட்டில் இருந்து அவரை அழைத்து கொண்டு காங்கிரஸ் அலுவரகம் செல்வது வரை அந்த பயணம் எது பற்றியது என என்னிடம் சொல்லவில்லை. அங்கு சென்ற பிறகே அதை அறிந்து கொள்ள நேர்ந்தது. என் வரையில் எனக்கு அது கொதிப்பை வரவழைத்த இடம். சண்முகத்திற்கு அடுத்ததாக AV.சுப்ரமணியத்தின் தேர்வு கட்சி மேலிடத்தின் முட்டாள்தனத்தின் எல்லை. இதை விட அவரை அவமானப்படுத்த பிறிதொன்றை தில்லித் தலைமை செய்திருக்க முடியாது. ஆனால் அதைவிட “ஸ்பெஷல் ஐட்டங்கள்” பலவற்றை அகில இந்திய தலைமை அதன் பிறகு செய்து கொண்டே இருந்தது. அதற்கான விலையை யாராவது கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கு ஒரு அவசியமும் காரணமும் இருக்க வேண்டும் என நான் நினைப்பதுண்டு.
இது எனது தர்க்க முறை. உலகியலில் இதற்கு எந்த அர்த்தமும் இல்லை. நான் உலகியல் சந்தர்பங்களில் இருந்து விலகி நிற்க ஆரம்பித்தது அப்போதுதான். கட்சி தலைவராக வைத்திலிங்கம் நியமிக்கப்பட்ட போது அந்த இயற்கையின் பேரிருப்பிற்கான நேரம் உருவாகி இருந்ததை அறியவில்லை. வைத்திலிங்கம் தான் தலைவருக்கான தேர்வல்ல என தெளிவாக உணர்ந்தவர். அவரை விடவும் நான் நன்கு உணர்ந்திருந்தேன். கட்சி நண்பர்கள் நான் திரும்பவும் அரசியலில் ஈடுபட ஙேண்டும் என சொன்ன போது உறுதியாக மறுத்து நின்றதற்கு முக்கிய காரணம் இனி காங்கிரஸ் மாநில கட்சியில் தலைவராக யாரையும் ஏற்க இயலாது அதற்குரியவர்கள் என யாருமில்லை. ரங்கசாமியின் மீது எனக்கு சிறு மனச்சாய்வு இருந்தது. அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அந்த சூழலில் தினமும் அவருடன் தொடர்ந்து உரையாடும் வாய்ப்பு. அதற்கு இரவு நேரத்தை எனக்கு உகந்த காலமாக ஆக்கயிருந்தேன். கோரிமேடு அவரது “ஷட்டில் காக்” மைதானத்தில் ஒய்வாக இருக்கும் சூழலில் அவருக்கான அரசியல் பற்றி விவாதித்ததுண்டு. என்ன காரணமோ அந்த சூழலை அவரது தொண்டர்கள் எனக்கென பேணி கொடுத்தனர். எந்த தொந்தரவும் இல்லாமல் நான் நின்னைத்ததை அவருடன் பகிரந்து கொள்ளும் வாய்ப்பு.
கட்சி தலைவர் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என்பது எனது பேச்சின் மையமாக இருந்தது. அதை தொடர்ந்து அவர் மறுத்து வந்தார். அதற்கான காரணம் இரண்டு என நான் ஊகித்திருந்தேன் ஒன்று அவர் இயக்கம் அல்லது நிறுவனங்களின் மனிதரல்ல தொகுதியில் மிக சிறந்த நிர்வாகியாக அறியப்படுவது கூட அவர் தன்னை இந்த நிலைக்கு தயார்படுத்திக் கொள்ள உதவியது. அவர் கட்சி மற்றும் அதன் நிர்வாகிகள் சார்ந்த சவால்கள் தனக்கு சரிவராது என நினைத்திருந்தால் அது மிக பொருத்தமானது என்பது எனது கருத்து. இது ஒருவித நழுவல் அணுகுமுறை. அது சரியா? தவறா? என்கிற விவாதத்தில் முடிவடையாது.
அவர் முதன்மையாக நினைத்தது தில்லி தலைமை தனக்குறிய இடத்தை மரியாதையை வழங்கவில்லை என்கிற வருத்தமும் கோபமும் அவரது பேச்சில் மிகுந்து இருந்தது. அதில் எனக்கு சில பகுதிகளில் உடன்பாடும் பல விஷயங்களில் முரணும் இருந்தது. அதற்கு நான் சண்முகம் ,மூப்பனார் மற்றும் நரசிம்மராவ் என மூவரின் அணுகுமறையை ஒப்பிட நினைக்கிறேன். மூவரும் ஒரு புள்ளிவரை பரபரப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை வைத்துக் கொண்டார்கள். அகில இந்திய கட்சி அமைப்புகள் நாடு முழுவதும் உள்ள கலாச்சார பண்பாடு மற்றும் ஜாதி மத அரசியல் சரடுகளால் கட்டி நிலைநிறுத்தப்படுபவை. அதன் மையத்தில் உள்ள ஒருவர் தன்னை என்னவாக வைத்துக் கொள்கிறார் என்பது பொருத்து அது மாறுபடுகிறது.
சுமார் ஒரு மாத காலம் பேசியிருப்பேன் என நினைக்கிறேன். அதற்கு இடையில் எனது தனிப்பட்ட காரணங்களுக்காக அரசியலில் இருந்து விலகுவது என முடிவெடுத்த பிறகு அவரை சந்திக்கவில்லை. சில மாதங்களில் அவர் தனி கட்சி துவங்கி வென்று ஆட்சியில் அமர்ந்தது வேறு கதை. நான் அவரது கட்சியில் சேர விரும்பவில்லை. கட்சி தலைமை அதன் தலைவர்களுடனான பல சரடுகளை மிகச் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும் என்பது எனது உறுதியான முடிவு. ஆனால் அவர் அதற்கு நேர் எதிரான பிறிதொரு முறையை வைத்திருந்தார். யாருடனும் தனிப்பட்டு இணைத்திருக்கவில்லை. அனைத்திலிருந்தும் தனித்து விடப்பட்டவராக தோற்றமளித்தார் அது ஒரு தேர்ந்த அரசியல் அணுகுமிறை அது அவரை சார்ந்து அரசியல் செய்ய விழையும் அனைவரையும் மேல் கீழ் என அடுக்குகளாக பிரிப்பதில்லை மாறாக ஓரே குழுவாக முயங்க வேண்டி இருப்பதால் அனைவரும் அவருடன் ஒட்டி நிற்க முண்டியடித்தனர். கொஞ்சமேனும் தலைமை பண்புள்ளவர்கள் அதிலிருந்து தங்களை விலக்கி வைத்துக் கொண்டார்கள். அழைத்தால் சென்று சந்தித்தனர் பிறகு எப்போதும் தங்கள் மனக்குறைகளை வெளியிடுவதில்லை. இந்த இரண்டையும் தாண்டி மூன்றாவது ஒன்று உள்ளதா? சந்தேகமே. எந்த இடத்திலும் முகமிழந்து போவது எனது பாணியில்லை. ஆனால் அதற்கு பெரு விலை கொடுக்க வேண்டி இருக்கலாம் என்பதால் நான் அவரிடம் இருந்து விலகி நின்றேன்.
நான் எனக்கு என சொல்லி ஆணையிட்டுக் கொண்டது இனி உன் விழைவால் எதையும் துவங்காதே. அதற்கு நீ தேவை என்றால் அது உன்னை தேடி வரட்டும். நான் என்னை தேடி வந்த பல சந்தர்பங்களின் வழியாக அது நிகழ்வதை அறிந்திருக்கிறேன். ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா பற்றிய கனவை நான் கண்டு கொண்மிருந்த வரை அது எனதருகில் வரவில்லை. வேண்டாம் என விலகி நின்ற போதும் விரிந்து வந்து சூழ்ந்தது. ஜெயமோகனின் சந்திப்பு கூட என்னை அறிந்து கொள்ளும் பொருட்டு நிகழ்ந்தது ஆனால் புதுவை வெண்முரசு கூடுகையை நான் திட்டமிட்டு துவக்கவில்லை. ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தில் எனது மனநிலைகளை குறித்து எழுதிய போது அவர் எனக்கு நீண்ட பதில் ஒன்றை எழுதியிருந்தார் அதில் உங்களுக்கு உகந்த ஏதாவது ஒன்றை செய்ய முயற்சியுங்கள் உங்களுக்கான வழி அதிலிருந்து கிடைக்கலாம் என்றார். மூன்று ஆண்டுகளுக்கு பின் வெண்முரசு கூடுகை துவங்கப்பட்டது.இன்றுவரை அதன் பெரு நிகழ்வுகளில் என்னை நான் முழுமையாக துண்டித்துக் கொள்வேன். ஆனால் ஊழ் எப்போதும் எனக்கென தனியாக ஒன்றை வைத்திருக்கும். வெண்முரசு எழுதி முடித்த அன்று இரவு ஜெயமோகன் என்னை அழைத்து நன்றி சொன்னார். அவரது நாவல் ஒன்று எனக்கும் சமர்பிக்கப்பட்டது. இது நான் நினைத்திராதது. நான் முன்பு சொன்ன அந்த “நாவிலே தேன்” இதுதான். ஒவ்வொன்றையும் எதற்காக துவங்க விழைந்தேனோ அதை அடைவது மட்டுமே இங்கே பேசப்படவில்லை அதை கடந்து அதன் பயணம் இன்னொரு எல்லையை விரிவாக்கத்தை செய்ய இயலவில்லை.ஆனால் அங்கிருந்து எனக்கென பிரத்யேகமாய் திறந்து கொண்ட வழிகளின் ஊடாக இன்று பயணித்தது கொண்டிருக்கிறேன். அவை அனுபவங்கள் சொல்லும் பல்வேறு கூறிகளை பற்றியதாக இருக்கிறது.
ஜெயமோகனின் கட்டுரை ஒன்று ரயிலையும் தண்டவாளத்தையும் தாங்கும் ஜல்லிகளின் பல்வேறு வடிவங்களைப் பற்றி சொல்லியிருப்பார். வாழ்கையில் அதே போல பலதரப்பட்ட ஆளுமைகளை கொண்ட பிறிதொரு உலகம் காலம் எடை மிகுந்ததாக பயணிக்க அங்கு ஏன் இருந்து கொண்டிருக்கிறேன் என்கிற புரிதல் பற்றிய விளக்கமில்லாமல் அந்த ஜல்லிகள் அங்கே கிடக்கின்றன.
*
லார்சன் & டுப்ரோ நிறுவனத்தின் வெங்கட்ரமனா புட்ஸ் ஸ்பெஷாலிடி லிட் மேட்டுப்பாளையம் கட்டுமானத்தில் எனக்கு ஒரு ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது என தந்தையிடம் சொன்ன போது அவர் திகைத்து போனதை பார்க்க முடிந்தது. அவரை எப்படி சமாதனப்படுத்தி இதை செய்ய வேண்டும் என மேட்டுப்பாளையத்தில் இருந்து வீடு திரும்பும் வழி முழுவதும் யோசித்துக் கொண்டு வந்தேன். இதில் முரட்டுத்தனமான அணுகுமுறை கூடாது அவரை ஏற்க வைக்கும் வாதங்களை முன் வைக்க வேண்டும். தந்தையிடம் முரண்படுவதில் அர்த்தமில்லை. நான் அறிந்தவரை மிக சரியாக முன் வைக்கப்படும் கருத்திற்கு மிகுந்த மரியாதை தருபவர். வைணவ சம்பிரதாயத்தில் வாதங்கள் தர்க்க ரீதியானவை. அவை அதன் மாணவர்களுக்கு தர்க்க சாஸ்த்தரத்தை கற்பிக்கிறது. தந்தை மிக சிறந்த தர்க்கவியல் சாஸ்திரம் பயின்றவர். தர்க்கத்தின் அடிப்படையில் ஒன்று உண்டு, விவாதம் மிக சரியாக தர்க்க நியாயத்தை முன் வைத்தால் கொள்கை ரீதியில் மாற்றுக் கருத்திருந்தாலும் அந்த நியாயம் ஏற்கப்பட வேண்டும் என்பது விதிகளில் ஒன்று.
வீடு திரும்பும் வழி முழுவதுமாக என் தர்க்கத்தை கோர்த்து எடுத்துக் கொண்டே வந்தேன்.காரணம் தர்க்கம் குறைபாடுகளை கொண்டது அதை அழகியலால் மட்டுமே ரசனையுள்ளதாக்க முடியும். தந்தையிடம் விஷயத்தை சொன்ன போது அவர் அது வேண்டாம் என எனக்கு கூறிய ஆலோசனைகள் அனைத்தும் அவருடைய அச்சத்தின் வெளிப்பாடுகள். அதில் அத்தனையையும் இணைத்தது என்னை பற்றிய சஞ்சலமும் சந்தேகங்களும். கடந்த மூன்று வருடங்களில் மிக சிறந்த வியாபார முன்னெடுப்பை செய்திருந்தேன். அவை மிக சிறப்பானவை என்பது குறித்து அவரிடம் மாற்று கருத்து இல்லை. இப்போது எங்களின் பொதுவான கேள்வி தற்போதைய வியாபாரம் நிலை எங்கள் தேவையை ஈடுசெய்ய இயலாது. தொடர் பொருளாதார பற்றாக்குறை எங்கு கொண்டு விடும் என நாங்கள் அறிந்திருந்தோம். அது எப்போதும் பேசப்படுவதில்லை என்றாலும் அந்த இருள் அங்கு நின்று கொண்டிருந்தது. அது கொடுக்கும் அழுத்தம் அனைத்தையும் தர்க்கரீதியாக அடுக்கிக் கொள்ள வைக்கிறது.
நான் யாருடனும் போட்டியில் இல்லை. எனது பாதை தனித்துவமானது. வியாபாரத்திற்கான புதிய பொருட்களை அடையாளப்படுத்த முடியாது அதற்கான பொருளியல் வசிதியின்மை முதன்மை தடை அப்படியே அதைக் கடந்தாலும் கமிஷன் வியாபாரிகளிடம் செய்ய வேண்டிய பேரம் அதற்கான நம்மை நம்பி வரும் வாடிக்காளர்களிடம் செய்ய வேண்டிய ஏமாற்று திட்டம். அதை அவர்களிடம் இருந்து திருடி இந்த கமிஷன் ஏஜென்டிடம் கொடுக்க வேண்டும். ஒரு வாதத்திற்கு அதற்கு உடன்படுவது என்று வைத்து கொண்டாலும் இந்த கமிஷன் ஏஜென்டுகளை எங்கிருந்து மீட்டு எடுத்துக் கொண்டு வர வேண்டும். இரண்டாவது அவர்கள் தற்போது இருக்கும் இடத்தில் மகிழ்வுடன் இருக்கிறார்கள் அவர்கள் ஏன் அதை கைவிட்டு வர வேண்டும். மேலும் இதை யார் செய்வது தந்தையோ நானோ அதை நேரடியாக செய்ய இயலாது. முதன்மை என்றால் அது தனிமனித விழுமியத்திற்கு எதிரானது மட்மல்ல நடைமுறை சாத்தியமில்லாதது. அதற்கான மொழியும் எங்களிடம் இல்லை. இதற்கு ஒரே மாற்று விலகிச் சென்ற சம்பந்தம் போல பிறிதொரு ஊழியனை உருவாக்கி அவனை சார்ந்து நிற்க வேண்டும். இதை எல்லாம் செய்தால் கூட அது எந்தளவு பலன் தரக்கூடியது. யார் அதற்கு உத்திரவாதம். பின்னர் அவனை தக்க வைத்துக் கொள்ள தேவைபடும் சமாதனங்கள் மற்றும் சமரசங்களின் எல்லை என்ன?
எனது திட்டம் நான் என்னை ஒரு முதன்மை வாடிக்கையாளாராக எனது வியாபார நிறுவனத்தில் வைத்து கொள்வது. ஒப்பந்தம் வழியாக எனக்கு தேவைபடுகிற அத்தனை பொருளாதார அபிவிருத்திகள் அத்தனையும் பெரிய அளவில் செய்து கொள்ள முடியும். இப்போது L&T இன் வேலை மதிப்பி சுமார் 16 லட்சம் அது எனது நேரு வீதி கடையின் நான்கு மாத விற்று முதல் வியாபார தொகை. மேலும் அவை அப்பா வியாபாரம் செய்யும் நிறுவனத்தின் அலுமினிய சேனல் மற்றும் கண்ணாடி போன்றவை இதில் மேலதிகமாக லேபர் மற்றும் லாபம். இப்போது இந்த வியாபாரத்தை வேண்டாம் என்று அது வேறு யார் கைக்கு சென்றாலும் அந்த வேலைக்கு தேவைப்படும் அலுமினியம் மற்றும் கண்ணாடி வியாபாரம் நமக்கு கிடைக்கப் போவதில்லை. இது போன்று வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து ஒப்பந்தங்கள் கிடைத்தால் அவை வியாபாரத்தில் மிகப் பெரிய பாய்சசலை நிகழ்த்தும் என்றேன். நமக்கான வியாபாரத்தை நம்மால் உருவாக்கி எடுக்க முடியும் என்று உறுதியாக கூறிய போது அரை மனதுடன் சம்மதித்தார். நான் முன் வைத்த வாதம் மிகச் சரியாக இருந்தது அதற்கான காரணம். சில முக்கிய தருணங்களில் அது கை நழுவி போய்விடுவதும் உண்டு. அது போல ஒன்று பின்னாளில் நிகழ்ந்தது.
அந்த வேலை முடிந்து முதல் செக் ₹.10 லட்சத்திற்கு வாங்கி அவரிடம் கொடுத்த போது அதை முதலில் பத்தாயிராமக புரிந்து பின் அதன் முழு தொகையை அறிந்து ஒரு சொல் இல்லாமலானதை நினைவுறுகிறேன். வந்த பணத்தில் இருந்து இருபத்தி ஐந்தாயிரத்திற்கு ஒரு காசோலை கொடு என்றார். நான் மகிழ்வுடன் கொடுத்தேன். அந்த பணத்திற்கு வீட்டில் புதிய பிரிட்ஜ் வாங்கினார். துவக்கத்தில தந்தையிடம் என்ன விவாதம் வைக்வேண்டுமோ அனைத்தும் வைத்தேன். அவரால் எனது உள கொந்தளிப்பை கடந்து செல்ல இயலவில்லை. நிறைவாக அவர் சொன்னது. “நீ இதில் பல லட்சங்களை சம்பாதித்து காட்டலாம் ஆனால் பாரம்பரிய தொழிலை விட்டு அடைவது என ஒன்றில்லை” என சொல்லிவிட்டார். அன்றிருந்த மன நிலையில் அதையே அவரது இசைவாக எடுத்துக் கொண்டேன். பின் மிக விரைவாக அடுத்த கட்ட காட்சிகள் உற்சாகமாக அரங்கேறின.
கனவுகள் எனது உயிர்நாடி என்னை ஒவ்வொரு சமயமும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதும் வெளியேற்றுவதுமாக மிக உயிர்ப்புடன் என்னுடன் இருந்து கொண்டிருந்தது. தொடர் வேலை வாய்ப்பு அடுத்த கட்டம் நோக்கிய கனவை கொடுத்தது. பெரிய நிறுவனதாக வளர்த்தெடுக்க அதை நண்பர்களுடன் சேர்ந்து செய்யலாம் என முடிவெடுத்தேன். abb டெக்கார்ஸ் என்கிற கம்பெனி உருவானது. எனது நண்பர்கள் பத்திரி மற்றும் பாபு என என் பெயருடன் இணைத்து உருவானது. அவர்களுடம் நான் சொன்னது இந்த வியாபாரத்திற்கு தேவையான பல லட்ச முதலீடு உங்களால் கொண்டு வர முடியாது. ஒரு குறைந்த தொகையை முதலீடாக வைத்து நமக்குள் வியாபார ஒப்பந்தம் செய்து கொள்வோம். அதற்கு எனக்கு சில வரையறைகள் உண்டு அதற்கு பாதகம் வராதவரை நமது ஒப்பந்தம் நீடிக்கும் என்றேன். அவர்களால் அன்று இயன்றது ₹.5000.00 மட்டுமே நான் பத்தாயிரம் முதலீடு செய்கிறேன் நமக்குள் 1:1:2 என்கி விகிதாசார அடிப்படையில் லாபத்தை பிரித்து கொள்வோம் என்றேன். இதில் வேடிக்கை என்னவென்றால் நாங்கள் திட்டமிட்ட முதலீட்டுத் தொகை ஒருநாள் கூலிக்கு கூட காணாது. எனது வரையறை அனைத்து சரக்கையும் நான் விநியோகிக்கிறேன் அதற்கான குறைந்தபட்ச லாபம் 5% என்கிற அளவில் எப்போதும் வைத்துக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டு ஏற்கப்பட்டது.
எனக்கு பெரும் நிறுவனமாக வளர்த்தெடுக்கும் கனவிற்கு அதை நிர்வாகிக் மிகச் சிறந்தவர்கள் தேவை பின் அவர்களை இயக்கும் அடுத்த கட்ட மற்றும் இடை நிலை நிர்வாகம் தேவையாகிறது. மிகச்சிறந்த நிர்வாகிகளுக்கு தர வேண்டிய சம்பளமும் அவர்களை திறமையாக கையாளும் அனுபவமும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. தற்போது என்னிடம் இரண்டும் இல்லை. எதிர்காலத்தில் அதை என்னால் அடைய இயலும் என உறுதியாக நம்பினேன் என்றால் அது தவறல்ல. அதற்கான சூழல் வாய்ததது அதை செய்தும் பார்த்தேன். ஒரு மாற்றாக நண்பர்களை அந்த இடத்தில் பயன்படுத்திக் கொள்வது. பின் வாய்ப்பு கிடைக்கும் போது தகுதியானவர்களை உட் கொண்டுவருவது என நினைத்தேன் நண்பர்கள் அதற்கு எனக்கு உதவுவார்கள் என நினைத்தேன். அன்று நட்பும் அதன் காரணியகளும் கொடுத்த ஊக்கம் அத்தகையது.
புதிய திட்டம் பற்றி தந்தையிடம் சொல்லி அவர் வந்து அந்த நிறுவனத்தை திறந்து வைக்க வேண்டும் என்று சொன்னபோது தன்னால் வர இயலாது என உறுதியாக சொல்லிவிட்டார். அதற்கு அவர் வைத்த தர்க்கம் மிக அருமையானது. “களவானாலும் கூட்டு உதவாது” என்பது முன்னோர் சொல் நான் வேண்டாம் என சொன்ன பிறகும் உனக்கென தனிப்பட்ட கருத்து இருப்பதை நான் மதிப்பது போல இந்த முயற்சிக்கு எனது ஆதரவில்லை நான் வரமாட்டேன் என்பது எனது கருத்து அதற்கு நீ மரியாதை தர வேண்டும்” என சொல்லிவிட்டார். மேற் கொண்டு என்னிடம் சொல்லில்லாமலானது. அம்மாவை அழைக்க அவர் வந்து விளக்கேற்றி அந்த புதிய நிறுவனத்தை துவங்கி வைத்தார்.
நான் கனவு கண்ட வியாபார உலகம் மிக பெரியது அதற்கான நிர்வாக அமைப்பை உருவாக்க எனது நண்பர்களை உள்ளே கொண்டுவந்தேன். அன்று எனக்கிருந்தது மிகப் பெரிய நண்பர் பட்டாளம். நட்பிற்கு எந்தவிதி முறைகளும் கிடையாது. ஆனால் வியாபாரம் என வருகிற போது அது வேறு உலகம். அங்கு விதிகள் மிகத் தீவிரமானவை. நண்பர்களின் ஒருவன் தணிகாசலம் அவனை நான் உருவாக்கிய நிறுவனத்திற்குள் கொண்டு வழ வேண்டும் என்கிற நிர்பந்தம் அதிகமானது. கோபால் அதில் மிக உறுதியாக இருந்தான். அவன் நச்சரிப்பு தாங்காமல் அவனை உள்ளே கொண்டு வந்தேன். அதை தவிர்த்திருக்கலாம் ஆனால் அன்று கோபாலின் சொல்லுக்கு பின்னால் அவன் வைத்த வாதத்தை கடந்து செய்ய இயலவில்லை. தனிகாசலம் குறித்த எனது மனப்பதிவு வேறுவிதமானவை. அவன் நடவடிக்கைகள் நண்பர்களின் வட்டத்தில் நிழலானவை. அவனிடம் ஒரு இருள் இருப்பதாக எனது ஆழுள்ளம் எச்சரித்துக் கொண்டே இருந்தது. நண்பர்களை ஆராயவது தேவையில்லாதது ஆனால் பங்குதாரர் என வருகிறபோது அவதானிக்கப்பட்டிருக்க வேண்டும். நட்பின் உணர்ச்சி வேகத்தில் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டது. நான் அவனுக்கு எங்கு இந்து எண்ணம் தோன்றியிருக்க வேண்டும் என நினைத்ததுண்டு. L&T வேலை எடுத்த பிறகு அதன் பொருட்களை கொள்முதல் செய்ய தொடர்ச்சியாக சென்னை செல்ல வேண்டியிருந்தது. பேச்சுக்கு ஒரு களித்துணை தேவையாக நான் நண்பர்கள் பலரில் தனிகாசலத்தை தெரிவு செய்து அழைத்து செல்லத் துவங்கியிருந்தேன். அவனிடம் பாராட்டத்தக்க சில குணங்களே அவனை தேர்வு செய்ய காரணமாக இருந்தது. கூப்பிட்ட இடத்திற்கு சொன்ன நேரத்திற்கு முன்னதாக வந்து நிற்பான் அவனிடம் கண்ம அந்த கடமை உணர்ச்சி வேறு யாரிடமும் நான் பார்க்காதது. என்னை போல எதுவும் அவனுக்கு விளையாட்டல்ல. ஒரு காரியம் செய்ய வந்தால் முழுமையாக செய்து முடிப்பான். ஆனால் அவனின் இருள் என என் ஆழ்மனம் உருத்திக் கொண்டிருந்தது. அந்த வியாபார நிறுவனம் நணபர்களின் இணைவு என்பதற்கு பின்னால் ஒரு சமன்பாட்டை உருவாக்கி இருந்தேன். பாபு எந்த நெறிக்குள்ளும் சிக்காதவன் சுதந்திரமாக தன்னை உணர்பவன் அவனுக்கு எல்லாம் விளையாட்டு. கட்டுப்படுத்துதல் அவ்வளவு எளிதல்ல பத்ரி பிப்டிக் என்கிற புதுவை அரசு நிறுவனம் ஒன்றின் ஊழியன். அவனை எல்லா நேரத்திலும் பயன் படுத்த இயலாது. காகித வேலைகளில் மிக சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவன் பாபு அவனுக்கு கட்டுபடக் கூடியவன் எனது வேலைகளை பகிர்ந்து கொள்ள அவனை தெரிவு செய்திருந்தேன். தனிகாச்சலம் எனக்கு தனிப்பட்ட முறையில் அனைத்து பயணத்தின் போது நண்பனாக உடனுருந்தது உதவியது என்றிருந்தாலும் எப்போதும் வியாபாரக் கூட்டு என்கிற ஒன்று எழுந்த போது அவன் எனது கணக்கில் இல்லை அவ்ஙளவுதான். அவனை தவிர்க்க அளவிற்கு அவன் என் நினைவில் எழவில்லை. கோபால் அவனது பெயரை என்னிடம் முன் மொழிந்த போது கூட அவன் என்னிடம் இதை சொல்லியிருக்கலாம் என நினைத்தேன். இருப்பினும் அவன் குறித்த என் நிலைபாடு மாறியிருக்காது.
வேலை விஷயத்தில் நான் நினைத்தது போல பாபுவால் என்னுடன் இணைந்து செயல்பட இயலவில்லை என்பதை விட அவனுக்கு எனது செய்கையின் ஒவ்வொன்றின் அடிப்படையை அவனுக்கு புரியவைக்க வேண்டி இருந்தது மிகுந்த ஆயாசத்தை கொடுத்தது . வியாபாரம் மட்டுமல்ல உலகில் இன்னொருவர் தேவைபடுகிற அனைத்திற்கும் சம்மான புரிமல் உற்றவர்களுக கு இடையே அது நிகழ வேண்டும். தந்தை சொல்ல வந்தது இதைத்தான் என்கற புரிதலை அடைய வேண்டி இருந்தது. வியாபாரம் என்கிற நுண்ணிய ஒன்றை வெறும் வார்த்தைகளால் வரையறை செய்துவிட இயலாது. நிர்வாகவியல் என்பது தனிப்பாடம் அதை கற்றவர்கள் மிகச சிறப்பாக அதை கையாள்கிறார்கள். அதே சமயம் அதை தனது கற்பனையில் உருவாக்கி எடுக்கும் பல நிர்வாகிகளை நான் பார்த்திருக்கிறேன் அவர்கள் யாரும் நிர்வாகவியல் பயின்றவர்கள் அல்லர். அந்த கல்வியின் இலக்கணம் கூட அவர்களின் வழியாக உருவாகி வந்ததாக மட்டுமே இருக்க முடியும். எல்லாவற்றிற்கும் பாபுவின் முதிரா கருத்துக்களை சொல்ல துவங்கும் ஒவ்வொரு கணமும் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் தவிக்க துவங்கினேன். எந்த வேலை சொன்னாலும் முரண்பட்டான். அவனுகான தர்க்க முறையை முன் வைத்தான்.
வியாபாரம் பற்றிய எந்த அடிப்படையும் புரிதலும் இல்லாத அவனுடன் தொடர்ந்து பயணிப்பது ஆபத்தானது என உணர துவங்கினேன். வேலை நடக்கும் இடத்தில் வீண் வம்புகளை அழைத்து வந்தான். ஒரு கட்டத்தில் அலுவலக வேலை மட்டும் அவனுக்கு ஒதுக்கப்பட்டது. அவனிடம் நான் பார்த்த முதல் முரண் ஒரு தொழிலாளியின் மனநிலை நிறைந்தவனாக இருந்தான். வெளிநாடுகளில் வேலைக்கு சென்றவன் உடல் நலத்தில் நிறைய சிக்கல் எழு சௌதியில் இருந்து இந்தியா திரும்ப வேண்டியதானது. உடல் உழைப்பு மட்டும் தெரிந்தவர்கள் நிர்வாகத்தில் திறம்பட செயல்பட இயலாது என கூறமாட்டேன். ஆனால் பாபுவிடம் நான் பார்த்தது அதில் இருந்து சிறிதும் வெளிவராத ஒருவனை. சொன்ன வேலைகளை செய்து முடிப்பதில் சோம்பேரித்தனம் பொறுப்பின்மை தனக்கென காரணங்களை அடுக்குவது. நான் பொருமை இழந்து கொண்டிருந்தேன்.
நான் எதிர்பார்த்தது பத்திரி தலையிட்டு அதை சரி செய்வான் என்கிற நம்பிக்கை தான் பொய்த்து போயிருந்தது. பாபு விஷயத்தில் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னால் ஏதும் செய்ய இயலவில்லை என கூறிவிட்டான். அவனது வலகல் அனைத்தையும் தலைகீழாக்கியது. முதல் ஏமாற்றம் அது அடிப்படையை அசைக்கத் துவங்கியது. அந்த சூழலில் தான் கோபாலின் நச்சரிப்பு ஒரு புள்ளியில் தாங்க முடியாததாகியது. எனக்கும் நன்கு செயல்படும் நபர் சிலர் தேவைபட்டனர் நான் தனிகாசலத்தை உள்ளே கொண்டு வர பெரிய தயக்கத்துடன் சம்மதித்தேன். abb decors துவங்கி பங்குதாரர்கள் ஒப்பந்தம் கையெழுத்தாகி சில காலமே ஆன நிலையில் அதில் புதிதாக எந்த மாற்றத்தையும் உடனே கொண்டு வர விரும்பவில்லை என்தால் அந்த ஒப்பந்ததில் அவனை இணைக்கவில்லை . எங்களுக்குள் இருந்த அடிப்படை புரிதல்களே சிக்கலில் இருக்கும் போது அந்த தயக்கத்தை கடக்க இயலவில்லை.
தனிகாசலத்தை அரிமா சங்கத்தில் கொண்டு இணைத்திருந்தேன். அதில் வழக்கம் போல ஒரு புள்ளியில் பயணிக்க இயலாமல் விலகினேன். அரிமா சங்கம் சொன்னஅந்த செய்தி மிக விசித்திரமானது. அங்கு நிகழ்வது ஒருவகை அதிகார அமைப்பை உருவாக்கி அதை செயல்பட வைப்பது. நிரந்தரமாக அந்த அமைப்பு நீடிக்க இயலாது என்பதால் வருடத்திற்கு ஒரு முறை அது மாற்றி அமைக்கப்படும். அது அரசியலின் பிறதொரு நீட்சி. சமூகத்தில் அரசியல் அதிகாரத்தை அடைய நினைத்தாலும் அதில் உள்ள சில அம்சங்கள் அவர்களை மிரட்டக் கூடியவை என்பதால் அரசியல் போல ஒன்றை உருவாக்கி அதில் நிலை கொண்டனர். எனக்கு நேரடியாக அரசியல் தொடர்புகள் உருவான போது நான் அந்த சங்கத்தின் செயல்பாடுகளில் இருந்து விலகிக் கொண்டேன்.
தனிகாசலம் தனது மிகு ஈடுபாடு காரணமாக அரிமா சங்கத்தின் அரசியல் செயல்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டான். எங்கும் உள்ள கோஷ்டி செயல்பாடுகள் இங்கும் உண்டு அதன் நிரையில் தன்னை இணைத்துக் கொண்டான். பொறுப்பிற்கு வருபவர்களுக்கு தனிகாசலம் போன்ற ஒருவன் எனக்கு தேவைபட்டது போல அனைவருக்கும் தேவைப்பட்டான். அது அவனது இடத்தை அபரிதமாக வளர்த்துக் கொடுத்தது. அவனது இயல்பான் தீட்டிய மரத்தில் ஆழம் பார்ப்பதை மட்டும் அவன் விடவே இல்லை என்பதை பிறகு வெகு காலம் கழித்து பலர் புலம்ப கேட்டிருக்கிறேன்.
புதுவை அரிமா சங்கம் கட்ட ஒப்பந்தாரர்களை கொண்டது. அவர்கள் வழியாக சில ஆர்டர்களை தனிகாசலம் பெற்று தந்தான். ஒரு கட்டத்தில் அவனும் பாபுவும் சேர்ந்து சில சிக்கல்களை உருவாக்க துவங்க நான் அதுவரை செய்து கொண்டிருக்கும் வேலைகளை எடுத்துக் கொண்டு நான் உருவாக்கிய நிறுவனத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு வெளியேறினேன். அதன் பிறகு சில காலம் அவர்களே எனக்கு போட்டியாக இருந்தனர். அவர்கள் வேலை செய்யும் இடத்தில் பாபுவிற்கும் தனிகாசலத்திற்கும் உண்டான வாக்குவாதாம் கைகலப்பில் முடிந்தது. அவனும் அந்த நிறுவனத்தில் இருந்து விலகினான். நான் மாதில பொதுப்பணித் துறையில் மிக வலுவாக காலூன்றி இருந்தேன். அவன் மத்திய பொதுப்பணித்துறை வேலைகளை எடுத்து செய்து கொண்டிருந்தான் என அறிந்து கொண்டேன். அதன் பின் அவனை எங்கும் சந்திக்கவில்லை.
தனிகாசலம் குறித்த எனது சந்தேகங்கள் அனைத்தும் உண்மை என்கிற நிரூபனம் ஒன்று நிகழ்ந்தது. நான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்து விலகிய போது எனக்க வர வேண்டிய சில லட்ச ரூபாய் பாக்கி இருந்தது. ஒப்பந்தம் abb decor உடன் போடப்பட்டதால் செக் அந்த பேரில் தான் வரும் எனக்கு சேர வேண்டிய தவகையை தனிகாசலம் பெற்று சென்றதாக கம்பெனியில் சொன்னார்கள். பல நாட்களாகியும் அந்த செக் என்னிடம் வழங்க பொருத்திருந்து ஒரு புள்ளியில் நானும் கோபாலும் அவனை சந்தித்து ஏன் அந்த செக்கை வாங்கினாய என கேட்டதற்கு முன்பின் சம்பந்தமில்லாத பதிலை கூற கோபால் அவனிடம் கோப்ப்பட்டான். சற்றும் யோசிக்காமல் தனிகாசலம் அவனுடம் “நீ யார் வெளியே போ என சொன்ன போது என்னால் சிரிப்பதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை. யாரால் அவனின் உள்நுழைவு நடந்த்ததோ அவன் பார்த்திருக்க கேட்டான் “யார் நீ உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் அலுவலகத்தை விட்டு கீழிறங்கு” என்றான். முளைக்காத ஒரு நிறுவனம் அதனில் எது இந்த ஆணவத்தை கொடுத்திருக்க கூடும் என யோசித்ததுண்டு. இல்லை இதுதான் அவனது இருள் என ஆழ்மனம் எச்சரித்ததிருந்ததை நினைவு கூர்ந்தேன்.
புதிய பதிவுகள்
-
ஶ்ரீ : மணிவிழா - 74 04.04.2026 * அறப் பிழையும் மனப் பிறழ்வும் -4 * நிலையழதலின் உச்சம் என்பது வெளியேற இயலாத சுழலைப் போ...
-
ஶ்ரீ : மணிவிழா - 73 03.04.2026 * அறப் பிழையும் மனப் பிறழ்வும் -3 * ஒன்றை பிறிதொன்று நம்பி அதுவே நவீன பார்வை என மதிப...
-
ஶ்ரீ : மணிவிழா - 71 31-03-2026 * அறப் பிழையும் மனப் பிறழ்வும் -1 * என் நினைவுகள் வேண்டாத எதிர்கால சந்தேகங்களை கொண்டிர...
-
ஶ்ரீ : பதிவு : 422 / 587 / தேதி 27 நவம்பர் 2018 * உள்கை * “ எழுச்சியின் விலை ” - 23 முரண்களின் தொகை - 0...
-
92 வது கூடுகை 1 தம்பாசுரனின் மகன் சகஸரகவசன் . மற்றும் நர நாராயணர்களின் பிறப்பு பற்றியது . அதன் நீட்சியாக கர்ணனையும் ச...
-
ஶ்ரீ : பதிவு : 661 / 851 / தேதி 25 ஜனவரி 2023 * தொடர் முயற்சிகள் * “ ஆழுள்ளம் ” - 04 மெய்மை - 56. அதுவரையிலான த...
-
முன்னுரை வெண்முரசு தொடர மீண்டெழுவன November 16, 2020 ஆறாம் வகுப்பு படிக்கையிலேயே அன்றெல்லாம் இலக்கணம் அறிமுகமாகிவிடும் . நானோ...

