https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

அடையாளமாதல் * அருகமர்ந்த காலமிருகம் *

 


ஶ்ரீ:



பதிவு : 554  / 747 / தேதி 27 டிசம்பர்  2020


* அருகமர்ந்த காலமிருகம்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 32.





தலைமைப் பண்பு என்பது அடிப்படையில் தங்களை பற்றி அவர்கள் வைத்திருக்கும் தன்மதிப்பு அவர்களை பிறரிடம் இருந்து விலக்கிக் காட்டுகிறது .எந்த விவகாரத்தைக் குறித்தும் தனக்கான ஒரு வலுவான கருத்தியலை உருவாக்கிக் கொள்கிறார்கள் அல்லது திரண்டு வந்தவைகளில் , சந்தித்து மேலெழுந்து வந்தவற்றில் தவறில்லாதது என ஆழ்மனம் சொல்லுவதை வரித்துக் கொள்கிறார்கள் . தொடர் உரையாடல்களின் வழியாக அதை வடிவமைத்துக் கொள்வதுடன் , அதற்கு முரணான எதையும் ஒப்புநோக்கி ஏற்பதும் அல்லது மறுப்பதன் மூலமாக தங்களை நிறுவிக் கொள்கிறார்கள் . சூழ்நிலை அவர்களை அல்லது அவர்களது கருத்து நிலைப்பாடுகளை மறுக்கும் இடத்தில் தயக்கமில்லாமல் வெளியேறி விடுகிறார்கள் . தலைவர் சண்முகத்திடம் அத்தகைத் தீவிரம் கொண்டவராக பார்த்திருக்கிறேன் . “தலைவர்கள் உருவாவதில்லை பிறக்கிறார்கள்என ஒரு சொல் உண்டு


அதே சமயம் ஊழின் வசத்தால் தலைமை பொறுப்பைப் பெற்று பின் பல நிகழ்வுகளினால் உந்தப்பட்டு முன் நகர்கர்ந்து மெல்ல தங்களுக்கானதை கண்டடைய இயலும் என நினைப்பவர்கள் ஆபத்தானவர்கள் . அவர்கள் தங்களுக்கு அரசியல் தலைமை பொறுப்பின் வழியாக எல்லையற்ற அதிகாரம் வழங்கப்பட்டு விட்டதாக நம்புகிறார்கள் , நடிக்கிறார்கள் . தோல்வியுறும் சர்சைக்குரிய அனைத்து முடிவிற்கும் சூழலை காரணம் சொல்லி வெளியேறப் பார்ப்பவர்கள் ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் தங்களையும் தன்னை சார்ந்தவர்களையும் பெரும் அழிவில் கொண்டுவிடுகிறர்கள். நிர்பந்தந்தால் மனதிற்கு உகக்காத ஒன்னறையும் செய்யத்தான் வேண்டியிருக்கும் என்பது போல பசப்பு பிறிதில்லை . இதை சொல்பவர் தலைமை பொறுப்பிற்கு சற்றும் அருகதை அற்றவர்கள் . அவர்கள் சொல்லும்அரசியல் நிர்பந்தம்என்பது ஒரு மாயச்சொல் . காலம் அவர்கள் அனைவரையும் தன்னிடையே கொண்டுவந்து அவர்களின் பொய்த்தோற்றத்தை ஒரு நாள் கட்டுடைகிறது . தலைவன் என்பவன் அது போன்ற ஒன்று தனக்கு நிகழ இடம் கொடுக்காதபடி தனது இருப்பை வகுத்துக் கொள்கிறான்.காங்கிரஸ் போன்ற இயக்கத்தில் ஒருவர் தன்னிருப்பில் அரசியலை வைத்துக் கொள்வது எளிதில் இயலாத ஒன்று. ஆனால் கொண்ட தன்னுறுதி அந்த முதிர்ச்சியை அளிக்கிறது. அவை நிகழ்வுகளை கசப்பு மற்றும் முன்முடிவுகள் இன்றி அனுகுவதில் இருந்து உருவாகி வருகிறது என நினைக்கிறேன். அதை இழக்கும் கணத்தில் யாருக்கும் அனைத்தும் கைவிலகி போகின்றது , அவர் எத்தனை அனுபவம் பெற்றவராக இருப்பினும் . வாழ்நாளில் இன்றுவரை சண்முகம் தவிர பிறிதொருவரை தலைவர் என உளம் கொள்ளவில்லை. 1999 களில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் பல சிக்கல்களை உருவாக்கி இருந்தது . சண்முகமும் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. ஆனால் அது இரண்டாம் நிலைத் தலைவர்கள் மற்றும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து அதை உருவாக்கி கொடுத்த போது . ஒரு புதிய தலைமுறை எழுந்து வருவதையும் அதிலிருந்து அரசியலின் அடிப்படைகள் மாறி வருவதை எடுத்துக் காட்டின.


1999 களில் பொறுப்பேற்ற சண்முகம் 2001 களில் முதலவர் பதவியில் இருந்து அவமானகரமாக விலகி வெளியேறிய பிறகு அவரது அனுகுமுறைகள் எதிர்மறையாக மாற்றமடைந்த படி இருந்தன . அது போல ஒன்று நிகழப் போவதை ஆழ்மனம் எங்கோ உணர்ந்திருந்தது . அப்போதும் அவர் மீது ஏனோ நம்பிக்கை இழக்கவில்லை. இத்துடன் இது முடியப்போவதில்லை , இன்னும் ஒரு சுற்று பாக்கி இருக்கிறது என எங்கோ ஒன்று சொல்லிக் கொண்டே இருந்தது . அது உண்மை என்றாகி 2005 களில் அவர் மீளவும் மாநில கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். புதிய அரசியல் கணக்குகள் உருவாகி வந்தன . அந்த சூழலில் மிக யதார்த்தம் கொண்டவராக மாநில கட்சி அமைப்பில் அடுத்த தலைமுறையை அறிமுகம் செய்பராக பெரும் ஊட்டம் கொண்டவராக இருந்தார் . அதில் தெளிவான எதிர்கால கணக்கு இருந்தது , மிக நிதானமாக அதை நோக்கி நகர்பவராக வியப்பளிக்கும் நடவடிக்கை கொண்டவராக இருந்தார் . கட்சியில் செயல்பாட்டில் புதிய நம்பிக்க கொடுப்பவராக பழைய அனுகுமுறையை மாற்றிக் கொள்பவராக புதிய எண்ணங்களை முன்வைப்பவராக மாறி இருந்தார். ஆனால் ஒரு நாள் அவை சற்றென மறைந்து அவருள் இருந்து பிறிதொருவர் எழுந்து வந்தார்.


முதல்வர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அதனது தவறுகளில் இருந்து மீண்டு வந்ததாக நினைத்தேன் . தில்லிக்கு அளித்த புதிய நிர்வாகிகள் பரிந்துரையில் அது முழுமையாக வெளிப்பட்டது . முதல் நிலை தலவர்களில் பலர் பொது செயலாளர்களாகவும் இரண்டாம் நிலைத் தலைவர்களை உருவாக்கும் பொருட்டு அவர்களை இணைச் செயலாளர்களாக நியமிகப்பட்டனர். மூத்த தலைவர்கள் கட்சி அலுவலக நிர்வாகத்திற்கும் இரண்டாம் நிலை நிர்வாகிகள் களத்திலும் செயல்படும் திட்டத்தை முன்வைத்தார் . தேர்தல் நெருங்கிவிட்டதால் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டு தேர்தல் வேலைகள் அவற்றை ஆக்ரமித்துக் கொண்டன . 2006 சட்டமன்றத் தேர்தலில் கட்சி மீண்டும் ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைத்து . கட்சியின் அடுத்த சீர்திருத்த வேலைகளை தொடங்குவதற்கு முன்பாக 38 ஆண்டுகள் கழித்து உள்ளாட்சி தேர்தல் நடத்தபட வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவும் அதன் பின்னர் நிகழ்ந்தவைகளும் அனைத்தையும் கலைத்துப் போட்டது போது அவரையும் அவரது சூழலை புரிந்து கொள்ள முடிந்தது . உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் தேர்வில் முதல்வர் ரங்கசாமியின் அனுகுமுறையால் அவர் மீது கடும் கோபமும் கசப்பும் கொண்டவராக மாறினார் . அவர் நினைத்த எதையும் செய்ய முடியாதவரானார் 2007 களின் இறுதியில் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்ட போது இருளின் ஆழத்திற்கு சென்றார் . அது நான்னறியாத வேரொருவர் . அதன் பிறகு அவரது அரசியல் கணக்குகள் அனைத்தும் பொய்த்தனதனது இறுதி காலத்தில் கசப்பும் வெறுப்பும் கொண்டவராக மாறிய போது அவரது தன்னுறுதியும் தன்னிருப்பும் அவரை கைவிட்டது . முதுமையின் கரணமாக தன்னுறுதியை அவர் இழந்த போது காலம் கொடிய மிருகம் போல நீண்டகாலம் அவர் பக்கத்தில் காத்திருந்தது போல அவரை வேட்டையாடியதை உளம் பதற வேடிக்கை பார்க்க நேர்ந்தது என் தீயூழ் என நினைக்கிறேன் .


திங்கள், 21 டிசம்பர், 2020

அடையாளமாதல் * நொய்மையும் உறுதியும் *

 




ஶ்ரீ:



பதிவு : 553  / 746 / தேதி 21 டிசம்பர்  2020


* நொய்மையும் உறுதியும்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 31.







காலை 9.00 மணிக்கு தலைவர் வீட்டில் இருந்து தொலைபேசியில் அழைத்ததாக என் மனைவி சொல்லும் போது மணி 10.30 தாண்டி இருந்தது . பூஜையில் இருக்கும் போது என்னை அழைப்பதில்லை .வெறுப்பாக இருந்தது . அவர் தலைமையில் நடக்கும் பஞ்சாயத்து நான் இல்லாமல் நடக்கட்டும் என்று முதலில் நினைத்தேன். 11.00 மணிக்கு சூரியநாராணன் எனது அலைபேசியில் அழைத்தார்  மேற்கொண்டு இழுத்தடிக்கும் எண்ணம் இருந்தாலும் யாரிடமாவது கொட்டித் தீர்க்க வேண்டும் என தோன்றியதால் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் போதுதான் கவனித்தேன் அது தலைவர் வீட்டு தொலைபேசி எண் . சற்று குழப்பமாக இருந்தது 9:30 மணிக்கெல்லாம் அலுவலகம் சென்று விடுவது அவரது வழக்கம் . என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவருடன் பேசினேன் . அவர் எதுவும் சொல்லாமல் தலைவர் வீட்டிற்கு வருமாறு அழைத்தார் . நான் உடனே புறப்பட்டு சென்றேன். தலைவர் வீட்டின் பின்கட்டு எனக்கு மிக அனுக்கமானது . அங்கு அவரின் முதன்மை பணியாளர்கள் இருப்பார்கள் . எனது நண்பர்களும் கூடும் இடமும் அது. சற்று மூச்சு வாங்கிக் கொள்ள உகந்த இடம் , ஆனால் சிக்கல் தலைவர் வீட்டின் வரவேற்பறையை தாண்டித்தான் உள்ளே செல்ல முடியும் அவர் கண்ணில் படாமல் அங்கு செல்ல முடியாது . அழைத்தால் சென்று பேசுவோம் என வேகமாக அவரை கடந்து சென்றுவிட்டேன் . பின்கட்டில் சூரியநாராயணன் இருந்தார். எதற்காக அழைத்தார் என கேட்டேன் . அவர் என்னிடம் முதல் நாள் நடந்தது என்ன என விசாரித்தார் . நடந்தவற்றை சொன்னேன் . ஆரம்பித்தது அவர்கள் எங்காள் அதை முடித்து வைத்தார்கள் என்றேன். அவசியமில்லாத அந்த மொத்த வன்முறையும் அனைவரும் பார்க்க நிகழ்ந்தது . பக்கத்து ஊரில் இருந்தும் ஆட்கள் வந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்க தவறியதால் ஏமாந்து போனதை சொன்னேன் . இன்று பஞ்சாயத்து வீட்டிலேவா என்றதற்கு இல்லை தொகுதியில் என்றதும் அதிர்வளிப்பதாக இருந்ததுசற்று நேரத்தில் தொலைபேசி அழைப்பு வந்து அவர் பேசியது யாருடன் என புரிந்து வேகமாக அவர் அறைக்குள் நுழைந்தேன் . ஊரார் கூடி இருப்பதால் அனைவரும் புதுவைக்கு அவர் இயலாததால் என்ன செய்வது என அவர்கள் கேட்டதற்கு தலைவர்சிக்கல் ஒன்றுமில்லை அரிகிருஷ்ணனை அனுப்பி வைக்கிறேன் இரு தரப்பையும் அழைத்து நீங்களே சமாதனம் செய்து வையுங்கள்என்று சொன்னது காதில் விழுந்தது . நான் திகைத்து நின்றேன். அவர் மேற் கொண்டு ஒன்றும் சொல்லாமல் என்னை பார்த்து சிறு புண்ணகையுடன் வேறு வேலைகளை பார்க்கத் துவங்கினார்.


இதை எதன் பொருட்டு அவர் செய்திருந்தாலும் , ஒரு நிகழ்வின் பின்னியில் நிகழ்வது என்ன என்று புரிந்து தான் எடுக்க வேண்டியதை துணிவுடன் எடுக்க வேண்டியன் தலைவன். நிலமையை சீர் செய்ய பகத்தில் உள்ளவனை பலியிடுவது போல கீழ்மை பிறிதில்லை . தொகுதியில் நடைபெறும் பஞ்சாயத்துக்கு எனக்கான அழைப்பு கடைசிவரை வரவில்லை . வராது என எனக்கும் தெரியும். மாலையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னை வந்து சந்தித்து வெற்றி களிப்பில் பேசி மாய்ந்தது எதுவும் என்னை அசைக்கவில்லை . மாறாக ஒரு சொல்லும் இன்றி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு இடம் உருவாகி இருக்கிறது அடுத்து என்ன நிகழும் அல்லது நிகழ்த்த வேண்டும் என்பதே என் முன் மாபெரும் நிழலென நீண்டு கிடந்தது . இது ஒரு நம்பிக்கையை உருவாக்கி பலரை என்னுடன் வந்து இணையச் செய்ய வேண்டியது இனி நிகழலாம் அல்லது நிகழாது போகலாம் ஆனால் இந்நேரம் என்கெதிரான பலமிக்கவர்கள் ஒருங்கி இருப்பார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து கருத்துப் பரிமாறிக் கொள்ளத் தேவையில்லை . எனக்கெதிரான செயலை அவர்கள் அனைவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறு நகைப்புடன் செய்து கொண்டே இருப்பார்கள் . அதைத்தான் கடந்த 40 ஆண்டு காலமாக சண்முகத்திற்கு செய்து கொண்டிருந்தனர் . இப்போது எனக்கு . என் வரையிலான குறுகிய வட்டத்தில் அவை எனக்கு புரியாது போகலாம் , ஒருகால் தலைவர் நிற்கும் இடத்திற்குள் நுழைந்து பார்க்க முடிந்தால் அவை தெளிந்து வரலாம் . அவரது வட்டத்தில் நுழைந்து பார்த்து நிகழ்ந்து கொண்டிருப்பதை அனுமானிப்பது என முடிவெடுத்தேன் . இருந்தாலும் அவற்றை என்ன என்று என் வாழ்நாள் முழுவதும் செலவழித்து நான் அறிந்து கொள்ள முடியலாம் ஆனால் எவ்வளவு கவனமாக இருந்தாலும் அந்த இடறல்களில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது என்பது மட்டும் தெளிவாகியிருந்தது .


அன்று மாலை தலைவர் சண்முகத்தை அவரது வீட்டில் சந்திக்க குபேர் காங்கிரஸின் தலைவர் சிவராஜ் மற்றும் நிர்வாகிகள் சிலர் வந்திருந்தனர். சிவராஜ் அரசியலில் தன்னை நிலைபடுத்திக் கொள்ள , தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர் . நடிகர் சிவாஜி ரசிகர் மன்றம் தொடங்கி , குபேர் காங்கிரஸாகி பின்னாளில் பிரெஞ்ச் இந்திய விடுதலை இயக்கமாக உருவெடுத்தது . நீண்ட நாட்களாக புதுவை சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 16 தேதி கொண்டாடுவது வரலாற்றுப் பிழை என்றும் அது நவம்பர் 1 ஆம் தேதிக்கு மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை மற்றும் போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர் . அதன் தொடர்ச்சியாக சண்முகத்தை சந்தித்து மனு அளித்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர் அது கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருப்பது . அதன் நீட்சியகயாக மீள மீள அந்த சந்திப்புகள் . சண்முகம் அந்த கோரிக்கை மீது கடும் காழ்ப்பு கொண்டவர். புதுவை சுதந்திரம் குறித்து தனது அழுத்தமான கருத்துக்களை தயக்கமில்லாமல் எப்போதும் முன்வைப்பவர். எந்த சமரசத்திற்கும் உட்படாமல் தன்னால் ஒப்புக் கொள்ள இயலாததை ஒருபோதும் ஏற்காதவராக அவரை பார்த்திருக்கிறேன்.தலைமை பண்பின் பல அடையாளங்களில் இது ஒன்று என நினைக்கிறேன் . அரசியலில்  தலைமை என்பது பல சமரசங்கள் சந்திக்கும் ஒரு புள்ளி. அதில் சமரசமில்லாதவராக ஒருவர் தன்னை நிறுவிக் கொள்வது சாத்தியம் என்றும் அதனூடக பயணப் பட இயலும் என என்னை நம்பிக்கை கொள்ள வைத்தவை இது போன்ற பல நூறு சந்தர்ப்பங்கள் . தில்லி தலைமையுடன் அந்த சமரசம் இல்லாத போக்கை அவர் முன்வைத்தார் என சொல்லமாட்டேன் . அது சாத்தியமில்லாதது மிக சிக்கலானது . ஆனால் அது ஒரு தேர்ந்த நெசவு போல. பல ஆயிரம் ஊடுபாவுகளால் ஆனது. அடிப்படையை இப்படி வகுத்துக் கொள்ள முடியும் என நினைக்கிறேன் . தனக்கானதை எப்போதும் இழக்காமலும் விட்டுக் கொடுக்காதலும் இருப்பது. நிகழ் அரசியலில் எல்லா சாத்தியங்களையும் எப்போதும் எதிர் நோக்குவது . அவைகளுக்கான கச்சாப் பொருளான தகவல்கள் எப்போதும் தில்லி தலைமையிடத்திலும் தன்னுடன் இருப்பதை பாதுகாப்பது . அரசியல் என்பதே தகவமைதலை அடிப்படையாக் கொண்டது என அதனது இறுதிக் காலம் வரை உறுதியாக நம்பினார் . மூப்பனார் மற்றும் வாழப்பாடியிடமும் அதே போன்ற ஒன்றை பார்த்திருக்கிறேன் . அரசியலின் அத்தனை சாத்தியங்களை கொண்ட அதன் நீள் முரணியகத்தின் மைய விசையில் தனக்கான இடத்தை நொய்மையாக ஆனால் உறுதியாக வைத்துக் கொண்டார். அது சமரசப்புள்ளியா என்றால் ஆம் இல்லை என்றால் இல்லைதான் . அது விளக்கங்களுக்கு அப்பாற்பட்டது உணர மட்டுமே முடிவது . அதன் பெயர்தான்நல்ல அரசியல்என்பேன்.

புதன், 16 டிசம்பர், 2020

அடையாளமாதல் * இளிவரல் *

 




ஶ்ரீ:



பதிவு : 552  / 745 / தேதி 16 டிசம்பர்  2020


* இளிவரல்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 30.







1996 களில் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்று ஆட்சியை இழந்து உற்சாகம் குன்றி இருந்தது . அனைத்து பெருந் தலைவர்களும் கட்சியில் யார் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் எனபெருந்தன்மையுடன்ஒதுங்கி இருந்த நேரம் . நான் எனக்கான பாதையை தேர்ந்தெடுத்தது அப்போது தான் என்பதால் அது யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை , என்னை நோக்கிய ஒரு இளிவரல் சிரிப்பு அத்துடன் நான்ஒரு பிங்கலன்போல அவர்களின் கண்களுக்கு தெரிந்திருந்தால் அது வியப்பில்லை. பல வகைகளில் அது உண்மையும் கூட . அவர்கள்  விதைக்காலம் குறித்த கவலையற்றவர்கள், அறுவடையில் சரியாக செயல்பட்டு முந்தியிருந்து பிற யாருக்கும் எதுவும் கிடைக்காமல் பார்த்துக் கொள்வதில் சமர்த்தர்கள். அவர்களுக்கு மத்தியில் தலைவர் சண்முகம் சற்று வித்தியாசமா தெரிந்தார் . அவர் அமைப்பு மனிதர் என்பது முதல் காரணமாக இருக்கலாம் அல்லது கட்சி தலைவர் என்கிற பொறுப்பால் அவருக்கு வேறு வழிகள் இல்லாதிருக்கலாம். அரசியலில் அன்றைக்கு அது யாருமற்ற நிலம் போல. அதன் எதிர்காலம் மற்றும் எனது இருப்பு என்ன என்பதை தெரிந்தே அனைத்தையும் முன்னெடுத்தேன். எனக்கான பாதை திறந்து கொண்ட போது பூனையின் வசீகரத்திற்கு முன்பு நிற்கும் எலியைப் போல அதில் நுழைவது என்பது என்னால் தவிர்க்க இயலாதது . பிறர் அறுவடை காலத்திற்கு வந்து நிற்பதற்கு முன்பாக காலூண்றி விட வேண்டும் என்கிற பதட்டம் எழுந்தது எல்லாம் பின்னர் 1999 களில். 1996 களில் அது போன்ற எந்த உந்துதலும் பதட்டமும் இல்லை. நிகழ்வுகள் கோருகின்ற செயல்பாட்டை நான் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருந்தேன் , அது ஒன்றை தொடர்ந்து ஒன்று என எழுந்து கொண்டே இருந்தது . அது எனக்கான இடத்தை நிறுவிக் கொண்டிருந்த போது எனக்கான எதிர்காலம் குறித்த திட்டமென ஏதும் இல்லை . தனித்து செயல் பட கிடைத்த வாய்ப்பு அதன் அடிப்படையில் ஒவ்வொரு கட்சி நிகழ்வையும் எனது பழைய நண்பர்களைக் கொண்டு ஒருங்கிணைக்க முயன்றேன். தொடர் கட்சி நடவடிக்கைகள் சண்முகத்திற்கு அவசியமாக , ஆசுவாசமளிப்பதாக இருந்திருக்க வேண்டும் . அதனால் எப்போதும் ஏதாவதொரு தடையை குறுக்காக வைப்பவர் அமைதியாக அனைத்திற்கும் அனுமதித்தார்.


பொதுவாக அரசியலில் அதிகமும் மெனக்கெடாத நிகழ்வு என்றால் அது கொடியேற்றுவது தான் சில கார்களில் மிகச் சிறிய கூட்டத்துடன் சென்று இறங்கி கொடியேற்றி விட்டு சென்று கொண்டே இருப்பது. ஒரு முப்பது பேர் தேரினால் அங்கு மட்டும் ஒரு சிறிய உரை அவ்வளவுதான். ஒட்டுமொத்த நிகழ்வைவும் மிக எளிதாக ஒருங்கிணைத்து விடலாம். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று இருந்தாலும் அதில் சில மெனக்கெடல் மூலம் சில எல்லைகளை தொடமுடியும் என்பது எனக்கு பழைய அனுவங்கள் கற்றுத் தந்தப் பாடம் . முதல் நிகழ்வை எனக்கு மிக பலமுள்ள தொகுதியாக நினைத்த ஊசுடுவில் துவங்கினேன். அது தொகுதி முழுவதும் கொடியேற்றும் எளிய நிகழ்வு . சுமார் 24 நிகழ்வுகள் சிறியதும் பெரியதுமாக ஒருங்கப்பட்டருந்தன. காலை 9:00 மணிக்கு துவங்கியது இரவு 11:45 க்கு நிறைவுற்றது . அந்த நீண்ட பயணம் எல்லோரையும் திகைக்கச் செய்திருந்தது . அதன் வெற்றிக்கு பலர் காரணம். மிகச் சரியாக தொடர்புறுத்தியது மட்டுமே நான் செய்தது. எதிர் பார்த்ததைவிட தொண்டர் திரள் அதிகரித்ததால் நிகழ்வு பெரிய வெற்றியை கொடுத்தது . பல முக்கிய தலைவர்கள் ஒதுங்கும்படி நிகழ்ந்து விட எனக்கான அடுத்த கட்டம் திறந்துவிட்டிருந்தது . ஊர் பெரியவர் சிலர் ஒரு மோதலுக்கு வழி வகுத்து தங்கள் இடத்தை உறுதி படுத்திக் கொள்ள நினைத்தனர் . இது எப்போதும் மாறாத விதி பல ஆண்டுகளாக அதை சலிக்காமல் செய்து வந்தனர் . பிரச்சனை தலைவர் முன்னியில் தீர்க்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை எப்போதும் போல முன் வைத்தனர் . உண்மையில் அது இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களான வளிம்பு நிலை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் அந்த ஊர் நிலமுடை சமூகப் பெரியவர்களுக்கும் இடையேயான பல ஆண்டுகளாக இருந்து வரும் உள்ளூர் சாதீய வன்மம். தலைவர் முன்னேபஞ்சாயத்துஎன்பது என்னை எரிச்சலடைய செய்வது . நிலைமையை கட்டுப்படுத்த எங்களை கண்டிப்பதைத் தவிர அவருக்கும் வேறு வழி இல்லை . ஆனால் ஊர் முன்பே இளைஞர் அமைப்பினர் கண்டிக்கப்பட்டால் , என் மீது புதிதாக எழுந்திருக்கும் நம்பிக்கைய முற்றாக குலைத்து விடும் பிறகு என்னால் அவர்களை ஒருபோதும் ஒருங்கிணைக்க முடியாது. ஊர் பெரியவர்கள் எதிர் நோக்குவது அதையே.


முதல் நாள் இரவு தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து சிக்கலின் பின்னனி குறித்து அவருக்கு சொன்னேன் . இது புதிதாக எழுந்தது அல்ல தொடர்ந்து இருபது ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருப்பது . ஒவ்வொரு முறையும் இந்த சிக்கலை முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் கண்ணன் மற்றும் பாலன் சண்முகத்திற்கு எதிரானதாக திசைத் திருப்பிக் காட்டி வெற்றி பெற்றிருந்தனர் . அதை ஒட்டி ஒவ்வொரு முறையும் எழும் வன்முறையும் அதை தொடர்ந்து காவல்துறையின் கைது பின்னர் நீதிமன்ற நடவடிக்கை என வருடக்கணக்கில் அது நீண்டு கொண்டே போவது . அமைப்பை முழுவதுமாக சிதைத்து விடுவது . அதை மீளவும் கட்டி நிறுவ செலவேறிய பொருளாதாரம் மற்றும் பெரும் முயற்சியையும் கோருவது . நான் இருக்கும் நிலையில் ஒரு சிறு சிக்கலும் என்னை மீள முடியாத ஆழத்தில் தள்ளிவிடும் என்று கூறினேன் . மேலும் இளைஞர் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சி என இரண்டையும் இணைக்க நான் எடுக்கும் முறச்சிகள் தோல்வியுறும் என்பதையும் அவருக்கு சொன்ன போது நான் வெறுப்பின் உச்சத்தில் இருந்தேன் .தலைவர் ஒன்றும் சொல்லாமல் மறுநாள காலையில் பேசிக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டு படுக்கச் செல்லும் போது இரவு 12.30 மணிக்குமேலாகியருந்தது. பெரும் மனச்சோர்வுடன் வீடு திரும்பினேன் . வீட்டுக்கு முன்பாக பத்துக்கும் அதிகமானோர் காத்திருந்தனர் . அவர்களுக்கு என்ன சொல்வது எனத் தெரியவல்லை . நானே என்னை தொகுத்து கொள்ளாதவரை அவர்களுக்குச் சொல்ல ஒன்றுமில்லை . ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் குமுறி கொட்டித் தீர்ப்பதை பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே என்னால் இயன்றது . “தலைவரிடம் சொல்லியிருக்கிறேன் காலையில் பார்ப்போம்என்பது தவிர நான் சொல்ல ஏதுமில்லை . ஒரு நாளுக்குள் முழு சக்தியையும் இழந்திருந்தேன் . இது முடிவுக்கு வராத யுத்தம் இதில் ஒரு போதும் வெற்றி பெற முடியாது . நிலமுடைச் சமூகம் அதனது இருப்பை ஒரு போதும் இழக்காது என்பதால் அவர்களுக்கு எதிரான சண்டை எனது பாதையில் ஒரு பெருங்கல்லை போல எப்போதும் இருக்கப் போகிறது என்கிற எண்ணம் பற்றியெரியச் செய்தது .