https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 30 நவம்பர், 2021

ஜெ கடிதம் . மதம், மரபு, அரசியல்.

 




https://www.jeyamohan.in/159948/


மதம், மரபு, அரசியல்

அன்பிற்கினிய ஜெ,

வணக்கம் ,

நலம் , தங்கள் நலனை விழைகிறேன்.

பல முறை கேள்விகளால் துரத்தப்பட்டு இமெயில் வரை வந்து உங்களுக்கு அனுப்பாதவை பல . எழுதி வைத்து இமெயிலுக்கே வராதது என ஏகப்பட்ட கடிதங்கள். மிகப் பெரும்பாலும் அவைகளுக்கு பதில் இரண்டொரு நாளில் உங்கள் வளைதளத்தில் கேள்வி பதிலாக , கட்டுரையாக வந்துவிடும் .அல்லது எனக்கென இருக்கவே இருக்கிறது 26,000 பக்கங்கள் . எனது தேடலுக்கான் விடைகளை இங்கு எங்காவது கண்டடைந்து கொண்டே இருப்தால் அறுபடாத நீண்ட அகப்பயணத்தில் உங்களுடன் இருப்பதாக நினைக்கிறேன் .

தங்களின் அஜ்மீர் பயணம் மிக அனுக்கமான ஒன்றை கொடுத்திருந்தது. அதற்கு எப்போதும் என் நெஞ்சம் நெகிழும் நன்றிகள்.

ஜெ ,அகக் கொந்தளிப்பான நிலையில் உங்களை கோவையில் , நாகர்கோவிலில் சந்தித்த இந்த ஆறு ஏழு வருடங்களில் அடைந்த அகமாற்றம் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது, மிக மிக அகவயமானது . இன்று எல்லா கொந்தளிப்புகளும் அடங்கிய நிலையில் இருந்து கொண்டிருக்கிறேன். இருந்தும் இந்த கேள்வியை கேட்டேயாக வேண்டும் எனத் தோன்றியதால் இந்தக் கடிதம் .

தங்களது சமீபத்திய பதிவு “மதம், மரபு, அரசியல்” அதில் தங்கள் கருத்து வரிக்கு வரி உடன்படுகிறேன் .காரணம் கடந்த 25 வருட காலம் நான் மிக விழைந்து பணியாற்றிய ஒரு துறை . அதில் தங்கள் பதிலில் இப்படி கூறியிருந்தீர்கள்“முற்றிலும் மாற்றமே இல்லாமல் நீடிக்கலாமா? இல்லை, அவ்வண்ணம் நீடிக்கும் எந்த அமைப்பும் பழமைகொண்டு அழியும். மாறும் காலத்தில் தன்னை தக்கவைக்கவே அது மாற்றமில்லாமல் இருக்கவேண்டியிருக்கிறது. அதேசமயம் சில மாற்றங்களைச் செய்துகொள்ளாவிட்டால் அது முழுமையாக அழியநேரிடும். அந்த மாற்றங்களை அது செய்துகொண்டே ஆகவேண்டும். அடிப்படை மானுட அறத்துக்கு எதிரானவை, மாறும் காலத்தின் மாறிய அறத்துக்கு ஒவ்வாதவை, மாற்றப்படவேண்டும். அறம் ஒன்றின்பொருட்டு மட்டுமே அந்த மாற்றங்கள் நிகழவேண்டும்”

அதில் இந்த வரிகளை விரித்தெடுத்துக் கொண்டே இருக்கிறேன் .“அடிப்படை மானுட அறத்துக்கு எதிரானவை, மாறும் காலத்தின் மாறிய அறத்துக்கு ஒவ்வாதவை, மாற்றப்படவேண்டும். அறம் ஒன்றின்பொருட்டு மட்டுமே அந்த மாற்றங்கள் நிகழவேண்டும்” அற்புதமான வரிகள் .

இந்தவரியை எழுதும் போது இருந்த உங்கள் அக எண்ணத்தை அறிய விழைகிறேன்.மரபான ஒரு மதம் இன்றைய மானுட அறத்தை நோக்க வேண்டிய விதம் எப்படி இருக்க வேண்டும் என விழைகிறீர்கள்.

ஆழ்ந்த நட்புடன்,

கிருபாநிதி அரிகிருஷ்ணன்

அன்புள்ள அரிகிருஷ்ணன் அவர்களுக்கு,

நாம் வாழும் சூழலில் இருந்து பின்னகர்ந்து வரலாற்றை, மானுடப்பரிணாமத்தை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மிக எளிதில் விளங்குவது இது. மானுடம் விலங்குநிலை வாழ்க்கையில் இருந்து உருவானது. அது தனக்கான அறங்களையும், அவ்வறங்களைப் பேணும் நெறிகளையும் உருவாக்கிக்கொண்டு முன்னகர்ந்து வந்திருக்கிறது. ஒரு காலத்தில் வெறும் தசைவல்லமையும், குழுவல்லமையுமே அனைத்தையும் தீர்மானித்திருக்கும். அன்று அதுவே அறம்

அதன்பின்னர் கூட்டுவாழ்க்கைக்கான அறங்கள் உருவாகி வந்தன. பிறரையும் வாழவிடுவது, பிறருடன் ஒத்திசைவது போன்றவை தோன்றின. கருணை, இரக்கம், நீதியுணர்வு என நாம் சொல்வன அனைத்தும் அவ்வாறு உருவானவை. அவை தன்னியல்பாக உருவானவை அல்ல. தகுதி வாய்ந்த மானுடர்களால் கண்டடையப்பட்டு சொல்லிச் சொல்லி நிலைநிறுத்தப்பட்டவை. சொல்லிக்கொண்டே இருக்கவேண்டிய தேவை கொண்டவை. ஏனென்றால் அவை மானுடனின் அடிப்படை இயல்புகளான தன்னலம், வன்முறை ஆகியவற்றுக்கு நேர் எதிரானவை.

அவ்வாறு அறங்களை கண்டடைந்து சொன்னவர்கள், அறங்களை புதுப்பிப்பவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக நாம் ரிஷி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறோம். அவர்களுக்கிடையே முரண்பாடுகள் இருக்கலாம். ஏனென்றால் அறம் என்பது விவாதங்கள் வழியாக, ஓரு கருத்தின் இடைவெளியை இன்னொரு கருத்து நிரப்புவதன் வழியாக, ஒரு கருத்தை இன்னொன்று எதிர்க்கும் முரணியக்கம் வழியாகவே செயல்படமுடியும், மேம்பட முடியும். ஆனால் அனைவரும் இணைந்து ஒன்றைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். பரத்வாஜரும் ரிஷிதான், பிருஹஸ்பதியும் ரிஷிதான், துர்வாசரும் ரிஷிதான், ஜாபாலியும் ரிஷிதான்.

இன்றைய யுகத்தை நிர்மாணித்தவர்கள் அனைவருமே ரிஷிதான். மார்க்ஸை ஒரு ரிஷி என முன்பு ஜமதக்னி என்னும் மார்க்ஸிய அறிஞர் எழுதினார். முனிவர் என்று கோவை ஞானி சொல்வதுண்டு. ஃப்ராய்டும் தல்ஸ்தோயும் ரிஷிகள்தான். ஷோப்பனோவரும் நீட்சேயும் ரிஷிகளே. அவர்கள் இந்த நூற்றாண்டை சமைத்து நமக்கு அளித்திருக்கிறார்கள். அறங்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மானுடத்தை முன்னகர்த்தியிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான பங்களிப்பு உண்டு.

மானுடத்தின் பரிணாமத்தில் சென்ற முந்நூறாண்டுகளில் படிப்படியாக சில அறங்கள் மேம்பட்டிருக்கின்றன. அவற்றிலொன்று மானுடசமத்துவம். பிறப்பால் எவரும் இழிந்தோரோ மேலோரோ அல்ல என்னும் அறம். வாழ்வுரிமை,ஆன்மிகநிறைவுக்கான உரிமை அனைவருக்கும் நிகராகவே இருக்கவேண்டும் என்னும் அறம். முந்தைய ரிஷிகள் உருவாக்கிய அறங்களுக்கு மேலதிகமாக அடுத்தகட்ட ரிஷிகள் மானுடத்திற்கு அளித்தது அது. அதிலிருந்தே அதிகாரத்தில், ஆட்சியில் அனைவருக்கும் பங்கிருக்கவேண்டும் என்னும் ஜனநாயகப்பார்வை உருவாகி வந்தது. அவையே இருபதாம் நூற்றாண்டை உருவாக்கிய அடிப்படைகள். அவற்றின் மேல்தான் நம் சமூகவாழ்க்கை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அவை முன்பிலாதவை. மாபெரும் தத்துவங்களை, மெய்ஞானங்களை முன்வைத்த ரிஷிகள் கூட மானுட சமத்துவம், சாமானியனுக்கும் அதிகாரம் என்னும் அடிப்படைகளை முன்வைத்தவர்கள் அல்ல. அந்தக் காரணத்தைச் சுட்டிக்காட்டி இன்று அவர்களை ஒட்டுமொத்தமாக மறுப்பவர்கள் உண்டு. அது அறிவின்மை. அப்படி நோக்கினால் அடிமைமுறையை ஆதரித்த பிளேட்டோவில் இருந்து ஒட்டுமொத்த மானுட ஞானத்தையும் நிராகரிக்கவேண்டியிருக்கும். மார்க்ஸ் கூட அதைச் செய்யவில்லை.

மறுபக்கம், அந்த கடந்தகால ரிஷிகள் சொல்லவில்லை என்பதனால் இன்றைய அடிப்படை அறங்களை ஏற்க மறுக்கும் மனநிலை உள்ளது. அது மேலும் அறிவின்மை. அதை அறிவுத்தேக்கம் என்று மட்டுமே சொல்வேன். அறிவு விவேகத்துக்கு எதிரான விசையாக ஆகும் நிலை அது. யோசித்துப் பாருங்கள், பிளேட்டோவின் அதிதீவிர பக்தர் ஒருவர் பிளேட்டோ சொல்லியிருப்பதனால் இன்றும் அடிமைமுறை தேவை என்று சொல்லிக்கொண்டு அலைந்தால் அவரை நாம் எப்படி எடுத்துக்கொள்வோம்? அதற்காக பிளேட்டோவை தூக்கி வீசிவிட முடியுமா? அவர் இல்லாமல் மானுடச் சிந்தனை உண்டா?

நேற்றைய ரிஷிகளிடமிருந்து அவர்களின் மெய்ஞானத்தை, சிந்தனையை, கலையை பெற்றுக்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக ரிஷிகுலத்தால் உருவாக்கப்பட்டு இன்று நமக்கு அளிக்கப்பட்டுள்ள இன்றைய அறத்தின் மேல் நின்றுகொண்டு அவற்றைப் பரிசீலிக்கவேண்டும்.ஆகவே இன்றைய அறத்துடன் முரண்படும் என்றால் நேற்றைய சிந்தனைகள் எவையானாலும் நிராகரிக்கப்படவேண்டியவையே.

ஆனால் உண்மையில் அடிப்படைச் சிந்தனைகள், மெய்யறிதல்கள், கலையழகுகள் அவ்வண்ணம் முரண்படுவதில்லை. ஏனென்றால் பெரும்பாலும் அவை நன்றுதீது என்பதற்கு அப்பாலுள்ளவையாகவே இருக்கும். நேற்றைய அறவியல் [Ethics] மட்டுமே இன்றைய அறவியலுடன் முரண்படும்.

உதாரணமாக, அத்வைதசாரம் இன்றைய அறவியலுடன் முரண்படாது. ஏனென்றால் அது நேற்றைய அறவியலைச் சார்ந்து உருவானது அல்ல. அது ஒரு பிரபஞ்ச தரிசனம் மட்டுமே. ஆனால் அத்வைதத்தை ஒட்டி ஓர் அமைப்போ ஆசாரமோ உருவாக்கப்பட்டிருக்கும் என்றால் அது நேற்றைய அறவியலைச் சார்ந்தே அமைந்திருக்கும். இன்று அது இன்றைய அறவியலுடன் முரண்படும். அந்த அமைப்பு அல்லது ஆசாரம் மாற்றப்பட வேண்டும். அத்வைதம் மாற்றமில்லாதது, ஆகவே அந்த அமைப்பு அல்லது ஆசாரமும் மாற்றமில்லாததே என நினைப்பது மாபெரும் அறியாமை.

இதையே இன்றைய சிந்தனையிலும் காணலாம். மானுடவிடுதலையை, மானுட சமத்துவத்தை முன்வைத்த பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டு நவீன ரிஷிகள் எவரும் பிற உயிர்களின் வாழ்வுரிமையை, இயற்கை என்னும் பேருயியிரியின் இருப்புரிமையை கருத்தில்கொண்டவர்கள் அல்ல. இன்று அந்த அறம் இன்றைய ரிஷிகளால் முன்வைக்கப்படுகிறது. காந்தி முதல் மசானபு ஃபுகுவேகா வரை ஒரு பட்டியலையே நாம் போடமுடியும். அவர்கள் கூட்டாக உருவாக்கிய அறம் அது.

உதாரணமாக, வளர்ப்பு யானைக்கும் தன் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை உண்டு என இப்போது ஓர் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது.[லலிதா என்ற யானைஇந்தத் தீர்ப்பு இருபதாண்டுகளுக்கு முன்புகூட வந்திருக்க முடியாது. ஏனென்றால் சென்ற ஐம்பதாண்டுகளில் உருவான அறம் அது. சிம்பன்ஸிகளைப் பற்றி ஆய்வுசெய்து அவற்றின் வாழ்க்கையை, உளவியலை மானுடத்தின் முன்பு வைத்த ஜேன்குடால் முதல் தொடங்கி பல நவீன ரிஷிகளின் கொடையாக உருவாகி வந்தது.

இன்று ஒரு பெருமாள் கோயிலில் சாமியை தன்மேல் ஏற்ற பிடிவாதமாக மறுக்கும் ஓர் யானையை அடித்து, துரட்டியால் நகங்களையும் செவிகளையும் பிய்த்து, கட்டாயப்படுத்தும் பாகனையும் விழாக்குழுவினரையும் பார்த்தால் அவர்களை ஒடுக்குமுறையாளர்கள், அறமிலிகள் என்று ஒருவர் எண்ணுவார் என்றால்தான் அவர் அறத்தில் நிற்பவர். ராமானுஜர் காலத்தில் அவ்வண்ணம் எண்ணியிருக்க மாட்டார்கள். ராமானுஜரே அவ்வாறு எண்ணாமலிருந்திருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் இன்று அவ்வண்ணம் எண்ணாதவர் ராமானுஜருக்கு அணுக்கமானவர் அல்ல.

ராமானுஜர் சொன்ன ஒவ்வொரு சொல்லையும் அவ்வாறே கடைப்பிடிப்பவர் ராமானுஜருக்கு அணுக்கமானவர் அல்ல. அவர் எளிய பிடிவாதக்காரர் மட்டுமே. ராமானுஜ தரிசனத்தை அவர் அறியவில்லை, அவர் அறிந்தது உலகியல் ஆசாரங்களை மட்டுமே. ராமானுஜரை இன்றைய அடிப்படை அறத்துக்கு எதிராக நிறுத்துவதன் வழியாக அவர் ராமானுஜ மெய்ஞானத்துக்கு மாபெரும் தீங்கையும் இழைக்கிறார் என்றும் சொல்வேன். ராமானுஜரின் மெய்ஞானத்தை இன்றைய அறத்துடன் இணைப்பவரே ராமானுஜருக்கு நெருக்கமானவர். நாளை உருவாகும் புதிய அறங்களுடன் அதை இணைப்பவரே ராமானுஜரை முன்னெடுத்துச் செல்பவர்.


ஜெ

மெய்த்தேடலும் அரசியல்சரிகளும்

வெள்ளி, 26 நவம்பர், 2021

அடையாளமாதல் * சொல்லப்படாத விதி *

 


ஶ்ரீ:



பதிவு : 596  / 786 / தேதி 26 நவம்பர்  2021


* சொல்லப்படாத விதி  * 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 71.






பாலன் அறைக்கு வெளியே பலகணியில் உட்லன்ஸ் பாலாவுடன் பேசிக் கொண்டிருந்தார் . துக்கம் கொண்டவர்களைப் போல ஒருவர் கையை ஒருவர் அவ்வப்போது தொட்டு கொள்வதில் ஆதரவாகப் பேசும் பாவனை இருந்தது . தேர்தலில் பாலன் தோல்வியுற்றது அங்கு பேசு பொருளாய் இருக்கலாம் . எப்படி பட்டவரையும் அசைக்கும் கணம் . பல பத்து வருடங்களுக்கு பிறகு அரசியல் தன்னிலை பற்றிய பெரும் கனவு கொண்ட அனைவருக்குமான சூழல் இது . காங்கிரஸில் இதுவரை  முதல்வர் பதவி பற்றிய முடிவு இரு முதன்மைத் தலைவர்களுக்கு ஊடானது இப்போது அவர்கள் இருவரும் பார்வையாளராக வெளியில் இருகிறார்கள். புதுவை அரசியலில் பிழைத்திருக்க விரும்பும் எவருக்கும் அனுசரித்து செல்ல வேண்டியவர்களுக்கு இங்கு இடமில்லை . அதில் சேராதிருந்த கண்ணன் இதோ தான் வளர்ந்து நிற்கும் இந்த நாளை நிச்சயம் கனவு கண்டிருக்க வேண்டும் . ஒரு வகையில் அவருக்கு இணையாக பயணம் செய்யக் கூடியவரான பாலன் இன்று அரங்கின் உள்ளிருந்தால் அரசியல் வேனு களம் நோக்கி சென்றருக்கலாம் .அல்லது பாலன் கண்ணனை மீளவும் பின் தொடர்ந்திருக்கலாம். உச்சகட்ட குழப்ப நிலையை அடையும் போதெல்லாம் அவர் கண்ணனை நோக்கி நாகர்ந்திருக்கிறார் . வைத்திலிங்கம் தன்னை முன்வைத்து ஆட விரும்பாததை ஒரு நுண் அரசியல் நகர்வு என கொண்டால் அரங்கினுள்ளும் அவரின் ஆதரவாளராக அங்கு செயல்பட பாலனுக்கு வாய்ப்பில்லை . இப்போது நடந்து கொண்டருப்பது கண்ணனுக்கும் சண்முகத்திற்கான நேரடி அதிகார மோதல் மரைக்காயர் நுட்பமாக கரைந்து கொண்டிருப்பதை அங்கு யாரும் அன்று கணித்திருக்க முடியாது . என்னை பார்த்ததும் என்ன? என்றார் பாலன் . நான் அறையின் வாசலை கண்ணால் காட்டி அங்கு சென்றவுடன் சற்று இடைவெளி விட்டு வந்தார் . நான் அவரிடம் மரைக்காயர் அவரை கூப்பட்டதை சொன்னேன் கண்களில் வெறுப்பு தோன்றுவதாக பட்டது . அது என்னவாக இருக்கும் என தெரியவில்லை. சற்று நேர அமைதிக்கு பிறகு என்னிடம் மாநில நிர்வாகிகளைத் தவிர பிற அணைவரையும் அங்கிருந்து வெளியேறச் சொன்னவர் மாடி வராண்டாவில் கூடியிருப்பவர்களை அறைக்குள் சென்று காத்திருக்க சொல்லி , சில நிமிடங்கள் அங்கு வருவதாக சொன்னார் . மரைக்காயர் அழைத்ததை நினைவுறுத்திய போது பிறகுபிறகு பார்க்கலாம்என்றார். நான் மரைக்காயரை சந்திக்கமலிருக்க எதிர் வழியாக எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை நோக்கி சென்றேன் .


சுப்புராயன் , கமலக்கண்ணன், தாமோதரனை வழியில் சந்தித்து பாலன் சொன்னதை சொன்னேன் . தாமோதரன் கீழ்படிகள் வழியாக இறங்கிச் சென்றார் . வந்திருக்கும் தொண்டர்களை மெல்ல கலைந்து போக சொல்ல செல்கிறர் என புரிந்து கொண்டேன் . அங்கு எழும் கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லி அவர் மேலே மீண்டு வர எப்படியும் அரைமணி நேரமாகும். நாங்கள் அறைக்கு வெளியே கூடியிருந்தவர்களை உள்ளே செல்லச் சொன்னோம் . எல்லா ஜண்ணல்களை திறந்து வைத்தும் அறை புழுக்கமாக வெப்பமடித்தது . யார் என்ன என்கிற கேள்விக்கு அங்கு பதில் சொல்லக்கூடியராக கமலக்கண்ணன் இல்லை அவரே குழம்பியவராக காணப்பட்டார் . சுப்புராயன் அரசியலின் முகமல்ல. சுடு சொல்லை பேசுபவர்  அவரிடம் யாரும் எதும் கேட்கும் நிலையில் இல்லை . கூட்டம் தனக்குள் நிகழ்த்திய உரையாடல் சொல்லின்றி காரவையாக எழுந்தது . நாங்கள் பாலனுக்கு காத்திருந்தோம் .


உள்ளே நுழைந்ததும் பாலன் ஒற்றும் பேசவில்லை சற்று நேரம் கழித்துநிர்வாகிகள் தவிர பிற எல்லோரையும் போகச் சொல்லியாச்சா”? என்றார் . தாமோதரன் சென்றிருப்பதை சொன்னேன் . அங்கு அறையில் சுற்றி நின்று கொண்டிருந்த கூட்டம் அவரை எரிச்சல் படுத்தியிருக்க வேண்டும் . “மாநில நிர்வகிகள் தவிர எல்லோரையும் கிளம்பச் சொல்லுங்கள்என்றார். ஏறக்குறைய அறை காலியானது . நாங்கள் மொத்தம் எட்டு பத்து பேர் இருப்போம் . கதவை மூடச் சொன்னவுடன் மூடப்பட்டது . நான் சுப்புராயனைத் தேடினேன் அவர் இரையெடுத்த பாப்பு போல பின்பக்க கடை கோடியில் இருந்தார். “கண்ணனைத் கூட்டம் ஏறக்குறைய தேர்ந்தெடுத்தது . சண்முகம் சென்னையில் நாராயணசாமி மூலம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியை சந்தித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் கேட்க சென்றிருக்கிறார்கள்.அதிமுக வுடன் கூட்டணி என்பதால் அவர்களது ஆதரவு கடிதம் ஆளுனரிடம் கொடுக்கப்பட வேண்டும் . கண்ணன் முதல்வராக வர ஜெயலலிதாவின் ஆதரவில்லை என தில்லிக்கு வாய்மொழியாக சொல்லப்பட்டிருக்கிறது அதை உறுதி செய்ய  நாராயணசாமியும் வாழப்படி ராம்மூர்த்தியும் ஜெயலலிதாவை சந்திக்க சென்றிருக்கிறார்கள் . செய்தி உண்மையானால் வைத்திலிங்கம் முதல்வராக தேர்ந்தெடுக்கபடலாம். இன்னும் சற்று நேரத்தில் அது உறுதியாகவிடும் . முடிவு வெளியான பிறகு கண்ணனின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் அதனால் தான் தொண்டர்களை வெளியேற சொன்னேன் . மரைக்காயர் துரோகம் செய்ததாக நினைத்தால் நாம்தான் முதலில் தாக்கப்படுவோம் . முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு நீங்கள் முதலியார்பேட்டை அலுவலகத்திற்கு சென்று காத்திருங்கள் ஓரிருவர் இங்கு இருங்கள், அரி நீ என்னுடன் வாஎன்றார்.


நான் பாலனை தொடரும் போது சுப்புராயனை பார்த்து விட்டுச்  சென்றேன் . சற்று இடைவெளியில் ஊசுடு பெருமாளும் விஜயனும் வருவது தெரிந்தது . நான் சற்று பதட்டமானேன். விஜயனைப் பாலன் பார்த்தால் சிக்கல் என்ன செய்வதென்று தெரியவில்லை . அவனை நான் வரவேண்டாம் என சொல்ல முடியாது அது அவனுக்கும் பாலனுக்குமானது .உள்ளே அரங்கில் முடிவுகள் எட்டப்பட்டு எந்த நேரத்திலும் அறிவிக்கபட இருக்கிற என்பது அங்கு நிலவிய சூழலில் புரிந்து கொள்ள முடிந்தது . நான் திரும்பவும் ரவிச்சந்திரனை தேடினேன் . முதல் முறையாக ஒரு வன்முறை நிகழ இருப்பதை தெரிந்து கொண்டதன் பலன் என் நெஞ்சு அடித்துக் கொள்வதை நானே கேட்க முடியும் என உணர்ந்து கொண்டதுதான் . பாலன் மரைக்காயரின் அறைக்குள் சென்றார்  நான் உள்ளே நுழையும் தருணத்தில் அரங்குக்குள்ளிருந்து செய்தி வந்து விட்டது . வைத்திலிங்கம் முதல்வராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அனைவரும் அரங்கின் வாசலில் குழுமத் துவங்கிவிட்டதால் இடம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளானது . நேற்று யாருமில்லாமல் வந்தவரை திரும்பிக் கூட பார்க்காத இந்தக் கூட்டம் இன்று அவரது கடைக்கண் பார்வை பெற முண்டியடிக்கிறது . பதவியின் அதி வினோதங்களில் ஒன்று . இனி அவரது நண்பர்கள் உறவினர்கள் அனுக்கர்கள் என பலர் உருவாகி வந்து கொண்டே இருப்பார்கள். மரைக்காயர் அறையில் இருந்து வெளிப்பட்டார் . நான் அவரது முகத்தை பார்க்க விரும்பினேன். சற்றும் சலனமற்று இருந்தது . பின்னால் பாலன் இறுகிய முகத்துடன் வர மொத்த கூட்டமும் அறைக்குள்ளிருந்து வழிந்தது . உட்லன்ஸ் பாலா உற்சாக சிரிப்புடன் பிரமாண்டமான ரோஜா மாலை அதன் பூக்கள் அனைத்துப் பக்கமும் சிதறிப் பரவ வந்தார் . அந்த ஏசி அறையில் இருந்து பன்னீர் ரோஜாவின் மிகையில்லாத வாசனை எங்கும் சூழ்ந்து கொண்டது


அரங்கில் இருந்து முதல்வராக வைத்திலிங்கம் தனது டிரேட் மார்க் சிரிப்புடன் வெளிப்பட்டார். எனக்கு பக்கத்தில் இருந்தவர் எனது காது ஜவ்வு கிழியமுதல்வர் வைத்திலிங்கம் வாழ்கஎன்றார் . நான் கண்ணனை தேடினேன். வைத்திலிங்கம் மரைக்காயரை நோக்கி வர மரைக்காயர் தனது பக்கத்தில் மாலையுடன் நின்றிருந்து உட்லன்ஸ் பாலா கைகளில் இருந்து மாலையை எடுத்து வைத்திலிங்கத்திற்கு அணிவித்து கைகுலுக்கி வாழ்த்து சொன்னார் . மாலையை பரிகொடுத்த உட்லன்ஸ் பாலாவிற்கு அங்கு என்ன நிகழ்கிறது என புரிவதற்குள் அவரை முன்டியடித்த கூட்டம் பின்னுக்கு தள்ளும் போதுதான் அவருக்கு கண்ணன் முதல்வரில்லை என்பது புரிந்திருக்க வேண்டும் . அது கண்ணனுக்காக என்று சொல்லி கட்டப்பட்ட மாலை . அவரை மேலும் மேலும் கூட்டம் பின்னுக்க தள்ள வயதான அவர் அதற்கு ஈடு கொடுக் முடியாமல் தள்ளாடியபடி பின்னால் சென்று மறைந்தார். நான அவரை திகைப்புடன் பார்த்தேன்

வாழ்க கோஷத்துடன் வைத்திலிங்கம் அந்த கூட்டத்தால் அடித்து செல்லப்பட்டு கானாமலானார் . மனதில் சட்டென ஒரு கசப்பு எழுந்தது

வெள்ளி, 19 நவம்பர், 2021

அடையாளமாதல் * முகங்களின் பின்புலம் *

 


ஶ்ரீ:



பதிவு : 595  / 785 / தேதி 19 நவம்பர்  2021


முகங்களின் பின்புலம்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 70.





நான் கண்ணன் அணியின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவரான ரவிச்சந்திரனை அந்த கூட்டத்தில் தேடினேன். அவர் தேர்வு நடக்கும் அரங்கின் நுழைவாயில் அருகே நின்று கொண்டிருப்பதை சற்று முன்னர் பார்த்திருந்தேன் . அரங்கின் கதவிற்கு அருகே காவலர் குவிக்கப்பட்டிருந்தாலும் அவரை அங்கிருந்து வெளியேற்ற காவலர்கள் துணியவில்லை அதன் அருகே இருப்பதால் அவருக்கு முதன்மை தகவல்கள் தெரிந்து கொண்டிருந்தது . ஆனால் இப்போது அவர் அங்கு இல்லத்தால் மெல்லிய பரபரப்புடன் சுற்றி நோக்கிய போது தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையின் உள்ளிருந்து  மரைக்காயர் வெளியே வர அவருடன் ஆவேசமாக பேசியபடி  வந்து கொண்டிருந்த ரவிச்சந்திரனை நான் என் அருகே நின்றிருந்த சுப்புராயனை மெல்லத் தொட்டு  சுட்டிக் காட்டினேன். பார்த்த உடன் சுப்புராயன் சிறிது பதட்டமடைவது தெரிந்தது . சுப்புராயன் நாங்கள் இருந்த இடத்திற்கு நேர் எதிரே அறைக்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தில் யாரையோ தேடினார் . தாமோதரனையும் கமலக்கண்ணனையும் பார்த்தும் வருமாறு கையசைக்க அருகில் வந்தனர் அவர்களுக்கு மரைக்காயர் அறைக்கு வெளியே அவருடன் விவாதித்துக் கொண்டிருந்த ரவிச்சந்திரனை காட்டினார் . அதற்கு என்ன அர்த்தம் என எங்கள் அனைவருக்கும் சொல்லாமல் தெரியும் . மரைக்காயர் ரவிச்சந்திரனை அமைதிப் படுத்திக் கொண்டிருக்க, சுப்பிராயன் தாமோதரனிடம் மரைக்காயரிடம் என்ன நிகழ்கிறது என விசாரித்து வர சொன்னார். அடுத்து என்ன செய்வது என நாங்கள் முடிவெடுக்க முதன்மை தகவல் முழுமையாக வேண்டும்.


தாமோதரனும் கமலக்கண்ண்னும் மரைக்காயரை நோக்கி நகர்ந்ததும் சுப்புராயன் என்னையும் அவர்களுடன்  செல்லுமாறு  சைகை செய்தார் நான் முதலில் தலையசைத்து மறுக்க அவர் மறுபடியும் உறுதியாக  என்னை உடன் செல்லுமாறு சொன்ன பிறகு நான் சற்று இடைவெளியில் அவர்களை பின்தொடர்ந்தேன் . என்னை திரும்பிப் பார்த்த கமலக்கண்ணனுக்கு நான் உடன் வருவது ரசிக்கவில்லை . தாமோதனிடம் ஏதோ சொல்ல அவர் கமலக்கண்ணனிடம் இப்போது பேச வேண்டாம் என்றார் . நான் எதையும் பொருட்படுத்தாது அவர்களை தொடர்ந்தேன். மரைக்காயருக்கு மிக அருகில் சென்றோம் . நாங்கள் அனுகி வருவதை பார்த்து ரவிச்சந்திரன் அங்கிருந்து விலகினார் . நாங்கள் மரைகாருக்கு அருகில் சென்றவுடன்  எங்களை நோக்கி நட்பாக புண்ணகைக்க தாமோதரன்என்ன நடக்குதுண்ணேஎன்றதற்கு மரைக்காயர்முதல்வர் தேர்வு கண்ணனக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது என செய்திகள் சொல்கின்றன. சண்முகம் நாராயணசாமி வழியாக  இறுதி நிகர்வை செய்கிறார்என்றார் . “நாராயணசாமி எங்கிருக்கிறார் என கண்டறிய இயலவில்லை , அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதைப் பொருத்தே சண்முகம் நினைப்பதை ஊகிக்க முடியும்என்றார் . மேலதிக தகவல்களை எங்களுக்கு சொல்ல அவர் விரும்பவில்லை என தெரிந்தது . நாங்கள் அவரிடம் இருந்து விலகி சுப்புராயனுக்கு தகவல் சொல்ல திரும்பினோம் . மரைக்காயர் என்னை பார்த்துபாலன் எங்கேஎன்றார் . நான் அவர் தேர்தல் நிகழும் அரங்கிற்கு அருகில் இருப்பதை சொன்னேன். என்னிடம் உடனே அவரை அழைத்து வரச் சொன்னார் . மரைக்காயர் என்னடம் பேசுவதை பார்த்து சற்று திகைத்தவர் போல பார்த்துக் கொண்டிருந்தார் தாமோமரன் . கமலக்கண்ணன் கண்களில் வெறுப்பு தெரிந்தது . நான் பாலன் இருக்கும் இடம் நோக்கி வேகமாக சென்றேன்


அரங்கிற்கு அருகே சென்றதும் வெளியே நின்றிருந்த காவலர் என்னை தடுக்க முனையாதது ஆச்சர்யமளித்தது அவர் என் அருகில் வந்ததும்  அவரிடம்பாலனை பார்த்தீர்களா”?. என்றேன் அங்கிருந்த தலைமைக் காவலர் என்னை அடையாளங் கண்டு கொண்டது போல தலையசைக்க அந்த தடுப்பு விலக்கப்பட்டு வழி உருவாகியது . அறைக்கு அருகில் இருந்த அறையை காட்டினார்கள். என்னை அவர்களுக்கு எப்படித் தெரியும் என வியந்து கொண்டேன் . அரசியலாளர்களுக்கு காவல்துறையினர் ஒரு பொருட்டாகவில்லை அவர்களை கடந்து செல்பவரே முதல் கட்டத்தை கடக்கிறார்கள் . காவலர்கள் அரசியலில் நேரடித் தொடர்பில் உள்ளவர்கள் என்பதால் அரசியலின் அனைத்து கட்ட முதன்மைத் தலைவர்கள் , முக்கியஸ்தர்கள் என அனைவரையும் அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் . ஒரு இடத்தை அனுகமுடியாது அவர்கள் அமைத்து வைத்திருப்பது ஒரு மாய வேலி தயக்கமில்லாது அதை கடந்து செல்பவர்களுக்கு அவை ஒரு பொருட்டல்ல. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வெளியாகும் வரை நம்மைத் தெரிந்து வைத்திருப்பதை அவர்கள் வெளிப்படுத்துவதில்லை. அவர்களுக்கு இடத்திற்கு தக்கவாறு நடந்து கொள்வது சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது அதில் எப்போதும் நெகிழ்வு தன்மை இருக்கும். ஆளுக்கும் சூழலுக்கும் தக்கபடி தங்களை தகவமைத்துக் கொள்கிறார்கள் யாருடைய உத்தரவுமின்றி சரியாக செயல்படுகிறார்கள்


அரசியலில் மாறுதல் நிகழ்வதை தனது இருத்தலியல் காரணமாக காவல்துறையே  முதலில் கவனிக்கிறது பின் அங்கிருந்து மாநில முதன்மை அரசு நிர்வாகிகளை தொடர்புறுத்தலின் வழியாக துவங்கி வலிமை கொள்கிறது . அங்கிருந்து சங்கிலித் தொடர்போல அனைத்தையும் இணைக்கும் கண்ணியாக உருவெடுக்கிறது . வெற்றிகரமான அரசு என்பது உளவை முற்றிலும் சார்ந்து இயங்கு போது மட்டுமே நிகழ்கிறது . ஆனால் உளவு நிறுவனம் தரும் செய்திகள் ஒற்றப்படை தன்மை கொண்டது எந்த செய்தியையும் நேரடியாக சொல்லாது, அதில் விடப்பட்டிருக்கும் இடத்தை நிஜமான செய்தி மட்டுமே இட்டு நிரப்ப முடியும் . அதை மிகச் சரியாக ஊகிப்பதன் வழியாக யாரை எங்கு நிறுத்த வேண்டும், யார் எதை செய்யக்கூடும், யாரிடம் எதை எதிர் நோக்கலாம் ,யாரை ஒருபோதும் நப்பக்கூடாது ,யார் கலகக்காரர்கள் ,யார் நேர்மையாளன் என அரசு தலைமைக்கு முடிவெடுக்க அதற்கு அரசியல் சூழியல் கணிப்பு மற்றும் மானுட உளவியலில் அனுபவம் வாய்ந்தவர் தேவைபடுவர் . அவர்களை முன்னமே உருவாக்கி வைத்திருப்பவர் வெற்றிகரமான அரசுகளை அளிக்க முடிகிறது

முதலவராக தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இவற்றை தொகுக்க நீண்ட காலமெடுத்தாலும் அது வெற்றிகரமாக இருப்பதில்லை. எந்த முன்னேற்பாடின்றி தற்செயலாக உயர் அதிகாரத்திற்கு வந்து சேருபவர்கள் அனைத்தையும் சிதைக்கிறார்கள் என்பதற்கு அதிமுக முதல்வர் s.ராமசாமி சரியான உதாரணம். சரியாக ஒருங்கப்பட்ட நிர்வாக அமைப்பு தனக்கு கிடைக்கும் உளவில் இருந்து சமூக உலவியலையும், அரசியல் தலைமை அனுபவத்திலிருந்து அதை நடைமுறைப்படுத்த சிறந்த நேரத்தையும் முடிவு செய்கிறது . அதைத் தொடர்ந்து எழும் அடுக்கடுக்கான முரணியல் தகவல்களை கூராய்வு செய்யும் தகுதியை உருவாக்கிக் கொடுப்பதுடன் அரசு,அதிகாரி,கட்சி அமைப்பினர்,பொதுமக்கள் என அனைத்தையும் மிகச்சரியாக தொடர்புறுத்துகிறார்கள் .


கண்ணனுக்கு மிகத் தெளிவான அதிகாரி வட்டம் அவர் தற்காலிக முதல்வராக வந்த போது அவருக்கு உருவாகியிருக்க வேண்டும் அது அரசியலில் அவரை எங்கு கொண்டு வைக்கும் என அறிந்தவர்கள் அஞ்சினர் . அரசாங்கம் அமைந்த பிறகு முதல்வர் தொடங்கி அமைச்சர்களின் தனி மற்றும் உதவி செயலாளர்கள் பெரும்பாலும் வருவாய்த்துறையில் இருந்து தெரிவு செய்யப்படுகிறார்கள் . மிக மிக அரிதாக அனுபவமுள்ள அமைச்சர்கள் வேறு அரசுத் துறைகளில் இருந்து தங்களது உதவியாலளர்களை கேட்டுப் பெறுகிறர்கள். இருந்தும் அவர்களின் உதவியாளர்களில் ஒருவர் வருவாய்த் துறையினாராக இருப்பதையே பார்த்திருக்கிறேன் . வருவாய்த்துறையில் இருந்து  வருபவர்கள் கட்சித் தலைவர்களையும் உறுப்பினர்களையும் கையாளக் கற்றவர்கள் என்றாலும் அவர்கள் தங்களது குறுகிய பல மட்ட இணை அரசயிலால் அனைத்தையும் முட்டு சந்திற்கு இட்டு செல்கிறார்கள் என்பதால் வெற்றிகரமான அரசு நிர்வகத்திற்கு அது உதவுவதில்லை என்பதுடன் கட்சி அமைப்பை சிதறிடித்து விடுகிறது . அவர்களுக்கு வருவாய்த்துறையில் இருந்த அனுபவம் யாரையும் கையாளமுடியும் என்கிற அசட்டுத்தன்மையைக் கொடுத்துவிடுகிறது ஆனால் பல கட்சி அமைப்பை சார்ந்தவர்களுடன் அரசை தொடர்புறுத்தும் போது விபரீதமாக இடத்தை சென்று தொட்டுவிடுவதை பார்த்திருக்கிறேன் . சண்முகத்தின் அறுபது வருட அரசியல் அனுபவம் அவர் செயலாளர்களின் சொதப்பலால் வீழ்ந்து போனது . தனியாளுமையை தக்கவைத்து கொள்ளும் அரசியல் தலைவர்களால் கூட தங்களின் முகத்தை காப்பாற்றிக் கொள்ள முடிவதில்லை . காங்கிரஸில் மரைக்காயர் மற்றும் திமுக வின் D. ராமசந்திரன் போன்றவர்கள் அரசு நிர்வாக செயல்பாட்டளவில் மிக சிறப்பானது என்று சொல்லலாம். அதன் வெற்றிக்கு பின்புலம் அவர்களுக்கு அமைந்த உளவுத்துறையின் மிகச் சீரான உள்கட்டமைப்பு . மிக சரியான செயலாளர்களை தேர்ந்தெடுத்து போன்றவை .