https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 30 அக்டோபர், 2020

அடையாளமாதல் * கண்களும் கனவுகளும் *

 .

ஶ்ரீ:



பதிவு : 543  / 736 / தேதி 30 அக்டோபர் 2020


* கண்களும் கனவுகளும் * 



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 21.






1980 களில் அரசியல் பற்றிய புரிதல் மற்றும் அதன் கற்றலின் ஆவல்  உச்சத்தில் இருந்த நேரம் , அது கொடுத்த ஈர்ப்பு  வார்தைகளுக்குள் அடங்காது , பாலன் வீட்டில் நிகழும் இரவு நேர கூடுகைக்கு , ஒரு புது உலகில் நுழையும் பரவசத்துடன் ஒவ்வொரு நாளும் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறேன் .முதல் முறையாக கலந்து கொண்ட போது மனிதர்களை பிணைக்கும் ஒரு துறையின் கண்களுக்கு தெரியாத நுண்ணிய வலை அங்கு உள்ளவர்களை , ஒருவருடன் பிறிதொருவர் தங்களை பிணைத்துக் கொள்வதும்  பிறரால் அவர்கள் பிணைக்கப்படுவதும் எப்படி நிகழ்கின்றது என்பது முதல் புரிதலாக இருந்தது . அவர்கள் மிக எளிய மனிதர்கள் தங்களுக்கான அரசியல் எவ்வாறு உருவாகி வந்து கொண்டிருக்கிறது  என்பதை பற்றிய கனவில் இருப்பவர்கள். அதன் பொருட்டு எதையும் செய்யும் மனநிலை உள்ளவர்கள் . ஆனால் அவர்கள் எண்ணியது போல ஒன்று நிகழ வாய்ப்பே இல்லை என்பது நீண்ட காலத்திற்கு பிறகு அறிந்து கொள்ள முடிந்தது  . பாலனை விட்டு விலகி தலைவர் சண்முகத்திடம் சென்று சேர்ந்த பிறகு அங்கு அது காட்டியது முற்றும் வேறுரொரு உலகு .அங்கு பல தரப்பு மடிப்புகளை உதறி பல கோணங்களில் அதைப் பார்க்க முடிந்தாலும் அவையும் மொத்த அரசியலின் சில துளிகள் மட்டுமேநிஜ  அரசியல் அதற்கு அப்பால் எங்கோ இருக்கிறது . இவர்களின் கனவுகளுக்கு அதில் இடமோ வாய்ப்போ இல்லை என்பது மூச்சடைக்க வைக்கும் திகைப்பை கொடுத்தது .


அரசியல் நிகழ்வு என்பது பலரின் எண்ணங்களிலான முரணியக்க வெளிப்பாடு , அது ஒன்றை எப்போதும் மறுப்பது .வேறு ஒன்றை முன்வைப்பது . கண்மூடி கனவுகளில் மட்டும் காண்பது .அது ஒரு அரூப உலகு .

கண்களை திறந்து வைத்துக் கொண்டால் அதன் நிதர்சணம் மலை போல கண்முன் இருக்கும் .சுதந்திர போராட்டக்காரர்களான பழைய காங்கிரஸ் தியாகிகளுடன் எனக்கு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்த அறுபடாத உரையாடல் , என் கண்களை திறந்து வைத்துக் கொள்ள உதவியது என நினைக்கிறேன் . தலைவர் சண்முகத்திடம் வந்து சேர்ந்த பிறகு நான் கனவுகளை வளர்த்துக் கொள்வதில்லை . அதே சமயம் யதார்த்த நிலையை உணர்ந்து கொள்வதைப் போல சோர்வளிப்பது வேறில்லை . தலைவர் சண்முகத்தின் அரசியலிலும் பின்னுக்கு இழுக்கும் அதே பழைய யுக்தியை தன் நீண்ட அனுபவத்தால் இன்னும் திறம்பட செய்வதை புரிந்து கொள்ள முடிந்தது . புரிதலின் காரணமாக பாலனிடம் அடைந்த ஒவ்வாமை என்னுள் அப்போது எழவில்லை . நான் அவரை கூர்ந்து கவனித்து புரிந்து கொள்ள அதைக் கடந்து செல்ல பழக்கப்படுத்திக் கொண்டேன்


1990 களில் புரிந்து கொண்டது குறுங்குழுக்களுக்குள் நடக்கும் ஒற்றைப்படை தகவமைப்பு .அங்கு  அடையும் மிகை உணர்வு ,நடைமுறைக்கு சாத்தியமில்லாதவற்றை பற்றிய கனவு , அது ஒரு நாள் நிகழும் என்கிற நம்பிக்கையை ,ஏறக்குறைய இருட்டறையில் பார்க்கும் முயற்சி .புற உலகில் எப்போதும் வெளிச்சம் இருப்பதாக எண்ணிக் கொண்டு இடையேயுள்ள மாயக் கதவை முட்டி மோதித் திறக்க முயன்று கொண்டிருப்பது அரசியல் என நினைக்கத் தோன்றுவது .


அவர்களின் அத்தகைய மனக் கிளர்ச்சி ஒருவகை நேர்த்திக் கடன் போல , மிக மிக எளிய வாழ்கையில் உள்ளவர்கள் பிறர் நினைத்துப் பார்க்க முடியாத கடும் நேர்த்திக் கடன்களை செய்வதை பார்த்திருக்கிறேன் . வட மதுரையில் கோவர்தன மலையை சுற்றி ஒவ்வொரு அடியாக விழுந்து கும்பிட்டு எழுந்து பின் மறுபடியும் விழுந்து கும்பிடும் எளிய மலை வாழ் பழங்குடிகளை முதல் முதையாக பார்த்த போது அந்த துணுக்குறலை உணர்ந்தேன்அவர்களது வேண்டுகோள் என்னவாக இருக்க போகிறது?  , இன்று நம்மால் மிக சாதரணமாக வாழப்படும் ஒரு வாழ்கையில் இருந்து ஒரு சிறு துளி , அவர்களின் வாழ்நாள் கனவாக இருக்கலாம். அதுவே கூட இறுதிவரை நிகழாது போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை . ஆனாலும் ஒவ்வொரு வருடமும் மிகுந்த நம்பிக்கையுடன் அதை மீள மீள அவர்கள் செய்வது கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அது போல அரசியல் குறித்து அந்த எளிய மனிதர்கள் உணர்வெழுச்சியுடன்  பேசி பேசி மாய்வதை பின்னாள்களில் ஒப்பிட்டு பார்த்த போது அதில் ஒருபோதும் நிகழாத அரசியலின் குரூரத்தை எண்ணி நடுங்கியதுண்டு . அவர்களின் கனவு விதி வசத்தால் ஒருகால் நிகழ்ந்தாலும் அதில் அவர்களுக்கு தொட்டு எடுக்கக் ஒன்றும் இல்லை .


பக்தியை அடிப்படையாக கொண்ட நேர்திக்கடன் கூட ஒருவகையில் இப்படிப்பட்டதோ  என நினைத்துப் குழம்பியதுண்டு . மிக ஆபத்தான இடமாக அதை அறிந்திருக்கிறேன்  . பலருக்கு அங்கு அவர்களின் அனைத்து நம்பிக்கைகளும் உடைத்து வீசப்பட்டிருக்கிறது , கடவுளர்கள் மனிதர்களுக்கு இணையாக வசைப்பாடப் பட்டிருக்கிறார்கள் .அவை அனைத்திலிருந்தும் மரபான நம்பிக்கையால் நான் மிக மெல்ல மெல்ல மீட்டெடுக்கப்படுவதை வெகு காலம் கழித்து உணர்ந்து கொண்டதை இங்கு நினைவுறுகிறேன் . ஆழ்மனதில் அவை நோக்கிய கேள்விகளை எப்போதும் உருவாக்கிக் கொள்ள விரும்பியதில்லை.


பாலன் வீட்டில் நள்ளிரவு தாண்டியும் பலவிதமான உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் , ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்து கொள்ளும் போது , வந்து இணைந்தவரை  மையப்படுத்தி அந்த உரையாடல் பிறிதொரு முணையை கண்டடையும் .அவை அனைத்தும் அவர்களின் அனுபவமாக , இருபத்து ஐந்து வருடங்களாக நிகழ்ந்து முடிந்தவற்றை அசைபோடுகிற ஒன்றாக இந்தது  . முதலில் வெட்டி அரட்டை போலவே தொடங்கினாலும் , ஒரு புள்ளியில் அதன் அத்தனை அலகுகளும் பிறிந்து பிறிந்து அந்த சம்பவம் தொடங்கிய இடத்தை கொண்டு சென்று சுட்டும் போது அதன் நுண்ணமை வெளிப்படுவதுடன் அதன் முடிவுறாத தொடர்ச்சி வெளிப்படும்அரசியலில் தங்களை தக்கவைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு வகையில் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள் . அவை பின்னாளில் புதுவை அரசியல் வரலாற்றின் ஒரு பகுதி என்றாயிற்று. அவற்றில் மிக மிக சிலதே செய்திகாளாக பத்திரிக்கைகளில் அடிபட்டது . நிஜமான அரசியல் செய்திகளாவதில்லை , செய்திகளாகும் எவையும் அதை பிரதிபளிப்பதில்லை . அரசியலில் பங்கு பெற்றவர்கள்  அல்லது பார்வையாளர்களான அவர்களால் நிகழ்ந்தவைகள மீள மீள நினைவுறப்படுகிறது .அந்த உரையாடலை அவர்கள் முன்வைக்க அந்த நிகழ்வின் மீது அவர்கள் கொண்ட வெறுப்பு , கசப்பு , விருப்பு போன்றவை காரணமாக இருந்திருக்க வேண்டும்  , அல்லது அவர்கள் தங்களின் தனிப்பட்ட அரசியல் பொருட்டு புது கணக்குகளை உருவாக்கி முன்வைக்க அவற்றை பேசிப் பேசி பார்க்கிறார்கள் என எண்ணத்த தோன்றும் . அவை எல்லாமே உண்மைகளாக இருக்க வேண்டும் என்கிற அவசிமில்லை . பாவனையாக அது இருக்கலாம் .நவீன அரசியல் ஒருவகையில் அப்பட்டமான பாவனையும் கூட .

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

அடையாளமாதல் * இரண்டாம் இடம் *

ஶ்ரீ:



பதிவு : 542  / 735 / தேதி 25 அக்டோபர் 2020


* இரண்டாம் இடம்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 20






அரசியலில் உயர் நடுத்தர வர்கம் எப்போதும் ஆர்வம் காட்டியதில்லை , விரும்பிய சிலர் நேரடியாக தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து மேலே மேலே சென்று கொண்டே இருந்தார்கள் , அவர்களுக்கான ராஜபாட்டை எதாவதொரு தலைமை மூலம் நிகழ்ந்து விடுவதுடன் , அவர்களின் பொருளியல் பலம் அந்த வாய்ப்பை உருவாக்கித் தருகிறது . ஆனால் அரசியல் ஈடுபட நினைக்கும் பிற அனைவருக்கும் அது பொது வாசலைத் தான்  திறந்து வைக்கிறது , அதில் அவர்கள் முட்டி மோதி ஊழின் விளையாட்டில் தங்களை நிறுவிக் கொள்ள வேண்டியிருக்கிறது . அதில் காணாமலானவர்கள் எண்ணிக்கைதான் மிகுதி அவர்கள் எப்போதும் கணக்கில் வரதாதவர்கள் . தேர்தல் அரசியலில் தங்களை முன்வைக்கும் எவருக்கும் கட்சி அரசியல் நலம்” , கருத்தியல் பலம்” அமைப்பு” போன்ற சொற்களைப் போல நையாண்டி செய்வது பிறிதில்லை . இன்னதென அறியாமலே தேர்தல் பரபரப்பு அரசியல் எனக்கு ஒவ்வாமையை உருவாக்கி இருந்தது , என் மீது பிறர் வைக்கும் குற்றச்சாட்டு அரசியலின் பொருட்டு செலவு செய்தேன் என்பது , அது உண்மையல்ல .அது என் படைப்பூக்கம் வழியாக நான் அடைந்த வெற்றியை நோக்கிய இளிவரளாகவே எப்போதும் நினைக்கிறேன் .மிக மிக எளிய மனிதர்களுடன் புழங்கி  மெல்ல எனது இடத்தை எனது படைப்பூக்கத்தினாலும் உழைப்பாலும் ……ஊழினாலும் அடைந்தேன் .அதற்கு என்மீது எனக்கிருந்த நம்பிக்கை மற்றும் ஆழ்மன உந்துதலால் காரணமாக இருக்கலாம் . அடைந்த வெற்றி அதிருஷ்டத்தால் என பிறர் நினைப்பது என்னை இழிவு செய்வதே .


எப்போதும் நண்பர்கள் சூழ இருப்பது என் மனதிற்கு அனுக்கமானது . அதை ஒட்டிய அரசியல் பணி , அதில் உயரத்தைத் தொடுவது என்கிற கனவினால் இளைஞர் காங்கிரஸில் நுழைந்தேன் . 100 வருட பழமையான வியாபார நிறுவனம் , பெரிய  குடும்பப் பிண்ணனி என பொருளியல் ரீதியில் பலமாக இருந்தாலும் , அரசியலின் பொருட்டு அதை செலவழிக்கும் வாய்ப்பு எனக்கில்லை . பின்னாளில் சொந்த தொழில் தொடங்கிய போதும் அதை அரசியலில் செலவழிக்க எண்ணியதில்லை . தனிப்பட்ட நட்புலகில் மட்டுமின்றி அரசியலில் நண்பர்கள் கூடுகைக்கு செலவழித்திருக்கிறேன் . ஆனால் அதுவும் பிறர் சொல்லும் அளவிற்கானதில்லை


இளைஞர் காங்கிரஸில் நுழைந்து ஆரம்ப காலத்தில் அரசியல் என்பது நண்பர்கள் ஒன்று கூடும் எளிய செயல்பாடாக மட்டுமே . அதில் கேலி கிண்டல் எல்லாருக்குமான பழைய நினைவுகள் குறித்த வேடிக்கையும் வெடிச் சிரிப்புமுமாக என இருந்தது . பாலனுக்கு என்மீதிருந்த கனிவின் காரணமாக நான் அவரை நோக்கி கொண்டு செல்லப்பட்டேன் , பகல் முழுவதும் அலுவலகத்தில் எளிய நண்பர்களுடன் வேடிக்கையும் விளையாட்டுமாக சென்றது . அரசியலை தனிப்பட்டு புரிந்து கொள்ள இரவு நேரங்களில் பாலனை அவர் வீட்டில் சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன் . பாலனுடான எனது நட்பு பிற நண்பர்களின் கண்களை உறுத்தாமல் இருக்கு மிக எச்சரிக்கையுடன் இருந்தேன் .எதன் பொருட்டும் அடைந்த நட்பை இழக்க விரும்பியதில்லை் . பாலன் முதலியார் பேட்டையில் ஒரு சிறிய வாடகை வீட்டில் அப்போது தான் குடிபெயர்ந்திருந்தார் இருந்தார் . அது ஆலைவீதியை ஒட்டி பிறியும்  மிக மிக குறுகலான சந்து , இரவு 9:00 மணிக்கு மேல் அங்கு செல்லும் போது போக்கு வரத்து முற்றும் அற்று ஊர் அடங்கியிருக்கும் . சிறிய வீடு என்பதால் எப்போதும் வீதியில் அமர்ந்தே இரவு முழுவதும் பல விஷயங்களை பேசியிருக்கிறோம்


பெரும்பாலும் கீதை பற்றிய பேச்சு நடந்து கொண்டிருக்கும் கீதையை புரிந்து கொள்ள எப்போதும் ஆர்வமுள்ளவராக இருந்தார் .நடப்பு அரசியல் பற்றிய பேச்சு மையப் பொருளாக இருக்கும் .சோஷலிச கொள்கையில் ஈர்புள்ளவராக அகில இந்திய தலைமைகளில் ஜாரஜ் பெர்னான்டஸை தனது ஆதர்சமாக கொண்டிருந்தார் .கண்ணனைப் போல அவருக்கும் கம்யூனிச சித்தாந்தம் நோக்கிய மனச் சாய்வு இருந்தது ஆனால் இருவருக்குமே அது ஒரு பாவனையைப் போல . மார்க்ஸிய கருத்தியல் அவர்களின் சந்திக்கும் அன்றாட அரசியல் சிக்கல்களில் இருந்து வெளிவர உதவியிருக்கலாம் , கண்ணன் அதில் சிலவற்றை பெயரளவில் கொண்டுவந்து வென்றிருந்தார் . பாலனுக்கு அந்த வாய்ப்பில்லை , அதை முன்வைத்து செயல்பட பெரும் தயக்கம் இருந்தது .எந்த கருத்தியலையும் முன்வைத்து அவர் தனது நிர்வாகத்தை முன்னெடுத்தவர் இல்லை .அரசியலை வென்றெடுக்க தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை உள்நுழைவது ஒன்றே வழி என்கிற கனவில் இருந்தார் .அது சாத்தியமாகாது போனால் அடுத்த கட்ட திட்டம் என அவரிடம் ஒன்றில்லை , 1991 தேர்தலில் அது நிகழ்ந்த போது அவரை நிலைகுலைய செய்து விட்டது .தனது சமன்பாட்டை இழந்ததும் எதையாவது பற்றி மேலெழுந்து வர வேண்டிய பொருளியல் நிர்பந்தம் காரணமாக அவரது சமரச செயல்பாடுகள் அமைப்பை குலையச் செய்துவிட்டது .



1991 தேர்தல் தோல்விக்குப் பிறகு அன்றைய முதல்வர் வைத்தியலிங்கத்திற்கு நெருக்கமானர் . அதிகாரத்திற்கு அருகில் இருப்பது தன்னை பாதுகாக்கும் என நம்பினார் .அதே சமயம் பிற இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் சட்டமன்றத்திற்கு வருவதை அவர் அனுமதிக்கவில்லை .சட்டமன்றம் ஒரு மாய உலகம் அங்கு அரசியலின் விதிமுறைகள்  வேறுவிதமானவை .பதவியில் இருப்பவர்களைத் தவிர பிற எவருக்கும் அங்கு நிமிர்வு கிடையாது .அதனால் பிற நிர்வாகிகள் அங்கு வருவது தன்னுடைய சுய கௌரவத்தை பாதிக்கும் என அவர் எண்ணியிருக்க வேண்டும்  .விதி விலக்காக தாமோதரன் மட்டும் சட்டமன்ற செல்லுவதை பழக்கமாக வைத்திருந்தார் . பிறிதொருவர் திருபுவனை தொகுதி தாழத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த விஜயன் . அவன் பாலனை பகடி செய்வதற்காகவே அங்கு சென்றான் .பிற இளைஞர் காங்கிரஸார் அனைவரும் அண்ணாசாலையில் இருந்த தலைமை அலுவலகத்தில் கூடி அங்கு வரும் நிர்வாகிகளிடம் தங்கள் சிக்கலை முறையிடுவார்கள் .அதன் பலனை எதிர்நோக்கி காத்திருப்பதை தவிர வேறு வழிகள் இல்லை .தங்களுக்கான நாள் ஒன்று வரும் . அதில் சட்டமன்றம் நுழைவது பற்றிக் குறித்த கனவும் இருக்கும் .


1996 களில் காங்கிரஸில் இருந்து வெளியேறி சில கட்சிகளில் நீண்ட பயணத்திற்கு பின்னர் 2001 களில் ரங்காசாமிடம் முழுமையாக  வந்து சேர்ந்தார், பின்னர் அவரை சார்ந்தே தனது அரசியலை வகுத்துக் கொண்டார் அங்கு அவரது நீண்டநாள் அரசியல் விருப்பங்கள் நிறைவேறின .கட்சி அரசியலை வழி நடத்திய அனுபவம் ரங்கசமியின் புதுக் கட்சி துவங்கிய போது அவருக்கு பயன்பட்டது .அங்கு இரண்டாம் நிலை தலைவராக அறியப்பட்டது அவரது அகத்திற்கு உகந்ததாக இருந்திருக்க வாய்ப்பில்லை . வாழ்நாள் முழுவதும் அவர் விழைந்த தன்னை முன்னிறுத்தும் அரசியல் அங்கும் கிடைக்கவில்லை .தன்னை  ரங்கசாமியுடன் பிறருக்கான சமரச புள்ளியாக பிறருடைய கசப்பின் பிண்ணியில் நிறுவிக்கொண்டார் . அதனால் இறுதிக் காலம்வரை தனது நிலையிழிதலில் இருந்து மீளவில்லை

திங்கள், 19 அக்டோபர், 2020

அடையாளமாதல் * உயரப் பறக்கும் கனவு *

 


ஶ்ரீ:



பதிவு : 541  / 734 / தேதி 19 அக்டோபர் 2020


* உயரப் பறக்கும் கனவு



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 19.






பொருளியல் பலம் , சூழ்ச்சி  மற்றும் தொண்டர் ஒருங்குதிரட்டல் திறன் ஆகியவை அரசியலின் அடிப்படை விசைகள் , அது ஆளுமைகளை உருவாக்குகிறது , அதை அரசியலில் இயக்கும் ஆற்றல் உள்ளவர்களாக அதன் திசையை முடிவு செய்கிறார்கள் . அவையே ஒருவரை தனியாளுமையாகவும் உருவெடுக்க , அரசியலின் பொருட்டு அவர்களுக்கு இடையிலான  முரணியகத்தினால் கணக்கிட முடியாத விளைவுகளை வெளிப்படுத்துகிறது  . தலைவர் அவற்றை இணைக்கும் , மறுக்கும் அல்லது மட்டுறுத்தும் மையம் மட்டுமேயாக அவர் இருக்கும் வரை அங்கு ஆரோக்கியமான அரசியலை நிலவச்செய்கிறது  . சூழலுக்கு தக்கபடி மூவரில் ஒருவரே எப்போதும் முன்னிருத்தப்படுகிறார் . அவர் மட்டுமே முக்கியமானவராக பிறரால் கருதப்படும் இடம் உருவாகிறது . எளிய தொண்டர்கள் அவர் எப்போதைக்கும் அங்கு இருந்து கொண்டிருப்பதாக  கணிக்கிறார்கள் .ஆனால் அந்த இடம் யாருக்கும்  நிரந்தரமானதல்ல . அரசியலின் நுட்பம் தெரிந்தவர் அப்படி எண்ணுவதில்லை . சூழலைக் கொண்டே ஒருவரின் இடத்தை அவர்கள் முடிவு செய்கிறார் . சூழல் மாற்றமடைந்து கொண்டே இருக்கும் நிற்காத சுழற்சி .அதனால் யாரும் யாரையும் அரசியலில் கடந்து சென்று மறுக்க முடியும் . சில சமயம் வலியவர் எளியவர்களால் புறந்தள்ளப்படுவது நிகழ்ந்து விடுகிறது .சண்முகம் தன் நிர்வாகத்தில் அதை அப்படியே நிகழ விடுவதை பல முறை பார்த்திருக்கிறேன் . அதனால் செல்வாக்குள்ளவர்கள் அவரை எப்போதும் அஞ்சினர்  . அது அவரின் சிறப்பான அனுகுமுறைகளில் ஒன்று .


சண்முகம் என்னை தொண்டர்களை ஒருங்குதிரட்டுபவராக புரிந்திருந்தார் . எனக்கான ஆகச் சிறந்த இடம் . அது உருவாகி வந்தது அவரது அனுகுமுறையின்  அடிப்படையில் . அந்த இடத்தினால் எனக்கு அங்கு பிறரின் பொருட்டு என் கருத்துக்களை முன்வைக்கும் சுதந்திரத்தை  அவர் அளிக்கிறார்  . அது தனிப்பட்ட கருத்தாக  பிறர் கடந்து செல்ல தயங்க வைப்பது . அது அரசியலில் மிக  முக்கியமான இடம் .


தலைவர் சண்முகம் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் எனக்கு தனிப்பட்ட முறையில் நான் அழைக்க வேண்டியவர்களுக்கான அழைப்பிதழ்களைக் கொடுக்கத் தொடங்கியிருந்தார் .அது அமைப்பின் தலைவர்களுக்கான இடம் .ஆனால் அது  எனக்கு கொடுக்கப்பட்டது . அது அவரது தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் யுக்தியாகவும் இருந்திருக்கலாம் .நான் அதைப்பற்றி கவலை கொண்டதில்லை . அதன் வெளிப்படைத் தன்மையால் பிறர் என்னை என்னவாகப் பார்கிறார்களோ அதுவே என் இடம் .என்னை தொடர்சசியாக அங்கு நிறுத்திக் கொள்ள எந்த முயற்சியையும் நான் செய்ததில்லை . விரும்பி ஏற்றுக் கொண்டவருடன் எப்போதும் இருந்து கொண்டிருப்பது போல மனநிறைவை அளிப்பது பிறிதொன்றில்லை .


எப்போதும் எந்த கணக்குகளும் இன்றி தலைவர் சண்முகத்தின் அருகில் சற்று தள்ளி பின்னால் இருந்து கொண்டிருந்தது மட்டுமே நான் செய்தது .எனக்கான கற்றலின் பொருட்டே அங்கு இருந்து கொண்டிருந்தேன் . அது அகவயமான அனுபவம் .ஆனால் அது என்னை நோக்கி திறக்கும் வாய்ப்புகளையும் அது உருவாக்கும் இடங்களின் வழியாக வரும் கௌரவத்தை ஏன் மறுக்க வேண்டும் என நினைத்தேன்  . தனியாளுமைகள் அவர்களின் தன்னகங்காரத்தின் வெளிப்பாட்டினால் கூட்டத்தில் கரைந்திருக்க முடியாமையை உருவாக்குகிறது . அதுவே அவர்களின் அடையாளமும் கூட  . திரளில்  ஒருவனாக இருப்பதை என் ஆழ்மனம் எப்போதும் நிராகரிக்கிறது .


அரசியல் என்பதே புரிதலில் நிகழ்வது  .அன்றிருந்த விலகிய மனநிலையில் எனக்கு இடப்பட்ட வேளைகளை என்னால் இயற்ற முடியாது என ஒதுங்கி இருக்க முடியும் . புறவயமாக  எந்த அழுத்தமும் இல்லாத போதும் , ஆனால் அதை செய்ய விரும்பவில்லைஎனக்குறிய இடம் பற்றிய நோக்கமில்லாமல் இருத்தல் என்பது என் நிலை .அரசியல் எனது விருப்பமான துறை அங்கு எனது பங்களிப்பினால் அகக் கொந்தளிப்புகளில் இருந்து வெளிவர விரும்பியே சண்முகத்திடம் வந்து சேர்ந்தேன் .இளைஞர் அமைப்பை உருவாக்கியது வழிநடத்த வேண்டும் எனபது போன்ற எந்தத் திட்டமும் அப்போது என்னிடம் இல்லை . அமைப்பை உயிர்ப்புடன் வைத்திருப்பதே எனக்கான வாய்ப்பைக் கொண்டுவருவது .


தலைவர் தேர்தல் முறையாக நடைபெற்று சண்முகம் முதல்முறையாக ஏகமனதான தீர்மானத்தின் படி தேரந்தெடுக்கப்பட்ட தலைவரானார் . அதில் இளைஞர் காங்கிரஸ் முக்கிய பங்கு வகித்தது மிக மிக அனிச்சை செயல் எங்களின் பங்களிப்பால் கட்சியின் பல மூத்த தலைவர்கள் பலர் மாற்றப்பட்டு புதிய தொகுதி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர் . ஒரு பக்கம் எதிர்பாராத ஆதரவு தளம் விரிவாக வெளிப்படையாக அமைந்தாலும் பிறிதொரு பக்கம் பலம்மிக்க பல மூத்த தலைவர்களின் பகை புகையத் துவங்கியது .அவர்கள் தங்களை பொருளியளாலும் சூழ்ச்சியிலும் வளர்த்தெடுத்திருந்தனர் .அவர்களை எதிர்கொள்வது பெரும் அறைகூவல் என முன்பே அறிந்ததுதான் .கனவுகள் சில நேரம்  நிகழ்ந்து விடுகின்றன ஆனால் எதிர்பாரத விதத்தில் .