https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 25 மார்ச், 2023

“கீதா முகூர்த்தம்” - 8 . * திகைக்கும் தெய்வங்கள் *

 


25.03.2023

கீதா முகூர்த்தம்” -  8 .


* திகைக்கும் தெய்வங்கள் *





ஆஸ்திகன் திரும்பி ஜனமேஜயரிடம்மாமன்னரே, சத்வ, ரஜோ, தமோ குணங்களுடன் இப்புடவி பிறந்து வந்தது. அவை சமநிலையில் இருப்பதன் பெயரே முழுமை. ஒன்று அழிந்தால்கூட அனைத்தும் சிதறி மறையும். நீங்கள் சத்வகுணத்தைத் தவிர பிறவற்றை அழிக்க நினைத்தீர்கள். அதன் வழியாக இவ்வுலகையே அழிக்கவிருந்தீர்கள். அதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே நான் தட்சனின் உயிரை கோரிப்பெற்றேன்என்றான்.


ஜனமேஜயன் சினத்துடன், “நீங்கள் சொல்லும் தரிசனத்தை நானறியமாட்டேன். நான் கற்ற வேதாந்தம் அதைச் சொல்லவில்லைஆஸ்திகரே, நீங்கள் தப்பவிட்டது இருட்டை….தீமையைஎன்றார். ஆஸ்திகன் உறுதியான குரலில், “இச்சை தீமையல்ல மாமன்னரே! அதன் மறுபக்கத்தால் சமன்செய்யப்படாத நிலையிலேயே அது அழிவுச்சக்தியாகிறது. இச்சை எஞ்சியிராத உலகத்தில் படைப்பு நிகழ்வதில்லை. அது மட்கிக்கொண்டிருக்கும் பொருள்என்றான்


வெண்முரசு . முதற்கணல்


-ஜெயமோகன்-


மத நம்பிக்கையும் அதனுடன் ஆச்சாரம் சடங்கு நிகழ்வுகள் குறித்து மிக ஆவேசமாக பேசப்படுவதை ஒருவித மனவிலக்கத்துடன் பார்ப்பதுண்டு. ஆன்மீகம் பேசத் துவங்கி அது ஆசாரத்தில் வந்து நிலைகொள்வதை பற்றிய தீவிரமான எதிர்மனநிலை கொண்டிருந்தாலும் அதை செயல்படுத்தும் கருவியாக வலுவான கருத்தியல் அதைசார்ந்த நவீன மொழியின் பார்வை ஆகியவை இல்லாமையால் அவை கட்டற்று பறந்து கொண்டிருப்பதாக தோன்றும் . தொந்தரவு செய்யும் கேள்வி கேட்பவனாக எதன் முன் முற்றளிக்க முடியாமல் அது உறுத்திக் கொண்டிருக்கும்.ஒரு கட்டத்தில் நான் என்னை முற்றளித்திருந்த அந்ததனிமை மற்றும் மௌனத்தில்இருந்து நான் வெளியேற்றப்பட்டேன். வெண்முரசு முற்கணலில் அந்த ஒரு வரி அனைத்தையும் இணைத்த போது என் ஆன்மீகம் குறித்த நிலைபாடு உறுதிகொள்ளத் துவங்கியிருந்தது . அதன் பின்னர் எனது பழைய முறையை நிராகரித்து வெளியேறினேன் . அது ஒரு நாளில் நிகழ்ந்ததல்ல பல ஆண்டுகளாக மனதில் ஊடுருவிய கேள்விகளின் தேடலில் அது உருவானது .


பிறரிடம் இருந்து அவர் மாறுபட்டவராக நான் நினைத்தது அவர் ஒவ்வொரு புராண கதாபாத்திரத்தை  ஒரு சமகாலத் தன்மையை ஒரு விமர்சனம் போல முன்வைப்பவர் . பக்தியின் உச்சம் தொடும் சந்தர்பங்களில் கூட அந்த சுய ஏளனம் அல்லது பகடி ஒரு அந்தரங்க தொடுகை போல சூழ்ந்தது எனக்கு அவரை பிற பௌராணிகர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியது . அதுவரை நிகழ்த்திய தனது அத்தனை வருட உபன்யாசத்தில் இருந்து திரட்டி அவர் அடைந்ததாக இருக்க வேண்டும். உபன்யாச கருத்துக்கள் யாரையும் அது சொல்லப்படும் காரணத்தை சென்று அடைவதில்லைமணலில் வாறி இறைக்கப்படும் தண்ணீர் பார்க்கும் இடமெல்லாம் புரண்டு ஓடுவதாக தெரிந்தாலும் சற்று நேரத்தில்  வடிந்து விடுகிறது . மரபான உபன்யாசம் என்பது கேட்கும் அந்தளவில் புண்ணியம் அவ்வளவே அதற்கு வாழ்கை முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என அனைவரும் தெரிந்திருந்தாலும் கேட்டவைகளில் இருந்து ஒரு சிறு துளியைக்கூட எடுத்து  அவர்கள் தங்கள் வாழ்கையின் மீது போட்டுப் பார்க்கப் போவதில்லை. அது அங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் மட்டுமின்றி அதை சொல்பவருக்கும் தெரிந்தே


அந்த கசப்பின் தீற்றல் அவரது இவ்வகை நிகழ்த்துகலையின் இப்போதைய வடிவத்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால் அந்த நாடகீயத் தருணத்தை  மீள மீள வெற்றிகரமான சொல்பவர் , கேட்பவர் அதை ஒருங்குபவர் என அனைவராலும் நடிக்கப்படுகிறது . நான் கிருஷ்ணப்பிரேமியின் உபன்யாசங்களை கேட்க வரும் போது அவர் தனது எண்பது அகவையை நெருங்கிக் கொண்டிருந்தார் . இளம் வயதில் மிக கறாராக தர்மம்,ஆசாரம் என அனைத்தையும் வலியுறுத்தி சொல்ல வந்தவர் பின்னர் அதை தன்னளவில் உள்ளே ஓடும் எதார்த்த சிந்தனைகளை மாறிக் கடந்து அதில் இருந்து வெளிவரும் மரபான நம்பிக்கையை வெளியெடுத்திருக்க வேண்டும். அவைதான் அவரது சமீபகால பேசு மொழியாக இருந்தது . மிக நீண்டகால அனுபவத்திலிருந்து அவர் அதை உணர்ந்திருந்தார் என

அதை நான் எனக்கு மிக நெருக்கமாக அறிந்திருக்க வேண்டும்.


அவர் மரபான பௌராணிக நிகழ்த்துக்கலையின் கூறுமுறையில் இருந்து சற்று வேறுபட்டவர் என புரிந்திருந்தேன் ராமாயண, பாகவதங்களை அதுவரை சம்ஸ்கிரத மூல பாடல் வடிவத்தில் முழுமையாக நான் கேட்டதில்லை . நல்ல ஸ்வர ஞானத்துடன் பிரமாதமான குரல் வளத்துடன் அவர் பாடியதைக் கேட்டது எனக்கு அந்த மன எழுச்சியை , உருக்கத்தை, சில சமயங்களில் அந்த கண்ணீரைக் கொடுத்திருக்க வேண்டும்தொடர்ந்து நான்கு வருடங்கள் பிற எதையும் கேட்காதவனானேன். அதைப்போல மனதை ஆற்றுப்படுத்துவது பிறிதில்லை. நான்கு வருட மௌனமும் தனிமையாலும் மனதில் சொற்கள் முழுமையாக அடங்கியிருந்ததால் சிந்தனை ஒழுக்கு நிதானப்பட்டிருந்தது


வீட்டில் தனித்து இருந்தேன். மனைவியும் அம்மாவும் உடன் இருந்தார்கள். உலகியல் பரபரப்பின் கதவுகள் வாசலில் திறந்து கிடந்தன . ஆனால் தனிமை என்பது யாருமற்ற வனாந்திரத்தில் மட்டுமல்ல அனைத்துடன் மனதளவில் துண்டித்துக் கொள்ளும் போது அது சாத்தியம். வானப்பரஸ்தம் என்பது இன்றைய நவீன உலகில் சாத்தியமாவதில்லை.அரசாங்கமும் அதை அனுமதிக்காது . தன்னுள் தான் தொலைந்து போகும் போது அந்த கதவுகளும் அடைபட்டுவிடுகின்றன.


புராண உச்ச கதாபாத்திரம் ராம கிருஷ்ணர்கள் இன்றைய சமகால மனிதர்களின் பார்வைக்கு மத்தியில் கொண்டு வந்து வைக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டு பகடியாக்கப்பட்டது போன்றவை பிற பௌராணிகர்கள் செய்யத் துணியாதது .ஒரு புன்னகையுடன் அனைத்து கதாபாத்திரங்களும் சமகாலத் தன்மையோடு , நாம் சந்திக்கும் உளவியலுக்குள் இன்றைய யதார்தங்களின் மத்தியில் வந்து திகைத்திருப்பதை பார்க்க முடிந்தது . ஒரு வகையில் ஜெயமோகனின் வெண்முரசு கதாப்பாத்திரங்கள் கூட கிருஷ்ணப்பிரேமி அளவிற்கு கூண்டில் ஏற்றப்படவில்லை என நினைக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு வெண்முரசு வாசிப்பின் போது பிற மரபான நம்பிக்கை கொண்டவர்கள் அடையும் திகைப்பை துணுக்குறலை அடைந்து தேங்கிவிடாமல் என்னால் அவற்றைக் கடந்து சென்றுவிட முடிந்தது.


கடவுளர்கள் அவர்கள் மீது ஏற்றி வைக்கப்பட்டவைகளில் இருந்து வெளியே வரும் போது மனிதர்களுக்கு மிக அருகில் கொண்டு வைக்கப்படுகிறார்கள். அவர்களது அதிமாநுடம் அவர்களை தொந்தரவு செய்வதில்லை. ஜோசப் , வேளுக்குடி, கிருஷ்ணப்பிரேமி போன்றவர்கள் காட்டிய கிருஷ்ணனை விட வெண்முரசு தொட்டஇளைய யாதவன்எனக்கு மிக மிக அணுக்கமானவன் . அவனுடன் நீண்ட பயணம் செய்திருக்கிறேன் .அவனுடன் சென்று அவனது உலகத்தை பார்த்திருகிறேன். அவன் என்னுடன் நான் வாழும் உலகத்திற்குள் வந்து நிற்கிறான். அவன் அருகாமை, ஆசி, வழிகாட்டல் மட்டுமின்றி அவனால் கைவிடப்படுதலையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். அவன் இத்துடனே எனது பூஜை அறையில் நான் கொடுப்பதை ஏற்கிறான், மறுக்கிறான் அவன் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்கிறேன்.அதற்கு என்னை பழக்கப்படுத்திவர் கிருஷ்ணப்பிரேமி என்பது ஒரு ஆச்சர்யம். நான் என்னளவில் விரிந்து விரிந்து பெற்று அடைந்தது வெண்முரசில் .


வெள்ளி, 24 மார்ச், 2023

“கீதா முகூர்த்தம்” - 7 . * கடப்பதும் வாழ்வதும் *

 24.03.2023



* கடப்பதும் வாழ்வதும்  *





மிக ஆழ்ந்த மனவருத்ததில் இருந்து எதையெதை கைவிட்டு எதை பற்றி கொண்டு அதிலிருந்து மீண்டு மேலேறி வந்தேன் என்பது பற்றி யோசித்த போது சில அடிப்படை மனநிலைக்கும் சூழ்நிலைக்குமாக சில தீர்மானங்களை எடுத்து அதிலிருந்து வெளிவர முயன்றது நினைவிற்கு வந்தது . ஒன்று அன்றிருந்த பொருளாதார  நெருக்கடியில் இரண்டு  உறவுகள் கொடுத்த ஒயாத மன உளைச்சல்அந்த இரண்டும் நான் எப்படி தவிற்க நினைத்தாலும்  வாழ்வின் மத்தியி்ல் அவை வந்து விழுந்து கொண்டே இருக்கிறது . அது ஊழ்.


பொதுவாக மனம் அமைதி இழக்கும் போதெல்லாம் சில அடிப்படை கோட்பாடுகளை உருவாக்கி அதிலிருந்து மீண்டு வருவது பழகி இருந்தது .இப்போது அந்த இரண்டுக்கும் பொதுவான ஒரு நிலைப்பாடை அப்போது எடுத்தேன் . பொருளாதர நெருக்கடிநில் இருந்து வெளிவர என் வீட்டு பக்கத்தில் இருந்து ஒரு பெரிய சொத்தை விற்க வேண்டிய சூழல்  .பார்ப்பவர்கள் கண்களில் வெளிப்படும் ஏளனம் அவதூறு மற்றும் வெறும் வம்பிற்கு தயங்கி அதைப் பற்றிய முடிவெடுக்காமல் காலம் தாழ்த்திக் கொண்டிருந்தேன் . சிக்கல் தீவிரமான பிறகு அதை விற்க வேண்டிய நிர்பந்தம் உருவாகி அந்த  முடிவை எடுப்பதற்கு முன்பு என்னை அதற்கு தயாரித்துக் கொண்டேன். மிக மிக கொந்தளிப்பான மனநிலையில் இருந்த காலம். அது ஒரு இறப்பின் தருணம்”. இறந்தவனுக்கு இந்த உலகம் எந்த வகையில் பொருள்படும்” என்கிற முதல் கேள்வி அனைத்தையும் துவக்கிவைத்தது.


நினைவு தெரிந்த நாள் முதல் என்னை சுற்றியிருந்த உலகம் அதன் பார்வை,  அது என்னைப்பற்றிய மதிப்பீடு போன்றவைகள் குறித்து நான் அறிந்திருந்தது எல்லாம் நான் என்னைப் பற்றி அவர்கள் நினைத்துக் கொண்டாத எண்ணிய என் கற்பனை மட்டுமே. அதன் சாதக பாதகங்கள் உண்டு . அவையே என்னை வடிவமைத்தவை. ஆனால் வயதும் அனுபவம் காரணமாக இந்த உலகில் யாரும் யாருக்கும்  பொருட்படுவதில்லை  என்கிற புரிதல்அது ஒரு கணிப்பு , அதற்கு காலம் கடந்து  எந்த மதிப்பும் இல்லை . இது நான் இறந்த உலகம் இனி இது எனக்கு எந்த வகையிலும் பொருட்படத்தக்கதல்ல என்கிற இந்த விதியை அதில் போட்டு வெளிவந்து விட்டேன் . ஆனால் விதி என ஒன்றை பற்றிக் கொண்டு வாழ்கை மாறுகிற தருணத்தில் அதன் பின் அந்த விதி அனைத்து முடிவிலும் பின்பற்றப் பட வேண்டும் என்பது எனது முடிவாக இருந்தது . அது பின் அந்த வாழ்கை இருக்கும் வரை செல்லத் தக்கது . இனி அனைத்தும் இங்கிருந்து தொடங்கப்படும் என சொல்லிக் கொண்டேன். அதன் பின்னர் அனைத்து  சந்தர்ப்பங்களில் எழுந்த சிக்கல்கள் அனைத்தையும் அந்த விதியே” அனைத்தையும் முடிவு செய்தது.


மதம் அல்லது கோட்பாடு மூலம் உருவாகும் நம்பிக்கை உளவியலில் இங்கு முக்கியமாகச் சொல்லலாம் என நினைக்கிறேன் . கொந்தளிக்கும் போது அது தன்போக்கில் தீவிரமான எதிர் கருத்துக்களையும் வன்முறையை உள்ளூர நியாயப்படுத்திய பின்னர் சற்று நிதானத்தை அளிக்கிறது. அந்த நிதானம்  மனதைக் கூர்மை அடையச்செய்கிறது  .மனம் எப்போதும் பிரிந்து பிரிந்தே இயங்குகிறது. ஒருமனம் ஒன்றை உருவகித்தால் மறுகணம் அதை தகர்க்க தேவையானதை அதுவே ஒரேசமயத்தில் மாறிவிடுகிறது போல  . தன் மனம் ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலை வேறு ஒருமனம் வேடிக்கை பார்க்கிறது . எந்தப் பதற்றத்திலும் எந்த அச்சத்திலும் அது வேடிக்கை பார்க்காமல் இருப்பது இல்லை . எத்தகைய கொடூரத்தைத் தான் செய்யும்போதும் தன்னில் ஒரு பகுதி அதில் ஈடுபடுவதில்லை என்கிற உபநிஷத்து வாக்கியம் சொல்ல வருவது இதைத்தான் என நினைக்கிறேன்.இது ஜெயமோகனின் உற்று நோக்கும் பறவை” சிறுகதையில் வரும் வரிகளை என் அனுபவத்தில் போட்டு சில மாற்றங்களை செய்து கொண்டபோது சட்டென பொருந்திப் போகிறது.


உடன் பிறந்தார் வெறும் வம்பாக மாறிய போது  ஒருவித அதீத மனநிலையை அது உருவாக்கி இருந்தது  .உளம் கொந்தளித்து வழிந்தோட தயாராக இருப்பது . அது காட்டும் திசைக்கு பயணப்படுவது திரும்ப முடியாத எல்லைக்கு செல்வது  . இன்று வருத்தமாக நிலைகொண்டிருப்பது   நிரந்தர கோபமான உருவெடுப்பது  அதை தக்க வைக்க அதற்கான ஒரே கருவி அளவில்லாத கசப்பை நிலைகொள்ள வைப்பது .அம்மா எனக்கொரு பாடம் .அவரின் குரோதம் நிரந்தரமானது . ஒரு முறை உருவாகும் வெறுப்பை  இறுதிவரை தூக்கி சுமந்தார். வாழ்நாள் முழுக்க அதற்கு தேவையான கசப்பையும் , கோபத்தையும் அது உருவாக்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தது  . அது ஒரு நரகம். அம்மாவின் அந்த மூர்கத்தை நான் சிறுவயதில் பார்த்ததில்லை .அப்பா அவருக்குறிய இடத்தை கொடுக்கவில்லை என்கிற தவறான புரிதல் அவரை  வருத்தம் கொண்டவராக மாற்றியிருந்தது . அது சென்று தொட்ட இடம் விபரீதமான பலனை கொடுத்தது .ஆரம்பத்தில் அவரது உள நிலையை மாற்றியமைபட்டதாக நான் உணர்ந்தது இரண்டின் அடிப்படையில் . ஒன்று அப்பாவின் மரணம். இரண்டு  2001 ல் கடும் மாரடைப்பு ஏற்பட்டு பிழைத்தது கிட்டதட்ட மறு ஜென்மம் . ஆனால் அவரின் அந்த அதீத மாற்றங்கள் அதன் பின்னர் உருவானவை. அலைபேசி மற்றும் உருப்படாத தொலைகாட்சி தொடர் அவரை இன்னும் மோசமாக்கின. அது செலுத்தும் உளவியல் செல்லாக்கு அப்படிப்பட்டது


சிறு வயதில் அவரது கசப்பு நான் அறிந்தது .அது அவரை எங்கு கொண்டு சென்றது என்பதை அறிந்திருந்தேன் . அது எனக்கு வேண்டாம் என்கிற நினைப்பே என்னை சுற்றி  நிகழ்ந்த அனைத்தின் மீதான எனது எதிர்விணையைஒரு எல்லையில் நிறுத்தி வைக்க முடிந்தது . ஒரு சொல் , சிறு இடைவெளி மனதை ஆற்றுப்படுத்தும் என உறுதியாக நம்பினேன்ஒரு சொல் பேசாத நிலை . தொடர்ந்து கேட்ட ராமாயண , பாகவத ஸ்லோகங்கள் என்னை நான, மீட்டெடுத்துக் கொள்ள வைத்தது.என் இயல்பு பிறர்மீது நிரந்தர வெறுப்பை என்னால் கொண்டிருக்க முடியாது என்கிற அடிப்படை என்னை நிதானிக்கச் செய்திருக்க வேண்டும் .


புதன், 22 மார்ச், 2023

“கீதா முகூர்த்தம்” - 6. * கனவுகளிலான புறவய மாற்றங்கள் *

22.03.2023



*  கனவுகளிலான புறவய மாற்றங்கள் *






ஒரு மனம் முனை கொண்டு ஆழம் நோக்கிச் செல்லும்போது அதிலிருந்து பிரிந்தது போல இன்னொரு மனம் பரவி விரிந்து செல்கிறது. மனதின் ஒவ்வொரு செயல்பாடும் அதற்கு நேர் எதிரான இன்னொரு செயல்பாட்டால் தடுக்கப்படுகிறது. மனதின் விசையின் பெரும்பகுதியை மனமே உண்டு விடுகிறது. மனம் ஓயாது மனதுடன் போரிடுகிறது. மனம் மனதை முடிவின்றி உண்டு கொண்டிருக்கிறது. யோகமரபில் தன் வாலைத் தான் விழுங்கும் பாம்பு உருவமாக அதை அமைத்திருக்கிறார்கள்”


-ஜெயமோகன்-

உற்றுநோக்கும் பறவை” சிறுகதை.



மணற்குள விநாயகர் கோவில் மாசி மக தீர்த்தவாரி தாத்தா குடை கோவிந்தசாமி பிள்ளை” அவர்களால் அந்தக் கோவில் உற்சவ மூர்த்தி செய்து எழுந்தருளப்பட்ட பிறகு  அதற்கான முதல் உற்சாவமாக  அது இருந்திருக்க வேண்டும்.தாத்தவிற்கு பிறகு பெரியப்பா அடுத்ததாக என் தந்தை  அவருக்கும் பின்னர் அண்ணன் ரங்கராஜ் தன்னச்சையாக அதை பொறுப்பேற்றார் . குடும்பத்தின் மற்றவர்கள் அந்த உற்சவ செலவை பகிர்ந்து கொண்டனர் பங்கேற்கது பற்றி பெரிய ஆர்வம் இருந்ததில்லை  .ஒரு சொத்தை முன்வைத்து குடும்பத்தாரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த உற்சவத்தை  அண்ணன் ரங்கராஜ் 2008 ல்  தனது தனிப்பட்ட உற்சவமாக மாற்றிக் கொண்டார் .அதற்கு அவரது தனிப்பட்ட அடையாள சிக்கல் காரணமாக இருந்திருக்க வேண்டும் . அதன் பின்னர் அந்த எதிர்விசை பிரமாண்டமாக எழுந்து அந்த விழா குடும்பப் பொது என்கிற உக்கிர பேச்சு உருவானது.வெளிப்படையாக அவரை எதிர்க்க அஞ்சினர்.2019 களில் அவர் இறந்த பின்னர்  2023 ல் நான் அதில் தலையிட்டு  சுமூகமாக முடித்து வைத்ததும்  அனைவரும் பதினைந்து வருடத்திற்கு பின்னர் அந்த நிகழ்வில் சென்று கலந்து கொண்டோம்


அந்த நிகழ்வு உருவாக்கிய மனப் பதிவைகள் அது தாத்தா பற்றியதாக இருக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் மனம் அது தன்னியல்பில் நான் எண்ணியிராத கணம்  சட்டென பின்னோக்கி  திரும்பி ஒரு புள்ளியில் அது மீளவும்  2009 முதல 2014 வரை காலகட்டத்தில் சென்றமர்ந்து  கொண்டது . அந்த காலகட்டத்திற்கு பிறகு என் மனநிலை முற்றிலும் மாற்றிய அமைக்கப்பட்டதை உணர்ந்திருக்கிறேன் . அது ஏன் என்பதை தர்க்க ரீதியில் விளக்கிவிட முடியாது .அங்கிருந்த எனது பயணம் வேறு பாதைக்கு திரும்பி விட்டிருந்ததை நான் மிகத் தாமதமாக அறிந்து கொள்ள முடிந்தது .


ஆன்மீகம் , ஆசாரம் , நம்பிக்கை எனது அடிப்படையில் எனது செயல்முறையில் மாற்றம் நிகழ்ந்திருப்பதை என நான் அறிந்து கொண்டவை எல்லாம் எனக்குள் எங்கோ விதைகளாக நான் முன்பு உணர்ந்தவைகள். வெண்முரசு மற்றும் ஜெயமோகனின் பிற ஆக்கங்களை வாசிக்கத் துவங்கிய பிறகு சிதறிக்கிடந்த கருத்துகளை தொகுத்துக் கொண்டேன் என அவற்றைப் பற்றி நினைத்திருந்தேன்  . நிச்சயம் அந்த வாசிப்புகள் சிதறிக்கிடந்த என் கருத்துக்களை ஒன்றுடன் ஒன்றை  தொடர்புறுத்த வைத்தது . அதிலிருந்து கோர்வையாக என்னை புரிந்து கொண்டேன்.அவரின் சொற்களுக்கு அப்பால் உள்ளுக்குள் திறந்த கொண்ட புரிதலை இதற்கு முன் எழுதிய எந்தப்பதிவிலும் முழுமையாக சொல்ல முடியமைக்கு இந்த இரண்டிற்கும் மத்தியில் என்ன நடைபெற்றுக் கொண்டிருந்தது என்பதை ஒரு பார்வையாளனாக அவதானிக்க முயன்று கொண்டிருந்தேன்.இப்போது தோன்றுபவை வேறு வித படிபங்களை தொட்டதாக இருக்கலாம்


சில அடிப்படை மாற்றங்களை இப்படித் தொகுத்துக் கொள்வேன் .கோவிலுக்கு செல்வதில் முற்றாக ஆர்வமிழந்து போயிருந்தேன்  .  தினசரி வணங்கும் தெய்வ உருவுகளைத் தவிர பிற விக்ரகங்கள் என்னில் எந்த ஈர்ப்பையும் உருவாக்கவில்லை   . இந்த இரண்டு பெரிய மாற்றங்கள் என்னால் விளங்கிக் கொள்ள முடியாதவைகள் . கோவில் மற்றும் அதன் உற்சவ விக்கிரகங்கள் என் ஆழ்மனதில் எப்போதும் மிகப் பெரிய செல்வாக்கை செலுத்துபவை. அந்த விக்ரங்களுடன் உரையாடல் இருப்பதாக ஆழ்மனம் கறப்பித்துக் கொள்ளும்.அவை என்னை பெருமளவில் சாந்தப்படுத்து இருக்கின்றன. அவற்றில் இருந்து ஏன்  வெளியேறினேன் என தெரியவில்லை .மதம் பக்தி ஆன்மீகத்துடன் ஆசாரத்தை தந்தை தீவிரமாக வலியுத்தியதில்லை  அவற்றில்  ஒரு நெகிழ்வான நிலைபாட்டிற்கு முன்பே வந்துவிட்டிருந்தேன்


மரபான சம்பிரதாயத்தல் ஆசாரம் ஆழ்ந்து இன்றளவும் வலியுறுத்தப்படுவது குறித்த மன விலக்கம் கடந்த இருபத்தி ஐந்து வருடத்தில் தீவிரமடைந்து கொண்டே வந்தது அதற்கு காரணமாக இருக்கலாம். அது இன்று யாராலும் பின்பற்ற முடியாத ஒன்று . மேடையில் அது வலியுறுத்தப்படுவது ஒரு சடங்காக மட்டுமே இன்று எஞ்சியிருக்கிறது . இன்னும் பத்து வருடத்தில் அது கூட நிகழாது . அன்றும் அதை தீவிரமாக வலியுறுத்தும்  பிறரை முற்றாக தவிற்த்து வந்தேன் . ஆன்மீகம் குறித்த சமூக மாற்றம் மிக இயல்பாக நிகழ்வது . எதை நோக்கி அல்லது எந்த விதமான மாற்றத்தை நோக்கி இது செல்கிறது என்பதை புரிந்து கொள்ள முயன்றிருக்கிறேன்


பிறவி பேச்சு குறைபாட்டினால் உருவாகும் எள்ளலை எப்போதும் அஞ்சியிருக்கிறேன்.சிறு வயது தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதால்  அப்போதெல்லாம் அந்த காயங்களை பற்றி பகிர்ந்து கொள்ளும் இடம் என வீட்டில் இருந்ததில்லை . வீடு பெண்களால் சூழப்பட்ட உலகம் . அதில் எனக்கு ஆதரவானவர் அம்மா மட்டுமே . ஆனால் அன்று அவர் மிக எளிய குடும்பத் தலைவி. மிகப் பொரும்பாலான சமயங்களில் அவர் பின்னால் சென்று மறைந்து கொள்வது மட்டுமே அன்று என்னை ஆறுதல் படுத்தியது .


தனித்து விடப்பட்ட சூழல்களில் என்னை குத்திக் கிழிக்கும் அவமான உணர்வுகளில்   இருந்து வெளிவர ஆழ்மனத்துடன் உரையாடும் பழக்கத்தை மிகச சிறிய வயதில் நான் பழகியிருக்க வேண்டும் . அன்று அந்த இரண்டு மன விசைகளில்  ஒன்று சில கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு   மிக எளிதில் அதிலிருந்து மீண்டிருக்கிறேன் . அதன் இருள் என்னை அஞ்சச் செய்வது. அது பற்றி எழுந்து என்னை சூழ்ந்து கொள்ள விடுவதில்லை . அந்த காலகட்டம் ஒரு கூட்டுப் புழுப் போல எனக்கு நானே பின்னக் கொண்ட வலை என்னை வெளியுலக தொடர்புகளில் இருந்து முற்றாக அறுத்திருக்கிறது  . புறவய வண்ணங்களை கொண்டு மனம் கானும் கனவுகள் என்னை ஆற்றுப்படுத்தி இருக்கவேண்டும்  .

ஒரு கால கட்டத்திற்கு பிறகு அது என்னை அங்கிருந்து வெளியேற்றி விட்டது   .அதிலிருந்ழு  ஒரு புது வாழ்கையின் துவக்கம் உருவானபோது பழைய வாழ்கையின் மிச்சங்கள் என எதுவும் இன்றி நான் அந்த அடிப்படை மாறிய மனநிலையை முதலில் அவதானிக்கத் தவறினேன்


இது எப்போதும் எனக்கு நிகழ்வது என நினைத்திருக்க வேண்டும் . இப்போது நிகழ்ந்தது பெரும் வல்லமையுடன் எழுந்தது என நான் அறிந்திருக்கவில்லை .வெளிவந்த  போது எனது சிந்தனை ஓட்டம் முற்றிலும் புதிய பரிமாணத்தை அடைந்திருந்தது . அனைத்தையும் பார்க்கும் மற்றும் சித்திக்கும் முறையில் அந்த மாற்றத்தால் எனக்கே நான் மிகப் புதிதாக தெரிந்தேன். அதை  என் வாழ்கையில் செயல்படுத்த எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்பது வியப்பாக இருந்தது.


வாழ்கை முறை ஆசாராம் , பூஜை என எல்லாவற்றின் மீது ஆழ்மனத்தல் விதையாக இருந்தது அந்த காலகட்டத்தில் மரமாகியருக்கிறது என புரிந்து கொண்டேன் . மனம் அதை மிக இயல்பாக எடுத்துக் கொண்டது . அதுவரை சிதறுண்டு கிடந்த எண்ணம்  அனைத்தும் சரடில் கோர்கப்பட்ட கணம் எங்கிருந்து அந்த அடிப்படை மாற்றம் எங்கு எப்படி நிகழ்ந்தது என்கிற  அவதானிப்பை பலமுறை முயன்று அங்கு செல்லமுடியமலாகி திரும்பி இருக்கிறேன் . மனதின் விசை நாமறியாத பல ஊடுவழிகளைக் கொண்டது . எண்ணாத கணத்தில் வேறொரு உலகை காட்ட வல்லது .

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 65 நிகழ்வுகள்