https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 27 ஏப்ரல், 2017

ஸ்வாத்யாயம் - 4

ஶ்ரீ:
ஸ்வாத்யாயம் - 4


மம லாலப்யமாநஸ்ய புத்ரார்தம் நாஸ்தி வை ஸுகம்
ததர்தம் ஹயமேதேந யக்ஷ்யாமீதி மதிர்மம


- வால்மீகி ராமாயணம்.




ஒரு மாற்றுக்கருத்தால் நாம் ஏன் புண்படுகிறோம், நாம் நம்பும் ஒன்றை இன்னொருவர் நிராகரித்தால் ஏன் கொந்தளிப்படைகிறோம்? அது எந்தவகையான மனப்பலவீனம்? அதை மட்டும் நினைத்தாலே போதும் நாம் இருக்கும் அறிவார்ந்த தளம் என்ன நம் ஆன்மீக நிலை என்ன என்று புரியும். என்று சொல்கிறார் திரு.ஜெயமோகன் அவர்கள் .

சுய மீட்சிக்கு ஆன்ம பலத்தை நாடுவது மட்டுமே என்னால் ஆகக்கூடியது , ஒவ்வொரு புண்படுதலுக்கும் மனக் கொதிப்பிற்கும் மனம்சார்ந்த சமாதானங்கள் தேவையுறுகிறது. அது புறவயத்தாலே அளிக்க இயலாது . பக்தியை அடிப்படையாக கொண்டு அகவயத்திலிருந்து அவற்றை அறிந்து கொள்ளும் பயிற்சியை வழிபாட்டிலிருந்த பெறவியலும் என நினைக்கிறேன்.

பக்தி என்பது என்ன? என்ற கேட்டுக்கொண்டு ஒரு கேள்வி பதில் பதிவில் திரு.ஜெயமோகன் தன் அற்புத பதிலை இப்படி தொடங்குகிறார் 

"பக்தி என்பது என்ன? அந்தப் படிமத்தை நம் அகத்தில் மேலும் மேலும் வளரவிடுவதே. பிரபஞ்ச ஆற்றலை சின்னக் கண்ணனாக உருவகித்துக்கொண்டு பாலூட்டி சோறூட்டி தொட்டிலில் ஆட்டி மடியிலிட்டுக் கொஞ்சி கண்கசியும் ஒரு பக்தன் அந்த படிமத்தை பேருருவம் கொள்ளச் செய்கிறான். அவனுக்கு மட்டும் அனைத்து அர்த்தங்களையும் அளிக்கும் ஒரு படிமப்பெருவெளி உருவாகிவிடுகிறது. அதனூடாக அவன் அறியும் தரிசனங்களும் ஞானங்களும் பிரம்மாண்டமானவை. அதற்கு வெளியே நின்று கொண்டு அதை நாம் விமர்சிக்க முடியாது.

ஆனால் அந்த வகையில் நெகிழ்ந்து உருகி ஒரு படிமத்தை விதையாகக் கொண்டு ஒரு படிமப்பெருவெளியை உருவாக்கிக் கொள்ள முடியாத ஒருவருக்கு அந்த வழி பயன்படாது. அவருக்கு உரியது தர்க்கமே. ஆனால் வேதாந்தம் அறிந்து முன்வைக்கும் அதே மையத்தை நோக்கியே பக்தி வழியாகவும் வந்துகொண்டிருக்கிறார்கள் என்ற தெளிவு அவருக்கு இருக்க வேண்டும். ஆகவே வேதாந்தி ஒருபோதும் ஒரு உருவ வழிபாட்டாளனை நிராகரிக்க மாட்டான்.

பக்தியும் உருவவழிபாடுமே எளிமையான வழிகள் என்று மீண்டும் மீண்டும் இந்து மரபில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மாபெரும் கட்டுரை உணர்த்தாத உண்மையை ஒரு நல்ல கவிதை உணர்த்திவிடுமல்லவா அதைப்போல. கட்டுரை தர்க்கம் வழியாக படிகளில் ஏறி மேலே வரும்போது கவிதை படிமம் வழியாக பறந்து அங்கே சென்று விடுகிறது. நம் ஆழ்மனம் நம்முடைய பண்பாட்டில் ஊறி உருவான ஒன்று. படிமங்கள் முளைப்பதற்கான ஈர நிலம் நம்முள் ஏற்கனவே உள்ளது.

ஆனால் நாம் இன்று மேலைச் சிந்தனையின் தர்க்கங்களால் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். மெல்லமெல்ல நம்முடைய உள்ளுணர்வை விட தர்க்கம் அதிக அழுத்தம் கொண்டதாக ஆகிவிட்டிருக்கிறது. ஆகவே நமக்கு இன்று உருவ வழிபாடுமீது மனத்தடை உள்ளது. அந்த மனத்தடையை வெல்ல முடிந்தவர்களுக்கு, அதில் உண்மையாக உள்ளம் தோய முடிபவர்களுக்கு கண்டிப்பாக அதுவே மிகச்சிறந்த வழியாகும்.

இந்து மரபில் இந்த இருபாதைகளும் முறையே சகுணபிரம்ம உபாசனை என்றும் நிர்க்குணபிரம்ம உபாசனை என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. இரண்டுமே பிரம்மம்தான். ஒன்று உருவம் உடையது. இன்னொன்று உருவம் அற்றது. ஒன்று சாமானிய தளத்தைச் சேர்ந்தது இன்னொன்று விசேஷ தளத்தைச் சேர்ந்தது. ஒன்று நம்மில் இருந்து அதை பார்ப்பது, இன்னொன்று அதை மட்டும் பார்க்க முயல்வது. இரண்டுமே நம்முடைய உருவகங்கள் மட்டுமே. . ஒன்றுக்கு கற்பனை ஆயுதம் பிறிதுக்கு தர்க்கமே ஆயுதம். நம்முடைய ஆளுமை எப்படி கோருகிறதோ அப்படி நாம் உருவகித்துக்கொள்பவை.

அந்தப்படிமங்களின் ஊடாக நாம் கடைசியில் அறியும் அது ஒர் அக அனுபவம். அதை அறிந்தவன் அதுவாக ஆகிறான். அவனால் அதை பிறருக்குச் சொல்லிப்புரியவைக்க முடியாது. ஆகவே எப்போதும் அது சொல்லப்படமுடியாதது [அநிர்வசனீயம்] என்றே சொல்லப்படுகிறது.
இரண்டு வழிகளுக்குமே இந்துமரபில் இணையான இடம்தான். ஒன்றுமேல் இன்னொன்று கீழ் அல்ல. ‘உருவாய் அருவாய் உளதாய் இலதாய்என எல்லா நிலைகளிலும் இருப்பது இறையே என்பதே இந்து மரபின் புரிதலாகும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்