https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 11 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 263 * தன்வழித் தேரும் ஊழ் *

ஶ்ரீ:

பதிவு : 263 / 350 / தேதி :- 10 டிசம்பர் 2017

*  தன்வழித் தேரும் ஊழ் *



“ ஆளுமையின் நிழல்   ” - 09
கருதுகோளின் கோட்டோவியம் -03




கண்ணனுடைய நிலைகொள்ளாமை ஆட்சிக்கு ஆபத்து என எல்லா தளத்திலும் இதுபற்றிய அலராக டீ கடைகளில் பேசப்படுகிற அளவில் அதன் ரகசியத்தன்மை காணாமலானது . அனைத்துக் கட்சிக்குள்ளும் இது சமன்குலைவை ஏற்படுத்தும் வீரியமுள்ளது ; சில கட்சியில் உடனே பிறிதொன்றில் வெகு விரைவில். இதில் வல்சராஜின் பங்கு  மிகப் பெரியது என்பது மட்டும் எனக்கு தெரியும் , அதை ஒட்டிய பிறருடைய செயல்முறைகள்  பகிரங்கமாக இருப்பதாக எனக்கு பட்டதுமுன்னாள் அமைச்சர் காந்திராஜை பார்க்க நாங்கள் புறப்பட்டது , அவர் மூலமாக தலைவரிடம் நேரில் சொல்ல முடியாததை சொல்லுவதற்காக இருக்கலாம் என்பதை பிறகு புரிந்து கொண்டேன் . மேலும் பின்னாளில் எழும் சட்டசிக்கல் குறித்தும் அன்று மிக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது . நான் ஒரு பார்வையாளர் என்கிற அளவில் அதில் கலந்து கொண்டேன்,அதற்கு மட்டும்தான் அழைக்கப்பட்டேனா ? என பலநாள் யோசித்ததுண்டு.

ஆர்டர் கொடுத்திருந்த போஸ்டர் அலுவலகத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது ,அனைத்தும் சித்தமாக இருப்பதால் எங்கு வந்து கொடுப்பது என கேட்க நான் காந்திராஜ் வீட்டில் இருப்பதை சொல்லி அங்குவந்து என்னை சந்திக்க சொன்னேன் . சிறிது நேரத்திற்க்கெல்லாம் போஸ்ட்டரை கொண்டுவந்து கொடுத்தார்கள் . காந்திராஜ் அதை பார்க்க விழைய நான் அவரிடம் கொடுத்தேன் . அப்போது எதிர்பாராது உள்நுழைந்த எனது நண்பன் பாலாவை பார்த்ததும் நான் துணுக்குற்றேன் . அவன் திமுக இளைஞர் அமைப்பில் இருப்பவன் மேலும் முதல்வருக்கு நெருக்கமான சிலருள் அவனும் ஒருவன்  விஷமி எதை செய்கிறான்? ஏன் செய்கிறான் ? என்பதைகணிக்க முடியாதவன் . எனக்கு அது நல்லதாக படவில்லை . காந்திராஜுக்குத்தான் மிகவும்   சங்கடமாகிப்போனது . அதை நேரே என் அலுவலகத்திற்கு கொண்டு கொடுக்க சொல்லியிருக்கலாம், ஊழ் யாரைவிட்டது . அதற்கான  விலையை சிலநாட்களுக்குள் நான் கொடுக்கவேண்டிவரும் என நினைக்கவில்லை .

ஆட்சி மற்றத்திற்கான  சந்தர்ப்பம் எப்போதும் நிகழ்வதற்கு  வாய்ப்பதில்லை , அதற்கானவிதி முகூர்த்தம்அதன் சட்டமன்ற உறுப்பினர்களாக சிலர்  வெற்றி பெற்று உள்ளே நுழையும் போதே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது . அதற்கு  பெரும்பாலும் தனித்தொகுதியில் வெற்றி பெற்று வருபவர்களும் , பொது தொகுதிகளின்  புதுமுக உறுப்பினர்களைக் கொண்டே அது எப்போதும் நிகழ்கிறது . இரண்டிற்கும் அடிப்படை ஒன்றுதான்  , அரசியலையும் தங்களையும் மிக தவறாக கணித்து வைத்திருப்பது  முதன்மை காரணம் . தமிழகத்திற்கும் புதுவைக்கு அனைத்து விஷயங்களிலும் பெரிய  மாறுபாடு உண்டு . சட்டமன்ற உறுப்பினரான பிறகும் அரசியல் ரீதியில் அதிகாரம் பெறுவது பலவித காரணிகளை முன்வைத்து . பெரிய எதிர்பார்ப்பும் கனவுமாக உள்நுழையும் எவர்க்கும் நடைமுறை யதார்த்தத்தினால் வெகு விரைவில் அவை கலைந்து விடுகிறது

பொருளியலில் வெற்றியும் அதிகாரமும் எல்லார்க்கும் கிடைத்துவிடுவதில்லை , பல சட்டமன்ற உறுப்பினர்கள் கடைசி வரை அதன் அருகில் கூட செல்ல முடியாமல் சட்டமன்ற காலம் முடிந்து வெளியேறியதை பார்த்திருக்கின்றேன் . தனித்தொகுதியை பொறுத்தவரை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முதல் நாள் வரை ஏதாவதொரு அரசு பணியிலிருப்பவர்களே பெரும்பாலும் அதை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலுக்குபிறிதொருவரால்முன்னிறுத்தப்படுவதும் , அனைத்திற்கும் அவர் சொல்லுக்கு கட்டுப்படுபவராக இருந்து , பிறிதொரு கணத்தில் எழும் அதிருப்தியால் வெளியேறுபவர்களே ஆட்சி மாற்றத்தை நகர்த்தும் கருவிகள் . அப்படி ஒருவர் உருவாக்கப்படுவதில்லை , தங்களின் உள அலைக்கழிப்பாலும் , நிலையாமையாலும் வந்து ஒன்று சேர்கிறார்கள் . அங்கு அவர்களை காத்திருப்பவர்கள் அந்த தருணத்தை பயனபடுத்திக் கொள்கிறார்கள் . நேற்று வரை திரளில் ஒருவராக இருந்தவர் , இன்று பொது இடங்களிலும் மேடைகளிலும் திடீரென கிடைக்கும் முக்கியத்துவம், அவர்களை திணறடிப்பதாக இருக்கிறது , அதைக் கொண்டு ஆதாயமடையும் இடங்களை தேடியலைந்த ஏமாற்றத்தால் ஏற்படும் வெறுப்பே , அவர்கள் ஆளும் அமைப்பிலிருந்து வெளியேற வைத்துவிடுகிறது

இது ஒரு கோட்பாடு என்றால் , பொதுத் தொகுதியிலிருந்து வரும் புது முகங்களுக்கு பிறிதொன்று . பலவருடங்களாக தனது கட்சி இன்னதென்று சொல்லாமல் , நற்பணி இயக்கம் போன்ற ஏதோ ஒன்றின் மூலமாக, தங்களுக்கு ஒரு முகவரி ஏற்படுத்திக்கொண்ட பின்னர், வெற்றிபெறும் வாய்ப்புள்ள  கட்சி தன்னை தேடிவரும் வரை காத்திருப்பார்கள் , அல்லது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தானே தேடிச் சென்று சேருவார்கள் . இவர்களும் முதற்சொன்ன அணைத்திற்குள்ளும் பொருந்துவார்கள் . ஒரே மாறுபாடு, இவர்கள் தங்களைப்பற்றி மிகை நம்பிக்கையில் இருப்பதும்அரசியல் சரிநிலைகளைஅறியாது இருப்பதுமாக மெல்ல நகர்ந்து  , ஒரு கணத்தில் முன் சொன்னவர் சென்ற அதே பாதையையே ஊழினால் தெரிவு செய்வார்கள் . இதைப்போன்ற சூழல்களில் பெரும்பாலும் ஆட்சி கலைக்கப்பட்டு மீளவும் பொது தேர்தலுக்கே அது அழைத்து செல்வதைப் பார்த்திருக்கிறேன்ஆட்சி மாற்றத்தை காங்கிரஸ் தலைமை ஒருபோதும் விழைவதில்லை . காரணம் ஒருமுறை வெளிவந்தவர்கள் மீளவும் அதையே முயற்சிப்பார்கள் என்பதும் கோட்பாடு

தாமாக ;அவசியத்தினால் பிறந்த குழந்தை . தேர்தலில் காங்கிரஸ் சீட்டு மறுக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து அதை துவக்கினார்கள் , அதை தண்டி அதற்கு வேறு பொருள் இருப்பதாக நான் நினைக்கவில்லை . அந்த கட்சிக்குள் பலர் புது முகங்கள் . பலவித விஷயங்களில் மனப்புழுக்கம் அதிகரிக்கும் போது , அவர்கள் அதிலிருந்து வெளியேற விழைவது தவிக்க இயலாதது . அவர்களின்  வெற்றி பல்வேறு தேர்தல் கணக்கு நிலைகுலைவால் நிகழ்ந்தது . கண்ணனை ஏற்காதவர்களும் அவருடன்  இணைந்திருந்தார்கள்,காரணம் மூப்பனாரின் அதன் தலைவர் ஸ்தானத்தில் இருந்ததுதான் . மற்றபடி இதில் மூப்பனாருக்கு உண்மையிலேயே எந்தளவு புதுவை அமைப்பு கட்டுப்பட்டிருந்தது என்பது ,அவருக்கும்  கண்ணனுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம்


அன்று ஆட்சியை மாறக்கூடிய வாய்ப்புள்ளவர்களாக பலர் பேசப்பட்டனர் . பல வாய்ப்புகள் எழும் போதெல்லாம் அதற்கான முன்னெடுப்புகள்  தலைவரின் கவனத்திற்கு வருவதும், வழமைபோல அவரது விருப்பமின்மையால்  அவை பாதியில் கைவிடப்படுவதுமாக இருந்தது . ராஜ்யசபா தேர்தலின் போதே தலைவரின் முற்றதிகாரம் கேள்விக்குறியாகிவிட்டிருந்தது  . ஆட்சிமாற்ற முயற்சிகள் எப்போதும் தலைவரால் முன்னெடுக்கப்பட்டு அவை வெளிப்படும் அந்த நிமிடம்வரை ரகசியமா வைக்கப்படும் . இந்தமுறை தலைவர் ஆர்வம் காட்டாததால் பிறிதொரு குழு அதற்கான வேலைகளை முன்னெடுத்தது . வைத்திலிங்கம் நாராயணசாமி வல்சராஜ் இவர்களுக்குள் சில முரண்பாடுகள் இருந்தாலும் வெவேறு காரணங்களுக்காக ஆட்சி மாற்றத்தை விழைந்தனர் , வைத்திலிங்கம் இந்தமுறை அதற்கான வேலைகளில் முன்னிலையில் இருந்ததாக கட்சிக்குள் பேசப்பட்டது . மாநில கட்சித் தலைமையை தாண்டி தில்லியை தொட்டபடி இந்த அமைப்பு அன்று வெளித்  தெரியாது செயல்பட்டிருக்க  வேண்டும் . வல்சராஜ் அதில் முக்கிய பங்கு வகிக்க நாராயணசாமியும் அதற்கு ஆதரவாக இருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...