https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 15 டிசம்பர், 2017

அடையாளமாதல் - 268 * இலக்கியத்துள் வாழ்வியலை தேடி *

ஶ்ரீ:



பதிவு : 268 / 355 / தேதி :- 15 டிசம்பர் 2017


* இலக்கியத்துள் வாழ்வியலை தேடி  *



ஆளுமையின் நிழல்   ” - 14
கருதுகோளின் கோட்டோவியம் -03







ஜெயமோகனின்சாட்சி மொழிகட்டுரை தொகுப்புக்களை வாசிக்கும்போது , அதில் ஒரு அரசியல்வாதியின் திடமும்,நுட்பமான, அனுபவபூர்வகமான பார்வைகளும் , அந்த களத்தில் நிகழும் மிக நுண்ணிய புரிதல்களினூடாக விளைபவைகளை அளக்கவும்  , முடிவுகளையும் அதன் எதிரையும் உணரமுடிவது ஆச்சர்யமான விஷயம் . ஓர் இலக்கியவாதியின் மனம் எப்படி ஒற்றை மனப்பரப்பில்  பிறிதெல்லோருடனும் உரையாட முடிகிறது என்பதையும், அதைக்கடந்து நிகழ்ந்தவற்றை , கேள்விப்படுதலிலிருந்தும், சொல்லப்படுவதிலிருந்தும் , சொற்பரப்பின் வெளியில் கலந்து, வெளிப்படாத விஷயங்களையும் , எண்ணங்களையும் பார்க்கவும் அவதானிக்க முடிவது என்பது,  தர்கத்திற்கு அப்பாற்பட்டவை . அதை போன்ற ஒன்று இலக்கியவாதிகளுக்கு மட்டுமே சாத்தியப்படுவது என நினைக்கிறேன். அதை ஜெயமோகனிடமிருந்து , கடனாக பெற முடியுமா?, எனில் அவருடன் அந்த சிந்தனை வெளியில் கைபிடித்து நடை பழகுவதப்போல சென்றால் , என் வாழ்வினில் என்னைக் கடந்து சென்ற எல்லாவற்றையும், மீள மீள என்னுள் நிகழ்த்தி ,அவற்றை அலகலகாக பிறித்து அதன் நுட்பங்களை பார்க்க அல்லது உணர முடியமானால் இதுவரை வாழ்ந்த வாழ்கையே போதுமானது என்றாகிவிடலாம் ; இனி நிகழவிருப்பது அதன் நீட்சி  மட்டுமே என்று . அதனை அலகுகளாக பிரிக்க பார்த்து முயறசிக்க வந்ததே இந்த வலைப்பூ.

ஜெயமோகன் தான் இல்லாத உலகை தனது புரிதல்களாலும், திறப்புகளினாலும் மீளவும் உள்ளது உள்ளபடி ,சிருஷ்டிக்க முடிகிறது என்றால் , நான் ஒரு பருப்பெருளென இருந்து சம்பந்தப்பட்ட உலகில் , எனது மனதிற்கு மிக விருப்பமான தொரு துறையில்,என் கண்முன் நிகழ்ந்தவைகளை பார்த்தும் கேட்டும் இருந்து , பின் ஏன் நான் அப்படி அவதானித்து அத்துறையின் மிக நுண்ணிய புரிதல்களை அடைய முடியாது?, என நான் என்னை கேட்டுக்கொண்டே இந்த வலைப்பூவை துவங்கினேன்

அரசியலென்பது மிக எளிய குடிமை சமூகத்தின் ஒற்றை மனப்பரப்பை தனது துலாவின் எதிர் தட்டென கொண்டது. அனைத்தும் அதை மனதில் கொண்டே நிறுவிக்கொள்வது , அதை ஜெயமோகன் இப்படி சொல்லி பார்க்கிறார் என நினைக்கிறேன்.“ஒருமுறை பி.கே.பாலகிருஷ்ணனைச் சந்தித்தேன். இதழாளர், வரலாற்றாசிரியர், நாவலாசிரியர். அவருடன் உரையாடியபோது ஒருநாள் ஒரு திறப்பு போல ஒரு கருத்தை அடைந்தேன். நான் காண்பதெல்லாம் கண்ணுக்குத்தெரியும் அதிகாரத்தரப்புகளை மட்டுமே. கண்ணுக்குத் தெரியாத அதிகாரத் தரப்பு ஒன்று உண்டு. அது சமூகத்தின் கோடானுகோடி மக்கள்தான். அவர்களின் விருப்பங்களும் கனவுகளும் அடங்கியது அது. பேரமேஜைகளில் அதுவும் வந்து உட்கார்ந்திருக்கிறது. எந்த அதிகாரபேரத்திலும் வலுவான ஒரு தரப்பு மக்களின் இச்சை தான். அதை கொஞ்சம் ஒத்திப்போடலாம், கொஞ்சம் திசை திருப்பலாம், கொஞ்சம் ஏமாற்றலாம். ஆனால் அதை தாண்டிச்செல்வது முடியாது. நெருங்கி அமர்ந்து வரலாற்றைப் பார்த்தால் அக்காலத்திய சுரண்டல்வாதிகளின் அதிகாரம் மட்டுமே செயல்படுவதாகத் தோன்றும். ஆனால் ஒரு இருபதாண்டுகால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் ஒட்டுமொத்தமாக அது மக்களின் இச்சை என்ற பெரும் விசையால் தூக்கிச் செல்லப்படுவதையே காண்கிறோம்எனகிறார் தனதுசாட்சி மொழிஎன்கிற கட்டுரை தொகுப்பில் .

மனதை ஒரு நிலையில் வைத்துக்கொள்ளுதல், அனைவரிலும் தன்னை பொருத்தி பார்ப்பதல்  , அதனூடாக அவர்கள் தரப்பின் நியாயங்களும் , அவர்கள்  அதை பார்க்கும் கோணமும் அதிலுள்ள பிழைகளையும் , அவர்களின் தனிப்பட்ட விழைவுகளினால் எழும் விளைவுகளையும், ஒரு முரணியக்க விதிகளுக்கு உட்பட்டு புரிந்து கொள்ள முடியுமானால் , மனங்களையும் ,காலத்தையும் பிரித்து கொடுக்கும் மடிப்புகளைக் கூட களைந்து பார்க்க முடியலாம் . ஆனால் அது காலாதீதமானது . நொடிக்கு நொடி மாறும் இக்கணிப்புகளை,ஒரு செயல் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் செய்யமுடியாது . ஆனால் கடந்துவிட்ட காலவெளியில் , அவற்றின் தரவுகள் கொட்டிக்கிடப்பதை பார்க்க முடிந்தவனுக்கு ஒருகால் நிகழ்ந்தவற்றை முற்றுணர்ந்து கொள்ள முடியலாம். ஜெயமோகனுள் நிகழ்வது இதுவே என நினைக்கிறேன் .

ஜெயமோகனை போன்றோர் தங்களின் அதீத வசிப்பனுபவத்திலிருந்தும் , உலக இலக்கியங்களின் போக்கிலிருந்தும் தனது வாசகர்களுக்கு கொடுப்பதற்காக அவற்றை பெற்றுக்கொள்கிறார்கள் . இன்றைய ஊடகத்துத்துறையின் அபிரிதமான வளர்ச்சி உலகை சுறுக்கிவிட்ட சூழலில் ,கற்றவற்றை அனைத்திலும் போட்டு பார்க்கும் போது எண்ணியிராத கணங்களில்  அவை புதிய தரவுகளை வழக்கி விடுகின்றன போலும் . அவரின் எழுத்துக்கள் பிறிதொருவரின் பொருட்டு. அதன் அலைவரிசை திண்மையில் என்னையும் இணைத்துக்கொள்வதனூடாக  எனது வாழ்வில் நிகழ்ந்தவற்றின் புரியாமைகளையும், புரிந்து கொண்டவைகளில் இன்னும் அணுகு, அதன் பிற பரிமாணங்களை பார்க்க முடியுமானால் , முழுவதும் என்னை புரிந்துகொள்ளும் வழியில் வாழ்வியலின் நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்  .

எளிய குடிமை சமூகத்தின் நம்பிக்கையை பெறுவது அரிய சந்தர்ப்பங்களில் ஒன்று . எனக்கு அது வாய்த்தது ; இரண்டு காரணங்களை ஒட்டி . ஒன்று; பாலனுடன் இளைஞர் காங்கிரஸ் ஊழியனாக கையறு நிலையில் அவர்களுடன் இணைந்து கண்ட பல போராட்டக்களத்தினால். பிறிதொன்று ; என்னை என் தேடல்களின் வழியாக வெளிக்கொண்டுவரும் முயச்சியில் ,கிராமந்தோறும் நிகழ்த்திய சிறு சிறு கூடுகைகளின் வழியாக . முன்னர் பாலன் தலைமையிலுள்ள இயகத்தில் கண்ட தடைகளை போன்று இப்போது இல்லாமலிருந்தாலும்,  இன்று அவை வேறு வகையைச் சேர்ந்தவை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக