https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

வெண்முரசு புதுவை கூடுகை -12

ஶ்ரீ:



வெண்முரசு புதுவை கூடுகை -12

பதிவு 424 / தேதி 22-02-2018

வெண்முரசு நூல் 2- மழைப்பாடல்
பகுதிகள் 1&2
தலைப்பு:-
வேழாம்பல் தவம் , கானல் வெள்ளி







நண்பர்களே வணக்கம்.

எந்த இயக்கமும்  நிகழ்வின் உச்சத்தை அடையும் போது , ஒரு நிறைவினை கொடுத்துவிடுகிறது . அது ஒரு வெற்றி மனநிலை . ஆனால் காரியத்தை தொடர்ந்து நிகழ்த்த வேண்டிய ஊக்கத்தைதான் நாம் அங்கிருந்துதான் பெறவேண்டி இருக்கிறது . கடந்த மாதம் நிகழ்ந்த வெண்முரசின் முதல் நூல் கலந்துரையாடல் நிறைவிற்கு திரு. ஜெயமோகன் அவர்கள் வந்து சிறப்பித்த மகத்தான கூடுகைக்கு  பிறகு இன்று இங்கு கூடியிருக்கிறோம்

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும் , நயம் பட உரைத்த நாவும் கொண்டவர்வரவேற்புரையாளர் திரு. நாகராஜ் அவர்கள் , களம் பல கண்டவர். அவர் சற்றே திகைக்க , முனேரை ஒட்டி நாங்கள் எல்லோருமே பின்னகர , ஆவலோடு எதிர்நோக்கிய நண்பர் ராதாகிருஷ்ணன் பேசவே மறுத்துவிட்டார் . காரணம் அச்சிறு கூடுகைக்கு வந்து அமர்ந்திருந்த ஆளுமை அப்படிப்பட்டது. அனைத்திற்குமாக சேர்த்து  ஆச்சர்யமாக உரைநிகழ்த்திய திரு. ராஜகோபால், இன்று வெண்முரசின் வாசிப்பதற்கு வழிகாட்டியது புதுவை கூடுகையின் போது என்கிற பெருமையை எங்களுக்கு தந்து சென்றிருக்கிறார் . இன்று அடிக்குறிப்பாக அது தினம்தொரும் வெண்முரசு பக்கங்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கிறது.

தமிழில் புனைவுகள் பல ஆண்டுகளாகவே வந்துகொண்டிருக்கின்றன , அதன் காலகட்டத்தை நவீனத்தும், பின் நவீனத்துவம், முற்போக்கு போன்ற  வகைமைகளுள் அவை அமைந்து விடுகின்றன  . ஆனால் அவற்றில் அடங்காத சில ஆக்கங்கள் வெளிவந்து , தனக்கென ஒரு வகையைமைக்கு அது அறைகூவுகிறது . வெண்முரசை அதில் கொண்டு இணைக்க முடியமா என்றால்ஆம்என்றுதான் சொல்வேன். அது தொன்மத்தை நவீன மனங்களிடம் கொண்டு சேர்க்கிறது . புராணங்களின் நிகழ்வை குறியீடாக பொதிகிறது , மரபை இப்படி இருக்கலாம் என்கிற புதிய கோணத்திற்கு நவீன உலகை அழைத்துச் செல்கிறது .

நவீனத்துவம் உலகளாவியது. அது நவீன அறிவியலின் சிருஷ்டி. நவீன தத்துவம், தர்க்கவியலின் நீட்சி. அது எத்தனை எழுந்தாலும் புறவயவாதம், யதார்த்தவாதம் விட்டு எழமுடியாது. அதற்கு அப்பால் ஒவ்வொரு நாட்டுக்கும் அதற்கான இலக்கிய அடையாளம் உண்டு. கையுறைக்கு அடியிலிருக்கும் கைரேகை போல. அதுதான் அந்தப் பண்பாட்டின் ஆழம். நனவிலி. அதைநோக்கியே அந்நாட்டு இலக்கியங்கள் செல்லமுடியும். கடன்வாங்கிய படிமங்களினூடாக அங்கே செல்லமுடியாதுஎனகிறார்  ஜெயமோகன் பிறிதொரு பதிவில் . அப்படி கடன் வாங்கவேண்டிய நிலையிலிருந்து விடுவித்ததாலேயே இது நிகழ்காவியமாக நிலைபெறுகிறது.

நண்பர்களே , மனிதன் சுதந்திரனல்ல , எதற்கோ அதீனப்பட்டவன்தான் என்பதற்கு அவனது அகச்சான்றே பிரமாணம் . அவன்  விண்ணகத்து தெய்வங்களுக்கு அதீனமானவன் என்கின்றன புராண, இதிகாசங்கள் . ஒருவனுக்கு அவன் நினைத்தது நினைத்தபடி நிகழ்வதில்லை , நிகழினும் அதில் அவன் நிறைவுறுவதில்லை.  , என்பதிலிருந்து பிரபஞ்ச இயக்கம் பிறிதெவருக்கோ, பிறிதவராலோ நிகழ்தப்படுவதாக அனுமானிக்க முடிகிறது. புராண , இதிகாசங்கள் அதிலிருந்து நம்மை ஆற்றுப்படுத்த உருவாகிவந்தவை.

கேயாஸ் தியரி போல எங்கோ நிகழும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறு அசைவு வேறு எங்கோ ஒரு சுனாமியாக பரிணமிக்கிறது என்தைப் போல . ஒரு நிகழ்வு வேறொன்றின் விளைவு அல்லது பிறிதொன்றின் தொடர்ச்சி என்பதை சொல்லவந்தது நம் தொன்மங்கள் . தற்செயல் வாதம் அல்லது பெருந்திட்ட வாதம் என்பதை போல.




விண்ணகத்து தெய்வத்தின் ஆடல்கள் யுகம் யுகமாக தொடங்குகிறது . “விண்ணில் ஓடிய பெருந்தேர்களின் சக்கரங்களுக்குள் புகுந்து அவற்றை திசைமாற்றியும் மோதவிட்டும் துவாபரன் தன் ஆடலை நிகழ்த்திக்கொண்டிருந்தான். வெற்றியும் தோல்வியும் தன் விளையாட்டே என அவன் சிரித்துக்கொண்டான்.” என துவாபர யுகம் துவங்குகிறது . வெற்றியும் , தோல்வியும் ஒன்றா? .ஆம். வெற்றியில் நிகழ்கால மகிழ்வையும் , தோல்வியில் எதிர்கால மகிழ்விற்காகவும் சிரிக்க தெரிந்த ஒருவனுக்கு துக்கம் செய்துவிட யாராலும்  முடியாது.

உலகின் எல்லாவற்றிற்கும் ஆதாரம் நீர் . அதை மழையாக எங்கும் வருஷித்து அனைத்தையும் வாழவைக்கிறான் இந்திரன் . உலகெங்கிலும் பூமியின் இயக்கத்திற்கு விண்ணுலக தெய்வங்கள் காரணமென்கிற தொன்மையான மரபு நமக்கு மட்டுமே சொந்தமானதல்ல அவை உலகெங்கிலும் காணப்படுகின்றது என்பதிலிருந்து ஏதோ பாரத வருஷ்தத்தில் காணப்படுகிற புராண , இதிகாசங்கள் பழங்குடி கோட்பாடுகளில் இருந்து மடமையால் எழுந்ததல்ல என்பதையும், அதற்கு உளவியல் ,சூழியல் ,நவீன கலாச்சாரம் பண்டைய வழிமுறைகளின் நீட்சி என்கிற தர்க்கத்தை முன்வைக்கிறது வெண்முரசு

இதை போன்ற கூடுகைகளுக்கு புதிதாக வருபவர்களின் திகைப்பை நாம் பலமுறை கண்டிருக்கிறோம் . அவர்களுக்கு இது என்ன இப்படி ? என்கிற மலைப்பே மிஞ்சுகிறது . காரணம் இதற்கு முன்மாதிரிகள் இல்லை , என்பதால் வியக்கின்றனர் . ஒரு ஆக்கத்தை கொண்டாடுவதின் வழியாக ஒரு படைப்பாளி கொண்டாடப்படுகிறார். அதுவும்  அவர் வாழும் காலத்தில் என்கிறபோது , அது ஒரு அரிய நிகழ்வாக மாறி புதிதென பார்க்கும்  அனைவரையும் மலைக்க வைக்கிறது

இத்தகைய கூடுகைகள் ஒரு தொடக்கம் மட்டுமே . அறிவார்ந்த இலக்கிய உலகம் நம்பிக்கையை மட்டுமே முன்வைக்கும் ஒரு பெரும் சமுதாயத்தின் ஒரு மரபை எடுத்துக்கொண்டுஅங்கிருந்து இன்றைய யதார்த்த உலகை நோக்கிய பயணத்தை, திரும்பி வரும், பாதையை அது வகுத்துக் கொடுக்கும் போது , நவீன மனமுள்ள அதே சமயம் நம்பிகை என்கிற ஆழமனப்படிமத்தில் வேர் உள்ளவர்களுக்கு அது சிறு நீர் வார்க்கிறது. அதில் உறங்கும் ஆலம் விதைகள் நிமிடத்தில் பேருரு கொண்டு எழுகின்றன , இன்று இது இங்கும், ஒரு காலத்தில் எங்கும் கொண்டாடப்படும் என நம்புகிறேன்  .

பாரத வர்ஷத்தின் தொன்மம் மூவுலகிற்கும் தலைவனான இந்திரனை புறந்தள்ளியே அந்த ஆடல் எப்போதும் நிகழ்கிறது என குறிப்புணர்த்துகிறது . அது உலகை ஆளும் நிலை சக்திகள் இந்திரன் சூரியன் பிரதானமானவர்களாகவும்  வாயு , வருணன் அடுத்த நிலையில் உள்ளவர்களாகவும் . இவர்களை அதன் மேலுள்ள விண்ணகத்து கடவுளர்கள்  தங்களின் ஆடலில் தருணங்களில்   நால்வரையும்  ஓரே அணியில் நிற்க விடுவதில்லை . ராமாயணத்தில் இந்திர அம்சமான வாலி , சூரிய அம்சமான சுக்ரீவனுடனும் , மகாபாரதத்தில் இந்திர அம்சமான அர்ஜூனன் , சூரிய அம்சமான கர்ணனுடனும் முரண்படுகிறார்கள் . அவர்களில் ராம- கிருஷ்ண தொடர்புள்ளவர்களே வெற்றி பெறுவதாக இதிகாசங்களில் உரைக்கப்படுகிறது.

மழைப்டாலில் விண்ணிலுருளும் மூன்றாவது பகடையின் பெயர் துவாபரன். “முக்கண்ணனின் சுட்டுவிரலில் இருந்து தெறித்து அவன் விண்விரிவில் விரைந்தான். ஒளிசிதறும் நீல விண்மீனாக உருண்டோடி சூரியனின் தேர்ப்பாதைக்குக் குறுக்கே பாய்ந்தது” .சூரியனும் இந்திரனும் முரண் கொள்ள இவர்களின் தத்துவ  சிக்கலில் இருந்து மகாபாரத புராணமாக பரிணமிக்கிறது அந்த பூசலுக்கு இடமாக பூமி தேர்ந்தெடுக்கப்படுகிறது எனத் துவங்குகிறது வெண்முரசின் மழைப்பாடல். .

முதற்கனலின் வெம்மைத்தாளாது தம்மை குளிரூட்டும் மழையை ஏங்கும் அனைவரின் பொருட்டு தவளையின் ஒயாது இறைஞ்சுதலினால் அது  மழைப்பாடலாகிறது. இந்திரன் அதன் பொருட்டு இரங்கி மழையை பெய்விக்கிறான்மழை பெய்யும் முன்பாக உயர வேண்டியது வரப்பு பின்னர் அதிலிருந்து, நீர்.., நெல்...நெல், குடி..., கோல்..என உயர்ந்து  கோன் உயர்வான் என்னும் ஔவை கிழவி  அதன் தொடர்ச்சியை சத்திரியனின் கடமையை ரிஷிகள் தாங்கள்  கண்டடைந்த வேதத்திலிருந்து அவர்களுக்கு அதிகாரமளிப்பதாக இம்மழைபாடல் விளைகிறது  

வேழாம்பல் தவம் சாதகப்பட்சியின் மழைநீருக்கான தவம். அது பூமி ஸ்பரித்த நீரை தொடாது . இப்படித்தான் இருப்பேன் என்கிற இயற்கையின் வைராக்கியமாக அது சொல்லப்படுவது பாரத வருஷம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்பதை சத்தியரிய குலம் முடிவெடுக்க அதற்கு வேதத்தை கையளித்து ரிஷிகள் ஒருங்குவதை பற்றியது .

கானல் வெள்ளி அதன் நிர்வாக அமைப்பை அதில் உள்ள இடர்பாடுகளை, அதை கடக்க விரும்பும் மனிதர்கள் அதில் தன்னலத்தை அல்லது நாட்டின் நலத்தை இணைத்து புரிந்து கொள்ளும் போது அவை சிக்கல் மிகுந்ததாக மாறிவிடுவதை அதிலிருந்து நமக்கான ஒரு தொன்மம் எழுந்து வருவதை சிறு சிறு குறிப்பாக நிகழ்வாக , சூதர்படலாக  விரிவாக பேசுகிறது. சத்தியவதி பீஷ்மர் , விதுரன் தவிர தன்னை கானல் நீரில் பார்ப்பது மற்ற கதா பாத்திரங்கள் தங்களை பற்றிய பிழை புரிதலை சொல்லுகிறது . அரசன் தன்நிலை வழியாக அதை அடைந்துவிட முடியாது . அதற்கு அமைச்சன் என ஒருவன் தேவைபடுவதையும் . அரசனுக்கு தான் யார் என புரியவைக்க அவன் எந்த எல்லைக்கும் செல்வதை பீஷ்ம தார்த்தராஷ்டிர துவந்த யுத்தம் சொல்லுகிறது.

காவிய லட்சணங்களுக்காக  சிருஷ்டி , ராஜபரம்பரைமனு போன்றவை சொல்லப்பட வேண்டும் என்பதால் அது பற்றி பற்றி பேசுகிறது வென்முரசின் மழைப்படால்சுக்ரசம்ஹிதையின்படி கிருதயுகத்தில் பாரத வர்ஷத்தில் ஒருலட்சத்து நாற்பத்தி ஒன்றாயிரம் குலங்கள் இருந்தன. அக்குலங்களில் ஷத்ரியர்களை உருவாக்கிக்கொண்ட வலிமையான குலங்கள் பிறகுலங்களை வென்று தங்களுக்குள் இணைத்துக்கொண்டன. அவ்வாறு கிருதயுகத்தின் முடிவில் அக்குலங்களில் இருந்து ஏழாயிரம் அரசுகள் உருவாகிவந்தன. அவற்றிலிருந்து ஆயிரத்து எட்டு ஷத்ரிய அரசுகள் உருவாயின. அவற்றிலிருந்து இன்றுள்ள அரசுகள் உருவாகி வந்திருக்கின்றன" என்றும் .

ஒவ்வொரு அரசுக்கும் ஒரு குலவரலாறு உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சுருதி உருவாகி அன்றிருக்கும் வல்லமைவாய்ந்த அரசர்களை ஷத்ரியர்கள் என அடையாளப்படுத்துகிறது. அந்த சுருதியை அந்த ஷத்ரியர்கள் மாற்றக்கூடாத நெறிநூலாக நினைக்கிறார்கள். வேறு அரசர்கள் உருவாகி வருவதை அவர்கள் விரும்புவதில்லை. ஒன்றுகூடி அவ்வரசை அவர்கள் அழிக்கிறார்கள். அந்த ஜனபதத்தை தங்களுக்குள் அவர்கள் பங்கிட்டுக்கொள்கிறார்கள்என்றும்.

ஷத்ரியர்கள் இல்லாமல் பாரதவர்ஷம் என்னும் இந்த விராட ஜனபதம் வாழமுடியாது. குலங்களுக்கிடையே ஒற்றுமையை உருவாக்கி நிலைநாட்ட ஷத்ரியர்களின் வாள்வல்லமையால்தான் முடியும். பாரதவர்ஷத்தின் வளர்ச்சி ரிஷிகளின் சொல்வல்லமையை வாள் வல்லமையால் நிலைநாட்டிய ஷத்ரியர்களினால்தான். அவர்களின்றி வேள்வியும் ஞானமும் இல்லை. வேளாண்மையும் வணிகமும் இல்லை. நீதியும் உடைமையும் இல்லை. அவர்களின் குருதியால் முளைத்ததே பாரதவர்ஷத்தின் தர்மங்களனைத்தும்.” என்றும் சொல்லி அனைவரிடமும் உள்ள வேரிலிருந்து அது எழுந்து வருகிறது.

ஒவ்வொருநாளும் நெடுநேரத்தை எடுத்துக்கொள்ளும் இந்த எளிய மேலாண்மைச்செயல்பாடுகளை ஏன் செய்கிறோம் என விதுரன் அப்போதும் வியந்துகொண்டான். அவற்றில் கொள்கைமுடிவுகள் இல்லை. அரசியலாடல்கள் இல்லை. அறிதலும் அறைதலும் இல்லை என்றாலும்வேங்கைமரத்தை வேருடன் சாய்த்து உண்ணும் துதிக்கை கொண்டது. இளவெயிலில் சுடர்ந்து நின்ற சிறிய மலர்களை துதிக்கை நுனியால் கொய்து சுருட்டி வாய்க்குள் போட்டுக்கொண்டிருப்பது . அந்த வீண்செயலை நிறுத்தமுடியாதென்று எண்ணினான். நிறுத்த எண்ணும்தோறும் அவ்வெண்ணத்தின் விசையே அச்செயலை அழுத்தம் மிக்கதாக ஆக்கிவிடும்.” என விதுரன் கண்டு புன்னகைசெய்கிறான் என அமைச்சரின் மனநிலையை தொட்டு விலகுகிறது .

பகல்கள் தழலுருவான சூரியனால் எரிக்கப்பட்டன.” என்கிற சொல்லாட்சி காலம் நமக்கு அனத்தையும் சமைக்கபட்டே கொடுக்கிறது என்கிற குறியீட்டை கொடுக்க வல்லது. அதிலிருந்து பெறப்படுபவை உண்ணப்பட்டு இரவில் 
நிலவின் நிழலிலே அது ஜீரணிக்கப்பட்டு அனுபவமான சக்தியாக மாற்ற முடியதவனுகில்லை இவ்வுலகு என்கிறது இலக்கியம். அது வாழ்க .

படகோட்டியான விகூணிகன் "மழைக்காலம் நெருங்குகிறது வீரரே" என்றான். "காற்றில் நீர்த்துளியே இல்லையே" என்றார் பீஷ்மர். "இப்போது நீர்த்துளிகள் இருக்காது. இன்னும் சற்றுநாட்கள் தாண்டவேண்டும். இப்போது கடலின் உள்ளே கருவுக்குள் மழை பிறந்திருக்கிறது. நாம் அறிவது கடலின் பெருமூச்சைத்தான். மூச்சு ஏறிக்கொண்டே செல்லும். குழந்தை பிறக்கத் தொடங்கும்போது பெருமூச்சு சிந்துவின் நீரையே திரும்பவும் இமயத்துக்குத் தள்ளிவிடுமென்று தோன்றும். கூர்ஜரத்தின் மணல்மலைகள் இடம்பெயரும். காவியம் துவங்க இருப்பதும் ஒரு பேறுகாலத்தின் நோய் போல எவருக்கும் வலி மிகுந்தது.

உலகின் இலக்கணம் மாறிக்கொண்டிருப்பது . அதன் நுட்பம் தெரிந்தவன் மாற்றத்தின் திசையை அறிய விரும்புகிறான் . அதற்கு பயணம் இன்றியமையாதது. தான் உருவகப்படுத்தும் மாற்றத்தை  உறுதிசெய்துகொள்ளவே பதினேழுவருடங்கள் பாரதவர்ஷத்தின் விளிம்புகளிலும் எல்லைகளிலும் பயணம் செய்தேன் என்கிறார் பீஷ்மர் . திரேதாயுகம் முடிந்து புதிய யுகம் ஒன்று பிறந்து வருவதை நான் என் கண்களால் கண்டேன். அதன் மொழி செல்வம். அதன் அறம் வணிகம். அதன் இலக்கு போகம்.” என்றார் பீஷ்மர். அவரது தீர்க்க தர்சணம் இன்றுவரையில் செல்லுபடியாகிறது.

போரில் பொருளாதரம் உயர்த்த நினைக்கும் நிலை இன்று இல்லை என்று சொல்லும்  பீஷ்மர்விதுரன் தோளில் கைவைத்து சொன்னார் "ஆனால் இவர்களெல்லாம் என் மைந்தர்கள், என் குலத்தோன்றல்கள். இவர்கள் என் கண்ணெதிரே அழிய நான் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. நீ சொன்ன உண்மையை உணர்ந்த நாள் முதல் என் வாழ்க்கையின் நோன்பென நான் கொண்டிருப்பது ஒன்றே. போரைத்தவிர்த்தல். அதன்பொருட்டு நெறிகளையும் மீறுவேன். அதன்பலிபீடத்தில் கள்ளமற்ற சிலரை பலிகொடுக்கவேண்டுமென்றால் அதையும் செய்வேன். வரப்போகும் பேரழிவை தடுத்தேயாக வேண்டுமென்பதையே ஒவ்வொரு செயலிலும் எண்ணிக்கொள்கிறேன்.”

மாமனிதர்களின் கனவு அது" என்றான் விதுரன். "விராடவடிவம் கொண்ட வரலாற்று வெள்ளத்துக்குக் குறுக்காக தங்களையே அணைகளாக அமைத்துக்கொள்கிறார்கள். அதன் வழியாக அவர்களும் பேருருவம் கொள்கிறார்கள்.” அந்த செயலுக்காகவே சரித்திரத்தில் அவர்கள் அறியப்படுகிறார்கள் . அந்த செயல்களினால் விளைவதறகு தன்னையே விலையாகவும் தருகிறார்கள் .

ஆம், நீ சென்று வந்த தேவபாலத்தைப்பற்றி ஒற்றன் சொன்னான்" என்றாள் சத்யவதி. பீஷ்மர் அந்தச் சொல்லைக்கேட்டதுமே முகம் மலர்ந்தார். "தேவபாலம் கூர்ஜரர்களின் ஒரு துறைமுகம்தான். ஆனால் அது பூனையின் காதுபோல உலகமெங்கும் எழும் ஒலிகளை நுண்மையாக கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்தத் துறைமுகத்தில் நின்றபோது என்னென்ன வகையான மனிதர்களைக் கண்டேன்! பாறைபோன்ற கருப்பர்கள் சுண்ணம்போன்ற வெண்ணிறம் கொண்டவர்கள் நெருப்பைப்போலச் சிவந்தவர்கள். பீதமலர்களைப்போல மஞ்சள்நிறமானவர்கள். எவ்வளவு மொழிகள். என்னென்ன பொருட்கள். அன்னையே, ஐநூறு வருடம் முன்பு மண்ணுக்குள் இருந்து இரும்பு பேருருவம் கொண்டு எழுந்துவந்தது. அது உலகை வென்றது. இரும்பை வெல்லாத குலங்களெல்லாம் அழிந்தன. இன்று அவ்வாறு பொன் எழுந்து வந்திருக்கிறது. பொன்னால் உலகை வாங்கமுடியும்.” என்கிற புரிதலைத்தான் தனது பார்வையாக இங்கு வரிவாக சொல்லுகிறார்

நதிகள் ஜனபதங்களை இணைத்த காலம் முடிந்துவிட்டது. இனி கடலை ஆள்பவர்களே மண்ணை ஆளமுடியும்." பீஷ்மர் "அன்னையே, நாம் கடலையும் ஆள்வோம்" என்றார். "அதற்கு நாம் அஸ்தினபுரி என்ற இந்த சிறு முட்டைக்குள் குடியிருக்கலாகாது. நமக்குச் சிறகுகள் முளைக்கவேண்டும். நாம் இந்த வெள்ளோட்டை உடைத்துப் பறந்தெழவேண்டும்.” என சொல்லி அன்று மாறிவரும் உலகை அடைகாக்கும் பறவையான சத்தியவதிக்கு விளக்க முயற்சிக்கிறார் .
காந்தாரத்தோடு உறவு தேவையற்றது என்பதற்கும் சத்தியவதியின் எண்ணங்களுக்கு சகுனியே தடையாக இருப்பான் என்கிற வாதம் சத்தியவதியிடம் எடுபடாது போகிறது . மாறி வருகிற உலக சூழலுக்கு மாற்றாக தனக்கு தெரிந்த எளிய அரசுசூழதலையே  அவள் முன்வைக்கிறாள்அவன் மூடனாக இருக்க வாய்ப்பில்லை" என்றார் பீஷ்மர். "ஆம், ஆனால் ஆசைகொண்டவன் மூடனாக ஆவது மிக எளிது" என்றாள் சத்யவதி. "அவனுடைய கண்களால் பார். இந்த அஸ்தினபுரி இன்று விழியிழந்த ஓர் இளவரசனையும் வெயில்படாத ஓர் இளவரசனையும் வழித்தோன்றல்களாகக் கொண்டுள்ளது. அந்தப்புரத்தில் இருந்து அரசாளும் முதுமகளாகிய நான் இதன் அரியணையை வைத்திருக்கிறேன். ஆட்சியில் ஆர்வமில்லாத நீ இதன் பிதாமகனாக இருக்கிறாய். இந்த அரியணையை மரத்தில் கனிந்த பழம்போல கையிலெடுத்துவிடலாமென சுபலனும்

அந்த விவாதத்தில் தனக்கான வெற்றி கிடைக்காது என்கிற முடிவை எட்டியதும் தனது வழக்கமான குல சிக்கல்களின் வழியாக பீஷ்மரை நிர்பந்திக்கதேவவிரதா, இந்த அரியணையுடன் தெய்வங்கள் சதுரங்கமாடுகின்றன. பெருந்தோள்கொண்ட பால்ஹிகனையும் வெயிலுகக்காத தேவாபியையும் மீண்டும் இங்கே அனுப்பிவிட்டு அவை காத்திருக்கின்றன. நாம் என்ன செய்வோமென எண்ணி புன்னகைக்கின்றன. நாம் நம் வல்லமையைக் காட்டி அந்த தெய்வங்களின் அருளைப் பெறும் தருணம் இது.” என்கிறாள் . ஆனால் பீஷ்மர் காத்தாரத்திற்கு செல்ல மறுத்துவிடுகிறார்.

ஆனால் காலம் ரதிவிஹாரி என்கிற சொல்லை ஒரு குறியீட்டைப்போலே விதுரனுக்கு எடுத்துக் கொடுக்கிறது. அந்த மாயையினால் சிக்குண்டுதீயுடன் விளையாடும் ரசவாதிபோல. சர்ப்பத்துடன் விளையாடும் விடகாரி போல. யானையுடன் விளையாடும் மாதங்கிகன் போல. ரஸவிஹாரி. மோஹவிஹாரி. மிருத்யுவிஹாரி.. போல அரசுசூழ்தலில் விளையாடும் எளிய அரசியலவதிப்போல தனது முதல் முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்கிற ஓரே சிந்தனையில்  காலத்தின் நோக்கு தெரியாது விதுரன் விளக்கு விட்டில்பூச்சி போல பீஷ்மரை சந்திக்க கிளம்புகிறார்”.

தார்தராஷ்டிரனின் மலருதலை மிக நுட்பமாக இரு பகுதிகளாக சொல்லுகிறது மழைப்பாடல் .அதில் நவீனஅக்வஸ்டிக் பாணிஅமைப்பு இருப்பதாக ஜெயமோகனின் கற்பனையில் நவீன ரஸவாதம் சிறகடிப்பது எங்கும் பிசிறடிக்கவில்லை என்பதுதான் விந்தை . “இசைமண்டபம் கலிங்கத்துச் சிற்பியால் அமைக்கப்பட்டது. மரத்தாலான வட்டவடிவமான கூடம். அனைத்துப்பக்கங்களிலும் நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறிய பொய்ச்சாளரங்கள். அவை எதிரொலிகளை மட்டும் உண்டு கரைத்தழித்தன.” என்று.

இசை பற்றிய குறியீடு போலமன்னனுக்கும் நடுவே அவர்கள் பரிமாறிக்கொள்ளும் ஏதோ ஒன்று உள்ளது. நாக்கின் நெளிவு மொழியாகி சிந்தையாகி கண்ணீராகி சிரிப்பாகி நிறைவதுபோலத்தான் அதிரும் கம்பிகளில் நெருடிச்செல்லும் விரல்களும். அறையமுடியாத ஓர் ஆடல்.” இறுதியில்திருதராஷ்டிரன் இருகைகளையும் விரித்து "நீர் பார்வையற்றவரா?" என்றான்பின்திருதராஷ்டிரன் அவரைத் தூக்கி தன் மார்போடு அணைத்துக்கொண்டான்

பெரிய தேக்குமரத்தில் பொந்தில் முளைத்த சிறிய மரம்போலத் தெரிந்தார் அவலிப்தன் அப்போதுஅவனது பெரும் கருணையை வெளிப்படுத்துகிறது. அதே சமயம் பீஷ்மரின் ஒருகரத்தில் அடங்கிய மூன்று மழலைகளில் ஒன்று  , தன்னை பீஷ்மர் வந்து பார்க்கவேண்டும் என்று வெளிப்படும் சிறுமையையும்பார்வையற்றவனுக்கு , நிஜம் , பாரம்பரியம் கலச்சாரம் பண்பாடு போன்றவை சொற்களினால் விளக்கி  பயனில்லை என முடிவு செய்யும் விதுரன் . தரதராஷ்டிரனை பீஷ்மர் நோக்கி தள்ளி விடுகிறான் . அந்த தள்ளல் தார்தராஷ்டிரனுக்கு தன்னை புரியவைப்பதுடன் , விதுரன் அரசில் தன்னிலை பேணவெக்கிறது  . அதன் மதப்பில்  “பலாஹாஸ்வர்.  "முட்டாள். இவன் தோற்பான் என நான் முன்னரே அறிவேன். உடல் அறிவின் ஆயுதம் மட்டுமே." விதுரன் மிகமெல்ல "அதை அவர் இந்தப்போர் வழியாகவே அறியமுடியும் முனிவரே" என்றான். "உன் திட்டமா இது?" என்றார் பலாஹாஸ்வர்.”

பீஷ்மரால் மறுக்கப்பட்ட சத்தியவதியின் திட்டத்தை , சரிசெய்து தனது கணக்கை வெற்றிகரமாக துவக்க நினைத்து விதரன் பீஷ்மரை சந்திக்கிறான். முடியாது போக அவரை சீண்டுகிறான் . “கங்கர்கள் இந்தத் தலைமுறையில் தங்கள் உயரத்தை இழந்துவிட்டார்கள்" என்றான் விதுரன். "அது ஏன் என நினைக்கிறாய்?" என்றார் பீஷ்மர். "அவர்கள் முன்பு இமயத்தை அண்ணாந்து நோக்கி வாழ்ந்தனர். இப்போது கீழே உள்ள சந்தைகளை நோக்கி வாழ்கிறார்கள்" என்றான் விதுரன். பீஷ்மர் "ஆம், சரியாகவே சொன்னாய்" என்று சொல்லி சிரித்தார்.” அனைத்திலும் விதுரன் தோற்கும் அந்த  இடத்தில்  காலத்தின் கை தாரத்தராஷ்டிரனை கொண்டு வந்து பீஷ்மரின் முன் முற்றுப்பணிதாலாக வைக்கிறது . பீஷ்மர் மனம் மாறுகிறார்

இந்த இடத்தில் விதுரன் தனது முதல் வெற்றிக்கணக்கை துவங்க  "பிதாமகரே, பேரரசியை நான் இன்றிரவு சந்திப்பேன். தாங்கள் காந்தாரத்துக்குச் செல்லும் செய்தியை அறிவிக்கிறேன்" என்றான். பீஷ்மர் கவனித்து ஆனால் இயல்பாகச் சொல்வதுபோல "ஆம், அறிவித்துவிடு" என்றார். திருதராஷ்டிரனிடம் "ஆகவே ஒருபோதும் நம் கணுக்கால் எதிரியின் எந்த ஆயுதத்துக்கும் திறந்திருக்கலாகாது" என்றபடி தனது பாசம் என்கிற கணுக்காலை விதுரனிடம் காட்டிவிடுகிறார் .

வெளியே சென்று தன் ரதத்தில் ஏறி மாலை மயங்கிவிட்டிருந்த நகரத்தெரு வழியாகச் செல்லும்போது விதுரன் புன்னகை புரிந்துகொண்டிருந்தான். அந்திபூசைக்காக நகரத்தின் அனைத்து ஆலயங்களிலும் மணிகள் முழங்க நகரமே நகைப்பது போலிருந்தது.”

விதுரனின் அன்றைய அத்ம வாக்கிய மயக்கமாகரதிவிஹாரியாக அது ஒலிக்கிறது . ஆம், அப்படி ஒருவன் மண்ணில் நிகழவேமுடியாது. முடிந்தால் அவன் மனிதனாக இருக்கவும் முடியாது. ஆனால் அவனை ஒரு கனவாக சொல்லில் தேக்கி வைத்துக்கொள்ளலாம். கல்லில் தேக்கிவைக்கப்பட்ட கடவுள்களைப்போல.” காலத்தில் தேக்கிய கடவுளாக கண்ணனின் களத்தை திறந்து வைப்பதாக முடிவுகிறது.

துவாபரன் மீளவும் இங்கு தன் ஆடலை நிகழ்த்திக்கொண்டிருந்தான். வெற்றியும் தோல்வியும் தன் விளையாட்டே என அவன் சிரித்துக்கொண்டான்.” 


கிருபாநிதி அரிகிருஷ்ணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...