https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 28 பிப்ரவரி, 2018

அரிய நிகழ்வும் வெறுமையும் - 39 . நதி ஸ்நானம்.

ஶ்ரீ:



நதி ஸ்நானம்  




பதிவு :  429 / தேதி :- 27 பிப்ரவரி   2018








திருவேணி சங்கமம்  முழுவதுமாகவே கலங்கலான நதியாக எட்டிய தூரத்திற்கு  ஓடிக்கொண்டிருந்தது . அதன் அகலம்  தொடுவானம் தூரம்வரை ,நீரும் கரையுமாக மாறி மாறி தொடுத்திருந்தது . சிறு சிறு மணல் திட்டுக்கள் நூற்றுக்கணக்கில் ஆமை ஓடுகள் போல அங்கங்கே புடைத்து எழுந்திருந்தன . அவற்றை தாண்டி நதி மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தது . எல்லா திட்டுக்களிலும் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் நிறைந்து காணப்பட்டார்கள். ஒவ்வொரு மணல்  திட்டிலும் ஏராளமானவர்கள் குளித்துக்கொண்டும் , தர்ப்பணாதி கிரியைகளை செய்துகொண்டும் , ஈரத் துணிகளை கொடிபோல கட்டி உலர்த்திக்கொண்டும் இருந்தனர்

எங்கும் பார்க்க சலிக்காத பலவித முகங்களின் கொலு. தீர்த்தயாத்திரை என்பது பல்நெடுங்காலம் இந்துக்களின் ஆழமான நம்பிக்கை ,அதன் தொடர்ச்சியை இன்றுவரை பார்க்கும்போது ஆச்சர்யமளிப்பதாக இருந்தது .இடது புறம் கண்ணுக்கெட்டிய வரை நீண்ட கரை பகுதி . கரை மணல் சந்தன நிறத்தில் நீரால் ஊறியது போல இருந்தது, நடக்கையில் காலில் லேசாக ஒட்டினாலும், அவை சேறாகவோ களிமண்ணாகவோ மாற்றமையாது ,எப்போதும் ஈரப்பதத்தோடவே இருந்தன . அவை உலர்ந்துபோனால் புழுதி படலங்களாகி எங்கும் பறக்க துவங்கிவிடுகின்றன . கரை ஓரம் முழுவதும் சாரி சரியாக மனித நிரைகள் உற்ச்சாகமாக போவதும் வருவதுமாக இருந்தனர்  . மனம் முழுவதுமாக அழுத்தம் நிறைந்த அன்றாட தொழில் அழுத்தத்திலிருந்து விடுதலை பெற்ற எண்ணத்துடன் , நான் எந்த விதமான சிந்தையுமின்றி அவற்றை பார்த்துக்கொண்டு நின்றதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன் .




நதி எவ்வளவு ஆழமிருக்கும் என நான் கேட்டதற்கு படகு ஓட்டுனர் நதியின் மையப் பகுதி முப்பது அடிகளுக்குமேல் ஆழம் என அறிவுறுத்தினார் . சிறிது நேரத்திற்கெல்லாம் எங்கள் யாத்திரை குழுவின் ஒரு பகுதியினர் தாங்கள் இறங்கியிருந்த மணல்மேட்டிலிருந்தபடி எங்களை நோக்கி உற்சாகமாக கூவியபடி கைகாட்ட , நாங்கள் அந்த தீவில் இறக்கிக்கொண்டோம் . இங்கு படகுதுறை போல ஒரு ஏற்பாடு இல்லாததால் கரை இறங்க பெண்கள்தான் சிரமத்திற்கு ஆளாயினர் . நதி நீர் கரை ஓரம்போலில்லாமல் சுத்தமாக இருப்பதுபோல தோற்றம் கொண்டிருந்தது . திரிவேணி சங்கமம் என்பது மூன்று நதிகளின் இணைவு பொதுவில் அதைபிரயாகைஎன்பார்கள் . நான் மூன்று நதி தனித்தனியாக ஓடி வந்து இணைவதை பார்க்க முடியும் என்கிற நினைப்பில் இருந்தேன். ஆனால் இந்த அளவில் பிரம்மாண்டமாக ஒரு நதியை நான் எண்ணியிருக்கவில்லை . எங்கும் நீர் சூழ்ந்து இருப்பதால் மூன்று நதிகள் எங்கு வந்து இணைகின்றன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை

எங்கு பார்த்தாலும் ஜலப்பிரவாகமாக ஓடிக்கொண்டிருக்கும் நதியில் , அதை பிரித்துப்பார்ப்பது இயலாது என்றே தோன்றியது . இந்து சம்பிரதாயத்தில் குருவுடன் சேர்ந்து செல்லும் தீர்த்த யாத்திரை பற்றி  புராணத்தில் விசேஷித்து சொல்லப்படுகிறது . ஆச்சர்யனுடன் செல்வது அதனினும் பாக்கியம் . எங்கள் குழுவுடன் எங்களுக்கு இது இரண்டாம்நாள் . என்றாலும் அவர்கள் அனைவரும் எங்களை விட மூன்றுநாட்கள் முன்னதாக ஜீயர் ஸ்வாமிகளுடன் பயணப்பட்டு வருகிறார்கள் . எங்களுக்கு அவருடன் இது முதல் தீர்த்தமாடல் . நான் அமைதியாக நடப்பதை பார்த்தபடி இருந்தேன் . ஜீயர் ஸ்வாமிகள் முதலில் இறங்கி அவரது அனுஷ்டானங்களை முடித்த பிறகு . நாங்கள் ஒருவர் பின் ஒருவராக நதியில் இறங்கினோம்  

எங்களுடன் வந்தவர்கள் ஜீயர் ஸ்வாமிகளை சுற்றி வட்டமாக நின்றுகொள்ள நடுவில் கோபிகளுகளுக்கு கண்ணனைப்போல ஜீயர் ஸ்வாமிகள். எங்கள் அனைவரின்மீதும் அவர் நீரை வாரி இறைக்க , நாங்களும் பதிலுக்கு அவர்மீது நீரை இறைதித்தோம் , இது ஒரு விளையாட்டுபோல நிகழ்ந்தது , அதன்பின்னர் நாங்கள் ஒருவர்பின் ஒருவராக அவரை அருகணைய ,எங்கள் தலையில் நதிநீர் விட்டு ஆசியளித்தது மனதிற்கு நிறைவாகவும் ,வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது

ஜீயர் ஸ்வாமிகள் தனது குளியலை முடித்துக்கொண்டு  கரைக்குத் திரும்பிவிட்டார் . அங்கு அவருக்கு நித்ய அனுஷ்டாணத்திற்கு அவரது ஆராதனை பெருமாள் காத்திருந்தார் . பெரிய மூங்கில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஜீயரின் ஆராதணைப் பெருமாளை அவரது மூத்த புத்திரன் எடை தாளாமல் சுமந்து வருவதை பார்க்க முடிந்தது. நதியிலிருந்து வெளியேற மனசாகாமல் . நாங்கள் சிலர் மட்டிலும் நதி நீரில் அலைந்தபடி இருந்தோம் . எனக்கு பக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவரை பார்த்தேன்  . நம்மூர் பக்கம் போல இருந்தாலும் வெகு நாட்களுக்கு முன்பாக வடநாட்ட குடிபெயர்ந்தவர்போல இருந்தார் , அவரிடம் திரிவேணி சங்கமம் பற்றிய தகவல்களை அறிய அணுகினேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...