https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 5 ஏப்ரல், 2018

அடையாளமாதல் - 301 * நிஜத்திற்கு அப்பால் *

ஶ்ரீ:



பதிவு : 301 / 467 / தேதி :- 05 ஏப்ரல்  2018



*  நிஜத்திற்கு  அப்பால்  *





ஆளுமையின் நிழல்   ” - 46
கருதுகோளின் கோட்டோவியம் -03






ஆலமாரத்தின் கீழே ஏதும் முளைப்பதில்லை , சண்முகம் கீழே யாரும் வளர இயலாது”  என்கிற வசையை நான் நன்கு அறிவேன் . ஒரு வகையில்  அது உண்மையும் கூட . ஒரே ஒரு விதிவிலக்கைத் தவிர . அன்று அவர் வீட்டுப் படிகளை கடந்து உள்ளே செல்லும்போது, எனக்கு அரசியல் ரீதியான எதிர்பார்ப்பு ஏதும் இல்லை  . ஒன்றில் நுழைவதும், பின் அறிவதும் என அனைத்தும் அங்கேதான் எனக்கு எப்போதும் நிகழ்கின்றன . சில வெற்றியும் , தோல்விகளுமாக அவை இருந்தாலும் அவற்றை ,அனுபவம் என்கிற முதிர்ச்சியாக அல்லது தவிரக்கவே இயலாத ஊழாக அவற்றை எடுத்துக் கொள்வது என் இயல்பாக  இருந்தது . எப்போதும் எந்த தடுமாற்றமும் இன்றி ஒரு இயற்கையின் விசையால் ஒன்றில் நுழைவதும் அங்கிருந்து பிறிதொன்றுக்கு நகர்தலுமாகவே என் வாழ்கையை அறிந்து கொண்டிருக்கிறேன்

பாலன் காங்கிரஸில் இருந்து விலகி கண்ணனுடன் கை கோர்த்த போது , அவருக்கு அனுக்கனாக இருந்த ஊசுடு பெருமாள் , பாலனை கொண்டு கண்ணனிடம் விட்டு , மனம் வெதும்பி சில காலம் கழித்து , என்னிடம் வந்து சேர்ந்தான் . பாலன் அமைப்பிலிருந்து என்னை பின் தொடர்ந்தது அவன் மட்டுமே . அன்று அவனும் தனித்தே என்னை பார்க்க வந்தான். பாலனை சார்ந்திருந்த அனைவரும், கையிலுள்ளதையும் , அங்கே கைக்கொண்டதையும் விட்டுத் தொலைத்த பிறகே அவரிடமிருந்து வெளியேறினர் . ஒரு புள்ளியில் பாலனுக்கு நிகழ்ந்ததும் அதுவே என்பதுதான் இன்னும் வேடிக்கை.

நான் மற்றும் ஊசுடு பெருமாள் இருவர் மட்டுமே பாலனிடமிருந்து மிச்சப்பட்டவர்கள் . அதன் பின்னர் ஆயிரக்கணக்கான தோழர்களை அங்கிருந்தபடி வென்றெடுத்தது , திட்டமிட்ட செயல்பாடுகள்  மற்றும் அவர்களுடன் தொடர்ந்து  நிகழ்ந்து உரையாடல்களின் வழியாகத்தான் . அப்போது நிகழ் அரசியலில் கண்ணுக்கு தெரிந்த வெற்றிடமும் , அதை இட்டு நிரப்பும் வாய்ப்பாக என் தனிப்பட்ட உரையாடல்கள் நிகழ்ந்தன . அதற்கு பெரும் வாய்ப்பளித்தது அந்த சிறு கூடுகைகள்தான் . தளராது அதை நிகழ்த்த துவங்கினோம். அதன் விளைவாக சில காலம் கழித்து தில்லியின் ஆதரவை பற்றிய எண்ணம் எழுந்தது , அன்றிருந்த  சூழலை ஒட்டித்தான் ரமேஷ் சென்னத்தலாவை சென்னையில் சென்று சந்தித்தேன் . நண்பர்கள் சிலருடன் ஊசுடு பெருமாளும் என்னுடன் சென்னைக்கு வந்திருந்தான் . அங்குதான் அரசியல் தோழர்கள் மற்றும் என் நண்பர்களின் இணைவு நிகழ்ந்திருக்க வேண்டும்.

எப்போதும் இருந்த கட்சித் தோழர் மற்றும் நண்பர்களுக்கு இருந்த இடைவெளி ஒரு சூழலில் காணாமலாகி , ஒரு இடத்தில் நண்பர்களும் , கட்சி தோழர்களும்  என்னையும் அறியாமல் இணைந்து விட்டிருந்தனர் . அதற்கான விதை நான் சென்னையில் ரமேஷ் சென்னித்தலாவை சந்தித்தபோது ஊன்றப்பட்டதை நீண்ட நாட்களுக்கு பிறகே உணர்ந்து கொண்டேன் . இவை இரண்டையும் இணைக்கும் திட்டத்தில் எப்போதும் நான் இருந்ததில்லை

நட்பும் அரசியலும் கலக்கவே கூடாத இரட்டைகள் என்பதில் எனக்கு இன்றும் மாற்றுக்கருத்தில்லைஅவை இயல்பில் வெவ்வேறு விதமான மனோநிலைகளையும் வாய்புகளையும் கொண்ட மனிதர்களால் ஆனது . அந்த இணைவு அரசியல் விபரீத்தை விளைவிக்க கூடியது. கட்சி தோழர்களின் அரசியல் விழைவும், அனுக்க நண்பர்களின் நம் உள்மனம் அறியும் வாய்ப்பு , வளரும் தலைமையின் அதன் திட்டங்களையும் , அரசியல் வழிமுறைகளையும் முடக்கிவிடக் கூடிய திறன்மிக்கது . இருபுறமாக நம்மை நெருக்கி , தங்களின் தனிப்பட்ட விழைவை முடித்துக்கொள்ளும் வாய்ப்பு இந்த விபரீத கூட்டணிக்கு உண்டு

அவர்கள் கொடுக்க விழையும் அழுத்தத்திலிருந்து மாற்று வழி காண இயலாமலாக்குவது  , அரசியலில் கூர்ந்து  முன்னெடுக்கும் சிந்தனையை முடக்குவது . இது தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் அவர்கள் தரும் நிர்பந்தத்திற்கு பலியாவதை தவிர வேறு பாதைகள் இல்லை. ஒருப்புள்ளியில் இவை அனைத்தையும் எதிர்கொண்டேன். அத்தகைய நிர்பந்தத்திற்கு பணிய மறுத்தது பின்னாளில் அரசியலில் இருந்து முற்றாக விலகுவதற்கு பல காரணிகளில் இதுவே பிரதானமாக இருந்தது.

அரசியல் திட்டமிடல்களும் ,நகர்வுகளும்  பல நுண்கூறுகள் அடைப்படையாக இருப்பவைகள் , அவை பல்வேறு தளத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத மனிதர்களின் கூற்றில் இருந்து எழுவது . அவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாததாக , முரண்பட்டதாகவே எப்போதும் இருப்பவை , அவற்றின் உரையாடல்களில் ஒரு சமரச புள்ளி தென்படுமானால் , அதுவே நம் முடிவிற்கு அடிப்படையாக அமைந்து விடுபவை . அதை ஒட்டி நாம் எடுக்கும் முடிவுகள் பின்னப்பட்டிருக்கும் . அரசியல் முடிவுகள் ஆழ்மனத்திலிருந்து எழுபவையாக , நம்பிக்கை சார்ந்த வெளிப்பாடாக இருப்பதால் அவற்றிக்கு கருத்து வடிவம் கொடுக்க இயலாது . ஆகவே அவைகள் எல்லாவற்றையும் முன்கூட்டி விவாதிக்க முடியாது . அது நம் ஆழ்மன நம்பிக்கை மட்டுமே அடிபடையாக கொண்டவை . அவற்றை செயல்படுத்துகிற போது , எங்காவது ஒரு புள்ளியில் உரையாடல்களாக மட்டுமே அவற்றை தொடங்க இயலும் . நமது எதிர்நிலையாளர்கள் தங்களின் திறமையால் அதேபோன்ற உள்மனத்தினால் இயக்கபட்டால் , அடுத்து நிகழ இருப்பதை அவர்களாலும் யூகித்து விட முடியும் . அதை கடக்கும் சிந்தனையை உள்ளடக்கியே எனது உரையாடல்கள் தொடங்கியிருக்கும்


எதிர் நிலையாளர்களின் முரண் செயல்களினாலும் , கருத்து புரியாமையால் நமது அணுக்கர்களின் பூரண ஒத்துழைப்பு கிடைத்து விடுவதில்லை.   இந்த முரணியக்கத்தால் எந்த முயற்சியும் தொடக்கத்தில் தோல்வியை தருவதாகவே , தோன்றினாலும் அதன் பலன் சில காலம் கழித்து தெரிய துவங்கியதும் ,அனைவரின் கருத்தொற்றுமை எழுந்துவிடும். அதை தொடர்ந்து நாம் நினைத்து வெற்றிபெரும் வாய்ப்பு தானாக எழுந்து வருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...