https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 18 நவம்பர், 2022

மணிவிழா 29

 



ஶ்ரீ:


மணிவிழா - 29


18.11.2022











ராமாநுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு துவங்கி முழுமையாக நிலைபெற வேண்டிய பிறிதொரு தேவை உருவானது. இப்போது அதற்கு பின்னால் இருந்து திருகோவிலூர் மடத்தின் மரபான பெருமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதும். அது அன்று எதிர் கொண்ட கோவில் சார்ந்த அரசியலில் முக்கிய இடத்தை பெறுவதில் உள்ள சிக்கல்கள். அதற்கான நிர்வாகத்தில் இருக்கும் அரசுடன் அமர்ந்து பேசும் திறனும் வேண்டுமானால் அதற்கான அமைப்பு பிரமாண்டமாக இருக்க வேண்டும். நான் இங்கு இணைக்க விரும்பியது கோவில் அதைச் சார்ந்த விசிஷ்டாத்வைத அறிஞர்கள் மற்றும் மூத்தோர் இதில் இருந்து விலகி தனது உபண்யாசத்தால் நட்சத்திர அந்தஸ்தில் இருந்த வேளுக்குடி ஸ்வாமி. இவர்களுக்குள் இருக்கும் ஆழ் அதிர்வுகள் ஒரு போதும் வெளிப்படாதவை. ஆனால் ஒன்றாக செயல்படும் ஒரு மைய விசையை உருவாக்க முடியுமானால் அவர்களை இணைக்க முடியும் என்கிற கருதுகோளுக்கு வந்து சேர்ந்தேன். அதன் சாவி திருகோவிலூர் ஜீயர் ஸ்வாமி. அவர் அனைவருக்கும் இனியவர். எந்த சர்ச்சையிலும் ஈடுபடாதவர். அவர் பலம் பெற முதற் இணைப்பு அவருக்கு வேளுக்குடி ஸ்வாமியிடன் நிகழ வேண்டும் என நினைத்திருந்தேன். அயோத்தி யாத்திரையின் போது அவருடன் மிக நீண்ட உரையாடலுக்கு மத்தியில் அவருக்கு வேளுக்குடி ஸ்வாமியிடன் இணைந்து செயல்பட எந்த உளத்தடையும் இல்லை என்பதை தெளிவு படுத்தினார். அது எனக்கிருந்து முதல் சிக்கல் . அது தெளிவடைந்த பின்னர் அதன் பின்புலத்தில் விழா குழு மிகப் பிரமாண்டமாக உருவாக்க துவங்கினேன்


சமூக சேவை மற்றும் ஆன்மீக செயல்பாட்டிற்கு நிதி, அன்பளிப்பு என பல்வேறு இயக்கங்கள் வசூல் செய்கிறார்கள். பொதுவாக இதில் தனிக்கை முறைகள் என ஏதுமில்லை. சில அமைப்புகள் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு வசூல் செய்கிறார்கள். அவை வரவிற்கும் செலவிற்குமானது. இருப்பு என பெரிதாக எதுவும் திரள்வதில்லை.பெரும் தொழிலதிபர்கள் நிதி உதவி செய்ய தயங்குவதில்லை. ஆனால் தங்களிடம் நிதி கோருபவர்கள் யார் என்பது அவர்களுக்கு முக்கியம்.   அதன் நிர்வாகிகளின் சமூக இடம் குறித்து அந்த இயக்கத்தின் இருப்பை அறிகிறார்கள். பெருமைக் குறியதாக இருந்தால் அதில் தானும் இணைந்து அந்த பெருமையில் பங்கு பெறுகிறார்கள். அனவருக்குள்ளும் இருக்கும் அரசியல் அதிகார விழைவு அவரவர் விழைவிற்கு ஏற்ப வடிவம் கொள்கிறது. நேரடி கட்சி அரசியல் அதன் கீழ்மைக்கு அஞ்சி அதன் அருகில் அவர்கள் வெளிப்படையாக செல்வதில்லை. மிக அரிதாக சிலருக்கு அதில் கால் வைக்காமல் உயர் நிலையை அடையும் நல்லூழ் அமைகிறது. ஆனால் அது அனைவருக்குமானதல்ல. அப்படி அடைந்த சிலரும் கூட அடைந்ததை தக்கவைக்க சமரசம் செய்து கொள்ளும் போது ஆழ்ந்த மனக் கசப்பை அடைகிறார்கள். எனவே குறைந்த சவால்களைக் கொண்ட அரிமா சங்கம் போன்ற பல சங்கங்களில் இணைந்து அதில் அகில இந்திய முக்கிய பதவியை நோக்கிய பயணத்தில் அரசியலால் அடையும் பெரும் அடையாளத்தை அடைந்த நிறைவை பெறுகிறார்கள்


பெரும் தொழிலதிபர்கள் தங்களின் பங்களிப்பு மிகச் சரியாக பயன்படுத்தப்படுகிறது. அதற்கான தனிக்கை முறைகள் உண்டு என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுத்தாக வேண்டும். அதே சமயம் தாங்கள் அளிக்கும் நிதி தகுதியான இயக்கத்திற்கு சென்று சேர்கிறது என நினைக்கும் அதே நேரம் அவர்களுக்குறிய இடத்தையும் மரியாதையையும் கொடுக்கும் அந்த இயக்கம் கொடுக்கும் போது அந்த தொடர்பு நீண்ட நாட்களுக்கு நீடிப்பதுடன் வலுவாக மேலும் வளர்கிறது. ஆரம்ப காலத்தில் தொடர்ந்து சந்தித்த ஆளுமைகள் மூலம் பலமான பொருளியல் தன்னிறைவை அடைய முடியும் என்கிற நம்பிக்கை பெற்றிருந்தேன் . அது ஒருவரில் இருந்து பிறிதொருவருக்கு நகர்வது. முதல் ஆளுமையின் தொடர்பை அவர் தனது செல்வாக்காக பயன்படுத்தும் போது மிக பிரமாண்டமாக அது உருவெடுக்கும் என்பதை அறிந்திருந்தேன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக