https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 16 ஜனவரி, 2023

மணிவிழா - 51

 



ஶ்ரீ:



16.01.2023





எனக்கு எதிரானவர்களை நான் பொருட்படுத்துவதில்லை. வாழ்நாள் முழுக்க அவர்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறேன். என்னை எதிர்ப்பது ஏனோ அனைவருக்கும் மிக எளிதாக நிகழ்கிறது. என்னை அவர்களை விட குறைவாக எப்போதும் மதிப்பிடுகிறார்கள் அங்கிருந்து மிக எளிதாக எனக்கெதிராகிறார்கள். அந்த எதிர்பினூடாக அவர்களே எனக்கான களத்தை எப்போதும் உருவாக்குகிறார்கள். அங்கிருந்து எனக்கானது நான் எடுத்துக் கொள்கிறேன் என அவர்கள் ஒருபோதும் அறிவதில்லை. என்னால் மிகச் சிறப்பாக ஒன்றை செய்ய இயலும் என்றால் அது ஒருங்கிணைத்தல் மற்றும் தொடர்புறுத்தல். அடைந்த வெற்றிகள் மற்றும் கற்றவை அனைத்தும் அந்த களத்தில் நிகழ்ந்தவைகள. இவற்றில் ஒரு சமன் புள்ளியை உருவாக்கி அந்த செயல்களுக்குள் செல்கிறேன். எங்கும் என்னை முன் வைப்பதில்லை. எங்கிருந்து எனக்கு எதிராக உருவாகும் எண்ணத்தின் துவக்கத்தை நான் அறிவதில்லை. எப்போதாவது அது என்னவாக இருக்கும் என அவதானிக்க முயன்றதுண்டு. அவர்கள் என்னை எதிர்ப்பதில் ஊறும் காழ்ப்பை அவர்கள் எங்கிருந்து அடைகிறார்கள் என நினைத்துக் கொண்டதுண்டு.


நான் தயக்கத்துடன் திக்கி பேசும் எனது உடற்குறையுடன் என்னை இணைத்து புரிந்து கொள்கிறார்கள். சில வார்த்தைகளை உச்சரிக்கும் போது எழும் சிக்கலை தவிற்க மிக எளிய சொற்களை வைக்கும் போது என்னைப் பற்றிய பரிதாபமும் ஏளனமும் அடைகிறார்கள். ஆடைகளைப் போல சொற்களும் ஒருவரின் ஆளுமையை நிர்ணயிக்கிறது போலும் . என் வார்தைகள் வழியாக நான் எப்போதும் குறைத்து மதிப்பிடப்படுவதை வாழ்நாள் முழுவதுமாக எதிர் கொண்டு வருகிறேன். ஆனால் செயல்களில் ஒருங்கிணைப்பதிலும் ஒரு நிகழ்வை ஒருங்குவதில் பல்வேறு ஆளுமைகளை தொடர்புறுத்தலிலும் எனது விசை வெளிப்படுகிற போது நான் பெறும் வெற்றிகளை தற்செயலானவைகள் என மதிப்பிடுகிறார்கள்


ஒவ்வொருவரும் தனித்தனியாக கையாளப்படுகையில் நான் முழுமையாக வெளிப்படுகிறேன். சிக்கலின் உச்சங்களில் எனது பிறவிக் குறை மற்றும் தயக்கம் இல்லாமலாகிறது அந்த இரண்டின் இடைவெளிகளை கண்டு திகைக்கிறார்கள் தவறாக புரிந்து கொள்வதின் வழியாக காழ்ப்பை அடைகிறார்கள். அதில் அனைவருக்குமான பார்வை ஒன்று போல எங்கும் இருப்பது ஏன் என தெரியவில்லை. ஆனால் அவற்றைப் பற்றி நான் ஒருவாறு உருவகித்து வைத்திருக்கிறேன்


நான் சிறந்தவைகளை முன்வைக்க முயல்கிறேன் அதற்கு எதிரானவைகளுடன் எந்த சமரசமும் செய்து கொள்ள விரும்பியதில்லை. கள எதார்த்தம் பற்றிய புரிதல் இல்லாத ஒன்றில் இருந்து எழுந்தது முதல் அஸ்திரம்.


விழா குழு அழைப்பிதழில் எந்த திருமண் வரவேண்டும் என்பதாக அது இருந்தது. அதற்கு நான் முன்பே சந்தித்தவர்களிடம் எனது கருத்தை தெளிவான பதிலாக சொல்லி இருந்தேன். அது இவர்களை சென்றடையவில்லை போலும் . அவர்கள் தனிப்பட்டு கலந்து கொள்ள முடிவெடுத்த பின் அவர்கள் தங்கள் இயக்கத்தில எழும் சிக்கலை நான் முன்னின்று தீர்க எதிர்பார்கிறார்கள். அவர்களை விழா குழுவில் இணைக்க நான் அதை செய்வேன் என நினைத்திருக்கலாம். உலகம் விந்தையானது அதில் எனக்கான களமாக பலவற்றை உருவகித்துக் கொண்டிருக்கிறேன் . இவர்கள் இரு கூறாக பிளந்து நிற்கிறார்கள். இனி ஆடுவது எனக்கு எளிதானது. என்றாலும் அவர்கள் முன் வைத்த அந்த கேள்வியால் நிலமை சூடு கொள்ள துவங்கியது


நான் அவர்களிடம்உங்கள் ஆச்சரியன் வந்து இதில் கலந்து கொள்ள போகிறாரா , சிறப்புஎன்றேன். அவர்கள் அதை எதிர்பார்க்கவில்லை என்பதால் தாக்குண்டவர்கள் போலானார்கள். அகோபில மடம் காஞ்சி மடத்திற்கு இணையான வல்லமை கொண்டது. அதன் செயல்படும் விசை பல மடங்கு பெரிது. அவை புதுவை தலைவர்களின் எல்லைக்கு அப்பாற்பட்டது. கடந்து இருபத்தி ஐந்து ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க எதையும் புதுவை கிளை நிகழ்த்தியதில்லை. திருவஹீந்திரபுரம் அருகில் புதுவை இருப்பதால் புதுவை பற்றி அவர்கள் அறிந்திருக்கக் கூடும்


அகோபிலம் ஜீயரை அழைக்க வேண்டும் என்பதற்கு சில முறைமைகள் இருக்கிறது . அது பற்றிய சிந்தனை இல்லாமல் கேட்டு விட்டது முற்றிலும் பிழை நகர்வு. அகோபிலம் ஜீயர் சன்யாசி திருக்கோவிலூர் ஜீயர் கிரகஸ்தர் இருவரும் சமமாக ஒரே மேடையில் அமர்வது அவர்கள் பொருத்தவரை சாத்தியமில்லை என தெரியும். அவர்கள் சொல்லும் நெறியும் அதற்கு ஒப்பாது. அப்படி நிகழ்ந்தால் அவர்கள் மரபின் இந்திய  முக்கியஸ்தர்களுக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். அவர்கள் எதிர்ப்பு மிக கடுமையானது என அறிந்திருக்கிறேன். அவர்களை வெல்லும் ஆற்றல் இவர்களுக்கு இல்லை


அவர்களின் ஆச்சாரியன் வந்து கலந்து கொள்வது பற்றிய புரிதல் இல்லாமல் அழைப்பிதழில். அவரை அழைக்கும் வல்லமையற்று விழாகுழு வெளியிடும் அழைப்பிதழில் இடம் பெற வேண்டிய திருமண் குறித்த கேள்வி அபத்தமானது என்பதை பிறகு புரிந்து கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். நான் மிக எளிதில் நுழையும் வாசலை எனக்கு திறந்துவிட்டார்கள்

உங்கள் சார்பாக ஆச்சாரியர்கள் யாரும் பங்கேற்காத சூழலில் எதற்கு திருமண் குறித்த சர்ச்சைகள கிளப்புகிறீர்கள். இது நீங்களும் நாங்களும் இணைந்து உருவாக்கிய குழு அல்ல. அப்படி செய்யலாம் என்கிற எண்ணம் இருந்தால் அது எனக்கு உடன்பாடே. ஆகும் செலவை பாதி பாதியாக பிரித்துக் கொள்வோம். நாங்கள் திட்டமிட்ட நிறைவு விழா வரை சுமார் இரண்டரை கோடி ரூபாய் செலவகும் என கணக்கிட்டிருக்கிறோம். அதை எப்படி எங்கிருந்து துவக்குவது என சொன்னால் மேலதிகமாக பேசலாம் என்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக