https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 13 ஜூன், 2017

அடையாளமாதல் - 96 *வேர்விடாத இருத்தலியல் மரம் *

ஶ்ரீ:






*வேர்விடாத இருத்தலியல் மரம் *
இயக்க பின்புலம் - 23
அரசியல் களம் - 28







கைவிடப்படல் எங்கும் எவர்க்கும் ஒருநாள்  நிகழ்வதே, அதை எண்ணி எண்ணி மாய்வதற்கொன்றில்லை . ஆனால் நம்பிக்கையின் மரணம் போன்ற துக்காக்கிராந்தமானது பிறிதொன்றில்லை . கண்களிலே அது கண்ணீரைப் பெருக்கினாலும் அது துக்கமல்ல கழிவிரக்கமல்ல கைவிடபடலின் வலியால் சொல்லாத ஒன்றின் உருகள் . அன்று சபாபதியின் முன்பதாக இவர்கள் ஆன்மா சிறுத்து ஓடி கதவுகளுக்கு பின் மறைகையில் அவர்களை அழுக்கை வெளித்தள்ளி மூடிக்கொள்ளும் குதம் போல அந்த கதவு  மூடியதை   கண்ணுற்ற அறுவெருப்பு . ஓடிஒளிந்ததால் விளைந்த இழிவு  எனக்கானதல்ல அது பாலனுக்கானது என்கிற நினைவெழுந்ததும் மனம்  கொஞ்சம் சமாதானமானது .அவரை இவர்கள் ஒருக்காலும் நம்பவில்லை . வேறு போக்கிடமற்றதால் , இங்கே அண்டிக்கிடக்கிறார்கள் ஒட்டுண்ணிகளை போல  , தங்களுக்கான ஒரு வெளிச்சம் கண்ணுக்கு தெரியும்வரை . அதுவரை மலப்புழுப்போல நெளியவும் தயார் எனில்   எப்படிப்பட்டவர்கள் இவர்கள் . நட்பு வேறு அரசியல் வேறு தெளிவாக புரிந்துபோனது . நான் நட்பாக உள்நுழைந்தேன் . அதற்கான முறைமைகள் வேறு அரசியலுக்காகஆனது  பிறிதொன்று . இவர்கள் வேறு. நான் நட்பை மட்டுமே  முன்னிறுத்தி உள்நுழைந்தேன். நான் இனி அதற்குண்டான என் முறைமைகளை பேணிக்கொள்கிறேன் . பாலனின் அரசியல் வெற்றியை விழைகிறேன் . அத்தால் நான் அடையக்கூடுவது ஒன்றில்லை  மனதை தெளிவாக ஒருங்கிங்கொண்டேன் . இனி சிதறமாட்டேன் , சிதைவுற அனுமதிக்கப்போவதில்லை

எனக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது  அந்த ஒரு நொடியில் அவர்களால் அங்கிருந்து [அலர் பார்க்க  வெட்கமில்லாமல் எப்படி  ஓடி ஒளியமுடியும் என்று எனக்கு புரியவில்லை . நான் முதல்முறையாக கைவிடப்பட்டதாக உணர்ந்தேன் . அவர்களில் அந்த பயம் வெட்கத்தை ஒன்றுமில்லாதபடி செய்துவிட்டது . அப்படி என்ன பயம் என்ன செய்து விட இயலும் அவரால் , இதற்கே இப்படி நடுங்கிய தொடைகளுக்கு சொந்தக்காரர்களை கொண்டு என்ன கட்சி வளர்ப்பது . நான் திகைத்தபடி நின்றிருந்தேன் . ஓடி ஒளிந்தவர்கள் ஒருவரின்பின் ஒருவராக வந்து சேர்ந்தார்கள் . அவர்கள் எவரிடத்தும் லஜ்ஜை என ஒன்று இல்லை என்பதே என்னை கடுமையாக தாக்கி  வெறிகொள்ளச்செய்த்தது . நான் மெளனமாக அரசாங்க பதிவுகள் கேட்ட அனைத்தையும் ஒருங்கு செய்து கொடுத்துவிட்டு வெளியேறினேன் . அறையை விட்டு வெளியே வந்ததும் தாமோதரன் என்னிடம் பின் கட்டு வழியாக வெளியேறலாம் என்றனர். நான் அதை  மிகுந்த அவமானமாய் உணர்ந்தேன். நடந்ததை பற்றி பேச வேண்டாம் என் ஏற்கனேவே முடிவு செய்து விட்ட போதிலும் , அவர்  சொன்னதைக்  கேட்காமல் கடந்து செல்வது கடினமாய் இருந்தது , இப்போது பின்வழியாக வெளியேறலாம் என்றதும் அவர்களின் கைகளை உதறியபடி முன்வாசலை நோக்கி வெறிகொண்டு நகர்ந்தேன் .வெளியில் பெரும் கூட்டம்மிருப்பதாகவும் நாங்கள் அந்த கூட்டத்திற்கு முன்னால் சென்றால் அசம்பாவிதம் நிகழக்கூடும் என்று சொல்லி காவல் துறையினர் எங்களை முன்வாசல் வழியாக விடவில்லை எங்களுக்கு பின் வாசல் நோக்கி செல்வதை தவிர வேறு வழியும் இல்லை 

எனக்கு அப்பொழுதான் நினைவிற்கு வந்தது என் டிரைவர் என்னிடம் காரை பின் பக்கமாக உள்ள அனைவருக்குமான கார்நிறுத்ததில் , நிறுத்தியிருப்தை சொன்னது. தானும் அங்கிருப்பதாக எனக்குசெய்தி அனுப்பி  இருந்தார்  .நான் கீழ் தளம் வந்ததும் , அங்கு கும்பலிருப்பதாக சொல்லப்பட்டாலும் , நாங்கள் வருவதற்கு முன்பதாக சட்டஒழுங்கு பிரச்னையை கவனத்தில் கொண்டு காவல்துறையினர் அவர்களை விரைந்து அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்.முன்வாசல் ஆளாரவாரமின்றி இருந்தது. அதன் வழியாக உள்நுழைந்து நான் கார் நிறுத்துமிடம் நோக்கி நடந்தேன்

ஓட்டு எண்ணுமித்தில் நிகழ்ந்தது நான் நினைவுகூர்வதை தவிறத்தாலும் அது மீளமீள மனதில் வந்த என் சித்தத்தை கொதிப்படைய வைத்தபடி இருந்தது . யார்யாரோ என்னென்னமோ பேசியபடி என்னை பின்தொடர்ந்து ஓடிவந்தனர் .நான் விறுவிறுவென கார் நிறுத்தம் வந்தேன் . அங்கு எதிர்பாராது சபாபதியின் கார் என்னை கடந்துபோனது ,என்னை கண்டதும் கை தூக்கி கும்பிட்டார் நான் பதில் வணக்கம் வைத்து என் காரை நோக்கி நடந்தேன் . அங்கு என்காரை சுற்றி சபாபதியின் ஆதரவாளர்கள் பெரும் திரளாக கூடிருந்தனர் என்னை பார்த்தும் உஷ்ணமானார்கள் சிலர் திடீரெனெ "கருப்பா டேய்என குரல் கொடுக்க அவர்களுக்குள் கசமுசவென கத்திக்கொள்ள, நான் ஒரு நிமிடம் தயங்கினேன்

திரளின் உளவியல் அதை கையாள்வதற்கு சிறந்தவழி அதை நேரிடையாக எதிர்கொள்வது ஆபத்தானது ஆனால் அதைதவிர பிறிதொருவழியில்லை , பின்வாங்குவது சண்டையை வலுவில் அழைப்பது , பின் நிகழவிருப்பதைக் கணிக்கவியலாது  . எனக்குப்பின்னால் யார் இருந்தார் என நான் திரும்பிப்பார்க்கவில்லை , மேலே நடந்த நிகழ்வே இவர்கள் யாரென அடையாளம் காட்டிவிட்டது , மேற்கொண்டு அவர்களை நம்புவது அறிவீனம். நான் அந்த திரளை நோக்கி வேகமாக நடந்தேன் .டிரைவர் நான் வருவதற்கு முன்பதாக காரை அங்கிருந்து எடுக்க முயற்சித்தார் .எல்லாப்பக்கமும் அவர்கள் சூழ்ந்திருந்தனர் மிரண்டு போனதால் அவரால் வண்டியை எடுக்க முடியவில்லை . நான் அங்கு வந்து ஏறுவதை வரை அவர் வெளியே வரமுடியாது . ஒரு நிமிடம் இருதயம் ஒலிப்பதை காதில் கேட்டபடி இருந்தேன்  .பதட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாது  நான் மௌனமாய் காரை அணுகி மெல்ல கார் கதவை அடையும்போதுதான் நான் அவர்களை நோக்கி வருவதன் காரணமாக அவர்கள் குழம்பியிருக்க வேண்டும் , அதைத்தான் பயனபடுத்திக்கொண்டேன் . நான் காரை நெருங்கியதும் தான் வந்த காரணம் புரிந்திருக்க வேண்டும் .அவர்களுக்கு அப்போதுதான் நின்றிருந்த என் காரை அடையாளம் தெரிந்தது .

சட்டென சுத்தாரித்துக்கொண்ட யாரோ" துரோகி பாலன் ஒழிக" என குரல் கொடுத்தும் ,என் காது ஜவ்வு கிழியும்படி அந்த திரள் ஆர்ப்பரித்தது தொடங்கியது  .எதுவும் நடக்கலாம் என்கிற பதட்டத்தில் ,நான் நிதானம் தவறாது இறுக்கமாக அவர்களை கடந்து காரில் ஏறும்வரை என்னை சுற்றி முஷ்டியை உயர்த்தியபடி கூட்டம் கத்தியபடியே இருந்தது . ஒருவர் துணிந்து என்மேல் கைவைக்காத வரைதான் அந்த ஒழுங்கும் நிலை நீடிக்கும். அது நிகழ்ந்தால் பிறகு என்னை ஆண்டன்தான் காப்பாற்றவேண்டும் . நான் அனைவரையும் ஒரு நிமிர்வோடும் எரிச்சலோடும் விலக்குவதாக காட்டிட்டிக்கொண்டு, " நகர் நகர் " என சொன்னபடி காரை அடைத்து அதில் ஏறிவிட்டேன்


கார் கிளம்பியதும் தான் கவனித்தேன் என் நண்பர்கள் யாரும் என்பின்னால் வரவில்லை, மேலும் உதவிக்கு அழைக்க காவல்துறையை சேர்ந்தவர்களும் யாருமில்லை என்று , இது அசட்டு துணிச்சல் . கார் கிளம்பியதும் ஒழிக சப்தம் இன்னும் ஓங்கி ஒலித்தது . கார் கிளம்பி அந்த திரளை கடக்கும் முன்பாக யாரோ வண்டியை கையால் ஓங்கித்தாக்க , பலவித எரிச்சலில் இருந்த நான் என்ன செய்கிறேன் என அறியாது ஆவேசமாய் காரைவிட்டு இறங்கி கூட்டத்தை பார்த்து "எவண்டா அது " முழு பலத்துடன் கத்த கூட்டம் தீடீரென பின்வாங்கி அமைதியானது . அவர்கள் மீள்வதற்குள் டிரைவர் காரை பறக்கவிட்டார் . நான் ஒன்றும் சொல்லாது சட்டக்கல்லூரி வாசல் வந்து இடதுபுறமாக திரும்பச்சொல்லினேன் . டிரைவர் உடன் வந்தவர்களை பற்றி எதோ சொல்லவர  நான் அமைதியாய் அவரை ஒன்றும் பேசவேண்டாம் என்று சைகையில் காட்டிவிட்டு அமைதியாய் சீட்டில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு நடந்தவைகளை தொகுக்க துவங்கினேன் . இழவுவீட்டிலிருந்து கிளம்பியதுபோல மனம் மயான அமைதியை அடைந்திருந்தது . வீட்டிற்கு சென்றதும் குளிக்க வேண்டும் என தோன்றியது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்