https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

வெண்முரசு 18 குறிப்புகள்

புதவை வெண்முரசு கூடுகை -18

வெண்முரசு நூல் 2 மழைப்பாடல்
69 முதல் 77 வரை



களிறுகளும் நாகங்களும் மட்டுமே நிலத்தின் அதிர்வை முதலில் அறிகின்றன...”

பூக்கள் தும்பிகளால் சமன்செய்யப்படுகின்றன"

யானைவண்டு சிக்கிக்கொண்டால் சிலந்தியே தன் வலையை அறுத்துவிடும்

ஆலயவாயிலின் கதவு தெறித்துத் திறந்து விழுகிறது. அதன்பின் தேவன் எழுந்தருள்கிறான்." 

சில குறிப்புகள் நம்வாழ்கையில் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கின்றன. பிறப்பின் அந்த கணம் நம்முடன் இருக்கும் ஒன்றுடன் சேர்ந்த நாம் கருவறையில் இருந்து வெளிவந்து  விடுகிறோம் போலும் , பல கைகளில் நிலை பெரும் குழந்தையைப் போல , நம்முடன் வெளிவந்த பெயரிடப்படாத அந்த ஒன்று நம் பிறப்பிற்கு முன்பே தோன்றிவிட்ட சிலருடன் சென்று நமக்கென காத்திருக்கிறது. வாழ்கையின் வேரொரு முனையில் அதை சந்திக்கும் போது வாழைபட்டை உறிவது போல உடலில் இருந்து ஆன்மா கழன்றுகொள்கிறது. ரிபு என்பது இதுவாக கூட இருக்கலாம்.

சகுனி தன் பரபரப்பை அடக்கிக்கொண்டான். ஆம், அதைத்தான் அவரது வாய் சொல்கிறது. அதை குலைத்துவிடக்கூடாது. "சொர்க்கத்துக்கு இட்டுச்செல்லும் நாவாய் அது... மீண்டும் ஆலயத்தை அடைந்தபின் மூடிக்கொள்ளும்..." என்றார் தீர்க்கசியாமர்.”

துயரமென்பது அறியாமையின் விளைவு. அறியாமையை வெல்வது அறிவு. அவ்வறிவே மேலும் அறிவதற்கான தடையாக ஆகி புதிய அறியாமைக்கு காவல் நிற்கிறது. ஆகவே அறிதலென்பது அறிந்தவற்றிலிருந்து விடுபட்டு முன்செல்வதே. ஒவ்வொரு அறிவும் பழைய அறிவுடன் போர்புரிகிறது. புதிய அறிவில் பழைய அறிவு கழித்ததுபோகவே மனிதனை வந்தடைகின்றது. எனவே அறியும்தோறும் அறியாமை கொள்கிறான் மனிதன். அறிவினாலேயே அறியமுடியாதவனாகிறான்" துர்விநீதர் சொன்னார்.”

அரசே, மைந்தர்கள் பன்னிரு வகை. தன் மனைவியிடம் தனக்குப்பிறந்தவன் ஔரசன் எனப்படுகிறான். தன் மனைவியை தன் அனுமதியுடன் உயர்ந்தவர்களிடம் அனுப்பி கருவுறச்செய்து பெறப்பட்டவன் ஷேத்ரஜன். இன்னொரு குடும்பத்தில் இருந்து உரியமுறையில் தத்து எடுத்துக்கொள்ளப்பட்டவன் தத்தன். தன்னால் மனம்கனிந்து மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டவன் கிருத்ரிமன், மனைவி அவள் விருப்பப்படி இன்னொருவனைக் கூடிப்பெற்ற குழந்தை கூடோத்பன்னன். உரியமுறையில் காணிக்கைகொடுத்து நாடோடி ஒருவனிடம் மனைவியை அனுப்பி பெறப்பட்டவன் அபவித்தன். இந்த ஆறு மைந்தர்களும் அனைத்துவகையிலும் மைந்தர்களே. தந்தையின் உடைமைக்கும் குலத்துக்கும் உரிமைகொண்டவர்கள் அவர்கள். தந்தைக்கும் மூதாதையருக்கும் முறையான அனைத்து நீர்க்கடன்களையும் செய்ய உரிமையும் பொறுப்பும் கொண்டவர்கள். அவர்களை மைந்தர்களல்ல என்று விலக்க எந்நூலும் ஒப்புக்கொள்வதில்லை."

"இன்னும் ஆறுவகை மைந்தர்கள் உள்ளனர். மனைவி தன்னை மணப்பதற்கு முன் பெற்றுக்கொண்டவன் கானீனன். தன்மனைவி தன்னைப்பிரிந்துசென்று செய்துகொண்ட இரண்டாவது திருமணத்தில் இன்னொருவனுக்குப் பிறந்தவன் பௌனர்ப்பவன். நான் உனக்கு மைந்தனாக இருக்கிறேன் என்று தேடி வந்தவன் ஸ்வயம்தத்தன். மைந்தனாக விலைகொடுத்து வாங்கப்பட்டவன் கிரீதன். கர்ப்பிணியாக மணம்புரிந்துகொள்ளப்பட்ட மனைவியின் வயிற்றிலிருந்தவன் சகோடன். ஒழுக்கமீறலினால் தனக்கு பிறபெண்களிடம் பிறந்த பாரசரவன். அவர்களும் மைந்தர்களே. எக்குலத்தில் பிறந்தாலும், எத்தகைய ஒழுக்கமுள்ள பெண்ணிடம் பிறந்திருந்தாலும் தன் குருதியில் பிறந்த மகவு தன் மைந்தனே. அவனை ஏற்கமறுப்பது மூதாதையர் பழிக்கும் பெரும் பாவமாகும். இவர்கள் அனைத்து நீத்தார்கடன்களுக்கும் உரிமைகொண்ட மைந்தர்கள். மூதாதையரால் நீர்பெற்று வாழ்த்தப்படுபவர்கள். அவர்களுக்கு தந்தை மனமுவந்து அளிக்காவிட்டால் நாட்டுரிமையும் சொத்துரிமையும் இல்லை என்பது மட்டுமே வேறுபாடு" என்றாள் அனகை.”

பார்த்திவப் பரமாணு கருபுகும் நாள் கர்ப்பதாரணம் எனப்படுகிறதுநான் யார்?’ என அது வினவுகிறது. ‘நீ இப்பிறவியில் இக்கருஎன உடல் விடைசொல்கிறது. அதன்பின் கரு ஊனையும் குருதியையும் உண்டு வளர்ந்துநான் இங்கிருக்கிறேன்என தன்னை அறிகிறது. அது முதல்மாதத்தில் அணுவுடல் கொண்டிருக்கிறது. இரண்டாம் மாதத்தில் புழுவுடல். மூன்றாம் மாதத்தில் மீனுடல். நான்காம் மாதத்தில் வால்தவளையின் உடல். ஐந்தாம் மாதத்தில் மிருக உடல். ஆறாம் மாதத்தில்தான் மானுட உடல் கொள்கிறது. அதற்கு மனமும் புத்தியும் அமைகிறது. முந்தையபிறவியின் நினைவுகளால் துயருற்றும் தனிமையுற்றும் கைகூப்பி வணங்கியபடி அது தவம்செய்யத்தொடங்குகிறது.”


ஆகவே ஆறாவது மாதத்தில் சீமந்தோன்னயனம் என வகுத்துள்ளனர் முன்னோர். அப்போதுதான் வயிற்றில் வளரும் கருவுக்கு கைகால்கள் முளைக்கின்றன. அது வெளியுலக ஒலிகளை கேட்கத்தொடங்குகிறது. ஒரு மனித உடலுக்குள் இன்னொரு மனிதஉடல் வாழ்கிறதென்று காட்டுவதற்காக அன்னையின் நெற்றிவகிடை இரண்டாகப்பகுத்து நறுமணநெய்பூசி நீராட்டுவதே சீமந்தோன்னயனம் என்கின்றனர். அன்று வேள்வித்தீ வளர்த்து திதி தேவிக்கு காசியபரிடம் பிறந்த ஏழு மருத்துக்களுக்கும் முறைப்படி அவியளித்து வரவழைத்து தர்ப்பை, மஞ்சள்நூல், குதிரைவால்முடி, யானைவால்முடி, பனையோலைச்சுருள், வெள்ளிச்சரடு, பொற்சரடு ஆகியவற்றில் அவர்களைக் குடியமர்த்தி அன்னையின் உடலில் காப்புகட்டி தீதின்றி மகவு மண்ணைத்தீண்ட நோன்புகொள்வார்கள்.”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்