https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 8 அக்டோபர், 2019

அடையாளமாதல் - 471 * இலையின் நிர்வாகம் *



ஶ்ரீ:


அடையாளமாதல் - 471

பதிவு : 471 / 656 / தேதி 08 அக்டோபர் 2019

* இலையின் நிர்வாகம் 


ஆழுள்ளம் ” -01
படிமத்தின் அலகு-06





இது ஆயிரம் வருடத்திற்கு மேலாக ஆழ்ந்து பரந்து வேரோடிய மரம் . அது தன் இலைகளை  உதிர்ந்து புதிதாக பிறப்பித்துக் கொள்வதை போல காலத்தினால் அழிந்து மீளவும் துளிர்க்கும் இலை பழையது புதிதென வெளிவருவது .அதன் மென்மையும் நெகிழ்வுமே அது அழிவதற்கு காரணமாகிறது . இலையுதிர் காலம் போல அது ஒவ்வொரு காலத்திலும் தன்னை புதுபித்துக் கொள்கிறது . இந்து மெய்ஞான மரபில் மரங்களுக்கான இடம் மிகப்பெரியதும் ஆழ்கருத்தும் கொண்டது .

ஓங்கி வளர்ந்துள்ள கண்களுக்கு புலப்படாத அதன் உச்சியை யூகிக்க, நவீன மனம் வேண்டும் என விழைகிறேன் . அறுபடாத தொன்மம் இன்று என்னவாக பொருள் கொள்கிறது என அறிய விழைகிறேன் . அதற்கான குருவை தேடுகிறேன். நிறுவன குருநிலைகளை நிராகரிக்கிறேன் . அவை புகழ்  மிக்கவைகளாக  ஆற்றல் உள்ளவைகளாக , நவீன மனத்தின் ஆழ்தொன்மங்களை நிறைவு செய்யும் கூற்றுக்களைக் கொண்டிருப்பினும் , ஒரு தலைமை மறைந்ததும் அது கருத்தை நிர்வகிப்பதை விட்டு விலகி  வங்கி இருப்புகளைத்தான் நிர்வகிக்கிறது . மெய்மைத் தேடல் அதை கடந்தது , எப்போதும் அடங்காத பசியை போன்றது , யாரையும் ஓரிடத்தில் அமைய விடாது  , எப்போதும் புதிய புரிதல்களினால் தன்னை புதுப்பித்துக் கொள்வதை  எப்போது விழைவது  என நினைக்கிறேன்.

ஆயிரமாண்டு  பாரம்பரியமுள்ள ஒரு சம்பிரதாய இயக்கத்தின் பொதுச் செயலராகப் பொறுப்பு வகிப்பது குறித்த அழைப்பு வந்தபோது , ஒரு நிமிடம் கூட சிந்திக்காது ஒப்புக்கொண்டது  அது பலமுள்ள   பதவியென்பதற்கன்றி  எனது தேடலின் விடையைக் கண்டடையும் வாய்ப்பை  அது அருகித் தரும் என்கிற நம்பிக்கையின் பொருட்டே அதை விழைந்து ஏற்றுக்கொண்டேன்

அது பல வித சிந்தனை மரபை சேர்ந்த அறிஞர்களை அறிமுகம் செய்து வைத்ததுஅது அவர்களுடனான தனித்து உரையாடும் வாய்பையும் அதற்கான இடத்தையும் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது . அதன் வழியாக அது எனக்கு பலவற்றை கற்ப்பித்தது . புதிய புரிதல்களை தோற்றுவித்தது. ஆன்மீக , வைதிக மற்றும் பாரமார்த்திக மரபின் தொடர்ச்சியில் இன்று உள்ள சிக்கல்களை அறிமுகப்படுத்தி வைத்தது . எங்கும் நிலவும் அரசியல் இங்கும் கீழ்மையென்றே உள்ளது என அறிவித்தது . பக்தி மரபின் விளைநிலங்களாக ஆலைய ஒழுங்கின்மை திடுக்கிட வைத்தது . அறநிலையத் துறையினரின் ஆலைய நிர்வாகம் முகம் சுழிக்ச்செய்தது . ஆலைய ஊழியம் செய்பவர்களின் தேவையும் அதில் நிலவும் பற்றாக்குறையும் நாளைய நிர்வாகத்திறகு ஆட்கள் இல்லாமலாக இருப்பதை குறித்த அச்சத்தை எழுப்பியது . சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்களிடையே காணும் மூர்க்கம் நிலைகுலைய வைத்தது . வேள்விகளை செய்பவர்களின் பொருளியல் வெறி நிலைகுலைய செய்தது.

இவற்றின்  ஒரு கூறே ஞானமரபில் நம்பிக்கையுள்ள எவரையும்  கசந்து வெளியேற செய்துவிடும் , இருப்பினும் இவற்றிற்கு இடையே இந்து மெய் ஞான மரபு அசைக்கப்படாது தனது பயணத்தை நிகழ்திக் கொண்டிருக்கிறது என்றால் அதன் வேர்களின் ஆழம் அதிசயத்தக்கது . இங்கு காணப்படும்  அத்தனை முரண்பாடுகளும் அதன் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு போக்கு என புரிந்து கொள்வதே அதில் இருந்து கொண்டிருப்பதற்கான வழி . அப்படித்தான் அது மஹாபாரதக் காலத்திலிருந்து நம்மை இங்குவரை அழைத்து வந்திருக்கிறது .

கோயம்புத்தூர் கீதை உரைக்கு செல்வது பற்றிய நினைவு ஒரு வாரம் படுத்தி எடுத்தது . அதை திறந்து கொடுத்த சாவி ஜெயமோகனின் கேள்வி பதில் பகுதியில் இருந்தது . அதையொட்டி செல்வதாக முடிவெடுத்துவிட்டேன். மரபை முற்றும் மறுக்காத ஒருவராக அவரை புரிந்திருந்தேன் . இந்தளவிற்கு அது பற்றிய கேள்விக்கு என்னை உட்படுத்திக் கொண்டது பழையயிலிருந்து பதியம் போடுவதைப் போல மரபை களைந்து கொள்ளாது , அதிலிருந்து புதிதாக கிளைத்து வருவதை ஆவலுடன் எதிர்நோக்கினேன்.

ஞானமரபின் ஆறு தரிசனங்களில் மதமாக மாறததுமாக சில உள்ளன . காலவெள்ளத்தில் மதங்களாக மாறியும் பிறகு கரைந்து போன மதங்கள் உண்டு . ஆனால் தரிசனங்கள் இன்றுவரை இருந்து கொண்டிருக்கின்றன . மதங்களே தரிசனங்களை கைமாற்றும் வேலையைச் செய்வது . வைதீகமான மார்க்கங்கள் இந்து ஞான மரபின் தொடர்ச்சி. அது வெற்று நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு காலம் காலமாக கைமாற்றபட்டு வரும் மூடர்களின் பாதையல்ல . ஒவ்வொரு காலகட்டத்திலும் அது தன்னை புதுப்பித்துக் கொண்டு வந்திருக்கிறது . எப்போதும் புதுப்பித்தல் மானுட திரளில்களுடன் முயங்கிய காலத்தால் தன்னை நிகழ்த்திக் கொள்கிறது .

அவற்றிலிருந்து தனித்த குருவாக சிலர் தோன்றி மரபான சிந்தனையில் மாற்றங்களை கோருவது எல்லா நூற்றாண்டிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது . புதிய அலைகளை உருவாக்கி விட்டு அவர்களும் அவர்களை பின்பற்றுபவர்கள் சில தலைமுறைகளில் காணமாலாகிறார்கள் . அதையொட்டியோ முற்றும் பிறிதொரு கோண்த்தில்  மரபை நோக்கிய அறைகூவலை தொடர்ந்து வைத்து வருகின்றனர் . அவை காலத்தில் முளைக்கும் விதைபோல மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறது . உரம் போல ஓங்கி வளைந்த மரத்தின் அடர்ந்த இலைத் தொகுப்பை உருவாக்குகிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 அழைப்பிதழ்