https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 10 ஏப்ரல், 2023

“கீதா முகூர்த்தம்” - 10. * அகவாழ்வு *

 



10.04.2023

கீதா முகூர்த்தம்” -  10.


* அகவாழ்வு *





பொருளியலில் வெற்றிபெறும் கட்டாயம் ஒருவரை சிறந்த தொழில்முனைவோராக உருவாக்குகிறது ஆனால் அதே காலகட்டத்தில் தனதுமறுமைபற்றிய சிந்தனையை அந்த சமயத்தில் அந்த வயதில் இருந்து என்பது மிக ஆச்சர்யமானது என நினைக்கிறேன். இன்றளவும் இருத்தலியல் சிந்தனைக்கு நேர் எதிரானது மறுமை பற்றி எண்ணம் . இரண்டும் ஒரே சமயத்தில் எழுவதில்லை. நிகழ்ந்தாலும் அதன் காலகட்டங்கள் வெவ்வேறானவை. தனது செயல்பாடுகள் வழியாக அவர் மெல்ல மெல்ல ஒன்றில் இருந்து மற்றொன்றிற்கு எடைமாற்றி வைத்து இடை நிற்காத பயணம் ஒன்றில் இருந்தார்அதன் வழியாக அடையும் புரிதலும், அந்தப்புரிதல் கெட்டிப்படும் சூழலில் அங்கிருந்து பிறதொரு செயல்பாடுகள் வழியாக அதையும் கடந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளும்போது அதுவே அவர் எனக்கு என் தந்தை வழியாக அளித்த மாபெரும் கொடையாக பார்க்கிறேன் . தாத்தாவின் பிற இரண்டு பிள்ளைகளும் அப்பாவிற்கு மூத்தவர்கள். அவர்களில் அப்பா மட்டுமே இலக்கிய வாசிப்பின் வழியாக வாழ்வியலில் அலைகழிக்கப்பட்டு மெல்ல தனக்கான இடத்தை அடைந்து நிறைவுற்றார். ஆனால் தாத்தா அவர் பக்தியில் இருந்து விலகிக் கொண்டிருக்கிறார் என மீது மிகுந்த அதிருப்தி கொண்டிருந்தார். அப்பாவின் இறுதி பதினைந்து ஆண்டுகள் அவரை மேலும் ரசனையுள்ளவராக மாற்றிக் கொண்டே இருந்தது. இறுதி கணம் வரை ஒரு பத்து வயது முதிரா சிறுவனின் கண்களால் இந்த உலகை கண்டு ரசித்தபடி மண்மறைந்தார்


ஆரம்ப காலத்தில் அப்பா எனக்கு மிக சிக்கலானவர் . பளபளக்கும் கெட்டி அட்டை போட்ட ரஷ்ய நாவல்களில் திளைத்தவராக வீட்டிற்கு அப்பால் எங்கோ இருந்தார் இது அவரை பற்றிய எனது முதல் புரிதல். இலக்கிய வாசிப்பு அவரை மிக நேர்த்தியாக வடிவமைத்திருந்தது. ஜெயகாந்தன், இந்திராபார்த்தசாரதி கி.ரா , தீபம் பார்த்தசாரதி, பிரபஞ்சன் என்கிற இலக்கிய ஆளுமைகளுடன் அவருக்கு இருந்த நெருக்கம். தகழி சிவசங்கரனின்கயிறுநாவல் பற்றி நண்பர்களுடன் பேசி கேட்டிருக்கிறேன். அப்பா வைத்திருந்த புத்தக அடுக்குகளில் நான் படித்த முதல் மிக சிறிய புத்தகம் முகமது பஷீரின்எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது”. அந்த சிறுகதையை என்னுடைய எட்டு ஒன்பது வயதில் படித்தேன். மஞ்சளடைந்து அப்பளம் போன்ற பேப்பர் கொண்ட மெல்லிய கையடக்க புத்தகம் . அதை யாருக்கும் தெரியாமல் பள்ளிக்கூடத்திற்கு எடுத்து சென்று படிக்க முயற்சித்த நினைவு . அப்பாவின் பல புத்தகங்களை படிக்க முயற்று முடியாமலான பிறகும் நான் ஏறக்குறைய முடித்த ஒரே புத்தகம் அது





தாத்தா உருவாக்கி வைத்த மொத்த சாமராஜ்ஜியமும் நான்கின் அடைப்படை கொண்டது . வெற்றிகரமான வியாபாரம் , ஆன்மீகம்,தருமம், கோவில் கைய்ங்கர்யம் என மிகத் தெளிவாக அவை வரையறை செய்யப்பட்டிருந்தது . அவற்றை வெறும் கருத்தியலாக  எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொன்றிலும் அதன் செயல்பாட்டிற்குள் சென்றார். அன்றாடங்களில் உழலும் சராசரிகளை தவிர்தது தனக்கான பாதையை கண்டடைந்தார். இன்றளவும் அவர் பல எளிய மக்களும் நினைகூறப்படுவது என்பது இங்கிருந்து துவங்கியிருக்கலாம்.


வியாபார நிமித்தமாக மும்பை செல்லும் வழியில் அவர் தற்செயலாக கண்டது ,அல்லது நீண்ட நாள் கனாவக இருந்த பண்டரிபுரம் சென்று பாண்டுரங்கங்கனை சேவித்தது . முழுமையான திறப்பு அவருக்கு அங்கே நிகழ்ந்திருக்க வேண்டும் . மூத்த பிள்ளைக்கு பாண்டுரங்கன் எனப் பெயர் போட்டிருந்தது அன்று நிலவிய வட மற்றும் தென்னாற்காடு மாவட்டங்களில்  பெருகி இருந்த புஷ்டி மார்க்க பக்தி வழிபாடு அவருக்கு ஆன்மீகம் பற்றிய புரிதலை ஆரம்பம் முதலே கொடுத்திருக்க வேண்டும். அவரது பக்தி ஆசாரத்தை மையப்படுத்தியதல்ல. அசைவத்தில் மீன் மிக இஷ்டமான உணவு. தனது இறுதி காலம் வரை நிறைந்து வாழ்ந்தார் மதிய உணவுடன் எந்த காயையாவது மயக்கி வெல்லம் இட்ட பச்சடி வேண்டும் . அம்மா தினம் என்னத்த செய்ய என அலுப்புடன் வேக வைத்த கருணைகிழங்கு கூட பச்சடியாக வைத்ததுண்டு அதை அமர்ந்து கண்களை மூடியபடி ரசித்து உண்பதை பார்த்திருக்கிறேன் அதற்கு பாட்டி ஆதிலக்ஷ்மி அம்மாளிடம்அதான் கண் தெரியலையே எதுக்கு கண்ணை முடி சாப்பிடனும்என கண்டனத்தை வாங்கியதுண்டு


காலை உணவு மூன்று இட்லி ஒரு கப் சர்க்கரை இட்ட கெட்டித் தயிர். இரண்டு இட்லிகளை அன்றைய தொடுகையுடன் பின்னர் ஒரு இட்லி அந்த தயிரில் ஊறவைத்து . நாங்கள் யாராவது அருகில் சென்றால் அதிலிருந்து ஒரு விண்டு எடுத்து கை நீட்டுவார் நாங்கள் குமட்டி அளறிக் கொண்டு விலகி ஓடுவோம். அது என்ன ரசனை என நான் நினைத்ததுண்டு . மிக சமீபத்தில் பண்டரிபுரம் சென்ற போது சர்க்கரை இட்ட தயிர் ஒரு ஹோட்டல் மெணு . தாத்தவிற்கு அந்த உணவு பழக்கம் இங்கிருந்து துவங்கியிருக்க வேண்டும். அவர் தனது மனத்தால் எப்போதும் பண்டரிபுரத்தில் இருந்தார் , அதிலிருந்து வெளிநே வரவில்லை. காக்கித் துணி வைத்து தைத்த கெட்டி அட்டையிட்ட முகப்பில் மஞ்சளும் குங்கும்மும் பூசப்பட்ட அழுக்கானபக்த விஜயம்புத்தகம் அவரு அருகில் எப்போதும் இருந்தது. அது பாண்டுரங்கனை எல்லாமாக கொண்ட பக்தர்களின் சரித்திரம். பல பெயர்களை நான் அங்கிருந்து அறிந்திருக்கிறேன். நாமதேவர், துக்காரம், மீராபாய், சந்திரபாஹ போன்று . மீராபாய் அக்கா அவருக்கு தினம் அந்த புத்தகத்தில் இருந்து மீள மீள அந்தக் கதைகள் அவருக்காக வாசிப்பதை பார்த்திருக்கிறேன். அந்த மொத்த புத்தகமும் பல நூறு முறை வாசிக்கப்பட்டது. அக்கா மீராபாய் மெல்லிய குரலில் அதை தினமும் படிக்க பிரம்பால் பிண்ணப்பட்ட மர ஈசிசேரில் படுத்து கொண்டு கைகளை தலைக்கு மேல் குவித்த கண்ணீர் மல்கி மணிக் கணக்கில் கேட்டுக் கொண்டிருக்கும் காட்சியை பார்க்காமல் யாரும் அந்த நடை வழியாகத் தெருவிற்கு செல்ல முடியாது. அன்றைய வாசிப்பு முடிந்ததும் தாத்தா அந்த புத்தகத்தை வாங்கி தலைசூடி கண்களில் ஒற்றி மார்பில் வைத்துக் கொண்டு , இடுப்பில் இருந்து நாலணா கொடுப்பார். நான் மீராயிடம் கேட்பதுண்டுஏன் படித்து முடித்தவுடன் உனக்கு காசு கொடுக்கிறார்என்றதற்கும்ம்…. அது படிக்கிற புண்ணியம் எனக்கு வரக்கூடாது எல்லாம் அவருக்கு மட்டும்என அங்கலாய்த்து பார்த்திருக்கிறேன். ஆனால் அது அப்படி இல்லை என இன்று புரிகிறது அவர் யாரிடமிருந்தும் இலவசமாக எதுவும் பெற்றுக் கொள்ளவதில்லை.


பண்டரிபுரப் பயணம் அவரது பகத்தியில் புதிய பரிமாணத்தை கூட்டியது. அங்கிருந்து அவர் பெற்றுக் கொண்ட பண்டரிபுரத்து பாணி பஜனை சம்பிரதாயம் அவரை ஒருவித பித்து நிலைக்கு கொண்டு சென்றிருந்தது. ஒவ்வொரு வருட ஆஷாட ஏகாதசி அன்று பண்டரிபுர பஜனை இரண்டு நாள் வீட்டில் நடிக்கப்படும். அது ஒரு வித நிகழ்த்துக் கலை. ஆனந்தம், கருணை, விரகம்,பித்து, வெறி, விளையாட்டு என அத்தனை ரசத்தையும் அவர்கள் அனுபவத்தார்கள்.


நான்….அது அந்தக் காலம்…………என கடந்த கால நிகழ்வை அசைபோடவில்லை . இதோ இன்று இந்த பதிவை எழுதுகையில் அந்த காலத்தில் இருந்து கொண்டிருக்கிறேன்.  


வீட்டிற்கு வெளியே ரோட்டில், கோவிலில் இருந்து வந்திருந்த இரண்டு வெண்கொற்றக் குடையின் கீழ் தாத்தா பாட்டி நாமதேவர் வேஷமிட்டு தம்புராவுடன் தாத்தா ஆட பக்கத்தில் வெட்கி கூசி நின்ற பாட்டி சுற்றி நூற்றுக் கணக்கானவர்கள் வானத்திற்கு பூமிக்குமாக குதிக்கும் அந்த காட்சி நினைவில் எழுகிறது. அது புகை படமாக அப்பா எடுத்து அதன் பின் எங்கோ அதை பார்த்திருக்கிறேன். அது தான் பாட்டி கலந்து கொண்ட கடைசி பஜன். அந்த வெற்றிடத்தை அதற்கு அடுத்த வருடம் உணர்ந்தது நினைவிருக்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...