https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

செவ்வாய், 29 ஜனவரி, 2019

* பாவனை *

ஶ்ரீ:

பதிவு : 601 / தேதி 29 ஜனவரி 2019

* பாவனை



அஞ்சலி - 2






இந்த வலைப்பூ தளம் துவங்கப்பட்ட போது இதை ஒரு டைரி குறிப்புபோல வைத்துக்கொள்வது என முடிவுசெய்திருந்தேன். மனதிற்கு அனுக்கமான, நெகிழும் அல்லது என்னை வருத்தப்பட வைத்த நிகழ்வுகள் மற்றும் அதை நிகழ்த்திய மனிதர்களை குறித்து எனது எண்ணங்களை அதில் தொகுத்து வைப்பது அனைத்தும், அவர்களுக்கு நான் சொல்ல விழைந்து , முடியாது போனது  . எது ஒன்றும் அது நிகழும் காலத்தில் உரையாட முடியாத சூழல் எழுகிறபோது , எனக்குள் ஆழ்ந்து , அவற்றைக் கூர்ந்து அவதானித்து , எனக்கான புரிதல்களை பெற முயற்சிப்பது எனது வழமை. காரணம் அவை மனதில் ஓயாது எழுப்பிக் கொண்டேயிருக்கும் காத்திரமான கருத்துக்களை கடக்க எனக்கு அது அவசியமாகிறது.

எதிர்நோக்காத நேரத்தில் தாக்குதலுகுள்ளாகி மிகுந்த வருத்தம் அடைகிறபோது. ஒரு சொல்லில்லாது அங்கிருந்து வெளியேறிவிடவே விழைவேன். அதிலிருந்து மீளவும், தன்னிலை குறித்து எவரிடமும் உரையாடல்களுக்கு வாய்ப்பில்லாது போகும் போது அது குறித்த அவதானிப்புகளை ஆழ்மனத்திலிருந்து  திரட்டிக் கொள்ள முயல்வேன் . அதிலிருந்து எழும் எனக்கான புரிதல்களை இந்த வலைப்பூ தளத்தில் பதிந்து வைக்கும் வழமை , ஓயாது மனதை அரிக்கும் எண்ணப் பெருக்கில் இருந்து வெளியேறும் வழியாக எனக்கு எப்போதும் இருந்திருக்கிறது .மிகுந்த உளச்சோர்வு ஏற்படுகிற போது ,அதற்கும் ஒரு இடைவெளி விழுந்தது விடுவதுண்டு.

அத்தகைய உளச்சோர்விலிருந்து என்னை மீட்டுக் கொள்ள ஜெயமோகனின் எழுத்துக்கள் பெரும் உத்வேகமளிப்பவை . எப்போதெல்லாம் அவரின் எழுத்துக்களில் இருந்து எனக்கான கருத்தியல்களை அடைகிறேனோ, அப்போதெல்லாம்  அவற்றை மீளவும் இதில் பதிவதை வழமையாக கொண்டிருக்கிறேன் .

சமீபத்தில் நிகழ்ந்த எனது அனுக்க நண்பன் நம்பிராஜனின் எதிர்பராத மரணம், ஒரு திடுக்கிடலை கொடுத்திருந்தது. வலி மிகுந்த பயணத்தின் வழியாக வாழ்வியலின் யதார்த்தங்களை புரிந்து, அதனால் தாக்கப்பட இயலாத ஒரு இடத்திற்கு வந்துவிட்ட பின்னரும் , அவனது மரணம் எனக்கு உளச்சோர்வை கொடுத்திருந்தது. அம்மாவின் மரணம் வாழ்வியலின் சில சிக்கலான புதிர்களை கலைந்து கொடுத்தது. அதன் பின்னர் எனது வாழ்க்கை முறையை இன்னமும் மிக எளிதான ஒன்றாக மாற்றிக்கொண்டேன். பரபரப்பான வாழ்க்கையை பிணைக்கும்  அனைத்து விதமான சரடுகளை கலைந்த பிறகு . எஞ்சியிருப்பவை ஒரு பாவனை மட்டுமே

நம்பியின் மரணம் அந்த பாவனை சரடுகளையும் அறுக்கவல்லது . அதையும் கலந்து கொள்வது முற்றாக அணைத்திலிருந்தும் ஒழிவது. நாளை என ஒன்றை இன்னும் ஒன்றுமில்லாமல் ஆக்குவது. நான் அவனுடன் விவாதித்து வந்தவைகளை அவனில்லாத சூழலில் அவதானிக்க முயலுவது , என்னை இன்னும் எளிமை படுத்தும்  என்றே நினைக்கிறேன்.

நிலையற்ற மானுட வாழ்கையில் எதை ஒருவன் தனது வாழ்வியல் வெற்றியாக கருதவேண்டும் என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது . “வல்லவன் வகுத்ததே வாய்க்கால்என்பது போன்ற கருதுகோள்கள் , வெற்றியை அடைந்த ஒருவன்  தொடர்ந்து அந்த வல்லமையை தக்கவைத்தலில் அவனது சொல் நிலைக்கலாம் . ஆனால் அதையே அவனும் தனது இறுதிக் காலம்வரை சொல்ல இயலுவதில்லை. வாழ்வியலின் போக்கை புரிந்து கொள்ள தத்துவமும், கருத்தியலும் தேவையாகிறது. அது ஒருவனுக்கு ஏற்படும் காலம்வரை அவனுடன் எதைக் கொண்டும் உரையாட இயலாது . வாழும்வரை தனிமனித வாழ்கையில் இருந்து அவன் பெறும் அனுபவத்தின் வழியாக அவன் அடையும் பரிபக்குவத்திற்கு விட்டுவிடுவதை தவிர வேறு வழிகளில்லை .

யார் என்ன சொன்னாலும் வெற்றி என்பது அடைவதில் இல்லை , விடுவதில் இருக்கிறது என்கிற புரிதலும் , வாழ்வியலில் உள்ள அழகியலை அனுகிப் பார்க்கும் கண்ணோட்டத்தால் ஏற்பட்டது . இதில் எனது அவதானிப்புகளை தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன் . வெற்றி அடைவதில் இருந்து எழுவதில்லை விடுவதில் இருக்கிறது . அல்லது அது ஒருவனிடமிருந்து விலகும் போது அதை புரிந்து கொள்வதில்  நிகழ்கிறது . அது மிகுந்த வலிகள் நிறைந்த பாதையாக இருந்தது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...