https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 6 அக்டோபர், 2018

அடையாளமாதல் - 408 * அரசியலின் கருத்தியல் *




ஶ்ரீ:



பதிவு : 408 / 571 / தேதி 06 அக்டோபர்   2018


* அரசியலின் கருத்தியல் 



எழுச்சியின் விலை ” - 09
முரண்களின் தொகை -01 .



சுகுமாரன் எழுப்பிய கேள்விகளை நான் மௌனமாக எதிர்கொள்ள , யார்யாரெல்லாமோ எழுந்து பதில் சொல்வது தனக்கு அவமரியாதை என்று கூட உணரமுடியாதவனின் பரிபவத்தை நினைக்கையில் இதில் எங்கும்  வெற்றி என ஒன்றில்லைஇதில் திளைக்க ஏதுமில்லை. இது குழுந்தை கைகளில் இருந்து இனிப்பை பறிப்பது. பெருமைதரத் தக்கதல்ல. சுகுமாரன் எனக்கு நிகரல்ல என்கிற இடத்திற்கு என்னைவிட்டு விலகிப்போனான் . அவனது நேற்றைய தவறுகளால் வீழ்ந்த பின் , அவனை வெற்றி கொள்ளவதைப் பற்றி எந்த சிந்தனையும் எனக்கு எழவில்லை . மாறாக இது ஊழ் . நாளை நானும் இதேபோல ஒரு சூழலில் கையறு நிலையில் நிற்க வேண்டி வரும் என எனக்குள்ளே யாரோ சொல்வது கேட்டது . அரசியலில் திறமையை  விட காலமே எல்லோர் மீதும் ஏறி  நின்று இரக்கமற்று தன்னை நிறுவிக்கொள்கிறது. வெற்றி என்பது அது நம் மீது கொள்ளும் கருணை மட்டுமே  . நான் அவனை பார்த்தபடி இருந்தேன் .அவன் சிந்தனையில் ஓடுவது என்னவாக இருக்கும் என்பதை என்னால் கண் கொண்டு பார்க்க முடிந்தது.

அவனது கேள்விகளுக்கு மேடை நிர்வாகிகளுக்கு   தாங்கள்  விளக்கம் சொல்கிறோம் என்கிற பாவனை மட்டுமே இருந்தது . ஆனால்  சுகுமாரன் மனம் அனைத்து நிர்வாகிகளும்  என் பின்னால் அணிதிரண்டு விட்டதாக பிழைக் கணக்கிற்குள் சென்று விட்டது . ஆனால்  ஊழ் , அது இன்னும் நிகழவில்லை  அவர்களை எனது ஆதரவாளர்களாக இனிமேல்தான்   வென்றெடுக்க வேண்டும் . அதற்கு இன்னும்  கடுமையாக உழைக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். அடுத்து என்ன என்கிற எண்ணத்தில் இனி எதிர்நிலைப்பாட்டாளர்கள் எண்ணங்களை  கணிசியாது , அடுத்து நான் திட்டமிட்டு வைத்திருந்த இலக்கை நோக்கி நகரத் துவங்கினேன்.

இதில் விந்தை அந்த ஒன்றரை நாள் கூடுகை முழுவதிலும் என்னை சம தூரத்தில் வைத்துக்கொண்டு  தங்களுக்கு விலையில்லை  என்பது போல ஒரு பாவனையில் பங்கு பெற்றவர்களும் , அந்த கூடுகையின் இறுதியில் சுகுமாரன் வந்து சேர்ந்த அதே எண்ணத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். பேசப்படாத ஒன்று , ஒரு இழையைப்போல அனைவரையும் ஊடுருவி அவர்களை ஒற்றை தொகுப்பாக  மாற்றியிருந்தது . அன்று அதை நான் அரசியலின் நுண்மை வெளிப்பாடு என்கிற புரிதலைத்தான் கொண்டிருந்தேன் . ஆனால் இங்கிருந்து பார்ககையில் அது ஒற்றை மனப்பரப்பிற்கு இட்டுச்செல்லும் கண்களுக்கு புலனாகாத  கருத்தியல் ஒற்றுமை ஒன்று நிகழ்ந்திருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது. அதை நான் அரசியல் பிழை மதிப்பீடுகள் என்றும் அது அதன் நிகழ் பாதையை முற்றாக மாற்றக்கூடியது என்றும் நினைத்திருந்தேன்  . அன்று நிகழ்ந்த மாற்றமே என்னை இப்போது ஆலோசனை கூட்டத்தை கூட்டும் வாய்ப்பிற்கு கொண்டுவிட்டு , அங்கு வேறு பாதைகளை திறந்து கொடுத்தது .

அது என்னை எங்கு கொண்டு செல்லப் போகிறது என்பதை நான் அறியேன் . ஆனால் வாய்ப்பு கிடைத்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என எண்ணியிருந்தேனோ அதையே செய்யத் துவங்கினேன். என் எதிர்நிலைப்பாட்டாளர்களும் அதில் பங்கு பெற்றேயாகவேண்டும் என்கிற நிர்பந்தத்தை ஏற்படுத்தி விட்டது வேடிக்கையானது. அல்லது அவர்களில் சிலர் என்னைப் போல தங்கள் காலத்திற்கு காத்திருந்தார்கள் எனில்  அதில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றில்லை..

எப்போதும் என் எதிர்நிலைப்பாட்ளார்களை முற்றாக வெளியேற்றும் திட்டம் ஏதும் என்னிடமில்லை . கட்சி அரசியலில் அது வேண்டாத வேலை என்றே இப்போதும் நினைக்கிறேன். எல்லோரையும் வெளியேற்றிவிட்டு நான் மட்டும் தனியாகவா இதனுள்ளேஎன்ன செய்யப் போகிறேன் . ஆனால் அரசியல் போதாமையால் சுகுமாரனை போன்ற சிலர்  அறியாது செய்தது அவர்களை தன்னிலை இழக்க வைத்துவிட்டது .அடுத்து என்ன நிகழும் எனபதை அப்போது நானும் அவதானிக்கவில்லை .என்னை பொறுத்தவரை அடுத்து நடக்கவேண்டியவைகள் என்கிற முடிவுகளை எடுத்தாலும் அதற்கு அனைத்து தரப்பின் அனுமதி  பெறுவது எப்படி என்பதே எனது எண்ணமாக இருந்தது . இந்த கூடுகைக்கு பிறகே அடுத்த நகர்வுக்கு முயற்சியை துவக்குவது பற்றி எண்ணியிருந்தேன் .

அடுத்த நகர்வு மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகளை நியமிப்பது . முதல் நிலையிலேயே இதற்கு வாய்ப்புகள்  இல்லை .காரணம் தலைவர் அதை ஒருநாளும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை . கட்சிக்குள் பெரும் சிக்கல்கள் பதவி கொடுக்கப் படும்  காலத்தில்தான் உருவாகி பேருரு கொள்ளும் என்பதை தனது அனுபவத்தில் கண்டவர் . அதை செய்ய அவர் என்னை அனுமதிப்பார் என்பது நினைக்க இயலாதது . அதை செய்யாது போனால் எனக்கு எதிரகாலமென ஒன்று இல்லாமலாகும் , ஆனால் அதை செய்துதானாக வேண்டும்.

நன்மையையும் தீமை குறித்து அச்சப்படவோ அவதானிக்கவோ இப்பொது பொழுதில்லை . எப்போது செயற்குழு கூடுகை எனக்கு வெற்றியை கொடுத்ததாக ஒரு தோற்றம் எழுந்தத்தோ அப்போதே இதற்கும் நாள் குறித்தாகிவிட்டது . அதன் சூடு குறைவற்குள்ளாக நினைத்ததை முடித்தாக வேண்டும. இது ஊழின் தருணம் அதில் வந்து சிக்குண்டது என் விழைவினால் , அல்லது கிடைத்த வாய்ப்பினால் . அதற்கான முயற்சியில் தீவிரமாக செயல்படத்துவங்கினேன் . அந்த செயற்குழு கூடுகை எனக்கு அந்த அதிகாரத்தை வழங்கிருந்தது

அன்றே அங்கு கூடி இருந்த உறுப்பினர்களின் கையெழுத்தோடு அவர்களை அதிகாரப்பூர்வ செயற்குழு உறுப்பினர்களாக ஆகிவிட்டிருந்தேன் . சுகுமாரனின் முறையற்ற எதிர்ப்பும் அதன் பின் விளைவுகளும் எனக்குள் ஒரு கடுமையை உருவாக்கி இருந்தது . அவனது மடமையான முயற்சி எனக்கு சர்வ அதிகாரத்தையும் பெற்றுக்கொடுத்து விட்டது . இதை போன்ற ஒரு அரசியல் பிறழ்வை எப்படி பிறருக்கு அரசியல் வாய்ப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன என்பதை கண்கூடாக பார்த்தேன் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...