https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

திங்கள், 29 அக்டோபர், 2018

* வெண்முரசு கூடுகை 20 எனது பதிவு *

ஶ்ரீ:


பதிவு : 576 / தேதி 29 அக்டோபர்   2018

* வெண்முரசு கூடுகை 20 எனது பதிவு   * 




ஒரு நல்ல இலக்கிய படைப்புக்கு அர்த்தத்தின் ஆதிக்கமோ அல்லது அதற்கு ஏதாவது பட்டயமோ கட்டித் தொங்கவிட வேண்டும் என்ற தீவிரமோ இருக்கக் கூடாது’. ‘கலைஞன் பெற்றெடுக்கிறான், விமர்சன்ப் பாதிரிகள் பெயர் சூட்டுகிறார்கள் என்பார் ஜி.கே.செஸ்டர்டன்என்கிறார் இந்திரா பார்த்தசாரதி .

மேலும் சிறப்பான படைப்பு எதுவாக இருந்தாலும் அதற்குள் இன்னொரு பிரதி இருக்கத்தான் செய்யும். அந்தப் பிரதியைத் தேடுவது வாசகனுடையதே தவிர அதைப் படைத்த கலைஞனுடையதன்றுநான் கூறுவது மேல்நாட்டினின்றும் இறக்குமதியான கருத்து இல்லை. நம் நாட்டு அபிநவகுப்தாவும் தொல்காப்பியரும் சொல்லியிருக்கிறார்கள்த்வொனி’, உள்ளுறைஎன்று நம் இலக்கண மரபில் கூறப்படுவையெல்லாம், ஒரு வகையில் பார்க்கப்போனால், படைப்பின் உட்பிரதிகள்தாம். அவை எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம்.

மாத்ரி, மனிதர்களுக்கு இறையாற்றல்கள் அளித்திருக்கும் வாய்ப்பு ஒன்றுள்ளது. இறப்பை தேர்ந்தெடுப்பது. இறப்பின் வழியாக அழிவின்மையை அடையமுடியும் என்று அறியாத மானுடரே இங்கில்லை. ஒவ்வொருவரும் அகத்தே காணும் கனவு அதுதான்.”

ஆனால் இந்த எளிய உடலை, இது அளிக்கும் இருப்புணர்வை, இதன் உறவுவலையை விடமுடியாமல் தளைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒளியை நோக்கியே ஒவ்வொரு அகமும் திரும்பியிருக்கிறது. கனவுகண்டு ஏங்கியபடி கண்ணீர் விட்டபடி மெதுவாக இருளை நோக்கிச் செல்கிறது. மீளமுடியாத இருள். எல்லையற்ற இருள்வெளி.”

அவன் உடல் விதிர்த்தது. "என் நினைவறிந்தநாள் முதல் அந்த இருளை நான் கண்டுகொண்டேன். ஆகவேதான் ஒவ்வொருநாளும் நான் ஒளியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறேன். ஒளியை அன்றி இந்த மண்ணில் எதையும் நான் ஒருபொருட்டாக எண்ணியதில்லை.”

வெண்முரசு-2:மழைப்பாடல் அத்துடன் என்னால் வெண்முரசு - 19 “திசைதேர் வெள்ளம்பொருத்திப் பார்க்காமல் இயலவில்லை. அவன் தந்தை அவனிடம்புரவி அறிவனவற்றை மானுடர் அறியவியலாது. விலங்குகள் கொள்ளும் அறிவை மானுடரால் விளக்கவே இயலாது. அவை பேரன்பால் மெய்யுணர்கின்றனஎன்றார். மெய்மையை நோக்கி செல்லும் மிக எளிய வரிகளாக இவை தெரிந்தாலும் , ஆழத்துடன் தொடர்புள்ளது நினைக்கையில் இதை எளிதில் என்னால் கடந்து செல்ல இயலவில்லை .

அனிலையை அவன் தொலைவிலிருந்து நோக்கிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு முறையும் அந்தத் திகைப்பை அடைவான். அதற்குள் வாழ்வது எது? வலியும் நோயும் பசியும் இறப்பும் அதற்குமுண்டு. ஆனால் துயரில்லை, கவலையுமில்லை. மானுடரை விட தெய்வங்களுக்கு உகந்த ஊர்தியாக அது இருப்பது அதனால்தான் போலும். மானுடரில் நோக்கிலேயே அடிமையும் மிடிமையும் கொண்ட புல்லர்களை அவன் கண்டதுண்டு. புரவிகளில் நோயுற்றும் உணவின்றியும் நொய்ந்தவற்றையே கண்டிருக்கிறான். நிமிர்விலாத புரவியென ஏதுமில்லை. கால்மடித்து ஒருக்களித்துப் படுத்து தலைநிமிர்ந்து இளவெயில் காய்ந்து விழிமூடி அசைபோட்டுக்கொண்டிருக்கும் புரவியின் அழகு அவனை விழிநீர் கசிய வைப்பதுண்டு. பேரரசர்கள் அரியணையில் அமர்கையில் மட்டுமே எழும் நிமிர்வு அது.

நான்கு கால்கள் கொண்டவை எனினும் யானையும் பசுவும் எருமையும் அத்திரியும் கழுதையும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை. அவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது புரவி. பிற விலங்குகளின் தசைகள் முரசில் இழுத்துக் கட்டப்பட்ட தோல் போன்றவை. புரவியின் தசை வில்லில் முறுகி நின்றிருக்கும் நாண். பிற விலங்குகளை நிற்கவைத்தோ அமரவைத்தோ படுக்கவைத்தோ மருத்துவம் பார்க்கலாம். புரவி நின்றிருக்கையிலும் விரைந்தோடிக்கொண்டிருப்பதென்றே அதன் உடல் அமைந்திருக்கும். விரைந்து புண் ஆறும். ஆறாப் புண் உயிர்குடித்துச் செல்லும். புண்பட்ட, நோயுற்ற புரவி அதுவே தான் உயிர்வாழவேண்டுமென்று எண்ணவேண்டும். அப்புண்ணை குளிர்விக்க வேண்டுமென்று அதனுள் வாழும் தெய்வங்கள் கருதவேண்டும்.

புரவி மானுடரைப்போலவே எண்ணங்களாலானது. ஐயமும் தயக்கமும் ஆறாச் சினமும் கொண்டது. ஆனால் வஞ்சமற்றது, ஆகவே துயரற்றது. மறதி இல்லாதது, ஆகவே கடந்தகாலமற்றது. “புரவி பேணுபவன் ஒவ்வொரு கணமும் உணரவேண்டியது ஒன்றுண்டு, தன்னைவிட உடலால் உள்ளத்தால் உள்வாழ்வதனால் பலமடங்கு மேம்பட்ட ஒன்றுடன் அவன் உரையாடிக்கொண்டிருக்கிறான். மண்ணில் பெருகி நிறைந்துள்ள உயிர்க்குலங்கள் பிரம்மத்தின் வடிவங்கள். எண்ணிலாக் குணங்கள் நிறைந்த பிரம்மத்தின் ஒவ்வொரு இயல்பும் ஓர் உயிர். மானுடன் பிரம்மத்தின் விழைவின் ஊன்வடிவு. புரவி அதன் விசையின் உயிர் கொண்ட உடல். புரவி வடிவிலேயே காற்று புவியில் தன்னை உடலென நிகழ்த்திப்பார்க்கிறது. எண்மூன்று மாருதர்களும் புரவியுடலில் குடிகொண்டுள்ளனர் என்றறிக!” என்றார் தந்தை.

-நிகழ்வனவும் நிகழ்ந்தனவும் வருவனவும் ஒரு சரடின் மூன்று முடிச்சுகள்போல. சரடின் மேல் ஊர்ந்து செல்லும் எறும்புக்கு ஒன்று பிறிதொன்றுடன் தொடர்புடையதல்ல. முழுச் சரடையும் நோக்குபவருக்கு அது ஒன்றே என்று அவன் தந்தை ஒருமுறை சொன்னார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...