https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

சனி, 21 செப்டம்பர், 2024

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை


புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்திக்கொண்டிருக்கிறார். மாதம் ஒருமுறை நிகழும் கூட்டங்களிள் தொடர்ச்சியாக வெண்முரசு வாசகர்கள் கலந்துகொள்கிறார்கள். முழுமையாகவே அவருடைய செலவு. சென்னை வெண்முரசுக் கூடுகை முழுமையடைந்து நின்றுவிட்டது. கோவை வெண்முரசுக் கூடுகை நடைபெறுகிறது. இணையத்தில் பல குழுக்களில் வெண்முரசு தொடர்ச்சியாக விவாதிக்கப்படுகிறது.

அரிகிருஷ்ணனின்  தந்தையும் இலக்கிய வாசகர். ஜெயகாந்தனின் நண்பர். கலைமகளில் கதைகள் எழுதியவர். ஜெயகாந்தன் அவர்களின் இல்லத்துக்கு வந்திருக்கிறார். தீவிரமான வைணவக்குடும்பமும் கூட. அவருடைய அறுபதாவது அகவைநிறைவு விழாவிலும் நான் உரையாற்றியிருக்கிறேன். (வைணவங்கள் என்னும் தலைப்பில்)

வெண்முரசு சந்திப்பின் ஐம்பதாவது நிகழ்வில் நான் கலந்துகொண்டேன். 12 செப்டெம்பர் 2014 அன்று எழுபத்தைந்தாவது சந்திப்பு. நான் வந்தாகவேண்டும் என்றார்.எனக்கு பல நேர நெருக்கடிகள். ஆயினும் அந்நிகழ்வை விட மனமில்லை. ஏனென்றால் எனக்கு எந்நிலையிலும் விடாப்பிடியாகச் செய்யப்படும் செயல்கள் மேல் பெருமதிப்புண்டு, அவையே மெய்யான சாதனைகள் என்பது என் எண்ணம். நான் அத்தகையவன், எடுத்த செயல்களை விடுவதில்லை. உடன் எவர் என்பதையும் நோக்குவதில்லை.

நான் மதுரை புத்தகவிழாவில் இருந்தேன். மதுரை புத்தகவிழாவை விழா என்று சொல்லலாம், விற்பனை என்று சொல்லமுடியாது. நல்ல கூட்டம். வெளியே பட்டிமன்றத்தில் அரங்கு நிறைந்து அமர்ந்திருந்தனர். விற்பனை மோசம் என்பதற்கும் கொஞ்சம் கீழே. நான் அங்கிருந்த மூன்றுநாட்களிலும் மாலை ஆறுமுதல் எட்டு வரை ஓரளவு வாசகர்கள் வந்து நூல்களை வாங்கினர். சென்ற ஆண்டும் விற்பனை மிகக்குறைவே. ஒரு புத்தகவிழா என்பது விற்பனை மட்டுமல்ல, ஓர் இலக்கிய நிகழ்வும்கூட என்ற அளவில்தான் பங்கேற்றோம்.

மதுரை புத்தகவிழாவில் இருந்து 11 ஆம் தேதி இரவே கிளம்பி புதுச்சேரி சென்றேன். இரவு 1030க்கு பேருந்து. ஆனால் கிளம்பியது 11 30க்கு. குளிர்சாதனக் கருவி பழுது என்றனர். மதுரையில் இருந்து இதுவரை நான் பழுதாகாத ஒரு பேருந்தில் ஏற நேர்ந்ததே இல்லை. பிற இடங்களில் பழுதாகிவிட்ட வண்டிகளை நிறுவனங்கள் மதுரைக்கு அனுப்புகிறார்கள் என நினைக்கிறேன். படுக்கை வசதி கொண்ட பேருந்து. ஆகவே நான் படுத்ததுமே தூங்கிவிட்டேன். வழியில் எங்கோ இறங்கிப் பார்த்தபோதும் இருவர் வண்டிக்கு ஏதோ பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள்.

விடியற்காலை ஐந்து மணிக்கு புதுச்சேரி வந்தேன். ஈரோடு கிருஷ்ணனும் கோஷ்டியும் வந்து இன்னொரு அறையில் தங்கியிருந்தார்கள். அவர்களிடம் காலை 9 மணிவரை என்னை எழுப்பலாகாது என கறாராக எச்சரித்திருந்தார் அரிகிருஷ்ணன்.ஆகவே ஆறு மணி முதல் மூன்று மணி நேரம் தூங்க முடிந்தது.

காலை 10 மணிக்கு வெள்ளாழர் வீதியில் அரிகிருஷ்ணன் இல்லத்தில் நிகழ்வு. சென்னையில் இருந்து ராஜகோபாலன், காஞ்சி சிவா, பார்கவி என பல நண்பர்கல் வந்திருந்தார்கள். கூட்டம் இருந்தமையால் கூடத்தில் சற்று நெரிசலாக இருந்தாலும் ஓர் இலக்கிய நிகழ்வு அப்படி ஒரு வீட்டில் நிகழ்வதில் ஒரு நிறைவு இருந்தது.

காலை பத்து முதல் பன்னிரண்டுக்குள் அனைத்து உரைகளும் சுருக்கமாகவே முடிந்தன. வெண்முரசில் காண்டீபம் நாவலில் அந்த மாதத்திற்குரிய பகுதியைப் பற்றியும், வெண்முரசின் பொதுவான அழகியல் மற்றும் உணர்வுநிலைகள் பற்றியும் பேசினர். எல்லா பேச்சுக்களும் சுருக்கமானவையாக இருந்தன.

அமைச்சர் க.லக்ஷ்மிநாராயணன் அவர்கள் வெண்முரசு பற்றி உரையாற்றினார். அதன்பின்னர் ஹைதராபாத் பல்கலையில் முனைவர்ப்பட்ட ஆய்வு செய்பவரும் இளையதலைமுறையின் மிகச்சிறந்த இலக்கியவாசகர் – விமர்சகர் என சொல்லத்தக்கவருமான ஸ்ரீனிவாஸ் காண்டீபத்தின் அணிகள் என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

ஸ்ரீனிவாஸ் ஊட்டி குருகுலத்தில் நிகழ்ந்த குரு நித்யா காவிய அரங்குகளில் அறிமுகமானவர். அன்றே தீவிரமான வாசிப்பும் கூரிய அவதானிப்புகளும் கொண்டவராக இருந்தார். இப்போது அவர் சென்றிருக்கும் தொலைவு வியப்பூட்டுவது. காவிய இயல் பற்றியும், நவீன இலக்கியத்தில் காவிய அணிகள் எப்படித் தொழிற்பட இயலும் என்பதைப் பற்றியும் ஆழ்ந்த உரை ஒன்றை ஆற்றினார். மிக அரிதாகவே தமிழகத்தின் இலக்கியமேடைகளில் அத்தகைய உரைகள் நிகழ்கின்றன. நான் பெருமிதத்துடன் நோக்கும் வருந்தலைமுறை இலக்கியவாதிகளில் ஒருவர் அவர்

இறுதியாக நான் உரையாற்றினேன். பொதுவாக காவியங்கள் பற்றியும், காவியங்களுக்கும் தத்துவத்திற்குமான தொடர்பு குறித்தும், இன்றைய நவீன இலக்கியச் சூழலில் காவியயியல் எவ்வண்ணம் திகழமுடியும் என்பது பற்றியும் பேசினேன். அத்தனை உரைகளுக்குப்பின் ஒரு நீண்ட உரை நாகரீகம் அல்ல. ஆனால் ஒரு நிகழ்வுக்காக அத்தனை தொலைவு வந்துவிட்டு ஒரு சம்பிரதாய உரை ஆற்றுவதும் சரியல்ல. ஆகவே நடுத்தர நீளம் கொண்ட ஓர் உரை

மதிய உணவுக்குப்பின்னர் விடுதியறையில் வெண்முரசின் வாசகர்களான நண்பர்களுடன் ஓர் உரையாடல். வெவ்வேறு கேள்விகள், விளக்கங்கள், வழக்கமான நகையாடல்கள் என இனிய பொழுது. மாலையில் கிளம்பி புதுச்சேரியில் உருவாகியுள்ள புதிய கடற்கரைக்குச் சென்றோம். இரவில் திரும்பி வந்தோம்

நான் இரவே கிளம்ப வேண்டியிருந்தது. புதுச்சேரி வந்தால் நண்பர் ரமேஷ் பிரேதனைப் பார்க்கவேண்டும் என விரும்புவேன். நேரமில்லை. காலையில் எனக்கு தத்துவ வகுப்பு இருந்தது. இரவு ஈரோடு நண்பர்களுடன் கிளம்பினேன். வழியெங்கும் பேசிக்கொண்டே பயணம். கொஞ்சம் தூங்கினேன்.புலர் காலையில் மலைத்தங்குமிடம் சென்றேன். மீண்டும் ஒரு மூன்று மணிநேரத் தூக்கம். பத்துமணிக்கு வகுப்பு.

நாகர்கோயிலில் இருந்து கிளம்பி பத்துநாட்களாகின்றன. நாகர்கோயிலில் நான்குநாட்கள். அதன்பின் அமெரிக்கா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

வெண்முரசு, புதுச்சேரி, ஓர் உரை September 21, 2024 புதுச்சேரியில் நண்பர் அரிகிருஷ்ணன் தொடர்ச்சியாக வெண்முரசு கூட்டங்களை தன் இல்லத்தில் நடத்தி...