https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

வியாழன், 3 மார்ச், 2022

அடையாளமாதல் * முரணின் சமன்பாடு *

 




ஶ்ரீ:



பதிவு : 609  / 799 / தேதி 03 மார்ச்  2022


* முரணின் சமன்பாடு



ஆழுள்ளம் ” - 04

மெய்மை- 08.





கதர் சட்டைகாரர்களுக்கென சில தனிப்பட்ட இடற்பாடுகள் உண்டு அவை எப்போதும் அற்பமாக புறவயமாக நிகழும் இயற்கை அவர்களை பாதித்துவிடுகிறது . அது அவர்கள் அணிந்து கொள்ளும் கஞ்சி மிடுக்கில் இருந்து துவங்கி நிற்கும் தன்னகங்காரம் . அதை அணியும்  நொடியில் பிறரின் கண்களினால் தங்களை  கண்ணாடி முன்பாக பார்த்துக் கொண்ட பிறகே அவர்களால் நகர முடிகிறது , வியர்வையால் தன் தன்மையை இழப்பது ஒரு கொடும் தருணம் . காலையில் எடுத்துப் உடுக்கும் போது அத்துடன் இணைந்து எழும் ஒன்று சட்டென கானாமலாகி அவர்களை பிற சாமான்யர்களுக்குள் கொண்டு வைத்துவிடுகிற போது அது நிகழ்ந்து விடுகிறது . எப்படிப்பட்டவர்களையும் அது விட்டு வைப்பதில்லை . மூப்பனாருக்கு ஒருங்கிணைப்பாளனாக இருந்த இரண்டு நாளில் அவர் ஒவ்வொரு நிகழ்விற்கும் சட்டையை மாற்றிக் கொண்டே இருந்தார் . எப்படியும் நாள் ஒன்றிற்கு ஏழு அல்லது எட்டு . பெட்டியை திறந்து சட்டை எடுத்து  பிரித்தும் பிறிக்காமலும் சிலவிற்றை நிராகரித்து அவற்றுள் ஒன்றை எடுத்து இருபக்கமும் பார்த்து அதை நேர்த்தியாக அலுங்காமல் உடுத்திக் கொள்வார் . இந்த சட்டைகளை வேறொரு பெட்டியில் அவரது உதவியாளர் எடுத்து வைத்து விடுவார் . அனைத்தும் ஒன்று போலவே இருக்கும் வெள்ளை கதிர் சட்டையில் என்ன வித்தியாசத்தை அவர் அவதானிக்கிறார் என புரிந்து கொள்ள முடியாது . காரில் அமர்ந்து கொள்ளும் முன்பு சட்டைக் கீழ் பட்டனை கழற்றி பின் பக்கத்தை ஒழுங்காக மேல் புறமாக மடித்து நீவி தூக்கி நிறுத்திய பின்னர் அமர்ந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன் . இறங்கிய சில நொடிகளில் அவற்றை பழையபடி கீழிழுத்து நீவி பழைய நிலைக்கு கொண்டுவந்து விடுவார் . நிகழ்வு முடித்து கழற்றி கட்டில் மேல் போடும் சட்டையில் அவர் மடித்த இடத்தைத் தவிர வேறெங்கும் நலுங்காமல் இருக்கும் . அமரும் போது எனக்கு அந்த பழக்கம் அவரை பார்த்து வந்தது .


மார்ச் மாத வெய்யில் உக்கிரம் காட்டிக் கொண்டிருந்தது . தேர்தல் அலுவலகத்தில் அங்கீகரிகப்பட்ட கட்சி வேட்பாளர்களுக்கு மனு தாக்கல் செய்யும் நேரம் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு கட்சியினரையும் மைக்கில் அழைத்துக் கொண்டிருந்தனர்எங்களுக்கான அழைப்பு இன்னும் விடுக்கப் படவில்லை . நாங்கள் வியர்வைக்கு பயந்து ஒதுங்க நிழல் இடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது மரியாதை நிமித்தமாக காசுகடை காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி நாராயணசாமி காந்திராஜின் அருகில் வந்து அவருக்கு வணக்கம் சொன்னார் . பரஸ்பரம் தேர்தல் அளவளாவல்கள் . நான் ஜோதி நாராயணசாமியை அங்கு வைத்துத்தான் அறிமுகம் செய்து கொண்டேன் . “ஏன் ஜோதி இன்னும் மனு தாக்கல் செய்யவில்லையா? உன் பெயரை அழைத்துக் கொண்டே இருக்கிறார்களேஎன காந்திராஜ் கேட்டதற்கு . “கண்ணன் தாக்கல் செய்த பிறகு என்னை தாக்கல் செய்ய சொன்னார் தலைவர்என்றார் ரகசியம் போல . நின்றெரித்த வெயிலின் புழுக்கம் தாளாமல் ஜோதி நாராயணசாமியிடம் விடைபெற்று அருகில் இருந்த சட்டமன்ற உறுப்பினர் இல்லத்தின் பின் பக்கத்தில் அமைந்திருந்து உணவு விடுதியில் சென்று அமர்ந்து கொண்டோம் . அது ஒரு மலையாளியால் நடத்தப்படுவது போலதமிழக உணவில் எல்லாம் ஒரு சிறு துளி கேரளத் தன்மை தெரிந்தது . இருவருக்கும் டீ சொன்னேன் . உணவுக்காக காத்திருந்தவர்களில் சிலர் அமைச்சர் காந்திராஜை அடையாளம் கண்டுகொண்டு எழுந்து வந்து வணக்கம் சொல்ல சிலர் கைகுலுக்கி வாழ்த்து சொன்னார்கள் . நான் அவர்களின் கண்களில் எதாவது விஷமம் தெரிகிறதா? என பார்த்துக் கொண்டிருந்தேன் . எல்லாம் ஒரு சம்பிரதாய கை குலுக்கல்கள் எதற்கும் இருக்கட்டும் என்பது போல


நாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து  தற்காலிக தேர்தல் அலுவலகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த உள்ளாட்சித் துறை அலுவலக வாசல், கூட்ட நெரிச்சலில் இடுபட்டுக் கொண்டிருந்ததை இங்கிருந்து பார்க்க முடிந்ததுநான் காந்திராஜிடம்ஏன் ஜோதி நாராயணசாமி காத்திருக்க வேண்டும் . கண்ணன் கட்சியை விட்டு விலகிய பிறகு இது எதற்குஎன கேட்க நினைத்த போது அபத்தமாக பட்டது . நான் அதுவரை சண்முகத்தை நேரில் சென்று அறிமுகம் செய்து கொண்டிருக்கவில்லை. அவரைப் பற்றிய புரிதல்கள் எல்லாம் பிறர் அவரைப் பற்றிய சொன்னது . அதைவைத்து மிக அழுத்தமான உருவகத்திற்குள் வந்திருந்தார் . அதன் பிறகு அவரிடம் நேரில் பெற்ற அனுபவங்கள் அவற்றுடன் பெரியதாக முரண்படவில்லை. அவரிடமிருந்து எனக்கான அழைப்பு வந்ததெல்லாம் தேர்தல் முடிவுக்கு காத்திருந்த சமயத்தில் . அந்த முறை வாக்கு எண்ணிக்கை நடக்கும் தேதி மிக மிக தள்ளி வைக்கப்பட்டிருந்தது. சுமார் ஒரு மாத காலம். காந்திராஜ் அப்போதைக்கு காபந்து சர்காரின் பிரதிநிதி என்பதால் அவருக்கு கொடுக்ப்பட்ட துப்பாக்கி ஏந்திய காவல் அந்தஸ்த்து விலக்கிக் கொள்ளப்படவில்லை . துப்பாக்கி ஏந்திய காவலர் அவருடன் வரும்போதெல்லாம் கட்சி அலுவலகத்தில் உள்ள அனைவருக்குள்ளும் ஒரு சங்கடத்தைக் கொடுத்தது . அதை பார்த்த எல்லார் கண்களிலும் முகத்தில் காட்டாத புண்ணகையை பார்க்க முடிந்தது . ஒரு இளிவரல் போல


காந்திராஜ் மிக சாதாரண குடும்ப பின்னணி கொண்டவர் தனது இளமையில் கட்டற்று இருந்ததையும் அனைத்தின் மீது கொண்ட மீறலை நகைசுவையாக சொல்லிக் கொண்டே இருப்பார் . அவற்றில் பல இங்கு பதிவிட இயலாதவை . அவற்றை வெளிப்படுத்த அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. வெளியுலகில் தனக்கான இடம் குறித்த எந்த நுண்ணுர்ணவும் இல்லாதவராக அந்த கணத்தில் தோன்றினாலும்,அனைத்தின் மீது அவருக்கு மிக நுட்பமான அவதானிப்புகள் இருந்தன . அவரது எளிய குடும்ப பின்னணி தன்னைப் பற்றி பிறரின் எந்த மதிப்பீடுகளையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை எனவே முதுகின் பின் நிகழும் இளிவரல்கள் எதையும் பொருட்படுத்தாது தனது பதவிக்கால இறுதி நாட்களை விரும்பி ரசித்திருக்கவே வாய்ப்பு அதிகம் . தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை அவரும் ஆழ்மனத்தில் உணர்ந்திருப்பார் . அது வெளியாகும் வரைஇது அரசு கொடுக்கும் அதிகாரம் அதை என்னத்துக்கு வேண்டாம் என சொல்லஎன நினைத்திருக்கலாம்.  


கண்ணன் காங்கிரஸில் இருந்து அதுவரை அதிகாரப்பூர்வமாக விலகவில்லை அதனால் தலைவர் ஜோதி நாராயணசாமியை சண்முகம் காத்திருக்க சொன்னார் என்பது எளிய நிர்வாக சிக்கல் போல தெரிந்தாலும் அரசியலின் உண்மை அதுவல்ல . சண்முகம் கண்ணன் இருவருக்கிடையே எங்கோ பேரம் நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் இருவரும் எதற்காகவோ காத்திருக்கிறார்கள் . இது ஒருவரை மீது ஒருவர்  கடும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நேரம் . யார் முதலில் நகர்வு என. அது ஒரு சதுரங்க ஆட்டம். கூடி நின்றவர்களையும் பிற அனைவரையும் மறந்த தங்களை மட்டும் முன்வைத்து கவனம் சிதறாமல் ஆடிக் கொண்டிருந்தனர். அது சமன் குலையாத கணம். ஜோதி நாராயணசாமியும் , ரவிச்சந்திரனும் களத்தில் காய்களாக நிறுத்தப்பட்டு அவர்களின் தலைவர் கையசைவிற்கு காத்திருந்தனர் . களம் இறுதிக்கருக் கொண்டிருந்தது . எனக்கு அது ஒரு அற்புத அரசியல் கற்றலின் கணம் அதை இங்கிருந்து மீள மீள பார்க்கிறேன். அவர்களுக்குள் உடைவு எங்கு எப்போது நிகழ இருக்கிறது என்பதைப் போல அதை பார்த்துக் கொண்டிருந்தேன் . கண்ணனுக்கு காங்கிரஸில் நீடிக்கும் விருப்பம் இருந்திருக்கலாம். அவர் எடுத்திருக்கும் முயற்சி அவரை பெரியதாக எங்கும் கொண்டு செல்லாது என்கிற குழப்பம் இருந்திருக்க வேண்டும் . அவர் எங்கிருந்தாலும் அமைச்சராகும் வாய்ப்புள்ளவர் . அதை தாண்டி பெரும் கனவு என்பது முதல்வர் பதவி குறித்து மட்டுமே இருக்க முடியும்.இப்போது திமுக கூட்டணியில் யார் முதல்வர் என்பது முதலிலேயே முடிவாகிவிட்டது . சண்முகத்தைப் போல மூப்பனாரை அவரால் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது . கண்ணனுக்கு 1991 களில் காங்கிரஸில் இருந்த அரசியல் சூழல் இப்போது இல்லை .சண்முகத்தின் கண்ணனை மடைமாற்றும் அரசியல் தந்திரம் இம்முறை எடுபடாது . கண்ணனுக்கு தான் உருவாக்கி இருக்கும் தமாக பற்றிய புரிதல் அவருக்கு அதைப்பற்றிய எதிர்கால நம்பிக்கை வேறு விதமான அதிருப்தியை உருவாக்கி இருக்கலாம். அது தன்னால் மீற முடியாத ஒருவரின் கீழ் மீளவும் சென்று நிற்பது .


சண்முகத்திடன் கண்ணன் இருவருக்குள் அன்று என்ன பேரம் நடந்தது என இன்றுவரை இருவரும் வெளிப்படுத்தவில்லை . அந்த நிமிடம் வரை கண்ணனுக்கு சாதகமாகவே சூழல் இருந்தது . வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதி நாள் மதியம் முன்று மணிக்கு ரவிச்சந்திரன் வந்து கண்ணனுக்காக மனு தாக்கல் தெய்தார். தகவல் உறுதியானவுடன் ஜோதி நாராயணசாமி தலைவருக்கு தொலைபேசியில் தகவல் சொன்னார் . பின்னர் அலுவலகம் உள்ளே சென்று மனுத் தாக்கல் செய்து விட்டு வெளி வந்ததும் நாலைந்து பேர் மிக பலஹீனமான குரிலில் வாழ்த்து சொல்ல ஒருவர் சிறிய கழுத்தளவு  நளசம்பங்கி மாலையை அவருக்கு போட்டனர். “இந்த 10 ரூபாய் மாலையோட போக வேண்டியது தான்என கூடியிருந்த திரளில் யாரோ சொல்ல இருந்தவர்கள் வெடித்துச் சிரித்தனர் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுவை வெண்முரசு கூடுகை 69 சில தருணங்கள்

  புதுவை கூடுகையில் எனது உரை செய்தியாக வந்து சேரும் கதைகளைக் கொண்டே நாம் மனிதர்களை அதை ஒட்டிய சூழலை மதிப்பிடுகிறோம் . அதன் ...