https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0

புதன், 16 ஜூன், 2021

அடையாளமாதல் * கையிருப்பு யதார்த்தம் *

 



ஶ்ரீ:



பதிவு : 578  / 768 / தேதி 16 ஜூன்  2021


* கையிருப்பு யதார்த்தம்



ஆழுள்ளம் ” - 03

மெய்மை- 56.





முதியார இளமை கனவுகளையும் அதன்மீது அதீத நம்பிக்கையை ஏற்றிவைத்துக் கொண்டிருப்பதால் அதில் ஏற்படும் இழப்புகள்  அதற்கு பொருட்டாவதில்லை .காலம் கண்முன் விரிந்து விரிந்து சென்று கொண்டே இருக்கிறது அதில் நாளை தனக்கான காலம் என்கிற அதன் அசாத்திய நம்பிக்கை வியப்பளிப்பது . தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் வாய்ப்புகளாக பார்ப்பது . எந்தவொரு கட்டத்தில் அது உடைந்தாலும் அதைப் பற்றிய புதிய எண்ணங்கள் நம்பிக்கைகள் எழுந்தபடி இருப்பது.பிறர் தோல்விவுற்றதை பார்த்த பிறகும் தான் அதில் தோற்கப் போவதில்லை என அனைத்திலும் எதிர்காலம் குறித்த பெரும் நம்பிக்கை கொள்வது அதுவே இயங்கு விதியின் அடிப்படை விசை . அப்படிப்பட்ட அவர்களின் முயற்சியால் பல அடிப்படை கணக்குகள் முற்றிலும் புதிய இடத்தில் துவங்குவதை பார்த்திருக்கிறேன். 1991 புதுவை சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது அதுவரை இருந்த புதுவை அரசியல் களம் முற்றாக மாற்றமடைந்து மரைக்காயர் முதன் முறையாக பாராளுமன்றத்திற்கும் , சண்முகம் அறிவிக்கப்படாத மாநில முதல்வர் வேட்பாளராக சட்டமன்றத்திற்கும் களமிறக்கப்பட்டிருந்தார்கள் . சண்முகத்தை எதிர்த்து முதல்வராக மரைக்காயரால் முன்வைக்கப்பட்டவர் கண்ணன். கண்ணனுக்கு அவரது சொந்த தொகுதி மறுக்கப்பட்டபோது மரைக்காயர் தனது தம்பி இக்பால் போட்டியிட விழைந்த காலாப்பட்டுத் தொகுதியை அவருக்கு விட்டுக் கொடுத்தார். கண்ணன் சட்டமன்றத்திற்கு செல்வதனூடாக அடுத்து நிகழ வேண்டியதை முடிக்க அவர் சட்டமன்றத்திற்கு போட்டியிட்டேயாக வேண்டும் என்கிற மரைக்காயரின் கணக்கு ரகசியமானதல்ல . அதே சமயம் அதன் அடியாழத்தல் பிறிதொரு கணக்கு கூர் கொண்டிருந்தது . சண்முகத்திற்கு அடுத்தாக கண்ணனை பற்றி மிகத் தெளிவாக வரையறை செய்து வைத்திருந்தவர் மரைக்காயர் அவர் ஒருபோதும் கண்ணன் முதல்வராவதற்கு ஒப்பமாட்டார், தன்னுடைய முதல்வர் பதவி கைநழுவியது தற்காலிகமானது அதற்கு பிறிதொரு வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையால் மாநில அரசியலில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள விரும்பியிருக்கலாம், அல்லது முதல்வராக வருபவர் தனக்கு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என நினைத்திருக்கலாம் . வைத்திலிங்கம் மிகச் சரியான தேர்வாக அவர் கணக்கிட்டருந்தால் அது சரியானதே. சண்முகத்தின் தோல்வியில்  எந்த வகையிலும் நேரடியாக ஈடுபடுவதை தவிற்தார் . எப்படியும் தனக்கு எதிராக அது குறித்த குற்றச்சாட்டு இருக்கும் என அவருக்கும் தெரியும். காங்கிரஸ் அரசியலில் இதற்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை , தோல்வியுற்றவர் அதை சதி என சொல்லுவதெல்லாம் எளிய கள விளையாட்டு மட்டுமே மேலிடம் அதை பொருட்படுத்தாது. அரசியல் கணக்கு மிக எளிதானது . அது நிகழும் போது ஒன்றை அடுத்து ஒன்றென நிகழ்வது . நீரின் ஒழுக்கு போல அதில் பங்குகொளுக்கும் பலரும் அதில் தங்களின் பலத்தை உபயோகித்து அதன் பாதையை மாற்ற முயற்சித்துக் கொண்டே இருக்க அது சலனமே இல்லாமல் அனைத்தையும் பெற்றுக்கொண்டு நகர்ந்து நகர்ந்து அவை அதற்கு தேவை என்பது போல பொருள் அளித்து தொடர்ந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது . ஆனால் அதில் பங்கு பெற்றவர்களுக்கு சில காலம் கழித்து தங்களின் முரண் செயல்களில் இருந்து விளைவதை கண்டு கசப்பு கொள்கிறார்கள் . அவர்களின் வாழ்கைக்கு அங்கு முற்றும் புதிய அர்த்தத்தை அது கொடுப்பது அதன் காரணமாக இருக்கலாம்.


சண்முகம் தேர்தல் தோல்வியுற்றால் சட்டமன்ற கட்சி அடுத்த தலைவரை முன்மொழியும் . அது ஒரு போதும் கண்ணன் அல்ல . சட்டமன்றக் கட்சியில் சண்முகத்தின் ஆதரவாளர்கள் அதிகம் என்பதால் அவர்கள் கண்ணனை ஆதரிக்கமாட்டார்கள். மரைக்காயரின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணனை முன்வைத்ததும் சண்முகத்தால் அது நிராகரிக்கப்படும் . கண்ணன் இந்த அரசியல் சதுரங்கத்தில் வெட்டுக்காய் மட்டுமே. மரைக்காயரை கண்ணன் நம்புகிறாரா? என்றால் இல்லை. அவருக்குத் தெரியும் மரைக்காயர் தன்னை ஒருபோதும் முதல்வராக ஏற்கமாட்டார் என . அவருக்குத் தேவை மரைக்காயர் தன்னை முன்வைக்க வேண்டும் என்பது மட்டுமே. காரணம் காங்கிரஸில் இரண்டு தரப்பு மட்டுமே அன்று இருந்து கொண்டிருக்கிறது . மூன்றாவது ஒன்றிற்கு பலமிக்க வாய்ப்பிற்கு அங்கு இடமில்லை. மூன்றாவது இடம் அரசியலில் சார்பு நிலை. அதற்கென தனித்து நிற்கும் பலமில்லை என்பதால் அது இரண்டு அதிகார மையத்தில் ஒன்றை ஆதரித்து பிறதொன்றை எதிர்த்து நிலைகொள்வது . அதன் வழியாக சமநிலையைக் குலைத்து ஒன்றை பிறதொன்று வென்று நிற்க உதவுவது . அதன் வழியாக மட்டுமே அது தன்னை நிறுவிக்கொள்ள இயலும் . கண்ணன் எதிர்நோக்குவது அதை. தன்னை மரைக்காயர் முன்வைத்ததும் அடுத்து ஆட வேண்டியது கண்ணன் . அவர் தனக்கான அனைத்து நகர்வுகளையும் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்களிடையே முன் வைத்திருந்தார் . அதுதான் ஏறக்குறைய நிகழ்ந்திருக்க வேண்டியது . அவரது நகர்வுகள் காங்கிரஸிற்குள்ளிருந்து எழும் அனைத்து சிக்கல்களையும் அதை எதிர்த்து நிறுவும் அனைத்தையும் உள்ளடக்கியது. ஒரு வகையில் தனக்கு எதிராக என்னென்ன நிகழும் என அனைத்தையும் அவரும் முன்பே கணத்திருக்க வேண்டும் . சண்முகமும் அதை அறிந்திருந்தார் . தில்லி அரசியல் களம் மிக தந்திரமானது . அவர்கள் இந்திய முழுவதிலும் உள்ள தலைவர்களை ஒருங்கிணைக்க அல்லது பிரித்துக் கையாள கற்றவர்கள் . அது ஒரு மாபெரும் வலைப்பின்னல் , அதன் மைய சரடு தகவலை அடிப்படையைக் கொண்டது , அது அனைத்து தரப்பிற்கும் வெவ்வேறு தலைவர்களின் தகவல்களைப் பெறும் , ஊகிக்கும் பின் பரப்பும் முறையை சார்ந்தது . அவை அரசியல் இடைத்தரகர்கள் மூலம் அவர்களது செல்வாக்கால் அனைத்து தளமும் இணைக்கப்படிருப்பது . செல்வாக்கின் அடிப்படையில் அல்லது அதிகாரப் பதவியை முன் வைத்து நீண்ட கால தொடர்புறுத்தலின் வழியாக அவை கட்டமைக்கப்பட்டது . அனைத்து தகவல்களுமே உண்மை நிலையை பிரதிபளிப்பவைகள் ஆனால் அவை தலைவர்களுக்குள் நிகழும் கணக்கிலடங்கா சந்திப்புகளினால் மாற்றமடைந்தும் திரிபடைந்து கொண்டும் இருப்பது . ஒரு அரசியல் நகர்வு நிகழும் முன்னர் அதன் இறுதி கணம்வரை அது உறுதி செய்யப்படாதவைகள். அவரவர் தங்களின் தகவல்களினால் முரணியக்கம் கொள்ளத்துவங்கிய பிறகு அது மெல்ல நிகழும் களம் நோக்கி பயணிப்பது . அங்கு அந்த கணத்தில் மட்டுமே அது உயிர்கொள்கிறது . அதுவரை அனைத்து அரசியல் ஊகமும் நம்பிக்கையும் தகவல்களினாலான குப்பைக் குவியல் மட்டுமே. அரசியலில் முடிவுகள் எட்டப்பட்டு செயல்படுத்தப்படுவதில்லை , அவை யாரும் எதிர்பாராமல் முடிவுறுபவைகள் இறுதியில் ஏக மனதான தீர்மானங்களாவதுண்டு . 1991 சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்தல் கிட்டதட்ட அப்படி நடந்ததுதான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் . கம்ப ராமாயணம்

கிருபாநிதி அரகிருஷ்ணன் புதுவை 1 தேதி 21.04.2024 நண்பர்களுக்கு வணக்கம் .  புதுபுனல் 366 இராவணன் மந்திரப்படலம் கேட்டுக் கொண்டிருக்கிறே...